வளமாய் உலகம் நாளும் மாறும்...!
உள்ளதை மறைத்து, உண்மையை மறைத்து
உழைக்காது சேர்க்கும் உன்மத்தர் நிறைந்த உலகமடா - இது
உழைப்பைச் சுரண்டும் உலகமடா!
இனிக்க இனிக்க எல்லாம் பேசி
ஏறிய உடனே எல்லாம் மறக்கும் இழிந்த உலகமடா - தம்பி
ஈனர்கள் நிறைந்த உலகமாடா!
நல்லதை மறந்து, நன்றியை மறந்து
நல்லோர் போன்று நடித்துத் திரியும்
நடிப்பு உலகமடா – நயவஞ்சக உலகமடா!
எல்லா உதவியும் பெற்றுக் கொண்டு
எட்டித் தள்ளும் உலகமடா – இது
எத்தர்கள் நிறைந்த உலகமடா!
எல்லா வேலையும் எனக்கேத் தெரியும்
என்றே கூறி எதுவும் செய்யாது
ஏமாற்றித் திரியும் உலகமடா!- இது
ஏய்ச்சுப் பிழைப்போரின் உலகமடா!
வம்பாய்ப் பேசும் வம்பரை எல்லாம்
வறிதே வைப்பான் இறைவன்தானே!
உனையும் புரிந்து, உலகம் புரிந்து,
உள்ளதை அறிந்து உன் வாழ்வை நடத்து!
நடத்து நடத்து நன்றாய் நடத்து
நலமே விளைய நன்மை புரிந்து
நல்லோரை இணைத்து நல வாழ்வை நடத்து
உலகமெல்லாம் நன்மைகள் நடக்க
நாளும் நாளும் நாளும் உழைப்பாய்
வள்ளுவர் கூறும் அறத்தின் வழியில்
வாழ்க்கையை நடத்து, வாகாய் நடத்து,
வளமாய் உலகம் நாளும் மாறும்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.