மனவெழுச்சிக் கொடை
திருஆவினன் குடிவையாவிக் கோமான் பேகன்
திறனறிந்து புகழறிந்து பரணர் சென்றார்!
பொருள்நல்கி சிறப்பித்தான் அவனும் தானே
பொழியும்நல் மேகம்போல் ஈதல் பண்பு
தருவதிலே பொருள்தன்னை தனக்குக் கொஞ்சம்
தனியாக ஒதுக்கிவைத்து, எஞ்சியதைத்
தருவதுண்டு! இருப்பதெல்லாம் கொடுக்கும் வள்ளல்!
தமிழ்மண்ணில் பேகன்போல் இன்றும் உண்டு.
தன்னார்வக் கொடையாளன் பேகன் என்பார்!
தன்குருதி கொடுப்பார்போல் கொடுப்பான் நித்தம்
தன்வரவு கண்டுகொண்ட லென்று மயிலும்
தன்தோகை விரித்தாட குளிரின் தாக்கம்
தன்னைப்போல் அதற்கென்றே அவிழ்த்துப் போர்வை
தந்தவனே கொடையாளன் ஆனான்! ஆனான் !!
தன்செயலில் சிறுமடமை இருந்தாலுமே
தரணியிலே வள்ளலென்றே பெருமை கொண்டார்!
பேகனவன் பெருங்கொடையால் பெருமை யுற்ற
பேராளன் பரணனுரை கேட்போம் வாரீர்!
நகர்செல்லும் நடுவழியில் நிறுத்தித் தேரை
நயமுடனே கட்டவிழ்த்து குதிரைகளின்
முகச்சோர்வு போக்கித்தான் இருந்தான் காத்து!
முன்னோக்கி தான்நகர முடிவெ டுத்தான்!
முகவருத்தம் தான்காட்டி பாணன் வந்தான்
முன்னுரையாய் பெற்றகொடை முழுதும் சொன்னான்!
பெரியவராய் வறியவனை மாற்றியவன்
வரலாற்றை வகையாக அவனே சொன்னான்!
பரிசில்கள் கொடுப்பதிலே மறுமை நோக்கான்
பண்பாளர் வறுமைநீக்கி என்றும் நிற்பான்!
வாரிக்கொ டுத்ததனால் ஒளிர்கிறது
வாழ்வென்றான்! கேட்காமல் ஈதல் செய்வான் !
மாரிபோல இருந்தாலும் கொடுப்பதாலே
மாறாத குணமுடையான் பேகன்! என்றான் !!
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.