அரிதாகிப் போனதே...!
சேவல் கூவிய அதிகாலை விடியல்
புல் வெளியில் பனித்துளி.
எங்கிருந்தோ அழகாய் வண்ணம் தீட்டி
வந்தமர்ந்து பறக்கும் பட்டாம்பூச்சி.
சோளத்தட்டை வேய்ந்த குடிசைவீட்டின்
முகட்டில் கூடுகட்டும் சிட்டுக்குருவி.
விச்,விச் எனச் சத்தமிட்டு வர்ண வால்
தூக்கிக் கிளையில் ஓடித் திரியும் அணில்.
தண்ணீர் கலந்திருக்கும் மேகம்
அதையும் சேர்த்து வீசும் சில் காற்று
மகிழ்வுணர்ந்து மந்தைக்காட்டில்
தோகை விரித்தாடும் மயில் காட்சி.
மழைச்சொட்டுகள் கரிசல்மண்
நனைக்கையில் நாசி பெரும் வாசம்
சளிப்பிடிக்காத, காய்ச்சல் வாராத,
தும்மல் விடாத மாசற்ற மழைக்குளியல்.
சின்னச்சின்னப் புற்றிலிருந்து வெளிப்பட்டு
மாயமென றெக்கை முளைத்து மேலேறி
தெரு விளக்கு வெளிச்சம் மொய்த்து
அன்றே மாய்ந்திடும் ஈசல் கூட்டம்
சங்கீதம் இசைக்கும் நீர்க்குட்டை தவளைகள்.
ஓடை வெள்ளம் உயர்ந்துள்ளதா
குச்சியூன்றிப் பார்த்த பகல் பொழுதுகள்
நிரம்பிவிட்ட கண்மாய் உடைந்தால்
கரை அடைக்கும் அக்கறையோடு
ஊர்கூடி விழித்திருந்த இரவுப் பொழுதுகள்.
இப்போதெல்லாம் அரிதாகிப் போனதே...
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.