அவனே என் தலைவன்
அகண்ட நிலம், பரந்த வானம்
விரிந்த கடல், சுடரும் தீயை
ஆள்பவன் எவனோ
அவனே என் தலைவன்!
புகழ் பிறப்பு, இகழ் உயிர்
பிறவிப்பயன், இறப்பின் ரகசியம்
வகுத்த திறனாளன் எவனோ
அவனே என் தலைவன்!
மனித வாழ்வு, உயிர் வளர்க்கும் உணவு
மரங்கள் ஆயுள், கால மாற்றம்
அளக்கும் அறிஞன் எவனோ
அவனே என் தலைவன்
நன்மை, தீமை, தர்மம், அதர்மம்
சத்தியம், அசத்தியம், சொர்க்கம், நரகம்
நிர்ணயிக்கும் அதிகாரி எவனோ
அவனே என் தலைவன்!
குணம், இனம், பலம், பலவீனம்
மலம், பூமணம், மனம், தனம்
இயற்கையை ரசிப்பவன் எவனோ
அவனே என் தலைவன்!
சினம், சிற்றறிவு, பொறாமை, பொல்லாங்கு
அறிவு ,மடமை, அருள், இருள்
ஆக்கி அளித்தவன் எவனோ
அவனே என் தலைவன்!
இரவு, பகல், இன்பம், துன்பம்
உடல், உயிர், உறவு, பிரிவு
இரண்டறக் கலந்தவன் எவனோ
அவனே என் தலைவன்!
-விஷ்ணுதாசன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.