வானத்து நிலவானவள்!
காதலியைப் பார்க்க சென்றேன் - மனக்
காயத்தோடு திரும்பி வந்தேன்!
கண்ணால் அழைத்து என்னைச்
சொல்லால் அடித்து விட்டாள்!
முல்லைப் பூச்சரத்தில் முள்ளிருந்தது
கனியாய் இருந்த மனம் கல்லானது
தனியாய்ப் புலம்பவிட்டு ரசிக்கின்றாள்
தங்கத்தில் காதல் பொம்மை செய்து
தாரகை பெயரைப் பொறித்து வைத்தேன்!
தவிடுபொடியானது காதல் - மனத்
தீயால் பொம்மையை உருக்குகிறேன்!
கடல்மீன் அவளுக்குக் கரையிலிருந்து வலை விரித்தேன்
விண்மீன் நான் என்று சொல்லிச் சென்று விட்டாள்!
பெண்கள் இதயம் கல்லாகும்
ஆண்கள் இதயம் கண்ணாடி
கண்ணாடிக்குத்தான் சேதம் எப்போதும்
பெண்களுக்கு இதிலென்ன லாபம்!
காட்டை எரித்துக் குளிர்காய்வது போல்
காதலை எரித்துக் குளிர் காய்கிறாள்!
குயிலைப் பாடச் சொல்லி ரசித்துவிட்டு
கழுத்தை நெரிப்பது நியாயமா?
பூமிக்கு ஒளிகொடுத்தாலும் நிலவு
வானுக்குத்தான் என்றும் சொந்தம்!
வனத்து நிலவானாள் என் காதலி
வாழ்க! வாழ்க! பல்லாண்டு!
-விஷ்ணுதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.