அனுமதிப்பீரா...? ஆவேசம் கொள்வீரா...?
கன்னம் சிவந்த ஆப்பிள்
சிவந்த கண்கள் செர்ரி
வேரில் விளைந்த பலா
முழு வானுக்கும் ஒரே நிலா!
கோள்கள் சுற்றும் தமிழ்மகள்
பூமிப்பந்து ஏந்தும் திருமகள்
வாள்கள் நாணும் விழியாள்
வள்ளல்கள் நாணும் இடையாள்!
பசுமைக் குழந்தைப் பசி தீர
நீலஆடை விலக்கிப் பால் தருவாள்
பகைமை மனங்கள் இணைய
பாலமாக இருந்திடுவாள்!
செயற்கை விரும்பும் கயவர்கள்
செய்யும் சிறுமதிச் செயலால்...
இயற்கை எனும் இளந்தலைவி
இன்னலுற்றாள் மன மாசால்...
இயற்கையைத் துகிலுரித்த வீணர்கள்
இன்னும் வாழ்கின்றார் வெட்கமின்றி!
அன்னைக்கு மானபங்கம் நிகழ்ந்தால்
அனுமதிப்பீரா...? ஆவேசம் கொள்வீரா...?
-விஷ்ணுதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.