காதல்…! காதல்…!!
காதல்… காதல்…
முதுமையை இளமையாக்கும்
மூல மந்திரச்சொல்…
நினைத்தாலே நகை தோன்றும்
உச்சரித்தால் கனி இதழில்
தேன் சொட்டும்
காதல்…
அறத்துக்கு அன்பு சார் - இது
வள்ளுவன் கூற்று
அன்புக்கு அன்பு சேர்
காதலின் கூற்று…
காதல் மனிதனுக்கு
மட்டும்தானா
இல்லை
உண்மைக் காதல்
விலங்கிடமும் உண்டு
அஃறிணையைப் பாருங்கள்
உண்மைக் காதலால்
உலகை வியக்கச் செய்யும்
அற்புதத்தை…!
மாலை மதிமயங்கும்
மணிப்புறா
தன் ஜோடிப் புறா இறந்தால்
தானும் மாளும்…
குரங்கைப்பாருங்கள்
கணவன் இறந்தால்
ஓங்குமலைச் சிகரம் குதித்து
உயிர்விடும்
பெண் குரங்கின் காதல்
அதிசயம்…
அன்றிலைப் பாருங்கள்
தன்இணை பிரிந்தால்
உயிர்விடும் நேசம்
மனிதனுக்கில்லையே…
மனிதா…
எப்போது காதல்
செய்யப் போகிறாய்…
இந்த வானும் மண்ணும்
இயக்கத்திற்கு
காதல் அச்சாணி
மறந்து விடாதே
காதலைப் போற்று…
காதலை உணர்…
காதல் மகிழ்ச்சி…
மனிதனே
உண்மைக் காதல்
எதில் தெரியுமா?
அது
வெற்றியைக் காட்டிலும்
தோல்வியில் அதிகம்…
ஆகவே
மானிடக் காதல் செய்
உலகம் உய்யும் வரை…!
- புலவர் இரா. முரளி கிருட்டினன், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.