வாழும் கதைகள்..!

சாமியாடி வீட்டுச் சந்திராவும் இல்லை...
அவளைக் காதலித்த சாமியய்யாவும் இல்லை...
கரை சேராத காதல் கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
மேலச் செய் விளையவும் இல்லை...
அதில் விவசாயம் செய்த பூமியும் இல்லை...
மூடை மூடையாய் விளைந்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
சொன்னதை கேட்கும் ராமுக் காளையும் இல்லை...
வளர்த்த ராமையாக் கிழவனும் இல்லை...
ராமு ஜல்லிக்கட்டில் சாதித்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
கீழவீட்டு வெள்ளச்சி எருமையும் இல்லை...
வளர்த்த வெள்ளையம்மாக்காவும் இல்லை...
வாளி வாளியாய்ப் பால் கறந்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
அம்பலார் வீட்டு லோகிதாசும் இல்லை...
அவன் உயிரை எடுத்த அரசமரமும் இல்லை...
தூக்குப் போட்டுக்கிட்ட கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
சுடுகாட்டு ஒத்தப்புளியும் இல்லை...
உடுக்கடிக்கும் வேம்பையனும் இல்லை...
ஊரைக் கலக்கிய பேய்க் கதைகள் மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
கம்மாய்க்குள்ள ஒரம்பா மரமும் இல்லை...
அருகிருந்த வற்றாக் கிணறும் இல்லை...
அங்கு நிகழ்ந்த காதல் கதைகள் மட்டும்
இன்னும் மலர்ந்துக்கிட்டு இருக்கு...
ஊர் கூடி ஆடு வெட்டும் திருவிழாவும் இல்லை...
கருப்பர் சாமியாடும் கருப்பையாவும் இல்லை...
அவர் அரிவாள் மீதேறி ஆடிய கதைகள் மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...
இப்படி... இப்படியாக...
இன்னும் நிறைய வாழ்க்கைக் கதைகள்
உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன...
தன்னை இழந்த கிராமங்களில்...!
- 'பரிவை' சே. குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.