விவசாயி வேதனை... சொல்லித் தீராது...

வாய்க்கா வரப்பு பாக்கயிலே
வயிரெல்லாம் எரியுதடா..!
கருவ மண்டிக் கிடக்கிறது
காண மனசு சகிக்கலைடா..!
நீர் நிறையும் கண்மாயும்
வறண்டு போய் கிடக்குதடா..!
வானம் பார்த்த பூமி இப்போ
வனமாகிப் போச்சுதடா..!
மடை திறந்து தண்ணி
பாய்ச்ச மனசு நினைக்குதடா..!
சறுக்கை உடைப்படச்ச காலம்
கரையேறிப் போயாச்சுடா..!
களையெடுப்பு கதிரறுப்பு
காண விருப்பமடா..!
உரம் போட்டு மருந்தடிக்க
உள்ளம் மறுகுதடா..!
நெல் குவிந்த களத்துமேடு
கரைஞ்சுதான் போச்சுடா..!
வைக்கோல் போர் இருந்த இடம்
கருவைக்கு வீடாச்சுடா..!
நெல் சுமக்கும் குதிரெல்லாம்
காற்றைச் சுமக்குதடா..!
நெல் அவிக்கும் அண்டாவும்
பரணில் தூங்குதடா..!
புண்ணாக்குத் தண்ணி சுமந்த
தொட்டி குப்புறக் கிடக்குதடா..!
கோழிகள் குழாவிய கூடும்
வெறுமையைச் சுமக்குதடா..!
உழவுக்கு காளைமாடு...
பாலுக்குப் பசுவமாடு...
எப்போதும் ரெண்டெருமை...
விளையாடும் வெள்ளாடு...
எல்லாம் வளர்த்த கசாலை
இப்போ இடிந்து போய்நிக்குதடா..!
எங்கயும் போகாம
இங்கயே இருக்கமடா..!
எங்க ஊரு எங்க மண்ணு
எங்களுக்கு உலகமடா..!
எங்களுக்கும் எம்எல்ஏ...
எம்பி எல்லாம் இருக்காங்கடா...
கண்ணுலதான் காணவில்லை
களவாணிப் பயலுகளை..!
முன்ன மழையால விவசாயம்
மரிச்சப்போ வருவாங்கடா..!
கண் துடைப்பு காசையும்
எங்களுக்குத் தருவாங்கடா..!
இப்ப இங்க விளையவில்லை
அதனால அவங்க வரலையடா..!
எப்போ ஓட்டுத் தேவையோ
அப்போ ஓடி வருவாங்கடா..!
விளஞ்ச பூமி வெடிப்புப் போல
விரிஞ்சு கெடக்கு எங்க நெஞ்சம்..!
வெடிப்பு இனி மாறாது...
வேதனையும் சொல்லித் தீராது..!
- 'பரிவை' சே. குமார், தேவகோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.