நெஞ்சில் ஊசலாட்டமாய்...
கூற்றுவனின் வரவை எதிர்நோக்கும்
எனக்குள்
அலைக்கழித்த நினைவுகள்
நாற்பது வருடங்களுக்குமுன்
தொழிற்சங்கத்தலைவராய் நான்!
என் சகநண்பனின்
உயிர்ப்பலி
அரைகுறைச் சித்திரமாய்...
முதலாளி முதலையின்
பேராசையில் மூழ்காமல்
நீர்க்குமிழியாய் கொப்பளிக்கும்
தொழிலாளர்கள்!
உழைப்புக்கும் பஞ்சமில்லை
இவர்களின்
பற்றாக்குறைக்கும் முடிவில்லை
சம்பள உயர்வுக்காய்
இலவு காத்த கிளியாய்
காத்திருப்பு
கோரிக்கை மனுதரல்,
அறிக்கைகளை வெளியிடல்,
அடையாள வேலைநிறுத்தம்,
உள்ளிருப்புப் போராட்டம்
எனப் போராட்டப்பாதையில்
பல அடிச்சுவடுகள் தொடர
முடிவுகள்
ஆரம்பப்புள்ளியாய் நிற்க
எதிர்ப்பைக் காட்ட
வரையறையற்ற வேலைநிறுத்தம் தொடங்க
முடங்கின தொழிற்சாலைகள்
முடக்கப்பட்டனர் தொழிலாளர்கள்
வெற்றுப் பார்வையாளனாய்
முதலாளி இருக்க
அச்சமிகுப் பங்கேற்பாளனாய்
தொழிலாளர்கள் தவிக்க
பொருளாதாரச் சிக்கலில் சிக்கி
சின்னாபின்னமாக
துயரம் நிறைத்து
ஓற்றைக்கால் தவத்தில்
இரைதேடும் கொக்காய் நான்!
முதலாளியின் சதிவலையில் சிக்கிய
கருப்பு ஆடு
இணக்கமாய் என்னோடு!
மாற்றமறிந்து
ஐயமுற்ற நண்பனும் என்னோடு!
சட்டென வாள்வீச்சு பாய
உயிரைப் பிசையும் பயம்
உறைந்தேன் என்னுள்!
ஒருகணத்தில் இடையுற்ற நண்பன்
உதிர்ந்தான்
மண்சுவராய் மண்ணில்!
வெடித்த புரட்சியில்
முதலாளி வெள்ளைக்கொடி காட்ட
தொழிலாளர்கள் வெற்றிக்கொடி
நாட்டினர்.
வருடங்கள் உருண்டோட
நரபலியின் நினைவுகள்
நெஞ்சில் ஊசலாட்டமாய்!
ஊசல்
நிலைபெறுமோ
என்னுடலோடு!
- முனைவர் த. ராதிகா லட்சுமி, பொள்ளாச்சி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.