கருத்த நிழல்
எதிர்படுபவரிடத்தில்
உதவி கேட்கிறது
ஒரு நிழல்.
இரக்க மனதுள்ள
மனிதர்கள்
அவர் தம்
நிழலைத் தருகிறார்கள்.
அந்நிழலுக்கோ
பிறர் கொடுத்த நிழலின்
கருமை போதவில்லை.
இன்னும்
கருமை வேண்டுமென்கிறது.
இருளத் தொடங்கியதும்
இரவின் கருமையில்
ஆசுவாசம் அடைகிறது
நிழல்.
விடிய ஆரம்பித்ததும்
மீண்டும்
பழைய கூக்குரலை
முன்மொழிய
ஆரம்பித்துவிட்டது
அந்நிழல்.
தற்போது
வழிமொழிந்து உதவிட
ஒருவரும்
முன் வரவில்லை.
தன்னை ஆசுவாசப்படுத்திட
இருட்டும் வரை
காத்திருக்கத்தான்
வேண்டுமென்பதை
தற்பொழுது முழுமையாய்
உணர்ந்து கொண்டது
அக்கருத்த நிழல்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.