தியானம்
இரு கண்மூடி
ஒருமனதாகத் தியானிக்க
மனக்குப்பையில்
புழுக்களாய் நெளிகிறது
நினைவுகள்!
*****
சிறுகை வீசும் தென்றலால்
சலசலக்கும் இலை
சுற்றுச்சூழலின் சச்சரவால்
சஞ்சலமாகும் மனம்!
*****
நீர் வற்றிய குளத்து மீனாய்
நினைவுகளற்ற மனம்
நிச்சலனமாய் தியானத்தில்!
*****
நிராகரிப்பு தரும் சோகங்கள்
சோகங்களால் சோர்ந்த மனம்
மனம் நாடுவது தியானத்தை
*****
உயர்வு தாழ்வு
ஏற்றம் இறக்கம்
கடந்து
உள்ளம் ஒன்றாய்
ஒளிரும் நிலை
தியானச்சுடர்!
*****
பரியாய் பறக்கும் மனத்தைச்
சேணமிட்டு வழி நடத்தும்
தியானம்!
*****
சிறுசிறு ஏமாற்றங்கள் தரும் வலிகள்
பெரும் மாற்றங்கள் செய்திட
வாழ்வின் பாதையில்
சமனிலை அடையும் மனம்
தியானம்!
- முனைவர் த. ராதிகா லட்சுமி, பொள்ளாச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.