இசையாகத் துடிக்கும் இதயம்
என்னவோ ஒரு தாளத்தில்
இதயம் ஓயாமல் துடிக்குது.
குழந்தையின் மழலையை...
குழலின் இனிமையை விட
ராகம் மாறாமல் கேட்குது
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!
எண்ணங்கள் கைகூடிடும்
சில சமயம் வேகம் கூடும்.
ஆகாயத்தில் தாவி குதிக்க
அலைஅலையாய் மிதக்க
காற்றேணியில் ஏறி உலவ
தண்டவாளத்து குதிரையின்
தடதடக்கும் தாளம் வரும்.
மனது முரண்டு பிடிக்கும்
சில சமயம் சோகமாகும்!
சுவாசித்தலே சுமையாக...
எழுந்து நிற்கவே சோம்பி,
கைகளில் முகம் புதைத்து,
கண்கள் மூடி இருள் தேடி..
நத்தை அடியோசை ஒற்றி
மெதுவாக தாளம் மாறும்!
எப்போதாவது....
யாருமற்ற தனிமையில்
துயர் புதைந்த மௌனத்தில்
உணர்வுகள் மறத்துபோய்
பசித்தீயில் வெந்துபோய்
உணவே அருமருந்தென....
யாசகம் கேட்கும் கைக்கு
பதில் சொல்லி பாருங்கள்
புதிதான தாளக்கட்டுடன்
உள்ளுக்குளேயே கேட்கும்
உலகத்தின் இனிய இசை!
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!
- சாகம்பரி. மகிழம்பூச்சரம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.