சரிசம படைப்பு!
பிரம்மன் முதலில் உலகை
இப்படித்தான்
படைத்திருக்கக் கூடும்
கற்பனை உடைத்துப்
போட்டது பூலோகத்தை
இரு பெரும் கூறுகளாக
பனிரெண்டு மணி நேர
பகல் இரவு இயற்கைக்
கடமையாற்றல்களை
24 மணிநேரமாக
மாற்றிப் போட்டது
அந்த சூர்யலோகத்தில் ,
சூரியன் மறைவதே இல்லை
நிலவு நுழைவதே இல்லை
வெம்மை சுட்டதில்லை
இருளுக்கு இடமுமில்லை
விடாது வெளிச்சமே
அங்கே 24 மணித்துளிகள்
போதாது என்ற
உழைப்பாளி வர்க்கத்
தேனீ மனிதர்களுக்கு
மட்டுமே இடமுண்டு
அந்த சந்திரலோகத்தில் ,
சூரியன் வந்து கடமை
கலைப்பதில்லை
நிலவு விடுப்பு எடுப்பதில்லை
எப்போதும் குளுமைதான்
மெல்லிய நீல ஒளி தான்
அங்கே களைத்தவர்களும்
இளைப்பாளர்களும்
சிந்தனையில்
சளைக்காதவர்களும்
மட்டுமே வாழ்வர்
இருலோகத்தாரும் புலம் பெயர்ந்து
கொள்ளலாம் தேவைப்படும் போது
ஆனால் இந்த சந்திரலோகத்தில்தான்
மக்கள் அடர்த்தி அதிகமாம்
செயல் இன்றி வெறும் சிந்தனை
பலனில்லை உழைப்பின்றி
உயர்வு இல்லை என்றே
பிரம்மன் மீண்டும்
சரிசமமாய் 12 மணிநேர
கால அட்டவணைக்கே
சூர்ய சந்திரர்களை
மாற்றி விட்டான் ஒரே
பூலோகமாக்கி விட்டான்!
- ஷிரவாணி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.