மொட்டுக்கள் மலர்கின்றன...
இயற்கை மூடி வைத்த
மொட்டுக்கள் ஒவ்வொன்றும்
சிறுசத்தம்போட்டு உலகை
எட்டிப் பார்க்கின்றன
பூக்களாக…
பூவுலகின்
சிறுதூண்டலால்
அழகழகாய்
மலர்கின்றன
எழில் பூக்கள் - தம்
புறவிதழால்
புதுக் காற்றை
பிடிபிடித்தும்
பார்க்கின்றன…
வளிபோன போக்கில்
அசைந்தாடவும்
வாயின்றி சில வார்த்தை
இசை போடவும்
வான் போடும் மழை நீரில்
விளையாடவும்
வையத்தில் தேன் பூக்கள்
பூக்கின்றன.
ஒரு மொட்டு
மலரும் போது…
மெல்லப் பேசுகின்றது…
பேசும் விழிகளால்
புன்னகை பூக்கின்றது…
பூமிக்கு
வளையோசை கேளாமல்
காற்றிலே நடனம் ஆடுகின்றது…
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.