நண்பனுக்கு ஒரு மடல்
அன்பு நண்பா,
மடல் கண்டு பலகாலம்
மனம் திறந்து நெடுநாட்கள்
விழி மூடும் போதெல்லாம்
வழிந்தோடும் ஞாபகங்கள்
சொல்லொண்ணாத் துயராயினும்
சொந்தம் தந்த வலியென்றாலும்
சொற்ப நேரம் உன்னுடனே
சொல்லாடியதும் விலகிடுமே !
நடந்து வந்த பாதையெங்கும்
பதித்து வந்த தடங்கள் அனைத்தும்
பகிர்ந்திடுமே வாழ்வின் சிக்கல்
புரிந்திடுமே நட்பின் வலிமை
பொல்லாத உலகமதில் என்றும்
போதாத மனம் கொண்டோர்
பேராசை கொண்டே தம்மை
பெரிதாக எண்ணிக் கொள்வார்
அவசர உலகமடா நண்பா
அந்தரத்தில் வாழ்க்கையடா
மனித உயிர்களின் விலையின்
மதிப்பறியா மூடரடா
வளர்ந்து விட்ட விஞ்ஞானம்
விதம் விதமாய் ஆயுதங்கள்
விவேகத்தின் வெறுமையிலே
வியூகங்கள் வகுக்கின்றார்
புன்னகையை அடகு வைத்த
புதிர் நிறைந்த முகங்களடா
மகிழ்வதனை புதைத்து இங்கே
பொருளாதாரம் பெருக்குகின்றார்
உள்ளம் எனும் ஆழிக்கரையில்
உணர்ச்சியலைகள் கொடுத்த
வெண்நுரையின் வேகத்தை
பகிர்ந்து கொண்டேன் உன்னுடனே...
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.