நனைய வேண்டும் இப்பொழுதே !
உன்
ஆழமான விழிகளுக்குள் என்
ஆளுமையைத் தொலைத்து விட்டேன்
கரு விழியின் துணை கொண்டு
கன்னி நீ தீட்டி விட்ட
காதலெனும் ஓவியத்தில் எனை
கரைத்து வர்ணமாய் பூசி விட்டேன்
நேற்று வரை நினைக்கவில்லை
நெஞ்சத்தை உடைக்கும் வகை
நங்கை உந்தன பார்வைக் கணைக்கு
நிறைந்திருக்கும் வலிமை என்று
அந்தி மாலை மஞ்சளிலே
ஆடி நிற்கும் ஆலங்கிளை
அதன் மீது இரு கிளிகள்
அழகுக் கிள்ளையில் காதல் பேசும்
அதைப் பார்த்து என்னிதயம்
அலைந்தோடி உனை நாடும்
அப்போதும் தப்பாமல் நெஞ்சில்
அலைபாயும் உன் வதனம்
என்
நீளமான இரவுகளுக்குள் நான்
நீண்ட யாத்திரை கனவில் செல்வேன்
மீண்டு நான் வருவதென்றால்
நனவுலகில் உன் நிழல் வேண்டும்
சொல்ல முடியா உணர்வலைகள்
சொக்க வைக்கும் கணப் பொழுதுகள்
சுவாசிக்கும் கணக்களல்ல அவை
சுவாசத்தை மறக்க வைக்கும் கணங்களடி
விணையொன்று மீட்டாமலே எப்படி
விழுந்ததொரு வேணுகானம் ?
ஓசையின்றி என் நெஞ்சினில் நீ
ஓடியாடும் பொழுதுகளும்
மேகமில்லா மோகமழை நெஞ்சில்
வேகமாகப் பொழியுதடி !
நாளையென்ன நாளை உன்னில் நான்
நனைய வேண்டும் இப்பொழுதே!
- சக்தி சக்திதாசன், லண்டன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.