எவ்வழியில் எதைக் காண்போம் ?
தாளம் தப்பாமல்
தண்டவாளத்தினில்
ரஞ்சகமான ஓட்டம்
ரயிலதன் மகிழ்கீதம்
காற்றோடு காற்றாக
கரைதோறும் பறந்தோடும்
பச்சை மரக்கூட்டம்
பசுங் கதை கூறும்
வீட்டின் ஓரங்களில்
விழிகளில் அதிசயத்தோடு
கையசைத்து வழியனுப்பும்
கனிவான சிறு குழந்தைகள்
ஓடிய களைப்புத் தீர
ஒய்வெடுத்து நிலையத்தில்
அமைதியாக நிற்கும்
அழகுமிகு ரயிலது
பயணிகள் மேடையெங்கும்
பார்க்குமிடமெல்லாம் வெறுமை
ஓயாத கதை பேசும் பறவைக்கூட்டம்
ஒன்றேதான் காதுகளில் ஒலிக்கும் கீதம்
ஊதுகுழல் சத்தம் காதுகளில்
ஊதிக் கொண்டே புறப்படும் ரயில்வண்டி
மீண்டும் கனகதியில் காற்றைக் கிழிக்கும்
காட்சிகள் மட்டும் மாறிக் கொண்டே
சிலமணி நேரம் மட்டும் மனம் திறக்கும்
சிநேகத்தின் பிரிவுகள் அதுவும் ஒருவகை
சிந்தைச் சுழல்களே ; அடுத்தொரு நிலையம்
ஏறுவோர் பலரோ ? இறங்குவோர் சிலரோ ?
வாழ்க்கையின் தத்துவத்தை கண்முன்னே
வரைந்திடும் சித்திரமாய் அந்த
வியத்தகு ரயில் பயணம் எத்தனை
விந்தைகள் அற்புதம் ! அற்புதம் !
நேற்றிருந்தோர் இன்றில்லை இப்புவியில்
நாளையிருப்போர் யாரென்றறியோம்
காட்ச்சிகள் மாறுவது போல் வாழ்வில்
காலங்களும் மாறும் எனும் உண்மை
எவ்வழியில் எதைக் காண்போம் ?
எப்போது யார் வருவார் ? எல்லாமே
புதிராகும் ரயில் பயணம் போல்தானோ
புவியினில் நம் வாழ்வும் தடம் பதிக்கும் ?
- சக்தி சக்திதாசன், லண்டன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.