வீட்டின் முதன்மை வாசல் நான்கு திசையில் எத்திசையில் வைத்தால் நல்லது? ஒவ்வொரு திசை வாசலுக்கும் என்ன பலன் கிடைக்கும்? என்பது போன்ற தகவல்கள் இங்கே;
வடக்கு வாசல்
வீட்டிற்கு வடக்கு வாசல் என்பது வடக்குப் பகுதியில் கிழக்கு சார்ந்து வருவதே சிறப்பு. நடுப்பகுதியிலோ அல்லது மேற்கு சார்ந்து வருவது தவறு. கிழக்கு சார்ந்து வரும் போது பலபல எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படும். அந்த வீடு நல்ல சுபிட்சமான நிலையிலேயே இருக்கும். நடுப்பகுதியையோ அல்லது மேற்கு சார்ந்தோ வாசல்படி வரும் நிலையில் அதனுடைய கெட்ட பலன்கள் அதே வீட்டில் வசிக்கும் ஆண்கள் மீதே இருக்கும்.
1. நிலையான வருமானம் இருக்காது.
2. குடும்பச் சொந்தங்கள் விட்டு விலகும் நிலை ஏற்படும்.
3. தந்தை மகன்/மகள் உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.
4. மனநிலையில் பாதிப்புகள் ஏற்படும்.
கிழக்கு வாசல்
வீட்டிற்குக் கிழக்கு வாசல் என்பது கிழக்கு பகுதியில் வடக்கு சார்ந்து வருவதே சிறப்பு. இதனால் பலபல நன்மைகள் இயற்கையிலேயே அந்த வீட்டிற்கு ஏற்படும். தவறான வாசல் அமைப்புகளை நடுப்பகுதியில் வருவதும், தெற்கு சார்ந்து வருவதும் இரண்டுமே தவறு. இதனால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் மீதே கெடுதலான பலன்கள் ஏற்படும்.
1. ஆரோக்கியக் குறைவு அதாவது நோய் வாய்ப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
2. கண்பார்வை பாதிப்பு ஏற்படும்.
3. ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்படும்.
4. மனநிலை பாதிப்பைக் கூட உருவாக்கக் கூடியது.
தெற்கு வாசல்
வீட்டிற்குத் தெற்குவாசல் என்பது கிழக்கு சார்ந்து மட்டுமே வரவேண்டும். தெற்கு வாசல் வைக்கும்போது அதே நேர் வடக்கு பகுதியிலும் வாசல் வைப்பதே மிக மிக சிறப்பைத் தரும். வடக்கு வாசல் உள்ள வீட்டில் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமோ அதே போல பலன் தரவல்லது. இந்த இரண்டு வாசல் அமைப்பு தெற்குவாசல் நடுப்பகுதியிலோ, மேற்கு சார்ந்தோ வருவது மிகப்பெரிய தவறு. இதனால் பல பல கெடுதலான பலன்கள் அந்த வீட்டு ஆண், பெண் இருபாலருக்குமே இருக்கும்.
1. கணவன் மனைவி பிரிந்து வாழ நேரிடும்.
2. திருமணம் தாமதப்படும்.
3. குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகுதல்.
4. விவாகரத்து வழக்குகள்.
5. கடன் சுமை.
6. வீடு ஏலம் போகுதல் போன்றவைகளும், உடல் ரீதியான பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளும் வர வாய்ப்புண்டு.
மேற்கு வாசல்
நம்முடைய வீட்டிற்கு மேற்கு வாசல் என்பது வடக்கு சார்ந்து வருவதே சிறப்பை தரும். நடுப்பகுதி தெற்கு சார்ந்து வருவது மிக தவறு. இங்கு மேற்கு வாசல் வரும்போது கிழக்கு வாசல் வர வேண்டும். கிழக்கு வாசல் வைக்கும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அதே போல் இரண்டு வாசல் வரும்போது கிடைக்கும். தவறான வாசல் அமைப்பு என்றால் அதனுடைய கெட்ட பலன்கள் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவர் மீதும் இருக்கும்.
1. கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம்.
2. சன்னியாசி வாழ்க்கை.
3. வியாபார நஷ்டம்.
4. அடிக்கடி விபத்து ஏற்படுதல்.
5. தற்கொலை முயற்சி.
6. வேலையில் அடிக்கடி இடமாற்றம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் முதன்மை வாசல் என்பது சாலை அமைப்புக்கும், திசைக்காட்டிக்கும் ஏற்ப மாறுபடும். சரியான வாஸ்து வல்லுநரின் ஆலோசனைக்குப் பிறகுதான் நன்மைகள் தீமைகள் பற்றி தீர்மானிக்க முடியும். வாஸ்து சாஸ்திரத்தில் முதன்மை வாசல்தான் உயிர் போன்றது.