கருடன் என்பது செம்பருந்து. ஆகாயத்தில் பறந்து இரை தேடும் இறைச்சி உண்ணும் ஒரு பறவை செந்நிறமான ஒன்றரை அடி நீளமுள்ள இறக்கைகளும், வளைந்த அலகும், இரையைக் கவ்வும் நகங்களுமுள்ளது. இதற்குத் தலை முதல் பாதம் வரை வெண்ணிறம் மேற்புறம் செம்மையாகவும் இருக்கும். இந்தக் கருடனைப் பார்ப்பதால் மனிதர்களுக்குப் பல்வேறு நற்பலன்கள் உண்டாகும் என்று பல ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
கருடன் தெய்வமாகக் கருதப்படுகிறார். இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள சில குறிப்புகளைப் பார்ப்போம்.
1. காசிபருக்கு விந்தையிடம் பிறந்தவன். இந்திரன் செய்த வேள்விக்கு வாலகில்யர் வர அருகிருந்த பசு குளம்படியிலிருந்த பள்ள நீர் அந்த வாலகில்யரை அமிழ்த்திற்று. இதைக் கண்ட இந்திரன் சிரித்தனன். வாலகில்யர் இந்திரனது கருவம் பங்கமடையும் படி ஒருவன் உண்டாகவென்று வேள்வி செய்து அவி சொரிந்தனர். இதனால் கருடன் காசிபரிடம் பிறந்து பசியால் வருந்திய போது தாய் சொற்படி வடகிழக்குச் சமுத்திரத்திருந்த வேடர்களை விழுங்கி வேடனாயிருந்த பிராமணனையும், அவன் மனைவியையும் நீக்கிச் சுக்கிரன் அல்லது பிரபாவசு எனும் பெயர் கொண்ட ஆமையையும் சுப்பிரதீபகன் அல்லது நதிபன் எனும் பெயர் கொண்ட யானையையும் பூமியில் வையாது இமய மலையில் வைத்துண்டவன். வைகர்ணமெனும் திருமால் ஆகாயத்தில் தன்னினும் மிக்க வலியற்ற பல கருடர்களைக் கண்டு கர்வ பங்க மடைந்தான். (பார - சாந்.)
2. இவன் தாயின் அடிமை நீக்க தெய்வவுலகஞ் சென்று அமுதக் கலசத்தைக் கிரகிக்கையில் இந்திரன் கோபித்து வச்சிரமெறிந்தனன். அதைக் கண்ட கருடன் வச்சிரத்திற்கு மரியாதையாக ஓரிறகு கொடுத்தனன். இதனால் இந்திரன் களித்து நட்புக் கொள்ளக் கருடன் இந்திரனை நோக்கிச் சிறியதாயின் சொற்படி இதனைக் கொண்டு போய் நாகருக்குக் கொடுக்கின்றேன், நீ கவர்ந்து கொள் என்றனன். இதனால் இந்திரன் இவனுக்குப் பாம்புகளைத் தின்னும் வரம் அளித்தனன்.
3. இவன் அமுதுடன் தருப்பையைப் பூமியில் கொண்டு வந்து பதித்தனன். அதனால் தருப்பை சுத்தமாயிற்று.
4. இவன் வலாசுரன் என்னும் அசுரனுடலைத் தின்று நகைத்து உமிழக் கருடோற்காரம் என்னும் மரகத ரத்ன முண்டாயிற்று. இந்த அசுரனது எலும்புகள் வைரமாயின.
5. இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள வாகனமும் கொடியும் ஆனவன்.
6. ஒரு முறை காளியன் என்னும் நாகன் ரமணகத் தீவுள்ளாரை வருத்த அவர்களுக்கு அபயம் தந்து அக்காளியனை யமுனை மடுவில் ஓடும் படி செய்தவன்.
7. சௌபரி இருடியால் யமுனையை அடுத்த தடாகத்திலுள்ள மீன்களைப் புசிக்கின் உயிர் இழக்கச் சாபம் பெற்றவன்.
8. கண்ணன் புத்திரப் பேற்றின் பொருட்டு உபமன்னியுவிடம் சிவ தீட்சை பெற்றுத் தவம் செய்கையில் துவாரகையை அவுணர் வளைக்கு அவர்களைக் கொன்று கோட்டையைக் காத்தவன்.
9. இராவண வதத்தில் இந்திரசித்துடன் போர் செய்த இலக்குமணர் நாக பாசத்தால் கட்டுண்ட காலத்து யுத்தகளத்தில் வந்து நாகபாசத்தைப் போக்கி இராமமூர்த்தியைத் துதித்துச் சென்றவன்.
10. பாற்கடல் கடைந்த காலத்து விஷ்ணுமூர்த்தியின் ஏவலால் மந்தர மலையை ஏந்தினவன்.
11. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரீடாசலங் கொண்டு வந்து பதித்துத் திருமாலை எழுந்தருளுவித்தவன். இதுவே திருவேங்கடமலை.
12. பாதாளத்திருந்த உபரி சரவசுவைப் பூமியில் இருத்தி அரசு தந்தவன்.
13. தட்சன் யாகத்தில் சிவகணங்களுடன் போர் செய்ய வீரபத்திரரால் விடுக்கப்பட்ட அநேகம் கருடராற் பங்கப்பட்டு விஷ்ணுவைத் தள்ளி விட்டுப் புறமுதுகிட்டுச் சென்றவன்.
(கூர்ம புராணம்)
14. திருக்கைலையில் கருவத்துடன் சென்று அவ்விடத்திருந்த நந்திமா தேவரின் உச்வாச நிச்வாசங்களில் அகப்பட்டு மயங்கித் துதித்தவன்.
(திருக்கழுக்குன்றப் புராணம்) இவனுக்குப் புள்ளரசு, ககபதி, நாகாரி, பெரிய திருவடி, கருத்மந்தன் எனவும் பெயருண்டு.
15. வாலவிருத்தை என்பவள் யோகம் புரிகையில் அவளுக்கு இடையூறு விளைத்து இரு சிறகும் அற்று விழச் சாபம் ஏற்றுப் பின் சிவ பூசையால் வளரப் பெற்றவன்.
(திருவாரூர்ப் புராணம்)
16. ஒரு காலத்துத் திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத் தீவிலிருந்து பாற் கட்டிகளைக் கொணர்ந்து தன் பிடரிச் சட்டையினால் எங்கும் சிதற அவை சுவேத மிருத்திகை ஆயின. இம்மிருத்திகையே ஊர்த்வபுண்டரம் தரித்தற்குரியது. கருடப்பார்வை - இராஜ பார்வை, மாறு பார்வை, விடந் தீர்க்கும் பார்வையினொன்று என்றும் குறிப்பிடுகின்றது.
(அபிதான சிந்தாமணி ப.431 - 432)
கருடபஞ்சமி
இது குறித்து அபிதான சிந்தாமணி ஆவணி மாத சுக்ல பட்சப் பஞ்சமி. இது சுமங்கலிகட்குரிய ஒரு விரத நாள். ஆவணி மாதத்தில் சுக்கில பட்சத்தில் வரும் பஞ்சமி. இது சுமங்கலிகட்கு உரிய விரத தினங்களுள் ஒன்று. இது சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம். இது கருடனை நோக்கி ஆவணி மாதம் சுக்கில பட்சப் பஞ்சமியில் அனுஷ்டிப்பது. அரசன் குமரர் எழுவரும் பாம்பினாற் கடியுண்டிறக்க அப்பிள்ளைகளின் தங்கை இவ்விரதம் அனுஷ்டித்துப் பாம்பின் புற்றையும் பூசித்து அப்புற்றின் மண்ணைச் சலத்திற் கரைத்து இறந்த தமயன்மாரின் உடல் மேல் தெளித்து உயிர்ப்பித்தனள். ஆவணி மாதம், சுக்கில பட்சத்தில் வரும் ஐந்தாம் திதி என்கின்றது.
கருடதிசை - கிழக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருட (தரிசனம்) காட்சி பயன்கள்
தரிசனம் என்பது காட்சி எனப் பொருள்படும். கருடனைக் காணுதல் இங்கே குறிப்பிடப் பெறுகின்றன.
கருடனைப் பற்றி பெரிய சோதிட சில்லரைக்கோவை, கோயிற்களஞ்சியம், அபிதான கோசம், குடும்ப சோதிடம், பகவத் கீதை ஆகியவற்றனுள் தரப்பெற்றுள்ள செய்திகள் இங்கே தொகுத்துக் குறிப்பிடப்பெறுவதோடு, பலன்கள் ஒப்பிடப் பெறுகின்றன.
“தினகரனால் கலியாண பலமேயுண்டாம்
திங்கள்தனில் நினைத்ததெல்லாந் திரளாய்க்கூடும்
அனமுடனே அறுசுவையுஞ் சிக்கும்செவ்வாய்
அபமிருத்து தோசத்தை யகற்றும்புந்தி
மனதிலுறு துயரம்போம் குருவாரத்தில்
வளர்வெள்ளி தனக்கிடுக்கண் மாற்றிவைக்கும்
கனசனிநாள் கெம்பீர பலனேயுண்டாம்
கருடனைக் கண்டாலிதுவே கழறுவாயே’’
என்று பெரிய சோதிட சில்லரைக்கோவைப் பாடல் சான்று பகர்கின்றது. இறுதிப்பாடல்.
இன்றும் கருடனை வணங்கும் வழக்கம் உள்ளது. அக்காலத்தில் அது பெருவழக்காய் இருந்தது. திருமாலினைக் கண்டதற்கு இணையாய் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. திருமாலின் அம்சம் ஆதலின் இவரைக் காணும் தரிசனம் திருமாலையேக் கண்டதாக அன்றும் இன்றும் வழக்கினில் சிறந்த வழிபாடாக உள்ளது. கருடப்பறவை தெய்வப்பறவை, திருமாலின் வாகனமாக உள்ள இதனை ஏழு கிழமைகளிலும் காண்பதால் மிகுந்த நற்பலன்கள் ஏற்படும்.
பழங்காலம் முதல் இருந்து வரும் இவ்வழிபாட்டினைப் பற்றிக் கோயிற் களஞ்சியம் எனும் நூல், வைணவர்கள் வீட்டு நிலைப்படியை அலங்கரிக்கும் ஐந்து திருவடிவங்களில் (திருமண், சங்கு, சக்கரம், கருடர், அனுமர்) கருடனும் ஒன்றாகும். பிரம்மதேவர் புதல்வர் காசிபர்க்கும் அவர் மனைவி கத்துருவுக்கும் தோன்றியவர்கள் அருணனும், கருடனும் ஆவர். கருடன் இந்திரனை வென்றதற்காகத் திருமால் அவனைத் தமது வாகனமாக ஏற்றார். அதனால் அவருக்குப் பெரிய திருவடி எனும் பெயரும் உண்டு. கருடர், கருடாழ்வார், கருத்தமன் எனும் வேறு பெயர்களும் இவர்களுக்கு உண்டு என்றும்,
“விரிநீல் சிறகு வியன் மார்பன்”
(கோ.மு.முத்துசாமிப்பிள்ளை, கோயிற்களஞ்சியம், பக்.72-73)
எனத் தமிழ் இலக்கியங்கள் இவரைப் போற்றுகின்றன. திருமாலின் கொடியிலும் கருடர் உருவம் உள்ளது. எல்லாத் திருமால் கோயில்களிலும் கருவறையை நோக்கியவாறு கருடர் கைகூப்பி அஞ்சலி செய்யும் வடிவில் நின்ற வண்ணம் சேவை செய்கிறார். கருடர் வாகனம் என்றும், கருட சேவை என்றும், வைணவ ஆகமங்களில் மூன்றாம் நாள் காலை அல்லது ஐந்தாம் நாள் இரவு கருட வாகன சேவை விழா நடத்த விதிக்கப்பட்டுள்ளது என்றும், திருமால் கோயில்களில் சிறந்த வாகனமான இது மரம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றது என்றும், இதன்மீது திருமால் எழுந்தருளி வருதலையேக் கருட சேவை என்றும், ஆனிக் கருட சேவை, வைகாசிக் கருட சேவை, வைகுண்ட ஏகாதசிக் கருட சேவை எனச் சிறப்புப் பெற்றன என்று தெரிவிப்பதாலும் அறியலாம்.
அபிதான கோசம் எனும் நூலினுள், கருடன் - கசியப்பிரசாப் பதிக்கும், விநதைக்கும் பிறந்த புத்திரன் என்றும், இவர் திருமாலின் வாகனம் என்றும் குறிப்பிடுவதால் இவரது சிறப்பை அறியலாம்.
(ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை, அபிதான கோசம், ப.64)
குடும்ப சோதிடத்தினுள், இந்தத் தெய்வீகப் பறவையை இக்காலத்தில் தரிசிப்பது கடினமாக உள்ளது என்றும், இதைத் தரிசிப்பதால் மிகுந்த, சிறந்த நற்பலன்களாக
ஞாயிறு-பிணி அகலும்
திங்கள் - துயரம் நீங்கி அழகு உண்டாகும்
புதன், வியாழன் - பில்லி, சூன்யம் வைப்பது அகலும்
வெள்ளி, சனி - நிறைந்த ஆயுளும், செல்வமும் ஏற்படும்
என்றும்,
கருடனைத் தரிசிக்கும் போது வணங்குவதற்குரிய முறையினையும், கைகூப்பி வணங்காமல் வலது கை மோதிர விரலினால் இரு கன்னங்களையும், மூன்று அல்லது நான்கு முறைகள் தொட்டு, அந்நூலுள் உள்ள வடமொழி மந்திரம் உச்சரிப்பதால் மிக்க நன்மை கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றது.
(இராமய்யங்கார், குடும்ப சோதிடம், ப.208)
ஸ்ரீமத் பகவத் கீதை 10-ஆவது அத்தியாயத்தில் திருமால் தானே திருமாலின் அம்சம் கருடன் என்றும், இவர் வினதையின் குமாரரான கருடன் பறவைகளுக்கு எல்லாம் அரசன் என்றும், பறவைகள் அனைத்திலும் உயர்ந்தவர் என்றும், இவர் பகவானுடைய பக்தர், பராக்கிரமம் படைத்தவர் என்றும் கருடனைத் தம் வடிவம் என்றும் இவரைக் காண்பதால் தம்மைத் தரிசித்த பலன் கிட்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
(ஸ்ரீஐயதயால் கோயந்தகா, ஸ்ரீ.ம.ப.கீ.த.வி, பக்.638-639)