சடங்குகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
சடங்குகள் - பகுதி 4
உபதேசம்
சாந்திர மாதங்களால் வந்த மாசி, புரட்டாசி, மார்கழி, ஆடி ஆகிய இவை ஒழிந்த மாதங்களிலே குரு, சுக்கிரன் அத்தமனம் இல்லாத காலத்தில் அனுடம், சோதி, உரோகிணி, அத்தம், மிருகசீரிடம், புநர்பூசம், பூசம், உத்திரத்திரயம், திருவோணம், அவிட்டம், கேட்டை, மகம், திருவாதிரை, சித்திரை, இரேவதி ஆகிய இந்நாட்களிலே மந்திர உபதேசம் செய்தல்.
அமாவாசை, பூரணை, சதுர்த்தசி, நவமி, அட்டமி, செவ்வாய், சனி, திரராசிகள் தவிர்த்து அட்டம சுத்தி உண்டாகப் பகற்காலத்திலே மந்திர உபதேசம் செய்தல். சென்மத்திரயத்தும், சங்கிரம காலத்தும், கிரகண காலத்தும் மந்திரங்கள் உபதேசம் செய்யவும் சாதிக்கவுமாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 15 - 16, ப.151)
சதாபிஷேகம்
ஆதித்திய கதியால் வந்த ஆண்டைந்துக்குஞ் சந்திரோதயம் 62, பிறை உதிக்கும். 80 சவுர ஆண்டும் எட்டு மாதமுஞ் சென்றவன் 1000 பிறை காண்பான். ஆதலால் அவன் புண்ணிய புருடன் சொற்கப் பிராத்தியாகும் பொருட்டு அவனுடைய சென்ம மாதஞ் சென்ம நட்சத்திரத்திலே சதாபிடேகம் செய்தல்.
முன் சொன்ன நாள் கழிந்தால் திருவோணம், அத்தம், இரேவதி, மகம், சோதி, சதயம், உத்திரத்திரயம், உரோகிணி ஆகிய இந்நாட்களிலே நல்ல பக்கங்களில் திங்கள், வெள்ளி, புதன், வியாழன் ஆகிய இவ்வார உதயங்களிலும், இவர்களுடைய ராசியான சுப லக்கினங்களிலும் அட்டமசுத்தி உண்டாகச் சதாபிடேகம் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 17 - 18, ப.152)
சோடகம் - பதினாறு. சோடசகிரியையாவன
1. ருதுசங்கமனம்
2. கர்ப்பாதானம்
3. பும்சவனம்
4. சீமந்தம்
5. ஜாதகர்மம்
6. நாமகரணம்
7. சூரியவலோகனம்
8. நிஷ்கரமணம்
9. அன்னப்பிராசனம்
10. சௌளம் அல்லது சூடாகரணம்
11. உபநயனம்
12. பிண்ட விருத்தி
13. காண்டோபக்கிரமணம்
14. காண்ட மோசனம்
15. சமாவர்த்தனம்
16. விவாகம்
1. ருதுசங்கமனம்
நாயகியினது ருது காலத்தில் நாயகன் கூடும் படி செய்யுங் கிரியை.
2. கர்ப்பாதானம்
இது பிண்டோற்பத்தி செய்தற் பொருட்டு விவாகமான பெண் பூத்த நாள் நான்கிற்கு மேல் பதினாறு நாள்களுக்குள் செய்யும் கிரியையாம்.
3. பும்சவனம்
இது பிண்டம் அசைவு அடைதற்கு முன்பே இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் தரித்த கரு ஆண் மகவாக வேண்டிச் செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம்.
4. சீமந்தம்
இது நாலாம் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் வரையில் அவரவர் மரபின் வழக்கப்படி செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம்.
5. ஜாதகர்மம்
குழந்தை பிறந்து நீராடினவுடன் கொப்பூழ்க் கொடி அறுப்பதற்கு முன் செய்ய வேண்டிய கிரியையாம். அதாவது புதல்வன் பிறந்த மாத்திரத்தில் தந்தை தரித்திருக்கின்ற வஸ்திரத்தோடு ஸ்நானஞ் செய்து பொன், வௌ்ளி தானியங்களைத் தானஞ் செய்த பின் பொன், தேன், நெய் சேர்த்திழைத்துச் சிசுவுக்குச் செவ்வெண்ணெய் புகட்டுதலுடன் பிதுர்க்களுக்கு இரண்ய சிரார்த்தஞ் செய்தலாம்.
6. நாமகரணம்
இது பிறந்த மகவுக்கு 10 அல்லது 12, 16 வது நாள்களில் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும். அட்சரங்களை முதலாகக் கொண்டு பெயரிடுவதாம். அல்லது பாட்டன் முதலானார் பெயரை இடுவதாம்.
7. சூரியவலோகனம்
அதாவது மூன்றாம் மாதத்தில் குழந்தை சூரியனைத் தரிசிக்கச் செய்தல்.
8. நிஷ்கரமணம்
நான்காம் மாதத்தில் குழந்தை சந்திரனைத் தரிசிக்கச் செய்தலும் சந்தியை மிதிப்பிக்கச் செய்தலுமாம்.
9. அன்னப்பிராசனம்
இது 6 - வது அல்லது 8 - வது மாதங்களில் குழந்தைக்கு அன்னம் ஊட்டுதலாம். பெண் குழந்தையாகில் ஒற்றைப்பட்ட மாதத்தில் செய்வதாம்.
10. சௌளம் அல்லது சூடாகரணம்
குழந்தைக்கு 1,3,5 - வது ஆண்டில் மயிர் களைவது. ஏழாவது ஆண்டு அல்லது 8 - வது ஆண்டில் காது குத்துதல்.
11. உபநயனம்
இது குழந்தைக்குத் தீ செய்வித்தலாம்.
12. பிண்ட விருத்தி
குழந்தையை வளர்க்கும் கிரியை.
13. காண்டோபக்கிரமணம்
வேதாத்தியயனம் ஆரம்பிக்கும் கிரியை.
14. காண்ட மோசனம்
வேதாத்தியயனம் முடித்தல்.
15. சமாவர்த்தனம்
பிரமசாரி விரதத்தை முடித்தல்.
16. விவாகம்
இது பிரமச்சரியம் நீங்கி நற்குலத்து உதித்த கன்னிகையைத் தம் மரபிற்குப் பொருந்த மணங்கொண்டு இல்லறம் நடத்தலாம்.
சிராத்தம் - சிரார்த்தம்
இது பிதுர்க்களை எண்ணி, அவர்கள் களிப்புறச் செய்யும் கருமம். இது சுபத்திற் செய்யின் அப்யுதயம் என்றும், நாந்தி என்றும், அசுபத்தில் செய்யின் நகலை, ஏகோதிட்டம், சோடச சபிண்டீ கரணங்கள் என இப்பெயர்கள் பெறும். இது புண்ணிய நட்சத்திரங்களில் செய்யப் படின் மிக்க பலன் தரும். அமாவாஸ்யை, சங்கிரமணம், மகாலயபலம், வியதிபாத யோகம், யுகாதி, மாசப்பிரவேசம், கிரகண புண்ணிய காலம் இவைகளில் செய்யின் பிதுரர் களிப்படைவர். சிராமம் - காலம், மாதம்.
இறந்தோர்க்குச் செய்யும் ஓர் கிரியை, அஃது யாகம் இருபத்தொன்றின் ஒன்று. பிதிர் கன்மம். இது பிதிர் தேவதைகளுடைய திருப்தியின் பொருட்டுச் செய்யப்படும் பிண்ட கருமம். இது சுப கருமத்தின் கண்ணும், அசுப கருமத்தின் கண்ணும் செய்யப்படும். சிரார்த்தம் சாந்தி என்றும், அப்பியுதயம் என்றும் சொல்லப்படும். அசுப சிரார்த்தங்கள் அனேகம். அவற்றுள் பிரேத சிரார்த்தம் பிரேத திருப்தியின் பொருட்டும் பிரேதவிமுத்தியின் பொருட்டும் செய்யப்படுவது. இது நக்கினநிலை ஏகோதிஷ்ட சோடச பிண்டீகரண சிரார்த்தங்கள் எனப் பல பைதிருக சிரார்த்தம் பிதிர் தேவதைகளின் பொருட்டுச் செய்யப்படும். பிதிர் தேவதைகள் வசு ருத்திர ஆதித்திய பதப்பேறு உடையவர்களாய் உள்ளவர்கள். காசி, கயை, பிரயாகை, குரு நட்சத்திரம், கோகர்ணம், குரு ஜாங்கலம், புட்கல நட்சத்திரம் முதலியன சிரார்த்த கருமங்களுக்குரிய சிறந்த ஸ்தலங்கள், அவற்றுள் கய சிரார்த்த மிக்க விசேடம் உடையது. இறந்த தினம், அமாவாசை, மகாளய பட்ச முதலியன சிரார்த்தத்துக்குரிய காலம்.
அகராதி தரும் செய்திகள்
பிண்டம் வைத்தல் - பிதிர்கடன் செய்தல்.
பிதிர் - காலநுட்பம், தந்தை வழியின் மூதாக்கள், பிதாபிதிரென்னேவல், பிதிர்கள்.
பிதிர்கடன், பிதிர்கருமம் - சிரார்த்தம் முதலிய தென்புலத்தோர் கடன்.
பிதிர் காதகம் - பிதாவைக் கொல்லுகை.
பிதிர்காரகன் - சூரியன்.
பிதிர்காரியம் - பிதிர்கடன்.
பிதிர்காலம் - சிராத்த புண்ணிய காலம். அஃது பதினெண்ணாழிகை தொடங்கி இருபத்து நாலு நாழிகை பரியந்தம். தகப்பனைக் கோரி தகப்பனுக்கு நன்றி செலுத்தும் காலம். இது பதினெட்டு நாழிகை தொடர்ந்து, இருபத்து நாலு நாழிகை வரை உள்ளதாகும்.
பிதிர்கிரியை - பிதிர்கருமம்.
பிதிர்சந்ததி - பிதிர் வழி.
பிதிர்சனம் - முற்பிதாக்கள்.
பிதிர்சனம், பிதிர்சாமான்னியர் - முற்பிதாக்கள்.
பிதிர் ஸ்தானம் - ஒன்பதாம் இடம்.
பிதிர்ஸ்தான அதிபதி, பிதிர் ஸ்தான அதிபன் - ஒன்பதுக்கு உடையவன்.
பிதிர் சிராத்தம் - பிதாவுடைய பிதிர் பலி, பிதாவுடைய சிராத்தம்.
பிதிர்தானம் - சிராத்த தானங்களின் ஒன்று, ஒன்பதாமிடம்.
பிதிர்திதி - அமாவாசி. அமாவாசை.
பிதிர்தினம் - பிதிர்நாள்.
பிதிர் தீர்த்தம் - கெயை கயை, பிதிர் கடமை கழிக்கும் புண்ணிய தீர்த்தம்.
பிதிர் தேவர் - தென்புலத்தார்.
பிதிர் ஸ்தானாதிபதி - ஒன்பதாமிடத்திற்கு உரியோன்.
பிதிர்த்துரோகம் - இறந்த பிதா முதலியோர்க்கு விரோதஞ் செய்தல், பிதிர் கடமை செய்யாது விடல்.
பிதிர் தைவதம் - மகம் நட்சத்திரம். பிதிர்நாள் - அமாவாசி, இறந்தோர் நாள், மகநாள்.
பிதுர்க்கள்
1. பிரமதேவர் சில தேவர்களைப் பூர்வத்தில் சிருட்டித்துத் தம்மைப் பூசிக்கக் கூறினர். பிரமன் வார்த்தையை மதியாது தங்களைத் தாங்களே பூசித்துக் கொண்ட அவர்களை ஞான வீனராக எனப் பிரமதேவன் சபித்தனன். பிறகு அத்தேவர் சாபத்தீர்வு வேண்டப் பிரமன் என் புத்திரரைக் கேட்டுத் தீர்க என அவர்கள் பிரமபுத்திரர்களை வேண்ட அப்பிரமபுத்திரர் புத்திரர்களே உங்களை அச்சாபம் பாதியாது விருப்பின் படி செல்க என்று சாபத்தை விலக்கினர். அப்பொழுது பிரமதேவர் தேவர்களை விளித்து நீங்கள் என் புத்திரர்களால் புத்திரர்களே என அழைக்கப் பெற்றமையின் அவர்கள் பிதுர்க்களாகவும் நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குக என்று அனுக்கிரகித்தனர். இவர்களைப் பூசிக்கின் பிதுர் பிரீதியாம். (சிவ மகாபுராணம்.) பிதுர் தேவர்கள் எழுவர் கவ்யவாகன், அனலன், சோமன், யாமன், அரியமான், அக்னிஷ்வாத்தன், பர்ஹிதன் என் போர். இவர்களில் நால்வர் தேகமின்றியுமிருப்பர்.
2. பூர்வசிருட்டியில் பிரமதேவர் எழுவர் பித்ருக்களைச் சிருட்டித்தனர். அவர்களில் நால்வர் தேகத்தோடு கூடியவர். மூவர் தேஜ ஸ்வரூபர். இவர்களுக்குச் சார்த்த தர்ப்பண பூர்வகமாய் ஆகாரத்தைக் கற்பித்தார். இவர்கள் எழுவருக்கும் ஸ்வதா என்பவள் தேவி. (பிரம்ம கைவர்த்தம்.)
3. சோமபர் என்னும் வேரு பித்ருக்கள் உளர். இவர்களின் மானச புத்திரியாகும் நருமதை அதி வேகமுடையவளாக இருப்பாள். ஆதலால் வேதியர் பித்ருக்களை அறிந்து சிரத்தாதிகள் செய்தல் வேண்டும். (மச்சபுராணம்.)
மகாலய அமாவாசை
புரட்டாசி மாதத்திய அபரபட்சத்தில் கன்யாராசியில் சூரியன் பிரவேசிப்பது மகாலயம் எனப்படும். அமாவாசைக்கு முன் பதினைந்து நாள் பிதுர் சிரார்த்தத்திற்குரிய நாள்களாம். இதில் பிரதமை தனசம்பத்தும், த்விதியைப் பிரஜா லாபமும், த்ரிதியை வளர்ச்சி லாபமும். சதுர்த்தி சத்துரு நாசனமும், பஞ்சமி சம்பத்தும், சஷ்டி புகழும், ஸப்தமி கணாதிபத்யமும், அட்டமி, சிறந்த புத்தியும், நவமி ஸ்திரளீ சம்பத்தும், தசமி, இட்ட சித்தியும், ஏகாதசி, வேத சித்தியும், த்வாதசி, பிரஜாவிருத்தி, மேதை, பசு, புஷ்டி, சுவாதந்திரியம், தீர்க்காயுளும், உண்டு. சதுர்த்தசி, யந்திரங்களால் இறப்பார்க்குச் செயின் நலம். இந்தப் பட்சம் முழுவதும் சிரார்த்தஞ் செயின் சிரார்த்த பலனுண்டு. இக்காலத்தில் யமபுரத்திலிருந்து பிதுர்க்கள் பூமியில் வந்து வசிப்பாராகையால் யமபுரம் சூன்யமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பரணியிலும், அட்டமியிலும் கஜச்சாயையென்று கூறப்படும் திரயோதசியிலும் சிரார்த்தஞ் செயின் கயாசிரார்த்த பலன் உண்டு. அமாவாசை, பரணி, த்வாதசி, இவைகளில் திதி, நட்சத்திர, வார தோடம் வேண்டா.
மஹாமகம்
சிங்கராசியில் ப்ருஹஸ்பதி ப்ரவேசமாயிக்கும் வருடத்தில் மாசி மாசத்துப் பௌர்ணிமை. அது கும்பகோணத்திலே உள்ள மஹாமகத் தீர்த்தத்திலே ஸ்நாநஞ் செய்தற்குரிய விசேட புண்ய நாள்.
மஹோதயம், மகோதயம்,
மகத நாட்டிலுள்ள ஒரு பட்டணம். இது விஸ்வாமித்திரன் இராஜதாநிகுசிகன் மகன் குசநாபனாலே நிர்மிக்கப்பட்டது. தை மாசமும், அமாவாசையையும், திருவோண நட்சத்திரமுங் கூடிய சுபதினம் மஹோதய புண்ய காலம் எனப்படும். இப்புண்ய காலத்திலே செய்யப்படும் தாந தர்ப்பணம். முதலியன நற்பலன் தரும்.
தை, மாசி மாதங்களில் அமாவாசையும், திருவோண நட்சத்திரமும் கூடிய நாள். இது ஞாயிற்றுக்கிழமையில் வரின் நன்று. அறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் விசேட நாள். அது அருத்தோதயத்தில் கூறியபடி அமாவாசையானது திங்கட்கிழமையோடு கூடி வருவதாகும்.