தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் இரண்டு (2) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் இரண்டாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் இரண்டுக்குரிய கோள் சந்திரன் ஆகும். இது உண்மையில் ஒரு துணைக்கோள் ஆகும். பூமிக்கு மட்டுமின்றி வேறு சில கோள்களுக்கும் இதுபோல சந்திரன்கள் உண்டு. பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளது. கோள்கள் யாவும் சூரியனைச் சுற்றி வரும்போது, இந்தத் துணைக்கோள்கள் எல்லாம் கோள்களைச் சுற்றி வரும்.
சந்திரன் ஒரு துணைக்கோள் என்பதால், இக்கோளின் தாக்கம் உடையவர்கள் மற்றவருக்கு உதவியாளர்களாக இருப்பார்கள். தங்களது தேவைகளுக்குப் பிறரைச் சார்ந்தே இருப்பார்கள். உதவியாளர் என்பதால், உதவியாளருக்குத் தேவையான பண்புகளான பொறுமை, பணிவு, அன்பு ஆகிய குணங்கள் இவர்களிடத்தே காணப்படும். கோள்களிலேயே சந்திரனுக்கு மட்டும்தான் நாளும் ஆண்டும் ஒரே எண்ணிக்கையால் ஆனவை. அதாவது சந்திரன் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்கும்போது பூமியையும் ஒருமுறை சுற்றி முடிக்கிறது. இதனால் இந்த எண்ணின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களுடைய அக இயக்கமும் புற இயக்கமும் ஒரே வேகத்தில் இருக்கும். இதன் விளைவாக இவர்களுடைய செயல்கள் யாவும் அவசர கதியிலேயே இருக்கும். அத்துடன் இவர்கள் மனதில் பட்டதை அப்படியே பட்டென்று சொல்லி விடுவார்கள். ஒளித்து வைக்கத் தெரியாது. தாங்கள் அறிந்த ரகசியத்தை மறைத்து வைத்திருப்பது என்பது இவர்களால் இயலாத ஒன்றாகும். தொலைதூரப் பயணம், வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றை அடிக்கடி மேற்கொள்வர்.
எண் இரண்டுக்குரிய எழுத்துக்கள் ல்,ன்,ற் ஆகியன. இவ்வெழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமையும் வினை "குழிதல்" ஆகும். இவ்வினையை விரித்தால், குறைதல், குறைத்தல், பிரிதல், பிளத்தல், பகுத்தல் முதலான பல வினைகள் தோன்றும். இவ்வெண்ணுக்கு உரியவர்கள் பகுத்தறிவு மிக்கவர்களாய், எந்த ஒரு விசயத்தையும் ஆய்வுசெய்யும் பண்பு உடையவர்களாய் இருப்பதைக் காணலாம். தலைசிறந்த ஆய்வாளர்கள் யாவரும் இவ்வெண்ணின் தாக்கம் பெற்றவர்கள் என்று கூறலாம். சந்தேகம், ஆய்வு, நம்பாமை ஆகியவை இவர்களது பிறப்புக் குணங்கள். சந்திரன் ஒரு பெண் கோள் என்பதால், பெண்களுக்கே உரிய சந்தேகக் குணம் இக்கோளுக்கும் இருக்கிறது. இம்மக்களில் பலர் நல்ல கல்வியாளர்களாகவும் இசைத்துறையில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாகவும் புகழ் தரும் செயல்களையே செய்ய விழைபவர்களாகவும் இருப்பர்.
இக்கோளின் தாக்கம் பெற்றவர்கள், காவல்துறை, ஆய்வுத்துறை, இசைத்துறை போன்ற துறைகளில் பணி செய்யலாம். இத்துறைகளில் பணி செய்தால் இவர்கள் நல்ல நிலையை அடையலாம். சிலருக்கு கண்கள் சிறியதாய் இடுங்கியதைப் போல இருக்கும். பணம் செலவு செய்வதில் மிகக் கஞ்சத்தனமாக இருப்பார்கள். ஆறு நிறைய வெள்ளம் போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும் என்னும் பழமொழி இவர்களுக்குப் பொருந்தும்.
சந்திரனின் நிலை கெட்டிருந்தால், இவர்களுக்கு தீமைகள் ஏற்படும். தமக்குத் துணையாக இருப்பவரின் மேல் சந்தேகம் கொள்வதால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும். பொருளையும் இழந்து பாசத்திற்காக ஏங்கித் தவிக்க நேரிடும். கணவன்-மனைவியிடையே மனமுறிவு ஏற்பட்டு நிரந்தர பிரிவு அதாவது மணமுறிவுக்கும் வழிவகுத்து விடலாம் என்பதால் இக்காலத்தே இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிவெடுக்க முடியாமல் தவித்தல், அடிக்கடி முடிவை மாற்றிக் கொள்ளுதல், முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்ளுதல் போன்ற விளைவுகள் உண்டாகும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவதால் சில நேரம் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.