பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி இறந்து போவார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயைச் சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் தன் தோளில் இருந்த தாயார், ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
அவன் நடந்து கொண்டே, அம்மா ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?” என்று கேட்டான்.
அதற்குத் தாயார், ”மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா? இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய்ச் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்” என்றாள்.
“வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று அவன் உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கேக் கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான்.
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்து போனது.