முன்னொரு காலத்தில் காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் வசித்து வந்தாங்க. தினமும் காட்டில் உள்ள மரங்களை வெட்டி, விறகாக்கி அதைப் பக்கத்துக் கிராமத்தில விற்றுப் பிழைப்பை நடத்தி வந்தார்கள்.
ஒரு நாள் மதியம் தாத்தா ரொம்பக் களைச்சு போய்ச் சாப்பிட உட்காந்தார்.
பாட்டி அவருக்கு கேழ்வரகு களி சமைத்து அனுப்பி இருந்தாங்க. களியை கையில எடுத்துச் சாப்பிடப் போனார், அது தவறி கீழே விழுந்து, அது ஒரு பொந்துக்குள்ள போய் விழுந்துடுச்சி.
அது ஒரு எலி பொந்து போல இருந்தது.
அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார். நல்ல பசி வேற. அப்படியே உட்கர்ந்து இருந்தார்.
திடீர்னு ஒரு அழகான எலி பொந்திலிருந்து எட்டி பார்த்து, “சாப்பாடு போட்டமைக்கு மிக்க நன்றி தாத்தா” ன்னு சொல்லுச்சு.
அட! எலி பேசுதேன்னு ஆச்சரியமா பாத்தார்.
“நல்லா சாப்பிடுங்க எலி”ன்னு தாத்தா சொல்லிட்டு, “நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கே”ன்னும் சொன்னாரு.
எலி சிரிச்சிகிட்டே....! ”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?” ன்னு கேட்டுச்சாம்.
தாத்தா சிரிச்சுக்கிட்டே “இந்தச் சின்ன பொந்துக்குள்ள...? நானா...? நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழே உக்கார்ந்து கேட்டார்.
“முடியாதது எதுவும் இல்ல தாத்தா, அது ரொம்ப சுலபம்... நீங்க என் வாலை பிடிச்சிக்கிட்டு கண்ணை மூடிக்கோங்க”ன்னு சொல்லிச்சு. தாத்தாவும் சிரிச்சுக்கிட்டே கண்ணை மூடிக்கிட்டு எலி வாலை பிடிச்சுக்கிட்டார்.
அவருக்கு ஒரே ஆச்சரியம். எங்கேயோப் பறக்கற மாதிரி இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழித்து “தாத்தா... வாங்க... வாங்க...” அன்பான வரவேற்புச் சத்தம் கேட்டுக் கண்ணைத் திறந்தார் தாத்தா.
எலிகளோட அரண்மனை ரொம்பப் பிரமாண்டமாய் இருந்தது. அங்கே நிறைய தங்கங்கள் குவித்து கிடந்தன. சில எலிகள் சமைத்துக் கொண்டு இருந்தன. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தன, சில எலிகள் சாப்பாட்டுப் பொருள்களை எங்கிருந்தோ எடுத்து கொண்டு வந்தன. எங்கேப் பார்த்தாலும் தங்கமா இருந்துச்சு. அப்போ பெண் எலி வந்து, “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு மகிழ்ச்சியா ஆடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தன.
“நாங்கள் இங்கே எலிகள், நல்ல நல்ல எலிகள். பூனை சத்தம் வேண்டாமே எங்கும் அமைதி வேண்டுமே திலக்கலக்கா திலக்கலக்கா” இதுதான் அந்தப் பாட்டு.
தாத்தா அந்தப் பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமாச் சாப்பிட்டு முடித்தார்.
ராஜா எலி ஒன்னு தாத்தாவை நோக்கி ஒரு மூட்டை இழுத்து வந்தது.
தாத்தாவிடம் வந்து, “இது எல்லாம் உங்களுக்குத்தான், நீங்க எடுத்துட்டு போங்க” ன்னு சொல்லுச்சாம்.
தாத்தா மூட்டையைத் திறந்து பார்த்தார்... ஒரே ஆச்சரியம், மூட்டை நிறைய தங்கம். எலிகள் தாத்தாவுக்கு டாட்டா சொல்லி மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு, கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.
வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பாட்டிகிட்ட சுவராஷ்யமா சொல்லிக்கிட்டு இருந்தாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.
பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் ஒட்டுக் கேட்டுகிட்டு இருந்தான்.
மறுநாள் பக்கத்து வீட்டுக்காரன் அதேப் பொந்திற்கு போய் ஒரு களி உருண்டையப் போட்டான். அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.
“நாங்கள் இங்கே எலிகள், நல்ல நல்ல எலிகள் பூனை சத்தம் வேண்டாமே எங்கும் அமைதி வேண்டுமே திலக்கலக்கா திலக்கலக்கா”எலிகள் பாடும் சத்தம். அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்தாது. இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு திட்டம் போட்டு யோசிச்சான். பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” எனச் சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல. கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லாத் தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறதுன்னு தெரியல. ஒரே இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல.
எலிகள் அந்த இடத்திலிருந்து இடம் மாறிப் போய் வேற இடத்துல அரண்மனையைக் கட்டி சந்தோசமா வாழ்த்துச்சாம்.
பேராசை இல்லாத தாத்தா நன்கு பிழைத்து வந்தார். பேராசை கொண்ட பக்கத்து வீட்டுக்காரன் இன்னும் எங்கிருக்காண்ணே தெரியல.
அளவான ஆசையுடன் இருப்பது யாருக்கும் துன்பம் இல்லை