ஓர் ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. அங்கு பயின்று வந்த சீடர்கள் அனைவருமே பெரும் திறமைசாலிகள் என்று அனைவராலும் பேசப்பட்டும் வந்தது. அந்தக் குருகுலத்தில் வருடாவருடம் சிறந்த சீடன் யார்? என்று தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த சீடன் என்ற பட்டமும் வழங்கப்படும். இந்த வருடமும் யார் சிறந்த சீடன்? என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. குருகுலத்தின் தலைமைக் குருவும், யார் சிறந்த சீடன்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆலோசனையில் இறங்கினார்.
குருகுலத்தில் உள்ள அனைத்துக் குருக்களையும் அழைத்தார். அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்களை யார் சிறந்த மாணவன்? என்று தேர்ந்தெடுக்கத் தகுதியுடையவர்களைப் பரிந்துரை செய்யச் சொன்னார். அவர்கள் அனைத்துச் சீடர்களிடமிருந்து, மூன்று சீடர்களை மட்டும் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சிறந்த சீடன் என்ற பட்டம் ஏதேனும் ஒரு சீடனுக்குத்தான் சென்று சேர வேண்டும் என்பது குருகுலத்தில் விதிகளில் ஒன்று. ஆனால், இந்த மூன்று மாணவர்களும் ஒருவருக்கொருவர் எதிலும் விட்டுக்கொடுத்தவர்கள் இல்லை. கல்வி, வீரம் மற்ற கலைகள் என எல்லாவற்றிலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
சரி இந்த மூவரில் யார் சிறந்தவர் என்று கண்டுபிடிப்பது? என்று கண்டறிய இயலாத குருக்கள் அனைவரும் தலைமை குருவிடம் சென்றனர்.
தலைமைக் குரு, அவர்கள் மூவரில் ஒருவரைச் சரியாகத் தேர்வு செய்யும் பணியினை ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு, தலைமைக் குரு அவர்கள் மூவரில் ஒருவரை எப்படித் தேர்வு செய்வது என்று மிகவும் யோசித்து கொண்டிருந்தார்.
என்ன செய்யலாம்? எப்படி இவர்களில் சிறந்தவரைக் கண்டுபிடிப்பது? இதில் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட வேண்டுமே... என்று குரு தீவீரமாக யோசித்தார்.
மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரு போட்டியின் மூலம் மூவரில் யார் சிறந்தவர்? என்று கண்டுபிடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்.
அதன் பிறகு, அந்த மூன்று சீடர்களையும் தன்னுடைய அறைக்கு வரும்படி அழைத்தார்.
அந்த மூன்று மாணவர்களும் தலைமைக் குருவின் அறைக்கு வந்து சேர்ந்தனர்.
“கூறுங்கள் குருவே...” என்று மூவரும் ஒரே நேரத்தில் கூறினார்கள்.
“இதில் கூட இவர்களிடம் இவ்வளவு ஒற்றுமையா?” என்று வியந்தார் குரு.
“வாருங்கள் சீடர்களே... உங்களுக்கு ஒரு வேலை சொல்வதற்காகத்தான் உங்களை இங்கு அழைத்தேன். அதை நீங்கள் மறுத்து விடக் கூடாது என்றார்.
சீடர்களும், “நாங்கள் நிச்சயம், நீங்கள் சொல்லும் வேலையைச் செய்து முடிப்போம். குருவே கூறுங்கள்” என்றனர்.
“நான் ஆசை ஆசையாக ஒரு கிளி ஒன்றை கூண்டில் வைத்து வளர்த்து வந்தேன். அதற்கு உணவு அளிப்பதற்காக, இன்று காலை கூண்டைத் திறந்தேன். அந்த நேரத்தில், அந்தக் கிளி கூண்டை விட்டு வெளியே வந்து, பறந்து சென்றுவிட்டது. எனக்கு அந்தக் கிளியென்றால் மிகவும் பிரியம். எனக்காக அந்தக் கிளியை நீங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும்” என்றார்.
சீடர்களும் ஆர்வ மிகுதியால், “நிச்சயம் நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம். குருவே, அந்தக் கிளி எந்த வழியாகப் பறந்து போனது? என்று எங்களுக்கு காட்டுங்கள்” என்றனர்.
குருவும் தன் சீடர்களைப் பின்பகுதியிலிருந்த ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு நீண்ட மற்றும் அகலமான ஆறு ஒன்று தெரிந்தது. அதை தாண்டி ஒரு சிறு தீவு தெரிந்தது.
“என் கிளி இந்த ஆற்றைக் கடந்து அந்தத் தீவுக்குத்தான் சென்றது” என்றார் குரு.
உடனே மூவரும் ஆற்றில் குதித்து ஆற்றைக் கடக்கத் தயாரானார்கள். ஆற்றில் குதிக்கச் சென்ற சீடர்களை குரு தடுத்தார்.
“என்ன சீடர்களே அவசரத்தில் அறிவிழந்தீர்களா?இந்த ஆற்றில் முதலைகள் இருப்பதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.
தங்கள் அவசர புத்தியை உணர்ந்த சீடர்கள். அந்த தீவுக்கு செல்ல வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தனர்.
அப்பொழுது அங்கு பழுதடைந்த நீண்ட பாலம் ஒன்று இருந்தது. அதன் வழியாக அந்த ஆற்றைக் கடக்கலாம். ஆனால், அந்தப் பாலத்தின் வழியாக ஒரு நேரத்தில் ஒரு சீடர் மட்டும்தான் செல்ல முடியும்.
முதலாவதாக இருந்த அந்தச் சீடர், தான் அந்த பாலத்தைக் கடந்து கிளியைக் கொண்டு வருவதாகக் கூறி, பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தார். இந்த சீடர் நடக்க நடக்கப் பாலம் ஆடிக்கொண்டே இருந்தது. எப்படியாவது கிளியைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறி நடந்தான். ஆனால், தீடீரென பாலத்தின் நடுவேச் சிறிது தூரம் எந்த ஒரு கட்டைகளும் இல்லாமல் பாலம் சிதைந்து இருந்தது. இந்த இடைவெளியை எப்படிக் கடப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பாலத்தின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே இந்த இடைவெளியைக் கடந்து விடலாம் என்று யோசித்தான். அவ்வாறேப் பிடித்துத் தொங்கிக் கொண்டே நகர்ந்தான். பாதி தூரம் சென்றதும், கை வலி பின்னியது. பாலத்திலிருந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்தான். ஆற்றில் முதலைகள் இருப்பதை அறிந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக நீச்சல் அடித்துக் கரைக்குத் திரும்பினான்.
அடுத்ததாக, இரண்டாவது சீடனும் முயற்ச்சித்தான். அதே போல், அந்த உடைந்த இடத்தைக் கடக்கும் பொழுது அதே போல் ஆற்றில் விழுந்தான்.
மூன்றாவது சீடனும் வந்தான். நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் குருவே என்றான்.
சரி என்று குரு சொல்ல, வேகவேகமாகப் பாலத்தை கடக்க முயன்றான். ஆனால் அந்தச் சீடனும், அந்த உடைந்த இடைவெளியைக் கடக்க முடியாமல் ஆற்றில் விழுந்தான்.
இப்படி மூவரும் ஆற்றில் விழுந்து, நம்மால் இந்தப் பாலத்தைக் கடக்கவே முடியது என்ற மனநிலையைத் தங்களுடைய முகத்தில் சுமந்து கொண்டு சோகமாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.
குரு அவர்கள் மூவரையும் பார்த்தார்.
சிறந்த சீடனுக்கான தகுதி இவர்களிடத்தில் இல்லை என்று அங்கிருந்து கிளம்ப முயற்ச்சித்தார்.
அப்பொழுது அங்கு இருந்த மூன்றாவது சீடன் எழுந்து வந்தான்.
“குருவே எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள்...” என்று கேட்டான்.
குரு அவனைப் பார்த்தார்.
“நான் மீண்டும் முயற்சிக்க விரும்புகிறேன்” என்று கூறினான்.
அதன் பிறகு அந்தக் குரு, சீடனைத் தட்டிக் கொடுத்து, அவனைச் சிறந்த சீடனாகத் தேர்வு செய்தார்.
அந்த குருவிற்குத் தெரியும். இல்லாத பறவையை யாராலும் கொண்டு வர முடியாது என்று. எனினும், தன்னுடைய சீடர்களின் மனநிலையைத் தெரிந்து கொண்டு அவர்களில் யார் திடத்தன்மை வாய்ந்தவர்கள். மனதளவில் சக்தி வாய்ந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே இப்படி ஒரு போட்டியை வைத்தார். அதில், மூன்றாவது சீடன் மற்ற இருவரை விட, மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்ததால், அவனைச் சிறந்த சீடன் என்று அங்கிகரித்துத் தேர்வு செய்தார்.
முயற்சி செய்தால் மட்டும் அல்ல, முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.