ஜப்பான் நாட்டிலிருந்த அந்தச் சின்ன ஊரில் ஒரு பண்ணையார் குடும்பம். அந்தப் பண்ணையாருக்கு நான்கு மகன்கள்; நான்கு மகள்கள். அந்த எட்டுக் குழந்தைகளில் ஒருவன் பெயர் ஜோஜி.
ஜோஜி நன்றாக படங்கள் வரைவான். அவன் பூனைப் படத்தை மட்டும்தான் வரைவான். பூனையைத் தவிர்த்து வேறு எந்தப் படத்தையும் அவன் வரைய மாட்டான். வேறு எந்த வேலையும் செய்ய மாட்டான்.
அவன் கையில் குச்சி என்று எதாவது கிடைத்தால் போதும், மாட்டுச் சாணத்தைத் தொட்டுக்கூட ஒரு பூனையை வரைந்துவிடுவான். அவன் வரைவது என்னவோ பூனையை மட்டும்தான்.
பூனையைப் பலவிதமாக வரைவான். சிறிய பூனைகள், பெரிய பூனைகள், ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள், மீசை வைத்த பூனை, வேடமிட்டப் பூனை என்று பூனையை அவன் விருப்பப்படியெல்லாம் வரைவான்.
அவனுடைய அப்பா ஒரு நாள் ஜோஜியைக் கூப்பிட்டு, "உடனே நீ பூனை படம் வரைவதை நிறுத்தனும். நீ பூனையாக வரைஞ்சுகிட்டு இருந்தால் நீ என்னைக்கு ஒரு விவசாயியாவது?" என்று சத்தம் போட்டார்.
"மன்னிச்சுகங்க அப்பா,நான் வரைவதை நிறுத்த முயற்சி செய்கிறேன்," என்றான், ஜோஜி.
ஜோஜியும் முயற்சி பண்ணினான். இனிமே பூனையை வரையக்கூடாது என்று சொல்லிக் கொள்வான். பண்ணையில் எங்காவது ஒரு பூனையைப் பார்த்து விட்டால் போதும்! அவ்வளவுதான், அவன் உறுதி தளர்ந்துவிடும். உடனே அந்தப் பூனையை வரைய உட்கார்ந்து விடுவான்.
ஜோஜி நிச்சயமா ஒரு விவசாயி ஆக மாட்டான். அவனோட அண்ணன் தம்பிகள் எல்லாம் எனக்கு நிலத்துல உதவி ஒத்தாசையாக இருக்கிறார்கள். இவன் மட்டும் பூனை...பூனைன்னு அலையறான்," என்று அந்தப் பண்ணையார் தன் மனைவியிடம் சொன்னார்.
"அவனோட தலையெழுத்து கோவில் அர்ச்சகராஆகனும்ன்னு இருக்கோ என்னமோ! நீங்க ஏன் அவனைக் கோயிலுக்கு கூட்டீட்டுப் போகக்கூடாது?" என்று கேட்டாள் அவர் மனைவி.
விவசாயி தன் மகனை அருகிலுள்ள கிராமக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள தலைமை அர்ச்சகரிடம் தன் மகனைக் காண்பித்து தன் விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவனைப் படிக்க வைத்து அர்ச்சகராக்கி விடுகிறேன் என்றார்.
ஜோஜி மற்ற மாணவர்களுடன் தங்கி அர்ச்சகர் கொடுக்கும் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தான். அர்ச்சகர் எழுதுவதற்குத் தேவையான மை குச்சி, தூரிகை, சிலேட்டு போன்ற கல் பலகை போன்றவற்றையும் ஜோஜிக்குக் கொடுத்திருந்தார்.
ஜோஜி எழுதுவதற்கு மை தயாரித்தான். ஜோஜி போல மற்ற மாணவர்களும் மை தயாரித்துப் பாடங்களை கண்ணும் கருத்துமாக எழுதித் தயாரித்தனர்.
ஆனால் ஜோஜியோஅவனுக்கு எழுதக் கொடுத்திருந்த தாளில் மணிக்கணக்கில் எதுவுமே எழுதவே இல்லை. அதன் பின் அவனுடைய தாட்களில் வரையத் துவங்கினான். அவன் வரைந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அது பூனை!
சிறிய பூனைகள், பெரிய பூனைகள், ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள், மீசை வைத்த பூனை, வேடமிட்டப் பூனை என்று பூனையை வரைந்து வைத்தான்.
"நீ பூனைகள் வரைவதை உடனடியாக நிறுத்தவேண்டும். இப்படியே பூனைகள் மட்டுமே வரைந்துகொண்டிருந்தால் நீ எப்படி அர்ச்சகராவது?" என்று கோவில் தலைமை அர்ச்சகர் கேட்டார்.
"அய்யா, என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் பூனை படம் வரைவதை நிறுத்த முயல்கிறேன்,"என்று அமைதியாகப் பதில் சொன்னான் ஜோஜி.
அவனும் முயற்சி செய்தான். ஆனால், கோவில் பூனையை குறுக்கே செல்லும் போது பார்த்ததால், அவன் படிக்க வேண்டியதையும் எழுத வேண்டியதையும் மறந்து விடுகிறான். அடுத்து ஒரு பூனையை வரைய ஆரம்பித்து விடுகிறான்.
இந்தப் பழக்கம் ஜோஜியை பேராபத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது. கோவில் சுவர், திரைச்சீலை, காகிதத்தாள் என்று எல்லாவற்றிலும் பூனைகளாக வரைந்து தள்ளினான். கோவில் முழுக்க பூனை படங்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. பக்தர்கள் சிறியதும் பெரியதுமான பூனைகள் படங்களையே அதிகம் பார்த்தனர்.
பக்தர்கள் தலைமை அர்ச்சகரிடம் புகார் செய்தனர்.
"ஜோஜி நீ ஒரு போதும் அர்ச்சகராகப் போவது இல்லை," என்று மிகுந்த வருத்தத்தோடு சொன்னார்.
அதுமட்டுமல்ல உன்னுடய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்கே போய்விடு என்றும் சொல்லி விட்டார்.
ஜோஜி தன் அறைக்குச் சென்று அவனுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கத் தொடங்கினான். ஆனால் அவனுக்கு வீட்டுக்குப் போவதற்குப் பயமாக இருந்தது.
அவனுடைய அப்பா கோபத்தில் என்ன செய்வார் என்பது அவனுக்கேத் தெரியாது. அதனால் வீட்டுக்குப் போவதை விட அருகிலுள்ள இன்னொரு கோவிலுக்குப் போய் அங்கு தங்க முடியுமா என்று பார்ப்போம் என முடிவு செய்து கொண்டான்.
ஜோஜி நடக்கத் தொடங்கினான். இருட்டிக் கொண்டு வந்தது. வேகவேகமாக அந்தக் கிராமத்தை நோக்கி நடந்தான். ஒருவழியாக கோவிலுக்கு வந்து சேர்ந்தான். கோவில் படிக்கட்டுகளில் ஏறி கோவில் கதவைத் தட்டினான்.
ஒருத்தரும் வந்து கதவைத் திறக்கவில்லை. பெரிய கதவை மிகுந்த சிரமப்பட்டு கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போனான். கோவிலுக்குள் எங்கும் ஒரே இருட்டு. ஜோஜிக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஏன் கோவிலுக்குள் விளக்கு இல்லை;ஆட்களும் இல்லை. என்னாச்சு இந்தக் கோவிலுக்கு என்று அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான்.
கதவுக்கு அருகே இருந்த விளக்கு ஒன்றை எரியவிட்டான். அப்போதுதான் பார்த்தான். அதையெல்லாம் பார்த்தபோது அவனுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரமாகச் சத்தம்போடவேண்டும் என்று நினைத்தான்.
அந்தப் பெரிய அறையில் அறையைச் சுற்றித் திரைச்சீலைகள், பெரிய பெரிய வரைபடத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அதுதான் அவன் மகிழ்ச்சிக்குக் காரணம். உடனடியாகத் தன்னுடைய பையிலிருந்து மை,தூரிகை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான். தன்னுடைய வரையும் படலத்தைத் துவங்கி விட்டான்.
வழக்கம்போல ஒன்றை மட்டுமே வரைந்தான்...வெவ்வேறுவடிவங்களில்! அது பூனை!
சிறிய பூனைகள், பெரிய பூனைகள், ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள், மீசை வைத்த பூனை, வேடமிட்டப் பூனை என்று பூனையை வரைந்தான்.
இந்தத்தடவை அவன் ஒன்றைக் கடைசியாக வரைந்தான். அந்த அறையின் நீள அகலத்துக்கு இருந்த திரைச் சீலையின் அளவுக்கு பெரிதாக ஒரு இராட்சசப் பூனையை சிரமப்பட்டு வரைந்தான். அந்தப் பிரம்மாண்டமான பூனை மிகத் தத்ரூபமாக அழகாகவும் வந்திருந்தது. அவன் இதுவரை அவ்வளவு பெரிய பூனையை வரைந்ததே இல்லை. அவனுக்கு அந்தப் பூனையை மிகவும் பிடித்துப் போயிற்று.
அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது.
அந்த அறையிலேயே படுத்தான்;ஆனால் தூக்கம் வரவில்லை. பெரிய அறையாக இருந்ததால் உலகத்திலேயே அவன் ஒருவன் மட்டும் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எழுந்து எதாவது சின்ன அறை இருக்குமா என்று அங்குமிங்கும் நடந்து போய் பார்த்தான்.
சுவற்றில் அலமாரி போன்று இருப்பதைக் கவனித்தான்.
அதைத் திறந்துபார்த்தால் வரிசையாக நாலைந்து பேர்கள் படுப்பதற்கு வசதியான இடமாகத் தெரிந்தது. கதவை இழுத்து மூடுவது போல வசதி இருந்தது. அது அவனுக்குப் பிடித்திருந்தது. உள்பக்கம் நுழைந்து படுத்துக் கொண்டு கதவை இழுத்து மூடித் தூங்க ஆரம்பித்தான்.
திடீர் என பின்னிரவில் ஒரு உறுமல் சத்தம் கேட்டு விழித்தான்.
கொஞ்சம் பயந்தும் போனான். அந்தச் சத்தம் அவன் இருக்கும் அறையில் கேட்டது. சத்தத்தை வைத்துப் பார்க்கும் போது இது ஒரு பெரிய மிருகமாகத்தான் இருக்கவேண்டும், என்று நினைத்தான்.
இது போன்ற பிராணிக்குப் பயந்துதான், அர்ச்சகரோ, பக்தர்களோ இரவில் இங்கு தங்குவது இல்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். இப்படி ஒரு இடத்தில் நாம் தெரியாமல் மாட்டிக்கிட்டோமே என்று பயந்தான்.
இப்போது இவன் படுத்திருக்கும் இடத்துக்கு நேர் கீழே அந்தப் பிராணியின் உறுமல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்தப் பிராணிக்கும் இன்னொரு பிராணிக்கும் நடக்கும் சண்டைபோல கேட்டது. இரண்டு விலங்குகள் ஒன்றோடு ஒன்று கட்டிப்புரளுவது போலிருந்தது.
உறுமல் இப்போது ஒருவித வலியினால் வருவது போல கேட்டது. திடீர் என ஒரு பெருத்த ஒலி; அதனைத் தொடர்ந்து பாதத்தை தரையில் தட்டினால் ஒரு மெல்லிய "தட்..தட்" சத்தம் கேட்குமே, அப்படிக் கேட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் நின்று போனது. எந்த சத்தமும் இல்லை.
ஜோஜிக்கு உள்ளூர நடுக்கம். அந்த மிருகம் நாம கீழ இறங்கி வரக் காத்திருக்கோ, என்ற பயம். கதவைத் திறந்து பார்க்கவும் பயம், அவனுக்கு என்னவாக இருக்கும்? அவனால் இந்தப் பிராணியாகத்தானிருக்கும் என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை.
அப்படி இப்படி என்று தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருந்தான் ஜோஜி. சில மணிநேரங்களில் விடிந்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தது. விடியல் காலை சூரியக் கதிர்கள் கதவைத்தாண்டி உட்புகுவதை உணர்ந்தான்.
எப்படியாவது இறங்கித்தானே ஆகவேண்டும் என்று முடிவு செய்து கீழே இறஙக முடிவு செய்தான்.
ஜோஜி மெல்லக் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். இறங்கியதும்,திடுக்கிட வைத்தது அவன் கண்ட காட்சி.
பிரம்மாண்டமான எலி செத்துக்கிடந்தது. அந்த எலி "பசு" மாடு போல பெரியதாக இருந்தது. இந்த எலி எந்த மிருகத்துடன் சண்டை போட்டு மடிந்தது? சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே அப்படி எந்த மிருகமும் அவன் கண்ணில் தென்படவில்லை. அறையைச் சுற்றி எந்த மிருகமும் தென்படவில்லை. அறையில் இருந்ததெல்லாம் நீண்டு தொங்கிய திரைச்சீலைகள்; அதில் அவன்
வரைந்த சின்னதும் பெரியதுமான பூனைகள் படங்கள்தான்.
அவன் வரைந்த பெரிய பூனைப் படத்தை மீண்டும் பார்த்தான்; அந்தப் படம்....! அவன் வரைந்திருந்தது இடம் மாறியிருந்தது.
இது எப்படி நடந்தது?
"பூனை" ஜோஜி ஒரு முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது". அவன் கண்கள் வியப்பால் விரிந்தது.
நீதான் இந்த எலியிடமிருந்து என்னைக் காப்பாற்றினாயா? கீழே இறங்கி காரியத்தை முடித்துவிட்டு மீண்டும் மேலே ஏறிக்கொண்டாயா?" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
அந்தப் பெரிய பூனையின் பாதங்களை கைகளால் தடவி,"என்னைக் காப்பாற்றியதற்கு ரெம்ப நன்றி என் மதிப்பிற்குரிய பூனையாரே,"
என்றான் ஜோஜி.
இனிமேல் என் உயிர் உள்ளவரை "பூனை" படம் வரைவதை யாரும் தடுக்க முடியாது என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அப்போது கோவில் அர்ச்சகர் மற்றும் ஊர் பொதுமக்களில் சிலர் அங்கு வந்தனர்.
அந்தக் கிராமத்துக்கே சவாலாக இருந்த எலி இறந்து கிடப்பதையும் அருகில் ஜோஜி நிற்பதையும் பார்த்தனர். நடந்ததை ஜோஜி அவர்களுக்கு விளக்கினான்.
ஊராருக்கு இந்தச் செய்தி தேனாக இனித்தது. ஜோஜி அந்தக் கிராமத்துக் கதாநாயகனாக ஆனான். அந்தக் கோவில் அர்ச்சகர் ஜோஜியை அந்தக் கோவிலில் அவன் விரும்பும் காலம் வரைக்கும் வசிக்கலாம் என்று சொன்னார்.
ஆனால் ஜோஜி அவன் அம்மா சொன்னபடி ஒரு அர்ச்சகராகவும் ஆகவில்லை; அவன் அப்பா விரும்பியபடி ஒரு விவசாயியாகவும் ஆகவில்லை.
அவன் ஒரு ஓவியக் கலைஞனான்! மிகச் சிறந்த ஓவியன்! அனைத்து நாடுகளும் அவனைச் சிறப்பித்தது!
ஆனால், அவன் வரையும் ஓவியம் பூனை மட்டுமே!
சிறிய பூனைகள், பெரிய பூனைகள், ஒல்லியான பூனைகள்,குண்டான பூனைகள், மீசை வைத்த பூனை, வேடமிட்டப் பூனை என்று பூனை பல வடிவங்களில் ஓவியங்களாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது.
- ஜப்பான் நாட்டுப்புறக் கதை.