தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென்று தனித்த நிலையான முத்திரையைக் கவிதைகள் பெற்றுள்ளன. காலங்காலமாக மனித உணர்வுகளும், உணர்ச்சி வெளிப்பாடுகளும், சமூகப்பிரச்சனைகளும் கவிதைகளாக வடிக்கப்படுகின்றன. மனிதன் தன்னை நடை, உடை, பாவனை என நவீனப்படுத்திக் கொள்வது போலவே கவிஞர்கள் தாங்கள் படைக்கின்ற கவிதைகளையும், காலத்தின் மாற்றத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் நவீனத்தன்மையுடன் படைக்கின்றனர். கவிதைகளின் நவீனப்போக்கினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
நவீனம் என்ற சொல்லிற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” (1) எனப் பொருள் தருகிறது. “நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும்” (2) என்று சி. ரமேஷ் சுட்டுகிறார்.
புறவயம் என்பது கவிதையின் வடிவத்தைக் குறிக்கிறது. இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் மரபுகவிதைகள், பாஅமைப்பு, சீர், தளை, அடி, தொடை, ஆகியவற்றில் வடிவில் கொண்டுவந்த முறைமை காணப்பட்டது.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே” (நன்.462) (4)
என்ற பவணந்திமுனிவரின் நூற்பா கூறுகின்ற முறைமை போன்று, கால வெள்ளத்தினாலும், சமூக மாற்றத்தினாலும் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபுக்கவிதை படைப்போர் இன்றியும், படிப்போர் இன்றியும் வழக்கொழிந்துவிட்டது. தற்காலத்தில் கவிதையின் புறவயத்தில் பலவகையான நவீனப்போக்குகள் பின்பற்றப்பட்டு உள்ளன. ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமைரைக்கூ என புறவயத்தில் பல நவீனப்போக்கினை தற்காலக் கவிதைகள் பெற்றமைந்துள்ளன.
தற்காலத்தில் படைக்கப்படுகின்ற கவிதைகள் மிகவும் எளிமையான அமைப்புடன் அமைந்துள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்ற வகையில் அமைந்துள்ளது. மூன்று வரிகளினால் அமைந்து சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கருதிய பொருளைக் கூற ஹைக்கூ போன்ற நவீன கவிதை வடிவங்களைக் கவிஞர்கள் கையாளுகின்றனர். மூன்று வரிகளில் நதிகளில் நீர், மணல் சுரண்டப்படுவதைக் கவிஞர் கூறும் முறையினை,
“லாரி ஏறி
செத்தது
நதி” (ப.பா.ப.45) (5)
என்று எளிமையான புறவய அமைப்பில் சொற்களின் பயன்பாட்டை குறைவாகவும் கருத்தினைச் செறிவாகவும் தருகின்ற நவீனப்போக்கு முறைமை தற்காலக் கவிதைகளில் காணப்படுகின்றது.
அகவயம் என்பது கவிதையில் கவிஞன் பாடுகின்ற கரு பாடுபொருள் ஆகும். ‘கவிதையில் ஒரு படைப்பாளன் எதை உணர்த்த விரும்புகிறாரோ அதையே பாடுபொருள் அல்லது உள்ளடக்கம் என்கிறோம். கவிதையின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறி வந்திருப்பதைப் போலவே பாடுபொருளும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றே வந்திருக்கிறது என்பது உண்மையாகும். உள்ளடக்கத்தில் புதுமை, உள்ளடக்கத்தில் கட்டுக்கோப்பு, உள்ளடக்கத்தில் அழகு ஆகிய மூன்றையும் கவிதையின் இயல்புகளாகச் சுட்டிக்காட்டும் அறிஞர்கள் உருவ இயல்புகளை விட உள்ளடக்க இயல்புகளே முக்கியமானவை’ (6) என யாப்பும் கவிதையும் என்ற நூலில் செல்வம் கூறுவதாக அப்துல்ரகுமான் சுட்டுவது இங்கு காண வேண்டிய ஒன்றாகும்.
தமிழின் கவிதை மரபிற்கு நீண்டகால வரலாறு உண்டு. இயற்கை, காதல், வீரம் ஆகியவற்றைப் பாடுவதாக மரபுகவிதைகள் அமைந்திருந்தன. ஆனால் தற்காலப் புதுக்கவிதைகளோ மரபினைப் பாடுவதை விட சமூக யாதார்த்தத்தை, சமூகத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகள் தம் இதயத்தில் ஏற்படுகின்ற உணர்வு நெகழ்ச்சிகளைத் தம் கவிதைகளில் கவிஞர்கள் வடிக்க முயல்கின்றனர். தனிமனிதனுடைய மனத்தடுமாற்றம், சமூகச்சீரழிவுகள், அரசியல் போக்குகள், பெண்களின் நிலைகளை கருப்பொருளாக உள்வாங்கிக் கொண்டு கவிதையாளர்கள் நவீனத்தன்மையுடன் கவிதைகளை உருவாக்குகின்றனர். தற்காலக் கவிஞர்கள் சமூகத்தை உற்றுப் பார்க்கின்றனர். சமூகத்தில் அவர் கண்டு மனதை மகிழச்செய்த, கோபமுறச் செய்த, வருத்தமுறச் செய்த நிகழ்வுகளை கவிதையின் கருவாகக் கவிஞர்கள் கொள்கின்றனர். தற்காலக் கவிதைகளில் சமூகத்தின் யதார்த்தத்தைப் பதிவு செய்கின்ற வகையில் பாடுபொருட்கள் அமைந்துள்ளன. கவிதைகளில் பாடப்படுகின்ற பாடுபொருட்களை,
* புதிய கண்டுபிடிப்புகள்
* தற்கால அரசியல் நிலைப்பாடு
- இலஞ்சம்
- தேர்தல்திருவிழா
- அரசியல் பட்ஜெட்
- ஓட்டு இயந்திரம்
* சுற்றுச்சூழல்
* மாற்றுத்திறனாளி
* விலைவாசி ஏற்றம்
* நிகழ்வுப்பதிவுகள்
* மதுப்பிரச்சனை
என நிகழ்காலத்தில் தன் கண் முன்னே நிகழ்கின்ற சமூக சித்தரிப்புகளைக் கவிதையாக கவிஞர் வடிக்கின்றார்.
அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பலநிலைகளில் வளர்ச்சி கண்டு செயல்படுகிறது. அறிவியல் யுகத்தில் கணினி, இணையம், தொலைபேசி என தகவல் தொடர்புச் சாதனங்கள் பல்கிப் பெருகி உள்ளன. அறிவியல் வளர்ச்சியினால் பல நன்மைகள் விளைந்தாலும் அதனால் விளைகின்ற தீமைகள் மக்களைப் பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக, இளைஞர்களைப் பெரும் மனப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இணையதளத்தில் இளைஞர்கள் மூழ்கிப் போகின்றனர். அண்டைவீட்டாரிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்து முகம் தெரியாத நபருடன் முகநூலில் நட்புகொண்டு உரையாடுகின்ற முறைமை தற்காலத்தில் செயல்படுகிறது. முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), சுட்டுரை (டுவிட்டர்) என மணிக்கணக்கு இல்லாமல் அரட்டையடிப்பதும், தகவலைப் பதிவதும், தகவலுக்கு விருப்பம் தெரிவிப்பதும், கருத்து சொல்வதும்தான் உலகம் என நினைத்து இளைஞர்கள் பலர் சீரழிகின்றனர். இதனைக் கவிஞர் எள்ளலோடு சொல்லும் முறையினை,
“வாட்ஸப்பென்ப ஃபேஸ்புக் டிவிட்டரென்ப இம்மூன்றும்
மோட்சமென்ப வாழும் உயிர்க்கு”(க.பூ.ப.11) (7)
என்ற கவிதையின் வாயிலாக அறியமுடிகின்றது.
செல்போன் மோகம் மக்களை தீவிரமாகப் பற்றி இருப்பதை,
“செல்லிலார் எல்லாம் தமக்குரியர் செல்லுடையார்
என்றும் உரியர் பிறர்க்கு”(க.பூ.க.6) (8)
“கண்டுகேட்டு பேசிமோந்து தொட்டறியும் ஐம்புலனும்
ஆண்ட்ராய்ட் கண்ணேஉள!” (க.பூ.ப.11) (9)
என்ற அடிகளின் வாயிலாக நவீனயுகத்தில் அலைபேசியின் (செல்போனின்) தீவிரத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.
தற்கால அரசியல் நிலைப்பாடு
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் அரசியல் முறையினைப் போற்றி எழுதத்தக்க முடியாட்சி அமைந்து இருந்தது. ஆனால் தற்கால அரசியல் அமைப்பு முறையோ நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றைக் குழி தோண்டிப் புதைத்த நிலையினைக் காண முடிகிறது.
இலஞ்சம்
அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு மக்களிடம் வருவதைக் காட்டிலும் அவர்களுக்காகக் காந்தி ஓட்டு கேட்டு வருகிறார் என கவிஞர் எழுதுவதை,
“ஆளுங்கட்சி எதிர்கட்சி சுயேட்சை
அனைவருக்கும் வாக்கு கேட்டு
வலம் வரும் ‘காந்தி’!” (பூ.ரா.38) (10)
என்ற கவிஞர் பாண்டுவின் கவிதை வரிகளின் வாயிலாக ஓட்டிற்குப் பணம் கொடுக்கின்ற செயலையும், பணத்திற்காகச் செயலையும், பணத்திற்காக மக்கள் ஓட்டினை விற்கின்ற செயலினையும் அறியமுடிகின்றது.
தேர்தல் திருவிழா
யாரை வேண்டுமானாலும் சமூகத்தில் நம்பிவிடலாம். ஆனால் அரசியல்வாதிகளையும், அவர்கள் அளிக்கின்ற வாக்கினையும் நம்ப இயலாத சூழல் நாட்டில் நிலவி வருகின்றது. அரசியல்வாதி தான் தலைமைப் பதவி வகிக்கவும், அவன் சார்ந்த அரசியல்கட்சி ஆட்சியில் அமரவேண்டும் என தேர்தலின் போது பல வாக்குறுதிகளை மக்களின் முன் அளிப்பார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அரசியல்வாதிகளுக்கு மக்களும் நினைவிலிருப்பதில்லை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் நினைவிலிருப்பதில்லை. பின்பு ஐந்தாண்டுகள் கழிந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் போதுதான் மக்களும், வாக்குறுதிகளும் நினைவிற்கு வருகின்ற அரசியல்வாதியின் நிலையினைக் கவிஞர் சுட்டுவதை,
“ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும்
அன்று சொன்ன வாக்குறுதிகளையே
அசராமல் இன்றும் சொல்கின்றனர்
தேர்தல் களத்தில்” (உ.தே.சி.12) (11)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
அரசியல் பட்ஜெட்
மக்களுக்கு இலவசமாகப் பல பொருட்களை அளித்துவிட்டு மக்கள் அன்றாடம் உபயோகிக்கின்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசியல் அமைப்பு ஏற்றிடுவதை,
“கம்ப்யூட்டர் விலை குறைத்து
கத்திரிக்காய் விலை ஏற்றும்
கருத்தற்ற பட்ஜெட்டாய் இருந்தாலும்” (உ.தே.சி.ப.3) (12)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
ஓட்டு இயந்திரம்
தேர்தலில் ஓட்டு இட்டு அரசியல்வாதியைத் தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை இயங்கச் செய்ய இயந்திரம் இருக்கின்றது. அதைப் போல நீதியற்ற அரசியலமைப்பினைச் செயலிழக்க வைக்க இயந்திரம் இருக்கிறதா என கவிஞர் வினவுவதை,
“ஐனநாயகத்தை இயக்கப்
பொத்தான் தந்தார்கள்!
நிறுத்த?” (பூ.ரா.ப.87) (13)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக கவிஞரின் அரசியல் மீதுகொண்ட கருத்து புலப்படுகிறது.
சுற்றுச்சூழல்
பெருகி வருகின்ற மக்கள் தொகைப் பெருக்கம், வாகன நெரிசல், தொழிற்சாலைப் பெருக்கம் என அனைத்தும் பெருகியிருப்பதால் சுற்றுச்சூழலின் தூய்மை சுருங்குகின்றது. மனிதனின் அலட்சிய செயலினால் மண், நீர், காற்று, ஆகாயம் என அனைத்து இயற்கைகளும் அழிவை நோக்கி நகர்கின்றன. சுவாசிக்கத் தூய்மையான காற்று கிடைப்பதில்லை. வருங்காலத்தில் ஆக்ஸிஜன் இருக்குமா என்பது கேள்விக்குறி ஆகுகின்றது. ஓசோனில் ஓட்டை விரிந்து கொண்டே போகின்றது. உலகம் வெப்பமாகிக்கொண்டே செல்கிறது. சூழலைக் குளுமையாக்கி மழைக்குக் காணமாக இருக்கின்ற மரங்களை மனிதன் அழிக்கின்றான் என கவிஞன் சுட்டுவதை,
“மழைக்காக நடத்தும் யாகத்திற்கு
மரங்களை வெட்டி விறகாக்குபவர்கள்” (உ.தே.சி.ப.24) (14)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. உலகில் அபாயகரமான வாயுவை வெளியிடுகின்ற குளிர்சாதனப்பெட்டி, கருவி போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஓசோனில் ஓட்டை விழுகின்றதைக் கவிஞர் கூறுவதை,
“பூமிப்படகு!
மூழ்கும் அபாயம்!
ஓசோனில் ஓட்டை!” (உ.தே.சி.ப.24) (15)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. மனிதர்கள் காற்றினை அசுத்தப்படுத்துவதால் காற்று மாசுபடுவதை காற்றாக மாறி கவிஞன் பாடுவதை,
“வரம்கொடுத்தவன் தலையிலேயே
கையை வைப்பதுபோல்…
என்தலையில்
மனிதகுலத்தின்
சாபக்கரங்கள்!
பெருகிவரும்
வாகனப்புகையில்
திக்குமுக்காடிப் போகிறேன்!
ஆலைக் கழிவுகளால்
கிழிந்து போகிறேன்!
யார் எதை எரித்தாலும்
கருகிப் போகிறேன்!
குளிர்சாதன இயந்திரங்கள்
என்னைச் சூடேற்றுவதை
உணர்வாயா...?” (பூ.ரா.ப.98,99) (16)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
மாற்றுத்திறனாளி
நாட்டினுடைய எதிர்காலத் தூண்களாக இருப்பவர்கள் குழந்தைகள் ஆவார்கள். ஆனால் அக்குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் மூளை பாதிக்கப்பட்டவர்களாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்களின் ஒழுக்கக் குறைபாட்டினால் குழந்தைகள் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களாகவும், அனாதைகளாகவும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் செயல்பாட்டினை,
“…மேலும் அவளால்
தவிர்க்க முடியவில்லை
தலையைப் பலங்கொண்ட மட்டும்
சுவரில் மோதுவதை
தனது மணிக்கட்டினை வாயில்வைத்து
ரத்தம் வரக் கடிப்பதை
காரணங்களின்று நான் விரும்புகிறேன்” (இ.அ.பக்.20) (17)
என ‘ஆட்டிசம்’ என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் செயலைக் கவிஞன் பாடுபொருளாகக் கொண்டு எழுதியதை அறிய முடிகின்றது.
விலைவாசி ஏற்றம்
நாட்டினுடைய பொருளாதார ஏற்றத்தைக் கவிஞன் தனது கவிதையில் சுட்டிக்காட்டுகிறார். பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்ற உலகமயமாதலைக் கவிஞர் எள்ளலோடு கூறுவதை,
“ஒருரூபாய் என்பதை பார்த்ததும்
விட்டெறிந்தாள் வீட்டிற்குள்ளேயே!
இதுக்குத்தான் போடாதீங்கன்னு சொன்னேன்
உள்ளிருந்து வந்தது மனைவியின் அனுபவக்குரல்!
உலகமயமாதலின் விலைவாசி உயர்வு
பிச்சைக்காரியை மட்டும் விட்டுவிடுமா?” (ப.பா.ப.18) (18)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக விலைவாசி ஏற்றத்தால் ஒரு ரூபாய் பிச்சையிட்டால் அதனை இரவலர்கள் ஏற்பதில்லை எனக் கவிஞன் கூறுவதன் மூலமாக உலகமயமாதலின் தீவிரத்தை அறிய இயலுகிறது.
நிகழ்வுப்பதிவுகள் (சுனாமி)
சமூகத்தில் நிகழ்கின்ற மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு அந்நிகழ்வினால் எழுந்த பாதிப்புகளைக் கவிதையாகத் தருகின்ற போக்கு கவிஞர்களிடையே காணப்படுகிறது. தமிழகத்தை உலுக்கிய சுனாமியின் கோரத்தைக் கவிஞர் பதிவு செய்ததை,
“அழிவை ஏற்படுத்திவிட்ட
கடல் அரக்கனே
உனக்குத் தெரியுமா?
எத்தனை எதிர்கால
அப்துல்கலாம்களும்
அன்னை தெரசாக்களும்
அறிவியல் மேதைகளும்
உனக்குள் புதைந்து போனார்களே..?” (உ.தே.ச.ப.43) (19)
என்ற கவிதை வரிகளின் மூலமாக நிகழ்வுகளை கவிதைகளாக்குகின்ற நவீனப்போக்குமுறை அறிந்துகொள்ள முடிகின்றது.
மதுப்பிரச்சனை
சமூகத்தில் எண்ணற்ற சீர்கேடுகள் முத்திரை பதித்து நிலைபெற்றுவிட்டன. அவை தீங்கு தருகின்றவை என்பதனை அறிந்தும் மனிதர்கள் மதுப்பழக்கத்திடமும், புகைப்பழக்கத்திடமும் சீரழிவதோடு சமூகத்தையும் சீரழிக்கின்றனர் குடிப்பழக்கம், நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என மதுபாட்டில்களில் எழுதப்பட்டு அபாயக்குறி இடப்பட்டிருந்தாலும் மனிதன் அதனைப் பொருட்படுத்தாமல் அதனால் கிடைக்கின்ற போதைக்கு அடிமையாகி அவனது உடல்நிலையைக் கெடுத்து அவனைச் சார்ந்த மனைவி, குழந்தைகளின் வாழ்வினையும் கேள்விக்குள்ளாக்குகிறான். இதனை,
“குடிச்சதால குடல் வெந்து
அல்சர் ஆச்சி!
இடையூறா இருமலும்
இடம் பிடிச்சாச்சி!
உடல் தேர
ஆஸ்பத்திரிச் செலவும் ஆச்சி
மனைவியோட ஒரு பவுனும்
தண்ணியாப் போச்சு!
பசங்களோட படிப்புமே
பாதியில போச்சு
அப்புறம்….
அப்பன் கடன் அடைக்க
அன்றாடக்கூலி ஆச்சு!” (பூ.ரா.ப.59) (20)
என்ற கவிதை வரிகளின் வாயிலாக ஒரு மனிதன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானால் அவனோடு அவனது குடும்பமும் சீரழிவதை அறிந்துகொள்ள முடிகின்றது.
தொகுப்புரை
கவிதைகளின் புறவய நவீனப்போக்கினையும், அகவயமான பாடுபொருள்களில் கையாளப்பட்டுள்ள நவீனப்போக்கினையும் அறியமுடிகின்றது. கவிஞன் தன்னைச் சுற்றி இருக்கின்ற சமுதாயத்தைச் சூழலினை உற்றுநோக்கிக் கவிதையில் பதிவு செய்கின்ற நவீனமுறைகளை அறிந்துகொள்ள முடிகின்றது. சொற்களைக் குறைவாகப் பயன்படுத்தி செறிவான கருத்துப்பதிவினை கவிஞர் கையாளுகின்ற நவீனப்போக்கினை அறிந்துகொள்ள முடிகின்றது.
சுருக்கக்குறியீட்டு விளக்கம்
1.நன் - நன்னூல்
2. ப. பா - பறத்தலுக்கான பாடல்
3. உ. தே. சி - உளியைத் தேடும் சிற்பம்
4. க. பூ - கந்தகப்பூக்கள்
5. பூ. ரா - பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்
6. இ. அ - இறந்தவர்களை அலங்கரிப்பவன்
சான்றெண் விளக்கம்
1. க்ரியாவின் தற்காலத் தமிழகராதி, ப.806
2. சி. ரமேஷ் கட்டுரை, (இணையதளம்) 17.08.2015
3. சோதிமிகு நவகவிதை, ப.84
4. நன்னூல், ப.135
5. பறத்தலுக்கான பாடல், ப.45
6. சோதிமிகு நவகவிதை, ப.84
7. கந்தகப்பூக்கள், ப.11
8. மேலது, ப.6
9. மேலது, ப.11
10. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.38
11. உளியைத் தேடும் சிற்பி, ப.12
12. மேலது, ப.3
13. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.87
14. உளியைத் தேடும் சிற்பி, ப.24
15. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.91
16. மேலது, பக்.98,99
17. இறந்தவர்களை அலங்கரிப்பவன், பக்.20,21
18. பறத்தலுக்கான பாடல், ப.18
19. உளியைத் தேடும் சிற்பி, ப.43
20. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.59
பயன்பட்ட நூல்கள்
1. பாண்டூ - பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், கந்தகப்பூக்கள் பதிப்பகம், சிவகாசி. 2013
2. ஸ்ரீபதி, - பறத்தலுக்கான பாடல், கந்தகப்பூக்கள் பதிப்பகம், சிவகாசி. 2015
3. சிவகாசி ஹென்றி - உளியைத் தேடும் சிற்பி, மரியா பதிப்பகம், சிவகாசி. 2013
4. பாம்பாட்டி சித்தன் - இறந்தவர்களை அலங்கரிப்பவன், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. 2014
5. அப்துல்ரகுமான் - சோதிமிகு கவிதை, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.2004
6. திருஞானசம்பந்தம் - நன்னூல் (காண்டிகை உரை), கதிர்பதிப்பகம், திருவையாறு.2008
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.