தமிழ் - கிரேக்க பண்பாட்டுக் கூறுகள் ஓர் ஒப்பீடு
செ. ராஜேஸ் கண்ணா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - திண்டுக்கல்.
முன்னுரை
இலக்கிய உலகம் பரந்துபட்டது. ஒவ்வொரு நாடும் தனக்கென பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ளன. பழமையான இலக்கியங்களைக் கொண்டே ஒரு நாட்டின் பண்பாட்டு நாகரீக வளர்ச்சியை உணரமுடியும். பண்டைய மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறும் சான்றுகளுள் ஒன்றாக இலக்கியங்கள் மிளிர்கின்றன. இன்றுள்ள மொழிகளில் மிகப் பழமையான இலக்கியங்கள் கிரேக்கத்தில் தோன்றியுள்ளன. இம்மொழி வழக்கொழிந்து வருகிறது. கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே இலியட், ஒடிசி போன்ற காவியங்களைக் கிரேக்கர்கள் படைத்துள்ளனர். இவற்றை வீரயுகப் பாடல்கள் என்று கருதுவர். இத்தன்மையுடைய வீரயுகப் பாடல்கள் தமிழ் இலக்கியத்திலும் தோன்றியுள்ளன. அவை சங்க இலக்கியங்கள் ஆகும். அகம், புறம் என இரு பெரும் பிரிவில் பண்டைய தமிழர்களின் வாழ்வியலைப் பாடுபொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டுவரையாகும். கிரேக்கம் - தமிழ் ஆகிய இருமொழிகளின் இலக்கியத் தோற்றத்தில் சிறிது கால வேறுபாடுகள் இருந்தாலும் சில ஒற்றுமைப் பண்புகள் காணப்படுகின்றன. எனவேக் கிரேக்கக் காப்பியங்களிலும், புறநானூற்றுப் பாடல்களிலும் காணப்படும் சில ஒருமித்த கருத்துக்களை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வஞ்சினமொழி
பகைவர் போரிட வருகையில் அவரை எதிர்த்துப் போருக்கு எழுதல் காஞ்சித்திணையாகும். அவ்வாறு போருக்கு எழும் போது பகைவரை வென்று வாகை சூடுவேன் எனக் கூறுவதை வஞ்சினமொழி என்பர். இவ்வஞ்சினமொழி கூறும் பண்பு கிரேக்க - தமிழ் வீரர்களிடையே இருந்துள்ளன. பெட்ரோகிளிஸ் பகைவர்களால் கொள்ளப்பட்ட செய்தியை அறிந்து எசிலஸ் கீழ்க்காணும் வஞ்சினமொழியைக் கூறியுள்ளான்.
“முட்டாளே என்னிடம் ஏதும் கேளாதே, என்னிடம் ஏதும் பேசாதே!
உயிர் நண்பன் பெட்ரோகிலிஸ் உயிரோடு இருக்கையில்
என் நெஞ்சத்திற்கு இரக்கத்தின் பொருள் தெரியும்,
அப்போது என் கைதிகளை அடிமைச் சந்தையில் விற்றேன் ;
இப்போதோ என்னை எதிர்ப்பவரை வானுலகம் அனுப்புவேன்” (கி.இராசா, இலக்கிய வகைமை ஒப்பாய்வு, ப.41)
என்ற வரிகளின் வழி தன்னுடைய படைகளைத் தாங்கிச் சென்ற நண்பன் எதிரிகளால் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடனேயே வெகுண்டு எழுந்து வஞ்சினம் உரைத்துப் போருக்குச் சென்ற செய்தியை அறிய முடிகிறது. மேற்கூறிய தன்மையை ஒத்த புறநானூற்றுப் பாடலில் சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் உரைத்துள்ளான். அதனை,
“வன் திணி நீள் முளை போல, சென்று அவண்
வருத்தப் பொரே என் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!” (புறம் - 73)
எனும் அடிகள் விளக்கி நிற்கின்றன. போர்க்களம் சென்று பகைவரை அவர் வருந்துமாறு போரிட்டு வெல்வேன். அவ்வாறு வெல்லவில்லை எனில், பொதுமகளிருடன் கூடிக் குழைந்த இழிநிலையை என் மாலை உறுவதாகுக! என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் உரைக்கிறான். இவ்வஞ்சினம் கிரேக்கக் காப்பியத் தலைவன் எசிலனின் வஞ்சின மொழியை ஒத்ததாக உள்ளது. எனவே வஞ்சினம் கூறிப் போருக்குச் செல்லும் மாண்பு கிரேக்க, தமிழ் மன்னர்களிடையே இருந்து வந்துள்ளது என்பதை உய்த்துணர முடிகிறது.
விருந்தோம்பல்
பண்டைய கால கிரேக்க மன்னர்களும், முத்தமிழ் வேந்தர்களும் விருந்தோம்பும் திறத்தில் ஒத்தத் தன்மையுடையவர்களாகவும், மேம்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். கிரேக்க ஒடிசி காப்பியத் தலைவன் ஒடிசியஸ் தன்னை நாடிவந்த பாணன் டெமடோகசுக்கு சிறப்பானதோர் விருந்தோம்பலை நல்கியுள்ளான். “ஒடிசியஸ் இல்லத்திற்கு வந்திருந்த விருந்தினர் அழகுப் பொற்கோப்பையில் ஏந்தி வந்த குளிர்நீரால், வெள்ளித்தட்டில் தம் கையைக் கழுவியுள்ளனர். பளபளக்கும் மேசையொன்றை அப்பணிமகள் விருந்தினர் அருகில் இழுத்து வைக்கிறாள். இல்லம் பேணுநர் ஒருவர் அறுசுவை அடிசிலோடு ரொட்டிகளை அள்ளிவந்து முகத்தானமர்ந்தினிது நோக்கி விருந்தயர்கின்றனர். ஒருவர் பல்வேறு சுவைமிகு ஊன்றடிகளைப் பரிமாறி அவற்றின் அருகே பொற்கிண்ணங்களை வைக்கின்றார். பணியாள் ஒருவன் அங்குமிங்கும் சுற்றிச் சுற்றிப் பொற்கிண்ணத்தில் மது வற்றும் போதெல்லாம் ஊற்றி நிரப்புகிறான்” (கி.இராசா, இலக்கிய வகைமை ஒப்பாய்வு, ப.40) என்று கி. இராசா கூறியுள்ளார்.
ஒடிசியசின் விருந்தோம்பலைப் போல சோழன் கிள்ளிவளவனும் தன்னை நாடி வந்தவர்களுக்கு விருந்தோம்பி உபசரித்துள்ளான். இதனைக் கீழ்க்காணும் தாயங்கண்ணனார் பாடல் தெளிவுபடுத்துகிறது.
“உள்ளி வந்த பரிசிலன் இவன்’ என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலன் நிறைந்த மணம் நாறு தேறல்
பாம்புஉரித் தன்னவான்பூங் கலிங்கமொடு,
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என்வெப்பு நீங்க” (புறம் - 397)
கிள்ளிவளவன் தன்னைக் காணவந்த பரிசிலனுக்கு நெய்யால் பொரிக்கப்பட்ட சூட்டிரைச்சியையும், மணம் கமழும் கட்டெளிவையும், பாம்பின் தோலை ஒத்த பூ வேலைப்பாடு அமைந்த ஆடையையும் கொடுத்து இன்முகத்தோடு உபசரித்துள்ளான். ‘உண்டி கொடுத்தோரே உயிரைக் கொடுத்தவர்’ எனும் நியதியினை உணர்ந்த கிரேக்கர்களும் தமிழர்களும் தங்களிடம் பசியென்று வந்தோருக்கு மறுக்காது இன்முகத்துடன் விருந்தோம்பியுள்ளனர்.
புலவர்களைப் போற்றுதல்
கிரேக்க மன்னர்கள் புலவர்களை இறையருள் பெற்றவர்களாகக் கருதியுள்ளனர். புலவர்கள் நன்மொழிகளைக் கேட்டு அதன் அடிப்படையில் அரசாட்சி செய்துள்ளனர். “ஒடிசி காப்பியத்தின் தலைவன் ஒடிசியஸ், டெமடோக்கஸ் என்ற பாணனின் இசைத் திறத்தில் மகிழ்ந்து அவன் தெய்வ இசை பொழிவதாகப் பாராட்டுகிறான். இசைத் தேவதையரின் அருள் பெற்ற பாணரை மதித்தலும் போற்றலும் ஆட்சியரின் கடன்” (கி.இராசா, இலக்கிய வகைமை ஒப்பாய்வு, ப.ப.39) எனும் ஒடிசியஸின் கூற்றை கி. இராசா மொழிபெயர்த்துக் கூறியுள்ளதை இவண் நினைவு கொள்ளத்தக்கது.
சங்ககாலத் தமிழ் மன்னர்கள் பலரும் புலவர்களைப் போற்றி உயர்த்தியதோடு அவர்கள் கூறும் நன்மொழியைக் கேட்டு அரசாட்சி செய்துள்ளனர். சோழன் கிள்ளிவளவன் கோவூர்க்கிழார் எனும் புலவரின் சொற்படி நடந்த செய்தியை,
“களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்றுமருண்டு நோக்கி,
விருந்தின் புன்கணோ உடையார்
கேட்டனை ஆயின், நீவேட்டது செய்ம்மே!” (புறம் - 46)
எனும் பாடல் வரிகள் சுட்டிநிற்கின்றன. மலையமானின் மக்களை யானைக் காலால் இடறி வீழ்த்தக் கருதிய கிள்ளிவளவனை தடுத்து, அச்சிறுவர்களை கோவூர்க்கிழார் காப்பாற்றியுள்ளார். கோவூராரின் அறிவுரையைக் கேட்ட கிள்ளிவளவனும், புலவரின் சொற்படியே நடந்துள்ளான். புலவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு இருநாட்டு மன்னர்களும் அரசாண்டுள்ள செய்தி இவண் தெளிவாகிறது.
நட்புறவு
தமிழர்கள் நட்பைப் போற்றும் பண்பாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். கோப்பெருந்சோழன் - பிசிராந்தையார், பாரி - கபிலர், அதியன் - ஔவை போன்றோர்களின் நட்புணர்வை இவ்வையகம் நன்குணரும். தனது நண்பர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது தன் இன்னுயிரையும் மாய்க்கத் துணிந்த செய்திகளை புறநானூற்றுப் பாடல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. நம் தமிழர்களிடையே காணப்பட்ட நற்பண்பு பண்டைய கிரேக்கர்களிடமும் இருந்துள்ளது. “இலியட், ஒடிசி எனுமிரு காப்பியங்களிலும் நட்பின் திறம் போற்றப்படுகிறது. பெட்ரோகிலிஸ் போர்ப் பலியானதற்குத் தானே காரணம் என எசிலசு புலம்புகிறான். அவனைத் தடுத்துத்தானே போர் மேற்சென்றிருந்தால் அவன் உயிரை காப்பாற்றியிருக்கக் கூடும் என வருந்துகிறான்” (கி.இராசா, இலக்கிய வகைமை ஒப்பாய்வு, ப.42) எசிலஸ் தனது மனைவியைப் பிரிந்து வாடியிருந்த நேரத்தில் பெட்ரோகிலிஸ், எசிலசின் படைகளைத் தாங்கிபோருக்குச் செல்கிறான். எதிர்பாராதவிதமாக ஹெக்டரால் பெட்ரோகிலிஸ் கொள்ளப்படவே எசிலஸ் பெரும் கோபம் அடைகிறான். தனது நண்பனைக் கொன்ற ஹெக்டரையும், அவன் எதிரே வந்த அனைவரையும் கொன்று குவிக்கிறான். இங்கு எசிலசு - பெட்ரோகிலிசின் மீது கொண்ட உண்மை நட்பை உணர முடிகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள உயர் நட்புக்களை போன்றே கிரேக்க இலக்கியங்களிலும் உலகம் போற்றும் உண்ணதமான நட்புறவுகள் சுட்டப்பெறுகின்றன.
முடிவுரை
உலகில் உள்ள செம்மொழி இலக்கியங்களில் கிரேக்கமும் - தமிழும் சாலச் சிறந்தவைகளாக இருக்கின்றன. இரண்டுமொழி இலக்கியங்களிலும் உயர் பண்பாட்டுக் கூறுகள் நிறைந்துள்ளன. செம்மொழித் தன்மையுடைய இவ்விலக்கியங்களை ஆய்வு செய்வதன் மூலம் இம்மொழிகளின் ஒருமித்த பண்புகளை வெளிக்கொணர முடிகிறது. அந்த வகையில் இருநாட்டு மன்னர்களிடையேயும், மக்களிடையேயும் ஒன்றுபட்ட உணர்வுகள் நிலவுவதை இக்கட்டுரை உணர்த்தி நிற்கிறது. பகைவரிடம் வஞ்சினமொழியைக் கூறுதல், தம்மை நாடிவந்தவர்களுக்கு விருந்தோம்புதல், ஆட்சி சிறப்புற அமையச் செய்யும் புலவர்களைப் போற்றுதல், உலகம் போற்றும் நட்புறவு அறிதல் போன்ற பல உயர் பண்பாட்டுக் கூறுகள் இரு மொழிகளிலும் ஒன்றுபட்டு உள்ளன.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.