தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர்களில் சாத்தூர் சேகரன் குறிப்பிடத்தக்கவா். அவர்தம் அகன்ற மொழியியல் பார்வை தமிழ் மொழியினை உலகமொழிகள் அனைத்துடனும் ஒப்பிடச் செய்தது. இந்நிலை மொழியியல் உலகில் பல புதிய வழித்தடங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சாத்தூர் சேகரன் தாம் அரிதின் முயன்று அறிந்த பல மொழியியல் உண்மைகள் என்றும் அழியாது இருக்குமாறு எழுத்து வடிவில், பல நூல்களை வெளியிட்டுள்ளார். சிறந்த கட்டுரையாளராகவும், கல்வியானராகவும், நாவலாசிரியராகவும், கவிஞராகவும், பிறமொழிநூல்கள் இயற்றுவதில் வல்லவராகவும் விளங்கித் தமிழ்த்தொண்டு புரிந்து வருபவரே சாத்தூர் சேகரன் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். அவற்றைப் பற்றி ஒரு பரந்துபட்ட பார்வையினை இப்பகுதியில் காணலாம்.
நம் தமிழ் மொழிக்குத் திரவியம் சேர்க்கும் வண்ணம் உலகின் அனைத்து மொழிகளிலுள்ள வார்த்தைகளும் தமிழ் மொழியின் திரிபுகளே என்பதைக் காரண காரியங்களுடன் நிறுவி வருபவரே சாத்தூர் சேகரன் அவர்கள். அவர்தம் மொழி ஆய்வு நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் படைத்திருப்பது சிறப்பிற்குரியது. மொழியியல் ஆராய்ச்சி வளர இவர் தம் ஆய்வு நூல்கள் மிகுதியும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.
சாத்தூர் சேகரன் அவர்கள் இயற்றிய மொழி ஆய்வு நூல்களில் தமிழ்: மொழிஆய்வு நூல்களின் பட்டியல் பின்வருமாறு;
1. தமிழும் ஆங்கிலமும்
2. இருக்கு நூல் முதல் நூலுமல் மூலநூலுமல்ல
3. உலகளாவிய மொழி
4. தமிழக ஊா்ப் பெயா்கள்
5. வானளாவிய தமிழ்
6. இந்திய மக்கள் பெயர்கள்
7. நல்ல தமிழை மறக்கலாமா?
8. குமரிக் கண்டச் சொற்கள்
9. தமிழ் மொழிச் சிந்தனைகள்
10. மக்களின் பெரும் பெயர்ச்சி
11. இடைக்காலத் தமிழ்
12. இந்திய ஊர்ப் பெயர்கள்
13. குமரிக் கண்டம் உண்மையே
14. தமிழக மக்கள் பெயர்கள்
15. சிந்து வெளி நாகரிகம்
16. எண்ணும் எழுத்தும்
17. தமிழின் ஊடும் பாவும்
18. தொல்காப்பியரும் தொல்காப்பியமும்
19. சமசுகிருதம் ஒரு மொழியல்ல
20. உலக நாகரிகங்கள் அனைத்தும் படைத்தவன் தமிழன்
மேற்கூறிய தமிழ்மொழி ஆய்வு நூல்களில் சாத்தூர் சேகரன் முதலில் எழுதிய நூல் “இந்தி தமிழின் கிளை மொழியே” என்ற நூல் ஆகும். ஆனால் இந்நூல் இதுகாறும் பல்வேறு காரணங்களால் அச்சிட இயலவில்லை. முதலில் அச்சானது “உலகளாவிய தமிழ்” என்ற ஆராய்ச்சி நூலாகும். இந்நூலின் 9ஆம் பதிப்பு தற்சமயம் வெளிவர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழே உலகின் முதன் மொழி” என்று மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் கூறினார். அன்னார் அவர்களின் மொழிக் கருத்துக்களையும் பின்பற்றி மொழி ஒப்புமைப் பணியைச் செவ்வனே செய்யப்பட்டுள்ள நூலே “தமிழும் ஆங்கிலமும்” நூலாகும். இன்று நாம் வழங்கும் எண்கள் ஆங்கில அரேபிய எண்கள் என்று கருதிக் கொண்டிருப்போம். ஆனால் அரேபிய எண்களும் தமிழ் எண்களாகிய க உ ந சு ரு ச என்பவற்றின் திரிபுகளே என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.
“எண் என்று கூறப்படும் தமிழ்ச்சொல்லில் எண் = என் (பிறழ்ச்சி விதி) ன்எ - நெ --->நெம் ---> நெமம் ---> (ஆர் : ஒட்டு) ---> நெம்பர் (Number) பிறந்துள்ளது”
(சாத்தூா் சேகரன், தமிழும் ஆங்கிலமும்,ப.39)
எனவே எண்களின் பிள்ளையார் சுழியே தமிழ்தான் என்று விளக்குகிறார். மேலும் தமிழிலுள்ள அரிசி என்ற சொல் தான் ஆங்கிலத்தில் Rice என மாறியுள்ளது என்றும் கொல் என்பது Kill என்றும் வெற்றி என்பது விக்டரி என்றும் திரிந்து வழங்குகின்றன என்ற தரவுகள் யாவும் நாம் அறிந்ததே. ஆனால், இங்கு சாத்தூர் சேகரன் அவர்கள் ஆங்கிலம் மட்டுமின்றிப் பிற ஐரோப்பிய மொழிகளையும் தமிழையும் இங்ஙனம் ஒப்பிட்டு தக்க எடுத்துக் காட்டுகளுடன் பதிவு செய்துள்ளார். இவ்வாறு தமிழே அனைத்துக்கும் அடிப்படை என்று நிறுவியவர் சாத்தூர் சேகரன் அன்றி வேறு எவரும் இல்லை.
தமிழிற்கும் இன்றை ஆங்கிலத்திற்கும் உள்ள கிளை மொழி நெருக்கம் பற்றி 600க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வினையே தமிழும் ஆங்கிலமும் நூலில் காண இயலுகின்றது.
உகர ஈறு திரியும் நிலையினை ஐரோப்பிய மொழிகளுடன் ஏறத்தாழ 70 சொற்களைக் கொண்டு சான்றுகள் கூறி பதிவு செய்துள்ளார். இங்கு ஒரு சில சான்றுகளை மட்டும் பார்க்கலாம்.
"தேங்கு > தேக்கு. ஒ.நோ: நீர்த்தேக்கம் - தேங்க்
Tanqu - Portugese
tank - English
es - tanque - spanish
es - tang - old French
(a stagnant pool) s- tag - num - Latin”
(சாத்தூா் சேகரன்,தமிழும் ஆங்கிலமும்,ப.156)
இதில் ஐரோப்பிய மொழிகள் தொடக்க காலத்தில் நீர்தேங்கி இருப்பதைக் குறித்தன. இப்போது நீா்த்தேக்கத் தொட்டிகளைக் குறிக்கின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.
“(கற்) கண்டு - இனிப்பான கல் போன்ற கட்டி
கண்ட் cand - ah : Arabic
கேண்ட் cand - I : French
Cand - y : English”
(சாத்தூா் சேகரன்,தமிழும் ஆங்கிலமும்,ப.157)
தமிழ் அடி மூலம் கன்னல் கரும்பு. எனவே கண்டு என்றால் கருப்புக்கட்டி போன்ற இனிப்பு என்று வழங்கப்படும். ஆகவே,
“ (கரும்பு) கன்னல் : தமிழ்
கன்னா : வட இந்திய மொழிகள்
Cann - a : Latin
(sugar) cane : English
Cann - e : French
Kann -e : Greek”
(சாத்தூா் சேகரன்,தமிழும் ஆங்கிலமும்,ப.159)
என்று சாத்தூர் சேகரன் அவர்கள் இப்பகுதியில் உகர ஈற்று விதியினைக் கொண்டு, பலமொழிக் குடும்பச் சொற்களை ஆராய்ந்து, யாவுமே கன்னித் தமிழாகவே காணப்படுவதைப் பதிவு செய்துள்ளார்.
இந்திய மொழிகளின் தாய்மொழி தமிழே, உலக மொழிகளின் தாய்மொழி தமிழே. சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் பழம் பொய்களை இன்னும் தொடர்ந்து கூறாது, உண்மையை உரக்கச் சொல்லவே “இடைக்காலத் தமிழ்” என்ற ஆய்வு நூலினைச் சாத்தூர் சேகரன் அவர்கள் தனது மீட்டுருவாக்கப் பணியினைப் பதிவு செய்துள்ளார்.
“இந்தியமொழிகள் பற்றித் துருவித் துருவி ஆராய்ந்த போது இம்மொழிகள் ஒரு சொல்லைக் கூட இன்றளவும் உருவாக்கவில்லை. தமிழ்ச் சொற்களையே மாற்றியோ, சிதைத்தோ தம் சொற்களை உருவாக்கியுள்ளார் என்ற பேருண்மை புலனாயிற்று. பல பழந்தமிழ்ச் சொற்களை மீட்டுருவாக்கம் முறையில் பெற முடிந்தது” என்ற கூற்று தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தினை முன் வைக்கின்றது.
“இடைக்காலத் தமிழ்” என்ற இந்நூலில் 12 விதிகளை எடுத்துரைத்து “தமிழே உலகின் தாய்மொழி” எனும் உண்மை உலகிற்கு இயம்பிச் செல்கிறார். இதனில் ஒரு சில விதிகளை மட்டுமே இங்கு காணலாம்.
“குறைவு விதி” எனும் இவ்விதிப்படி உலகில் உள்ள அனைத்துக் கிளை மொழிகளும் தமிழ்ச் சொல்லை முன்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் அல்லது கடைப்பகுதியில் எழுத்துக்களை வெட்டித் தமது சொல்லை உருவாக்குகின்றன என்ற கருத்தினை சான்றுகளுடன் நிரூபிக்கின்றார்.
“மூன்று ---> மூறு \ மூடு : கன்னடம், தெலுங்கு ---> நடுவிலகல்
நரன் (மனிதன்) ---> ரன் : சீன மாண்டரின் மொழி ---> முன் விலகல்
தருமம் ---> தர்ம : இந்திய மொழிகள் ----> கடை விலகல்
பந்து ---> பான்(ன்=ல்) - பால் (BALL) : ஆங்கிலம் ---> கடை விலகல்”
(சாத்தூா் சேகரன்,இடைக்காலத்தமிழ், ப.95)
என்று சாத்தூர் சேகரனின் மொழியியல் விதிகள் கொண்டு விதிப்படி மாறும் இடங்களைக் குறிப்பிடுகிறார்.
அடுத்ததாக உலக மொழி அறிஞர்கள் பல்லாயிரம் பேர் இருந்த போதிலும் யாருமே பேசாத பிறழ்சி விதியைப் பற்றி சாத்தூர் சேகரன் அவர்கள் சான்றுடன் எடுத்துரைக்கிறார்.
AB ---> BA, ABC-ACB\BAC ---> CAB\CBA போன்று சொற்கள் பிறண்டு வரும்.
முன்னுயிர்ப் பெயர்ச்சி விதியில் முன்னால் உள்ள உயிர் எழுத்து மட்டுமே இடம் பெயரும். ஆனால், பிறழ்ச்சி விதியில் முன்னால் உள்ள உயிர்மெய் எழுத்தும் இடம் பெயரும் என்று எடுத்துரைக்கிறார்.
“அல்ல” என்ற தமிழ் எதிர்மறை “அல்” என்றும் “அன்” என்றும் மாறும். இவை பிறழ்ச்சி விதிப்படி, பின்வரும் மாற்றங்களை அடையும்.
“அல்ல ---> அல் ---> பிறழ்ச்சி விதிப்படி “ல” : அரபி
அல்ல ---> அல் ---> அன் பிறழ்ச்சி விதிப்படி “ந” ஆகும்.
நஹி : இந்தி, உருது (வட இந்திய மொழிகள்)
நாஹி : மராத்தி
ந : தமிழ், சமஸ்கிருதம்
நக்கோ : இலத்தீன், இத்தாலியன்
நாட், நார், நோ: ஆங்கிலம்”
(சாத்தூா் சேகரன், இடைக்காலத்தமிழ், ப.165)
இவ்வாறாகத் தமிழில் உள்ள “அல்ல” பல மொழிகளில் எதிர்மறையை உண்டாக்குகின்றது என்பதை இடைக்காலத் தமிழ் நூலில் சான்றுகளுடன் நிரூபிக்கிறார்.
சாத்தூர் சேகரர் அவர்கள் மாநாட்டு மலர்களிலும் தனது தனி முத்திரையைப் படைத்துள்ளார்.
மாநாட்டு மலர்கள்
1. குமரிக் கண்ட மாநாட்டு மலர்
2. சிந்து வெளி மாநாட்டு மலர்
3. இந்திய மொழிகள் மாநாட்டு மலர்
4. குமரிக் கண்டம் மாநாட்டு மலர்
5. உலக மொழிகள் மாநாட்டு மலர்
6. உலகின் முதல் மாந்தன் உலகின் முதல் மொழி மாநாட்டு மலர்
7. உலக மொழிகளின் மூலம் மாநாட்டு மலர்
8. உலகப் பண்பாடுகளின் மூலம் மாநாட்டு மலர்
9. தமிழும் தென்னிந்திய மொழிகளும் மாநாட்டு மலர்
போன்ற மாநாட்டு மலர்களில் தனது ஆய்வுச் சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார். பல ஆய்வு நிறுவன ஒத்துழைப்புடன் குமரிக் கண்ட மாநாடு மற்றும் சிந்து வெளி மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர். தமிழகம் எங்கும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குமரிக்கண்ட கருத்தரங்கத்தினையும் சிந்து வெளிக் கருத்தரங்கத்தினையும் சிறப்பாக நடைபெற முயற்சிகள் பல செய்தவர். மாநாடுகளில் உரையாற்றியோர் கருத்தக்களை மலர்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டவர். பல பத்திரிகைகளில் மாநாட்டு கருத்துகள் கட்டுரையாகவும் தொடர் கட்டுரையாகவும் வெளிவரச் செய்தவர். மேற்கூறிய மாபெரும் முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டவராகிய சாத்தூர் சேகரர் தம் ஆய்வுப்பணி அளவிட இயலா எல்லையுடையதாகும். குமரிக்கண்ட மாநாட்டு மலரில் சாத்தூர் சேகரன் அவர்கள் “குமரிக்கண்டம் உண்மையே ! அண்டப்புளுகு எது? அறிவியல் உண்மை எது ? (பொ. வேல்சாமியின் கட்டுரையின் மறுப்பு) என்ற தலைப்பில் தனது கருத்தக்களைப் பதிவு செய்துள்ளார். அதனில் குமரிக்கண்டம் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்பினையும் பின்வருமாறு கூறியுள்ளார்.
“தமிழ்மொழி உருவான காலம் தோராயமாக 1, 00, 000 ஆண்டுகள் ஆகலாம் என்று அமெரிக்க அறிஞர் ஸ்வாடேஷ் கூறியுள்ளார். அக்காலத்தில் அப்போது தமிழ் மொழிக்கு எழுத்து கிடையாது. ஆனால் 50, 000 ஆண்டுகள் முதல் 30, 000 ஆண்டுகள் வரையில் உண்டான பல்வேறு பெரிய சுனாமிகளால் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து அண்டை அயல் பகுதிகளுக்குப் பரவினர். இதனால் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் இன்றும் பல நூறு தமிழ்ச் சொற்களை வைத்திருக்கின்றனர். இவ்வாறே ஆப்பிரிக்கா, அதன் அமெரிக்காவிலும் முற்காலத்தில் குமரிக்கண்டத் தமிழர் குடியேறிய காரணத்தால் இன்றும் பல தமிழ்ச் சொற்களை தன்வசம் கொண்டுள்ளனர்.” இக்கருத்தினைச் சான்றுகளுடன் முன் வைக்கிறார்.
தென் அமெரிக்க மக்களிடம் “அன்னை” போன்ற நம்ப இயலாதத் தூயத் தமிழ்ச் சொற்கள் உள்ளன. வயல் வரப்பில் உள்ள பசுமைக் கடவுளின் பெயர் பச்சை அம்மன் ஆகும். இச்சொல்லும் அவர்தம் மொழியில் கொண்டுள்ளனர். “சரி சரி” என்று நாம் கூறுவதை அவர்கள் “கரி” (ச= க) என்று கூறுகின்றனர். ஆங்கிலத்தில் “correct” இலத்தீனில் “காரி கொரண்டம்” என்று மாறுகின்றது. இவை போன்று ”குமரிக்கண்டம் உண்மையே” என்ற கருத்தினை மொழியியல் வழியாக நிரூபித்துக் காட்டுகிறார்.
மொழி, இன, நாகரிக, பண்பாடு, பொருளாதார வரலாற்று ஆய்வாளராகிய சாத்தூர் சேகரன் அவர்கள் தமிழ் தேசிய நூல்களாக ஆறு நூல்களை இயற்றியுள்ளார். அவை,
1. ஏன் வேண்டாம் துன்பத் திராவிடம்?
2. சொந்த நாட்டில் தமிழன் அகதியா?
3. தமிழன் பரம்பரை ஆண்டியா?
4. ஏ தாழ்ந்த தமிழகமே!
5. சின்ன நூலா நம்மை சிறை பிடிப்பது?
6. தமிழ் தேசியம்
போன்றவையாகும். சொந்த நாட்டில் தமிழன் அகதியா? என்ற நூலில் உள்ள தமிழின் தொன்மையும் சமகிருத பின்மையும் என்ற பகுதியில் எல்லா மொழிகளும் தமிழின் கிளை மொழிகளே எனும் கருத்தை முப்பகுப்பால் எடுத்துக் காட்டியுள்ளார். அவை,
1. உறவுச் சொற்களில் ஏற்பட்ட மாற்றம்
2. பிரதி பெயர்களில் ஏற்பட்ட மாற்றம்
3. வினைச் சொற்களில் ஏற்பட்ட மாற்றம்
எனும் முப்பெரும் பிரிவினைக் கொண்டு தனது நுண்ணிய ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இவற்றில் ஒரு சில சான்றுகள்
உறவுப் பெயர்கள் : தந்தை
“ஐ ---> ஐா - ஐயன் \ ஐயர்
அய் - அய்யா, அய்யன்
அப் - அப்பா
தன் (+த்) + ஐ - தந்தை \ தாதை (பேச்சு ஆங்கிலத்தில் டாடி)
அத் + அன் - அத்தன் (ஐரிஷ் : அத்தயர்
ஆங்கிலம் : F அத்தர் - father)
அத்தன் (த= ச) - அச்சன் ---> இலத்தீன்
கிரிக்கு - ப + அத்தர் - pater
(இந்திய மொழிகள் + சமஸ்கிருதம் ) பி + அத்தன் - பித்தா - பிதா
ஐரோப்பிய மொழிகள் - ப் +அப்பா - பப்பா.
ஐ \ ஐயன் சொல் தோன்றிய காலங்கள் - 50000 ஆண்டுகள்
அத்தன் - 10000 ஆண்டுகள்
அப்பா - 6000 ஆண்டுகள்”
(சாத்தூா் சேகரன், சமசுகிருதம் ஒரு மொழி அல்ல,ப.109)
என்று எடுத்துக்காட்டுகளுடன் கூறும் முறைமையில் “உலக மொழிகள் யாவும் தமிழின் கிளைமொழிகளே” எனும் கூற்று மெய்யாகின்றன. இனிமைத் தமிழில் மொழியியல் வானில் சரித்திரம் பல படைத்த சாத்தூர் சேகரன் அவர்கள் தமிழ்த்தொண்டு என்றும் எண்ணத்தக்கது.