தமிழில் கவிதை எழுத்தென்பது இன்று சமூகத்தில் பல்வேறு மனிதர்களிடத்தும் ஊற்றெடுத்துப் பல்கிப் பெருகிப் பிரவாகமாய் உருக்கொள்கிறது. மனித வாழ்வியலை, மனிதனின் இன்ப, துன்ப அழகியலை, மனித விடுதலையை, இயற்கையின் ரசிப்பை எனப் பல்வேறு தளங்களில் கவிதைகள் விரிகின்றன. இது தமிழ்ச் சமூகம் அறிவுசார் சமூகமாக மாறுவதன் அடையாளமாகப் பார்த்து சந்தோசிக்கின்ற தருணமாகவே எனக்குப் படுகிறது.
ஆரம்பத்தில் இயல்பு நிலையில் எழுந்த தமிழ் கவிதைகள் கால வளர்ச்சியில் அறிவு இயக்கத்தின் நுண்ணிய பார்வையினால் கோட்பாட்டு வரையறைகளை கைப்பற்றியும் எழலாயின. ஆனாலும் ஒரு படைப்புக்குள் இருந்து கோட்பாட்டை பலப்படுத்தும் கருத்துக்களை உருவி எடுப்பதென்பதும், ஒரு கோட்பாட்டுக்குள் நின்று அதற்காகவே ஒரு படைப்பை உருவாக்குவது என்பதற்கும் வேறுபாடு இருப்பதாகவே உணர்கிறேன். அந்த வகையில் விஜயலெட்சுமியின் பால் (ழ்) முரண் கவிதைத் தொகுப்பினை நாம் வாசிக்கின்ற போது அவர் கவிதைக்குள் இருந்து பெண்ணியக் கோட்பாட்டைப் பிரதிபலிக்கின்ற நல்ல பல கவிதைகளை இனங்காண முடிகிறது மட்டுமல்லாது இதுவரை வெளிவந்த பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது முழுக்க முழுக்க எல்லாக் கவிதைகளுமே பெண் வாழ்வை, பெண் விடுதலையைப் பேசுகின்ற கவிதையாக அமைவதும் சிறப்புக்குரியதாகிறது.
கேரளப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியை விஜயலெட்சுமி கேரள மாநிலப் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியல், அவர்கள் கையாளும் நாட்டார் மருத்துவம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுச் சிறந்த நூல்களை வெளிக்கொணர்ந்தவர் மட்டுமல்லாது பெண்ணிய ஆய்வுகளிலும், மலையாள, தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் தடம் பதிக்கும் வண்ணம் தம்மை வெளிப்படுத்தி வருபவர். கைக்குள் கனல் எனும் முதல் கவிதைத் தொகுப்பினை அடுத்த இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பே பால் (ழ்) முரண் என்பதாகும்.
கவிதை ஆக்க முயற்சியில் கவிஞர் விஜயலெட்சுமி பெரிதும் வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இவரின் கவிதை மொழியைப் பொறுத்தமட்டில் பூடகமான மொழியாக அமைந்து வாசகனைத் திக்குமுக்காடச் செய்யாத எளிய மொழியாக அமைந்திருப்பதும், நொந்து போன பெண் சமூகத்தைத் தன் கவிதை வழி அரவணைத்து அவர்களை வாழ்வில் நம்பிக்கைக் கொள்ளச் செய்வனவாகவும் உள்ளன.
“கல்வியை கற்றிடு பெண்ணே
அது உன்கையில் ஆயுதம் கண்ணே
முடங்கி இருப்போம் என்றே
உன் முயற்சியை விடாதே பெண்ணே” (1)
“தகுதியை வளர்த்திட வேண்டும் - உன்
தாழ்மையைப் போக்கிட வேண்டும் உன்னை
நுகர் பொருளாக்குவோரை - நீ
நொறுக்கி எறிந்திட வேண்டும்” (2)
போன்ற கவிதை வரிகள் பெண்ணிய மேம்பாட்டை வலியுறுத்தும் கவிதைகளாகத் தொனிக்கின்றன. படைப்பு எனும் கவிதை அச்சம் நாணத்தை அடுப்பில் இட்டுத் திறமைத் தகுதியை அணிகலன்கள் ஆக்கிப் பெண்ணைக் கட்டுப்படுத்திடும் கற்பெனும் மாயையை அப்புறப்படுத்தி எனக்கு ஏதுவாய் என்னை நானே படைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதாய்ப் பதிவு செய்துள்ளது. மேலும் பெண்வெளியைத் தமக்குத்தாமே மீட்டுருவாக்கம் செய்கின்ற, அவள் விரும்பியபடி தகவமைத்துக் கொள்கின்ற ஒரு கவிதையாகவும் இக்கவிதை வெளிப்படுகின்றது.
ஆண், பெண் உறவின் அடிநாதமாய்த் திகழக்கூடியது பாலுறவு. உணர்வின் வெளிப்பாடாய், உணர்வின் வடிகாலாய் திகழ்கின்ற பாலுறவில் கூட ஆணாதிக்கம் தலை நிமிரும் விதத்தை,
“அந்தரங்கங்களின்
அடிவைப்பில் கூட
உன் ஆதிக்கம் தானா?
முந்தியது அவள் என்றால்
முகம் சுளித்துத் திரும்பிப் படுக்கும்
உன் முதுகில்
ஏளனப் பார்வை ...” (3)
என்பதாக “ஆதிக்கம்” கவிதையில் வெளிப்படுத்துகின்றார்.
பெண் வாழ்வு, பெண் விடுதலை, பெண் மேம்பாடு, பெண்ணைப் புதிதாகத் தகவமைத்தலின் அவசியம் எனப் பெண் குறித்த பல உட்தளங்களில் பால் முரண் தொகுப்பு பேசியிருந்தாலும் தொகுப்பின் அச்சாரமாக “ஐயோ சாமி” கவிதை அமைகிறது.
முட்டை உடைந்த மூன்று நாள் போக்கைத் தீட்டாய்க் கருதி, தீண்டாமை ஆக்கிக் கோயில் நீக்கிக் குடிசையில் இருத்தினீர். நிர்மால்ய பூசைக்காய்த் தேவனைத் தொட்டுத் தடவி அங்கம் கழுவி ஆசாரம் செய்து சாந்தி செய்ய பூசாரினி கூடாது என்றீர். எனத் தொடரும் இக்கவிதை,
“தேவியின் உடைகளைந்து
தேகம் கழுவி
பின்னால் பிட்டவளைவில்
தண்ணீர் ஊற்றி
முன்னால் முலைக் காம்புகளை
மெல்லத் தடவி
ஒடுங்கிய இடுப்பை
இறுகத் தேய்த்து
மொத்தமாய் தடவி
முழு அலங்காரமும்
ஆசாரமாய் செய்ய
பூசாரினி வேண்டாம் என்கிறீர்
என்ன தர்க்கம்?
தேவிக்குப் பிடிக்காது
என்ற பேரில்
தெய்வப் பெண்ணின்
தொடு சுகம் காண
செய்த சதியா?
ஐயோ சாமி” (4)
என்று கோயிலில் சாமிக்குப் பூசை செய்யப் பெண் பூசாரினி அனுமதிக்கப்படாததை எதிர்த்துக் கேள்வி கேட்கும் கவிஞர், அதற்கான பதிலாகச் சாமியின் தொடுசுகம் காணவே ஆண்கள் செய்த சதி என்பதாக அடையாளப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. பிற பெண் கவிஞர்களால் இது வரையிலும் பார்க்கப்படாத ஒரு செய்தியாகவும் படுகிறது. மேலும், இஸ்லாமிய சமயம் சார்ந்து வாங்கு ஓதிட வன்குரல் அன்றி பெண்குரல் ஆனால் பக்தி போய் காமம் பிறிட்டிடுமோ எனக் கேள்வி கேட்பதும், கிறித்தவ சமயத்தின் ஆணாதிக்கம் மீது கேள்வி எழுப்புகின்ற போது பாவமன்னிப்பென்று பலரது அந்தரங்கம் கேட்டு மகிழப் போட்ட அங்கியைக் கழற்றி என்னிடம் தந்தால் பிழைத்திடுவதென்னமோ ஐயோசாமி என்றும் மதம் சார்ந்து ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்பது ஆன்மீகப் பெண்ணியத் தளத்தில் வைத்துப் பார்க்கத்தக்கது. எனினும் ஒட்டு மொத்தமாக இவரின் எழுத்துக்களில் தீவிரவாதப் பெண்ணியத்தின் தாக்கம் (Radical feminisam) எதிரொலிப்பதைக் காணமுடிகிறது. “ஆண்களால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும் சமூக மதிப்புகளையும் உடைத்தெறிந்து பெண்கள் மட்டுமே (Womenz only) எதிலும் எங்கும் முழுவதும் பெண்ணாட்சியே (women oriented movement practically every where even in political action)” 5 என்பதாகத் தீவிரவாதப் பெண்ணியம் பற்றி தனது நூலில் இரா. பிரேமா குறிப்பிடுவதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
“காக்கும் செருப்பே
காலைக் கடித்தது
காலப் போக்கில்
ஒவ்வாமல் இருந்த
செருப்பும் காலும்
ஒத்துப் போய் விட
இதில் அரம் போனது
செருப்பிற்கா
மரத்துப் போனது
காலுக்கா....” (6)
என்பதாக “இணக்கம்” கவிதை எழுப்பும் கேள்வியும் குறியீட்டு நிலையில் முக்கியமான ஒரு விமர்சனமாக அமைகிறது. “கூடு விட்டுக் கூடு பாய்ந்து” கவிதையில் கவிதை எழுத்தோடு ஆண், பெண்ணை ஒப்பிட்டுப் பேசும் கவிஞர் வெறுப்பும் விரக்தியும் வெத்துப் பெருமூச்சும் ஏக்கமும் எதிர்ப்பும் எரிச்சலும் சலிப்பும் இல்லாமல் கவிதை நயம் சொட்டச் சொட்டக் காதல் ரசம் ஊற்றெடுக்க வர்ணணை மெட்டுகள் வலம் வர ஒரு அருமையான அணிநயக்கவிதை எழுத வேண்டும். என ஆசைப்படும் அவர்,
“கொஞ்ச நேரம்
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து
ஆம்பிள்ளையாய்
ஆனால் என்ன” (7)
என்று ஒரு கேள்வியினை முன் வைக்கின்றார். இக்கேள்வி பெண் எப்போதுமே சந்தோஷத்துக்கு அப்பாற்பட்டவளாக, வலியிலும், விளிம்பு நிலையிலும் வாழ்பவள் என்பதை எதிர் நிலையில் பிரதிபலிக்கின்றது. அத்தோடு இத்தகைய நிலையில் வாழும் பெண்களால் எழுதப்படும் கவிதையானது துயரத்தை எழுதும் கவிதையாகத்தான் இருக்குமே ஒழிய மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் வர்ணனைக் கவிதையாக அமையாது என்பதும் சிந்தனைக்குரியது. மேலும் பெண்ணை இயற்கையாகப் பாவிக்கும் ஆணின் மனநிலையினைப் பற்றி பேசுகின்ற போது,
“இயற்கையைப் பொருத்தமாகப்
பெண்ணென்றனர்
ஆட்கொள்ளவும்
அழிக்கவும்
சௌகரியமாய்
அடக்குமுறையின்
அவலங்களை எதிர்த்து
இயற்கைச் சீற்றமாய்
என்று எழப்போகிறாய்?” (8)
என்று இயற்கையை ஆணின் செயலுக்கு ஒத்து வருவதாகக் குறிப்பிடும் அவர் அதே இயற்கையினைச் சுட்டி இயற்கையின் சீற்றமாய் என்று எழப்போகிறாய் என்ற கேள்வியினையும் முன்வைக்கின்றார். ஆகப் பெண் அமைதிக்கு மட்டும் பெயர் பெற்றவளல்ல. மாறாக ஆதிக்கம் செய்யும் தகுதியும் உடையவள் என்பதை அடையாளப்படுத்துகிறார்.
விஜயலெட்சுமி தனது கவிதைகளில் ஆங்காங்கே ஆணைப் பார்த்தும் பெண்ணைப் பார்த்தும் கேள்வி கேட்பதென்பது கவனத்திற்குரியது. இவை அவரது படைப்பு மனத்தையும் தாண்டியதாக அவருக்குள்ளிருக்கும் சமூகச் சீர்திருத்த எண்ணமும், திறனாய்வுப் பார்வையும் கவிதையில் மேலோங்குவதையே உணர்த்துகிறது.
மேலும் “தோற்றம்” கவிதையில் பூங்கொடியின் தயவில் பூத்துக் குலுங்கும் வெத்துக் கரண்டு கம்பம் என்பதாகப் பெண்ணின் பின்னணியிலேயே ஒரு ஆணின் வெளி உலக வெற்றிகள் அடங்கிக்கிடப்பதை அடையாளப் படுத்துவதும், “நீ” எனும் கவிதையில் விட்டுக் கொடுத்தல் என்பதை முழுமையாக எனக்கு விட்டுக் கொடுத்த நீ, என ஆணாதிக்கத்தின் அவலத்தைப் புலப்படுத்துவதும், “பெண்ணா என்ன அது” எனும் கவிதையில்,
“பெருத்த குண்டியும்
சிறுத்த இடையும்
கனத்த முலையும்
உடைய
இருகால் பிராணி” (9)
எனப் பெண்ணுக்கு இலக்கணம் வகுப்பதுமாய் ஒவ்வொரு கவிதையும் முழுவீச்சாய் ஆணாதிக்கத்தை நேரடியாகவும், குறியீட்டு நிலையிலும் கேள்வி கேட்கத் துணிகிறது. இதுவே அவரது கவிதைக்கான வெற்றியாகவும் அமைகிறது.
“சுடச்சுட” கவிதை ஆணியச் சமூகத்தால் பெண் மீது எழுப்பப்பட்டிருந்த அநேகமான அண்டப்புழுகுச் சித்திரங்களைக் கட்டுடைக்கும் மிக முக்கியமான பணியைத் துணிகரமாகச் செய்கிறது.
“வேசனைக் கூட்டிவா
விளையாட வேண்டும்
விதவனை விரட்டிவிடு
அபச குணத்திற்காய்
தேவடியான் எங்கே
தெருவிலே தேடிப்பார்
முண்டனைக் கண்டால்
காரிய நட்டம்
வாயாடன் வருவான்
வாசலை அடைத்திடு” (10)
மேலும், உயிர் சுக்கிலத்தை இழந்தது அவன் எனினும் கற்பை இழந்து விட்டாள் என்று கதை கட்டும் சமூகம் எனும் கற்பு குறித்த கவிதையும், உனக்குப் பிடித்தது போல் கத்தரித்துக் கட்டமைத்து வைத்துக் கொள்ள நான் என்ன போன்சாய்மரமா? எனக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு கவிதையும் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாகவும், பெண்ணிய விடுதலையை மையப்படுத்தும் மிக முக்கியமானக் குரலாகவும் ஒலிக்கின்றன.
1. கனலி விஜயலெட்சுமி - பால்(ழ்)முரண், ப - 63.
2. மேலது, ப- 64
3. மேலது, ப- 60
4. மேலது, பக்- 49, 50
5. பிரேமா.இரா - பெண்ணியம் ஆழமும் அகலமும், ப - 67
6. கனலி விஜயலெட்சுமி - பால்(ழ்)முரண், ப - 59.
7. மேலது, ப- 80
8. மேலது, ப- 84
9. மேலது, ப- 70
10. மேலது, ப- 73
(குறிப்பு: துணை நூல் பட்டியலுக்கான நூல்களைப் பட்டியலிடும் போது நூலின் பெயர், நூலாசிரியர்(கள்), வெளியீட்டாளர் (பதிப்பகம், ஊர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பு ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் - ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)