சங்க இலக்கியத்தின் இரு கண்கள்
முனைவர் கோ. தர்மராஜ்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை..
முன்னுரை
தொடக்கக்காலத்தில் இலக்கியங்கள் ஏட்டில் எழுதாத இலக்கியங்களாக, காற்றில் கலந்த கவிதைகளாக, வாய்மொழி இலக்கியங்களாக, மக்கள் நாவில் தவழ்ந்திருந்தன. பின்னர் மெல்ல மெல்ல ஏட்டில் குடி கொண்டு தமக்கெனச் செம்மையான இயல்புகளைக் கொண்டு ஒளிர்ந்தும் செம்மாந்தும் திகழ்கின்றன. தனக்கெனப் பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட இலக்கியங்களை உலக இலக்கியங்கள் போற்றும் அளவிற்குக் காதலையும், போரையும் வாழ்வின் இரு கண்களாகச் சங்க இலக்கியங்கள் போற்றியுள்ளது. அவ்வகையில் இலக்கியத்தின் இரு கண்களாகத் திகழும் காதல், போர் இரண்டையும் சங்க இலக்கியத்தின் வழியாகக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காதல் நிலைக் காலம்
அகத்திணை, புறத்திணை என்ற இரண்டினையும் புலவர்கள் சமமாக கூறி அவற்றை உலக மக்கள் அறியும் வண்ணம் செய்தனர். இரு திணையையும் சமமாக மதிக்கப்பட்டாலும் தொல்காப்பியர் அகத்திணையை முதலில் கூறுகின்றார். அகத்திணை ஏழு என்று கூறும் தொல்காப்பியர் அதற்குப் புறனாகப் புறத்திணையைக் கூறியுள்ளார். அகத்திணைக்குப் புறத்திணை நிலச்சூழ்நிலைக்குத் தகுந்தாற் போன்று அமைந்துள்ளது. கலிப்பா, பரிபாடல் என்னும் இருவகைப் பாக்களும் அகப்பொருளுக்கு உரியனவாக தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாடக வழக்கம், உலக வழக்கம் என்னும் இரண்டினாலும் கூறப்படும் புலனெறி வழக்கம் அகத்திணைக்கு வரும் என்று தொல்காப்பியர் வகுத்துள்ளது மனங்கொள்ளத்தக்கதாகும்.
உவமை, உள்ளுறை, இறைச்சி முதலானவை அகத்திணைப் பொருளுக்கு அணிகலன்களாக அமைந்துள்ளது. அகப்பொருள் பாடல்களே திணை, கைகோள், கூற்று, கேட்போர், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், பொருள், துறை என்பனவற்றைப் பெற்றுத் திகழ்கிறது. இவ்வாறு கூறியதை ஆராயும் போது 2381 சங்க இலக்கிய பாடல்களுள் 1862 பாடல்களில் காதற்பாடலை அமைத்துப் பாடியுள்ளதைக் காணும் போது அன்றைக்கேக் காதலை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றியுள்ளனர்.
'காதற் காமம் காமத்தில் சிறந்தது' (பரிபாடல் :பா.எண்:23)
என்று பரிபாடலில் கூறியதைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பாக்யமேரி கூறியுள்ளதை ஒப்பு நோக்கும் போது காதல் நிலைக் காலமே தமிழகத்தில் முற்படத் தோன்றியது என்பதை உணர முடிகின்றது.
காதல் நிலை
சங்க அகப்பாடல்கள் அனைத்தும் காதல்நிலை இலக்கியங்கள் என்று சொல்லும் அளவிற்கு புலவர்கள் உயர்த்திப் பாடியுள்ளனர்.
'இம்மை மாறி மறுமை ஆயினும்
நியா கியர்என் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே' (குறுந்தொகை: பா.எண் :49)
என்னும் குறுந்தொகைப் பாடலில் ஊன் கடந்து, உயிர் கடந்து, ஆன்மாவோடு கலந்த உண்மைக் காதலுக்கு அணிமகுடமாக ஒளிர்கிறது என்று கூறியிருப்பதைக் காணும் போது அன்றைக்கேக் காதல் நிலை உயர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.
பெயர் குறியாப் பண்பு
அக உலகப் பொதுமையைக் காட்டுவதற்காகச் சங்கப் புலவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெரும் இலக்கிய உத்தி குறிப்பிட்ட ஒருவர் பெயரைச் சுட்டாமல் அகப்பாடல்களைப் பாடியதாகும்.
'மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்' (தொல்.பொருள், நூ.எண்:57)
அகப்பாடல்கள் அனைத்திலும் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் பெறாதவையாகும். அதாவது ஐந்திணைக் காதலொழுக்கங்கள் எல்லா மக்களையும் உள்ளடக்கியது. தலைவன், தலைவி, தோழி என்று இருக்குமே தவிர, தலைவன் பெயரோ, தலைவி பெயரோ, தோழி பெயரோ எந்த அகப்பாடலிலும் காணப்படாது. பொதுமையைக் காட்ட ஒவ்வொரு நிலத்திற்குரிய பொதுப் பெயராகிய நாடன், ஊரன் போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. 'தனிப்பட்டோர் வாழ்க்கையில் காணும் மெய்யான நிகழ்ச்சிகளையே அகப்புலவன் பாடினும், அவை தூய முதல் நிலையில் வைத்துப் பொது நிலைக்கு உயருமாறு பாடப்பெறும் அகத்திணை மாந்தர் கூற்றுகளில் யாண்டும் மக்களின் இயற்பெயர்கள் வாரா. அங்கு எவ்வகையான மெய்ப்பெயருக்கும் புனைப்பெயருக்கும் இடம் இல்லை' என்று நா. சுப்புரெட்டியார் அகத்திணைக் கொள்கை எனும் நூலில் சுட்டியுள்ளதை இவ்விடத்தில் கூறுவது மனங்கொள்ளத்தக்கதாகும்.
அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சிகளாகிய காதற் பாடல்களாகும். உலகக் காதலர் அனைவருக்கும் உரியவையாகும். ஒரு தனிப்பட்ட இனத்திற்கும் மொழியினருக்கும் உட்பட்டதல்ல என்பதை உணர முடிகின்றது. 'அகப்பொருளின் கிடக்கை பொதுவாதலின் அந்தச் செய்யுளும் சமுதாயம் சுட்டும் பொதுப்பெயர்களால் அமைய வேண்டுமேயன்றி, ஒருவர் தனிப்பெயரால் அமையலாகாது என்று இலக்கிய முறைப்பாடல் வரம்பு வகுத்துரைத்தனர்' என்று தமிழ்க்காதல் எனும் நூலில் வ. சுப. மாணிக்கனார் கூறுகின்றார். இதிலிருந்து சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாகப் படைக்கப்பட்டதால் தனிப்பெரும் பண்பைப் பெற்று உயர்ந்து நிற்பது போற்றுதற்குரியதாகும்.
வீரம்
சங்க இலக்கியத்தில் காதற்பாடலுக்கு அடுத்தபடியாக பேசப்படுவது வீரமாகும். வீரமும், காதலும் வீரயுகத்தின் இரு கண்களாகப் போற்றப்பட்டன. வீரத்தைப் பொறுத்தவரையில்,
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி' (புறப்பொருள் வெண்பாமாலை : 43)
என்ற புறப்பொருள் வெண்பாமாலை கூறுவதன் வழியாகக் கல் தோன்றிய காலத்தில் இவ்வுலகம் தோன்றியது. உலகம் தோன்றிய காலத்தில் முறையாய் காதல் வளர்ந்தது. அச்சமயத்தில் கல்லில் நிலமும், நீரும், காற்றும் உராய்ந்து உராய்ந்து மண்ணும் மணலும் உருவாகப் பல காலமாகி விட்டன. கல்லில் இருந்து மண் தோன்றுவதற்குள் தமிழர்கள் கையில் வாள் தோன்றியது. வாள் தோன்றி ஆட்சி புரிந்த தமிழ் மண் வீரம் விளைந்த மண்ணாகத் தலை நிமிர்ந்து நின்றது. மக்களின் வாழ்வியல் கூறான தலை நிமிர்ந்த வீரத்தைப் புறத்திணையிலும், தலைமறைவாகச் செயல்படும் காதலை அகத்திணையிலும் நயம் மிக்கதாகக் கூறியிருப்பது புலவரின் புலமைத்திறனை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
அதியமான் வீரம்
வீரத்தைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் வரிசையில் ஒளவையார் பாடிய பாடலொன்றில்,
'களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்; போரெதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோன்' (புறநானூறு: பா.எண் : 87)
என்ற பாடலடியில் ஒவ்வொரு நாளும் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன் ஒரு மாதம் கூடிக் கவனம் கொடுத்துச் செய்த தேர்க்கால் போல் வலிமையானவன் அதியமான். அவன் முன்னே போரிடும் பகைவரேக் கவனம் என்று ஒளவையார் பாடியுள்ளார். செங்கோல் ஆட்சி செய்யும் மன்னனின் வீரத்தை எதிர்த்துப் போரிடும் மற்ற பகைவருக்கு உணர்த்தியிருப்பது பாராட்டுதற்குரியதாகும்.
தமிழரின் போர் நம்பிக்கை
பண்டைய தமிழரின் வாழ்வில் வீரம் நிறைந்திருந்தாலும், நம்பிக்கையும் மக்கள் மனதில் மிகுதியாகக் காணப்பட்டன. உன்னம் என்பது ஒருவகை மரம். உன்ன மரம் தழைத்துத் தோன்றினால் வெற்றி, வாடித் தோன்றினால் தோல்வி என்பது அவர்களின் நம்பிக்கையாகும். போருக்குப் புறப்படும் முன் உன்னமரத்தை நோக்கி நிமித்தம் பார்த்த பிறகே செல்வது தமிழரின் மரபு. இதனையே உன்னநிலை என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
உன்னமரம் வாடித் தோன்றினாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் சென்று வெற்றி பெற்றுத் திரும்பும் ஆற்றலைப் பாரி மன்னன் கொண்டிருந்தான். பாரியைப் போலவே செல்வக் கடுங்கோ வாழியாதன் உன்னமரத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததைப்,
'பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப்
புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ' (பதிற்றுபத்து : பா.எண் : 61, 5-6)
என்ற பாடலடி உணர்த்துகின்றது. நிமித்தம் பார்த்துப் போர் புரியும் மரபு இருந்தாலும், நிமித்தம் பார்க்காமல் வெற்றி பெற்று திகழ்ந்ததைப் பாரி, கடுங்கோ என்ற இரு மன்னர்களின் வாயிலாக அறிய முடிகின்றது.
வீரத்தாய்
சங்க காலத்தில் பெற்ற மகனைப் போருக்கு அனுப்பும் வழக்கம் பெருகிக் காணப்பட்டன. நாட்டிற்காகப் போருக்கு அனுப்பிய மகன் பல நாட்கள் ஆகியும் தன் மகன் இன்னும் திரும்பவில்லை என்ற கவலை சங்ககாலத் தாய் மத்தியில் இருக்காது. அவ்வகையில் வீரத்தாய் ஒருத்தி. என் மகன் இப்பொழுது எங்கே, எந்த ஊரில், எந்தத் திசையில் இருக்கின்றான் என்று கூடத் தெரியாது. என் வயிறு புலி தங்கி இருந்து போன குகை போன்று உள்ளது. என் மகன் ஏதாவது ஒரு போர்க்களத்தில் இருப்பான் என்று தன் மகனின் வீரத்தை வீரமிக்கதாய்க் கூறும் சிந்தனையைப் பின்வரும் பாடலொன்று,
'புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோபோர்க் களத்தானே' (புறநானூறு : பா.எண் : 86)
என்ற புறநானூற்றுப் பாடலடியில் சங்ககாலத் தாய்கள் தங்கள் மகனைப் புலியைப் போன்று வளர்த்து நாட்டிற்காகப் போரிட ஊக்கம் அளித்துள்ளதை உணரமுடிகின்றது.
முடிவுரை
* சங்கப் புலவர்கள் காதலையும், போரையும் முன்னிலைப்படுத்திப் பாடியிருந்தாலும் வாழ்க்கைக் கூறுகளில் முதன்மையான காதலைப் போற்றிப் பாடியிருப்பது பாராட்டிற்குரியதாகும்.
* இலக்கியத்தின் இரு கண்களாக திகழும் காதலையும், போரையும் பாடியிருப்பது, ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளை இவ்விரண்டிற்குள் அடக்கி விடலாம் என்ற சிந்தனை புலப்படுகிறது.
* அக இலக்கியத்தில் பெயர் சுட்டாமல் பாடியிருப்பதால் உலகப் பொதுமக்கள் அனைவருக்கும் காதல் பொதுவானது என்பதை அன்றைக்கே பாடியுள்ளதைக் காண முடிகின்றது.
* காதலுக்கு அடுத்தபடியாக வீரம் பேசப்பட்டாலும், காதலும், வீரமும் வீரயுகத்தின் இருகண்களாகப் போற்றப்பட்டுள்ளன.
* இலக்கியத்தில் காதலையும், வீரத்தையும் காட்டியிருக்கிறார்களே தவிர, அவற்றைக் கற்பிக்கவில்லை என்ற உண்மையை அறிய முடிகின்றது.
* மனிதன் வாழ்விற்கு இரு கண்கள் எவ்வளவு முக்கியமோ அது போல இலக்கியத்தில் காதலும், போரும் முக்கியம் என்பதை உணரமுடிகின்றது.
துணை நூல்கள்
1. ச. வே. சுப்பிரமணியன், சங்க இலக்கியம் எட்டுத்தொகை, (மூலமும் தெளிவுரையும்) தொகுதி -1, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010.
2. இளம்பூரணர், தொல்காப்பியம் - பொருளதிகாரம், கழகவெளியீடு, சென்னை, 1982.
3. நா. சுப்புரெட்டியார், அகத்திணைக் கொள்கை, பாரி நிலையம், சென்னை, 1981.
4. வ. சுப. மாணிக்கனார், தமிழ்க்காதல், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2009.
5. அ. ஆலீஸ், பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
6. பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2008.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.