பூகோவின் அதிகாரமும் - பின்நவீனத்துவமும்
திரவியராசா நிரஞ்சினி
உதவி விரிவுரையாளர், தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
ஆய்வு அறிமுகம்
உண்மை பற்றிய தேடலாக விளங்கும் மெய்யியல் இரு முக்கியப் பிரிவுகளைக் கொண்டது. அவையாவன; மேலைத்தேய மெய்யியல், கீழைத்தேய மெய்யியல். கீழைத்தேய மெய்யியலானது, பெரும்பாலும் கடவுள், ஆன்மா, பிரம்மம், ஆன்மீகம், உலகம் முதலிய விடயங்களைப் பற்றியதாகத் தனது தேடலை ஆரம்பித்தது. இதனால் இம் மெய்யியல் இந்திய மெய்யியல், சீன மெய்யியல், ஜப்பானிய மெய்யியல், திபெத் மெய்யியல் எனப் பல பிரிவுகளைக் கொண்டது. மேலைத்தேய மெய்யியல், அனைத்துத் துறைகள் பற்றியும் ஆய்வை மேற்கொள்கிறது. இதன் பிரிவுகளாக, ஒழுக்கவியல், பௌதீத அதீதம், அறிவாராட்சியியல், அழகியல், உளவியல், அளவையியல் என்பன காணப்படுகின்றன. மேலும் இன்று மேலைத்தேய மெய்யியல் பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா, ரசியா போன்ற நாடுகளில் மிகத் தீவிரமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை நாம் கண்ட மெய்யியல் என்கிறோம். இதில் மூன்று கண்ட மெய்யியல்கள் முக்கியமானவை. அவையாவன,
1. ஆங்கில மெய்யியல் - பிரித்தானிய மெய்யியல் - English Philosophy
2. ஜேர்மனிய மெய்யியல் - German Philosophy
3. பிரெஞ்சு மெய்யியல் - French Philosophy
ஆங்கில மெய்யியல் பிரித்தானிய பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டதோடு ஆங்கில மொழியை மூலமாகக் கொண்ட மெய்யியற் சிந்தனைகள் இதனுள் உள்ளடங்கும். இதே போன்று ஜேர்மனிய மெய்யியலைப் பொறுத்தவரையில், ஜேர்மன் நாட்டில் அதே வேளை ஜேர்மன் மொழியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிந்தனைகள் இதில் இடம் பெறும். குறிப்பாக இமானுவேல் காண்ட் தொடங்கி கார்ள் மார்க்ஸ், ஹைடேகர், ஹ_ஸல் போன்ற இன்னும் பல தத்துவவாதிகளின் கருத்துக்களை உள்ளடக்கியதாக இம் மெய்யியல் வளர்ச்சியடைவதைக் காணலாம்.
பிரெஞ்சு மெய்யியல் - அறிமுகம்
பிரெஞ்சு மெய்யியலைப் பொறுத்தவரையில் ஏனைய இரு வகைகளையும் போல் பிரெஞ்சு பிரதேசத்தையும், பிரெஞ்சு மொழியையும் அடிப்படையாகக் கொண்ட தத்துவங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, மத்திய கால Peter Abarlard தொடக்கம் டேக்கார்ட்ஸ், சாத்ரே, பூக்கோ, சசூர், ரோலன்ட் பாத், டெறிடா மற்றும் லியோதார்த் போன்றவர்களின் சிந்தனைகளை மையமாகக் கொண்டு இம் மெய்யியல் வளர்ச்சியடைகின்றது. இவ்வகையான பிரெஞ்சு மெய்யியல் பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இங்கு பல்துறைசார் சிந்தனைகள் மற்றும் பல்வேறுபட்ட சிந்தனையோட்டங்கள் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. அந்தவகையில் அமைப்பியல் வாதம், நவீனத்துவம், இருப்புவாதம், பின்னை நவீனத்துவம் மற்றும் பின்னமைப்பியல் வாதம் போன்ற சிந்தனைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ஏனைய கண்ட மெய்யியல்களைப் போலல்லாமல் பல சிறப்புக்களைக் கொண்டதாகப் பிரெஞ்சு மெய்யியல் அமைகிறது.
பூகோ - அறிமுகம்
பிரெஞ்சு சிந்தனையாளரான பூகோ கால் நூற்றாண்டு காலமாகத் தமது யுகத்தின் மிக முக்கிய சிந்தனையாளராக மதிக்கப்படுபவராகவும் இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த மெய்யியலாளராகவும் பின் நவீனத்துவ சிந்தனைகளில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியவராகவும் போற்றப்படுகிறார். இவரது கருத்துக்கள், சிந்தனைகள், சொல்லாடல்கள், என்ற அனைத்துமே இந்த நூற்றாண்டின் சிந்தனைப்போக்கு, உலகப்பார்வையைப் பெரிதும் போற்றியிருக்கின்றன. உலக வரலாற்றில் எந்த அதிகார மையமும் இவரை வெறுத்த அளவு வேறு யாரையும் வெறுத்ததில்லை. தனது சிந்தனைகளால் “புதிய காண்ட்” என அழைக்கப்பட்டார்.
பூகோவின் முக்கிய படைப்புக்கள்
* Madness& Civilization - A History of Insanity In The Age of Reason-1961 Inic - An Archaeo
* The Birth or Clinic - An Archaeology of Medical Perception -1963
* The Order of Things An Archaeology of Human Science - 1966
* The Archaeology Of Knowledge -1961
* Discipline & Punish - The Birth Of Prisons
* The History of Sexuality - 1976
முதலியனவற்றைக் குறிப்பிடலாம். மேலும் பல ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாகவும் தனது கருத்துக்களை முன்வைத்தார். இவரது முழு ஆய்வுகளுமே மையத்தை அழித்தல், கருத்தமைத்தல் அல்லது கருத்து நிலைப்பாட்டு ஆக்கம், அறிவின் அகழ்வாய்வு, ஆகியவற்றைத் தழுவி நிற்கிறது.
பூகோவின் அதிகாரம் - பார்வை
தனி மனிதர்கள், சமூக அமைப்புகள், நிறுவனங்களுக்கிடையே இருக்கும் உறவை மிகேல் பூக்கோவின் படைப்புகள் ஆய்வுக்குட்படுத்துகின்றன. அதிகாரம் பற்றிய ஆய்வாகவே இது அமைந்திருக்கிறது. அதிகாரம் என்பது ஒரு அமைப்பால் செலுத்தப்படுவதாகவும், ஒரு அமைப்பால் அனுபவிக்கப்படுவதாகவும் பார்க்கப்படுகிறது. இதை பூக்கோ விமர்சிக்கிறார். அதிகாரம் எதிர்மறையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதிகாரம் என்ற செயல்பாட்டால் பல சாதகமான பண்புகளும் கூறுகளும் அமைப்பில் உருவாகியிருக்கின்றன என்கிறார்.
(கிருஷ்ணராஜா,சோ. (1999), “பின் நவீனம்- ஓர் அறிமுகம்” பக்கங்கள் - 78)
பாரம்பரிய புரட்சிப் போராட்டங்களிலிருந்து (மே-1968) போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக அமைந்து விட்டதாகப் பல இடதுசாரி அறிஞர்கள் கருதினர். புதிய தலைமுறை, புதிய சமுதாயம் உருவானது. புதிய விமர்சனக் கோட்பாடு பிறந்தது. பெண் விடுதலை, சிறை சீரமைப்பு, சூழலிய இயக்கம், அணுசக்தி எதிர்ப்பியக்கம், பல்வேறு ஆலைக்கழிவு எதிர்ப்பியக்கங்கள், மாற்றுத் திறனாளிகள் இயக்கம் என்று புதிய புதிய போராட்டக் குழுக்கள் இணைந்து புரட்சி செய்தன. சீனக் கலாசாரப் புரட்சிக்கு இணையாக மே-1968 மற்றும் 1970களின் பேரணி பேசப்பட்டது. பாட்டாளி, தொழிலாளி வர்க்கப் புரட்சிக்குள் மேற்படி போராட்ட இயக்கங்களை உள்ளிழுக்கும் வழிவகை தெரியாமலிருந்ததை அரசியல் தேக்கத்தை பூக்கோ, டெலூஸ், கட்டாரி, காடோரியடிஸ், லிபோ, லியோதார்த், போத்ரலார்த், மோரின், லெப்ரே, போன்றோர் புதிய நிகழ்வை நுணுக்கமாக வேகவேகமாக ஆராய்ந்து ஓர் புதிய கோட்பாட்டை அமைத்துக் கொடுத்தனர். இதிலிருந்தே பூக்கோ ஆதிக்கம் மற்றும் அதிகாரம் போன்ற விடயங்களை எடுத்துக் கொண்டார்.
தொடக்ககால மார்க்சிய சிந்தனையாளர்கள் அதிகாரம் என்பதை அடக்குமுறையோடு தொடர்புபடுத்திப் பார்த்தார்கள். பூக்கோ அப்படிப் பார்க்கவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவில் இருக்கும் அதிகார வரம்புகளை பூக்கோ விளக்குவதைப் பல பெண்ணியவாதிகள் சாதகமாக அணுகியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நன்மை விளைவிக்காத கருத்துக்களை ஏற்றுக்கொள்வதைக் கருத்தாக்கம் என்று மார்க்சிய சிந்தனை முன்வைத்தது. லூயி அல்தூஸர் போன்ற மார்க்சிய வழி சிந்தனையாளர்கள், மேலிருந்து கீழே செல்லும் ஒருவழி அதிகாரத்தை மட்டுமே கவனத்தில் கொண்டார்கள். அரசு அளிக்கும் அதிகாரத்தில் அல்தூஸர் கவனம் செலுத்தினார்.
கீழிருந்து மேலே போகும் அதிகார உறவுகளை பூக்கோ முன்வைத்தார். அதிகார உறவுகள் அனைத்து உறவுகளையும் நிர்ணயிப்பதை அவர் விபரித்தார். தனிமனிதன் அதிகாரம் முக்கியத்துவம் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதிகாரம் என்பது ஒரு சொத்து அல்ல, அது செயலாக்கப்படுவது என்று பூக்கோ விவாதித்தார். 'அதிகாரம் ஒரு சங்கிலி, தனி மனிதர்கள் அதிகாரத்தின் வாகனங்கள், அவர்கள் அதிகாரத்தின் இலக்குகள் அல்ல, என்று பூக்கோ கூறுகிறார்.
(கிருஷ்ணராஜா,சோ. (1999), “பின் நவீனம்- ஓர் அறிமுகம்” பக்கங்கள் - 82)
பூக்கோவின் ஆசிரியரான லூயி அல்தூஸர், குடும்பம், தேவாலயம், கல்வி அமைப்பு போன்ற கருத்தாக்க அரசு எந்திரத்தில் அதிகாரம் பற்றிய ஆய்வை முன்வைக்கிறார். சட்ட அமைப்பு, ராணுவம், காவல்துறை போன்ற அடக்குமுறைக் கருத்தாக்க எந்திரத்தில் அதிகாரம் பற்றிய ஆய்வை அவர் முன்வைக்கவில்லை. 'சமூக அமைப்பில் அதிகார உறவுகள் மறைந்து கிடக்கின்றன. அதிகார உறவில் எது அதிகம் மறைந்து கிடக்கிறது என்று நாம் ஆய்வு செய்யவேண்டும். பொருளாதாரக் கட்டமைப்பில் அதை மையப்படுத்த வேண்டும். அரசு வடிவங்களில் அதிகாரத்தைத் தேட வேண்டும். அதில் மட்டும் அல்லாமல் அரசுகளுக்கிடையேயும் அரசுகளுக்கு உள்ளேயேயும் அதிகாரத்தைத் தேட வேண்டும் என்று பூக்கோ கூறுகிறார்.
அதிகாரம் பற்றிய பூக்கோவின் பார்வையால் கவரப்பட்ட ஜுடித் பட்லர் போன்ற பெண்ணியவாதிகள், பால் அடையாளம் என்பது ஒரு சொத்து அல்ல, அது செயலாக்கப்படுவது என்று கூறினார்கள். அதிகாரம் என்பது உரிமை மறுப்பு என்று ஆகிப் போனால் அதற்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்று பூக்கோ கூறுகிறார்.
(கிருஷ்ணராஜா,சோ. (1999), “பின் நவீனம்- ஓர் அறிமுகம்” பக்கங்கள் - 79)
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆண் குழந்தைகள் சுயமைதுனம் செய்வது பற்றிய கவலை வளர்ந்ததையும், அதைத் தடுப்பதற்கான அறிவுரைகள் உருவாக்கப்பட்டதையும், பிறகு ஆண் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டதையும் பூக்கோ விவரிக்கிறார். குழந்தைகளின் மீதான அடக்குமுறையாகவும், அவர்களின் ஆசைகளின் மீதான கட்டுப்பாடாகவும் மட்டும் பூக்கோ இதைப் பார்க்கவில்லை. இது குழந்தை உடலைப் பாலியல்படுத்துவது. பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உடல்ரீதியான உறவை பாலியல்படுத்துவது. குடும்பப் பரப்பை பாலியல்படுத்துவது. பாலியல் என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு. அது பாலியல் அடக்குமுறையின் வெளிப்பாடு அல்ல என்கிறார் பூக்கோ. இந்த ஆய்வுதான், பல குழுக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொள்வது பற்றி அவரை எழுத வைத்தது.
'புரட்சி என்பது அரசின் அடக்குமுறையிலிருந்து அடையும் விடுதலை அல்ல. அது முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பு அல்ல. அதிகார உறவுகளைத் தூக்கி எறிதல் அல்ல என்று பூக்கோ நினைத்தார். அரசு என்பது தன்னை இயங்கச் செய்யும் அதிகார உறவுகளின் குறியாக்கம் ஆகும். புரட்சி என்பது இன்னொரு வகையான குறியாக்கம் ஆகும், என்று பூக்கோ கூறுகிறார். “அதிகாரத்திற்கான எதிர்ப்பு என்பது சமீபத்திய வளர்ச்சி" என்று பூக்கோ கூறுகிறார்.
'பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்திற்கான எதிர்ப்பு, குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்திற்கான எதிர்ப்பு, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான மனநோய் மருத்துவத்தின் அதிகாரத்திற்கான எதிர்ப்பு, மக்கள் மீதான மருத்துவத்தின் அதிகாரத்திற்கான எதிர்ப்பு மக்களின் வாழ்வு முறை மீதான நிர்வாகத்தின் அதிகாரத்திற்கான எதிர்ப்பு, போன்றவற்றையும் பூக்கோ சுட்டிக் காட்டுகிறார். இந்த எதிர்ப்பு அதிகார அமைப்பின் மீதான எதிர்ப்பு அல்ல. இது அதிகாரத்தின் ஒரு வடிவம் ஆகும் என்கிறார். பூக்கோ. அரசியலில் ஈடுபடுவது என்பது புரட்சி என்பது நல்லதா என்று கேட்பது” என்று பூக்கோ கூறுகிறார்.
(கிருஷ்ணராஜா,சோ. (1999), “பின் நவீனம்- ஓர் அறிமுகம்” பக்கங்கள் - 79)
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்களுடன் தொடர்பு கொண்டிருந்த பிரெஞ்சுப் பெண்கள் பொதுமக்களால் கண்டிக்கப்பட்டதையும் அவர்கள் தலைமழித்துக் கொண்டதையும் பற்றி பூக்கோ கருத்து கூறியிருக்கிறார். “கண்டிக்கப்படுதல்”என்பதைப் பல கோணங்களில் வடித்து எடுக்கலாம் என்று அவர் கூறுகிறார். தன் தாயை, சகோதரனை, சகோதரியைக் கொன்றுவிட்டதாக ஒரு இளைஞன் சுய ஒப்புதல் வழங்கியதைப் பற்றி, 'இது ஒரு அதிகார உறவு, சொல்லாடல்களை சொல்லாடல்களால் எதிர்கொள்ளல், என்று பூக்கோ கூறுகிறார். சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எப்போதும் பூக்கோ கருத்து தெரிவித்திருக்கிறார். “எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கு அதற்கு எதிர்ப்பு இருக்கிறது” என்று பூக்கோ கூறுகிறார். “எதிர்ப்பு இல்லாத இடத்தில் அதிகார உறவு இருப்பதில்லை” என்று பூக்கோ வாதிடுகிறார். ‘அதிகார செயலாக்கத்தில் எதிர்ப்பு என்பது எழுதப்பட்டிருக்கிறது’ என்று பூக்கோ கூறுகிறார்.
ஒவ்வொரு காலத்திலும் அதிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதில் பூக்கோ கவனம் செலுத்துகிறார். பல காலகட்டங்களில் ஐரோப்பாவில் குற்றவாளிகள் என்று கருதப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் பற்றி அவர் விவரிக்கிறார். உடல் உறுப்புகள் பிடுங்கப்படுவதும், சதை பிய்க்கப்படுவதும், அதில் சூடான மெழுகு ஊற்றப்படுவதும், கை, கால்கள் இழுத்து உடைக்கப்படுவதும் பழைய கால கட்டங்களில் தண்டனைகளின் வகைகளாக இருந்திருக்கின்றன. தற்காலத்தில் அமெரிக்காவில் எந்த வலியும் தராத ஊசிகள் போட்டு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றமாகவும் பரிணாமமாகவும் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்று பூக்கோ கூறுகிறார்.
'காட்சியாக்கப்படும் பரப்பில் இருப்பதை உணரும் ஆணோ பெண்ணோ, அதிகாரத்தின் எல்லைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். தங்கள் மீது அந்த எல்லைகளை அவர்கள் செயல்பட விடுகிறார்கள். அதிகாரம் செலுத்தும், அதற்கு உட்படுத்தப்படும் இரு பாத்திரங்களையும் வகிக்கும் அதிகார உறவைத் தங்களுக்குள் அவர்கள் பதிய வைக்கிறார்கள். தங்கள் உட்படுதலின் இலக்காக அவர்கள் மாறிப்போகிறார்கள்” என்று பூக்கோ கூறுகிறார். அரசு மனநிலை பற்றி பூக்கோ விளக்கம் கொடுக்கிறார். ஆள்பவர் யார்? ஆளப்படுபவர் யார்? இது போன்ற ஒரு இயக்கம் எந்தக் காரணங்களால் ஏற்படுகிறது என்றும் அவர் ஆய்வு மேற்கொள்கிறார். அதிகார உறவுகள் வெற்றியடையவில்லை, முழு மேலாண்மைக்கு அவை வழிகோலவில்லை என்று அவர் கூறுகிறார்.
அதிகாரத்திற்கான எதிர்ப்பு அரசாங்கத்திற்கான எதிர்ப்பாக மட்டும் இருப்பதில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள், உலக நிதி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளையும், மெக்டொனால்ட் போன்ற பெரிய வணிக சங்கிலிகளின் பெருக்கத்தையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தான் அடக்குமுறை கொண்டவை என்ற பார்வையிலிருந்து பூக்கோ கவனத்தைத் திருப்புகிறார். மையப்படுத்தப்பட்ட அரசு என்ற மார்க்சியப் பார்வையை பூக்கோ நிராகரிக்கிறார். அவருடைய படைப்புகளில் இந்தச் சிந்தனை இடம் பெறவில்லை என்பது முக்கியமானது.
'ஒரு அரசின் சிக்கலை உயர்த்தி மதிப்பிடுவது, அதைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும். அரசின் பணிகளை இது குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும். உறவுகளின் உற்பத்தியின் போது உருவாக்கப்படும் சாதகமான அம்சங்களை இது தவிர்த்துவிடுகிறது. அரசு என்பது ஒரு கூட்டு உண்மை. அது ஒரு மாயமான அரூபம். அதன் முக்கியத்துவம் நாம் நினைப்பதை விடக் குறைவாகும் என்கிறார் பூக்கோ. ஒரு அரசு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நோக்கும், தனி பண்பும் இருக்கும். அரசு பல்வேறு துறைகளைக் கொண்டது. ஒவ்வொரு துறையின் உறுப்பினருக்கும் ஒரு குணம் இருக்கும். இப்படிப் பல்வகை தன்மை கொண்டதுதான் அரசாகிறது.
நிறுவனங்களின் கோட்பாடுகளுக்கும் செயல்பாட்டுக்கும் இடைவெளி இருந்து விடுகிறது. ஒரு மருத்துவமனை திறமையாகச் செயல்பட பல திட்டங்களை முன்வைத்தாலும், அரசுக் கொள்கை, மற்ற மருத்துவமனைகளுடனான போட்டி, சேவைக் கண்காணிப்பாளர்களின் நெருக்கடி போன்ற அம்சங்களால் அதன் இயக்கம் மாறிவிடுகிறது. ஒரு போரில் ஒரு நாடு வெல்வதற்கும் தோற்பதற்கும் பல்வேறு புறக் காரணிகள் அடிப்படையாக அமைந்து விடுகின்றன. அதிகாரம் என்பதைச் செயல்படுத்த பல அம்சங்களைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஒரு சமூகத்தின் பல மட்டங்களிலும் பல அலகுகளிலும் அதிகாரம் விரவிக் கிடக்கிறது என்று பூக்கோ கூறுகிறார்.
ஒவ்வொரு பரிமாற்றத்திலும் அதிகாரம் செயல்படுத்தப்படுவதை அவர் விவரிக்கிறார். அதிகாரம் என்பதை அடக்குமுறையாகப் பார்க்காமல் எதிர்ப்பாகப் பார்க்கும் ஒரு பார்வையைத் தொடர்ந்து பூக்கோ முன்வைக்கிறார்.
பின் நவீனத்துவமும் - அதிகாரமும்
பின் நவீனத்துவச் சிந்தனையில் புலப்படும் பல்வேறு போக்குகளில் பெரிதும் குறிப்பிடத்தக்க ஒரு போக்காக அமைபவை பூக்கோ முன்னிறுத்தும் ‘அதிகாரம்’ (Power) பற்றிய கருத்தாக்கங்களாகும். அதிகாரம் என்பது அறிவு என்ற அமைப்பின் செயல்பாடுகளால் வருவது. அது சமூக அடிப்படையில் முறைமைப்படுத்தப்படும் போது சட்டமாகவும், சட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனங்களாகவும் மாறிவிடுகிறது. அது ஒற்றைப் பொருள் அல்ல. பன்முகப்பட்ட பல பகுதிகளாக இயங்குகிறது. என்கிறார் பூக்கோ. (கிருஷ்ணராஜா,சோ. (1999), “பின் நவீனம்- ஓர் அறிமுகம்” பக்கங்கள் - 81)
‘மனித வாழ்வில் வந்து படிந்துள்ள எல்லாவிதமான நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும், தங்கள் விருப்பங்களை நிலைநாட்டிக் கொண்டவர்களுக்கும், நசுக்கப்பட்டுத் தங்கள் ஆசைகளை அடைவதற்கான மாற்று வழிமுறைகளைத் தேடியலைகின்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தின் விளைவாக உருவானவைகளே என்கிறார் நீட்சே. இச்சிந்தனையைத் தொடர்ந்து பூக்கோவும் உடல் பலத்தால் ஒரு மனிதனை அடக்குமுறைக்குள்ளாக்குவது போல், உற்பத்தி செய்யப்பட்ட அறிவின் பலத்தாலும் அதேபோன்று அடக்குமுறையை நிகழ்த்திக் காட்ட முடியும். என்கிறார். இன்றைய பின் நவீனத்துவ காலகட்டத்தில், இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அறிவு பலத்தினால் நிகழ்த்துகின்ற அடக்குமுறைதான் உலக அரங்கில் கொடி கட்டிப் பறக்கிறது. இத்தகைய அதிகாரத்தின் நுண் அரசியலைக் கட்டுடைத்துப் புரிந்து கொள்வதுதான், இன்றைய மனிதர்களின் அடிப்படைத் தேவை என்கிறார் பூக்கோ.
அதிகாரத்தை விளக்குவதற்குச் சொல்லாடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் பூக்கோ. இங்கேதான் மொழியும் இலக்கியமும் முதன்மை பெறுகின்றன. அதிகாரம் தனக்கேற்பக் கட்டமைக்கும் சொல்லாடல் மூலம் ஒவ்வொருவரையும் நீ ஆசிரியர், நீ நீதிபதி, நீ மாவட்ட ஆட்சியாளர் எனக் கட்டமைக்கிறது. ஒரு தனிமனிதர் எத்தகையவர் என்பதைக் கூட அதிகாரம் தான் புனைந்து காட்டுகிறது.
1970 பிரெஞ்சு கல்லூரியில் ஆற்றிய உரையில், பகுத்தறிவிற்கும் அதிகாரத்திற்குமான நெருக்கத்தை வலியுறுத்திப் பேசினார் பூக்கோ. உண்மைக்கான வைராக்கியத்தை நிறுவனங்கள் ஆதரவு கொடுக்கின்றன என்றும், அதேபோல் தான் சமூகத்தில் அறிவும் தொழிற்படுகின்றன என்றும் மொழி மீதான சொல்லாடல் நூலில் வலியுறுத்துகிறார் பூக்கோ. இதையே மேலும் வளர்த்துக் கொண்டே சொல்லாடலின் வம்சாவளியை ஆய்வு செய்தோமானால் அதிகாரத்தின் வடிவங்களாகச் சொல்லாடலைப் புரிந்து கொள்ளமுடியும். சொல்லாடலில் வாதத்தை அழுத்திப் பேசும் அதிகாரம், மறுதலிக்கும் அதிகாரமல்ல. சொல்லாடலுக்கான பொருள் கோள்களை நியமிக்கும் அதிகாரமாகும். பகுத்தறிவு ஒடுக்கிய அறிதல் முறைகளை ஆய்வு செய்த பூக்கோவின் கண்டுபிடிப்பு கடைசியில் செயல்பாடுகளை உருவாக்கும், நியமிக்கும் அறிவின் இயக்கத்தையே விளக்கிவிட்டார். அதிகாரம் என்பது ஒதுக்கப்படவேண்டிய, புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றாக இனிமேலும் பார்க்க முடியாது. ஆனால் நேரான உருவாக்கமுடையது. அதிகாரம். 1970களில் சிறைகள் மற்றும் பாலியல் குறித்த பூக்கோவின் நூல்கள் இதைத் தாம் சாதித்தன.
இப்போது அதிகாரம் என்பது தீயது அல்ல நல்லது என்று வரையறை செய்யப்பட்டாயிற்று. உடனே அறிவையும் செயலையும் சேர்த்தாயிற்று. கொள்கையும் செயல்பாடும் நெருங்கி வரச் செய்தாயிற்று. சொல்லாடலில் வெளிப்படும் அறிவு ஏற்கனவே வரலாற்றிலும் இருக்கிறது. லெவி ஸ்ட்ராஸ்ஸினுடைய உறவின்முறை ஆய்வுக்கு சமூகப் பகுப்பாய்விற்கு, மொழியின் உள் கட்ட மைப்பு குறித்த கண்டுபிடிப்பு அறிவை மாதிரியாகக் கொள்ளவில்லை. அப்பாவி மொழி எப்படி மாதிரியாகும் என்ற பூக்கோ இந்த இடத்தில் வேறுபடுகிறார். சொல்லாடலாகத் திரண்டிருக்கும் மொழி எப்போதுமே ஒழுக்கத்தின் ஒழுங்குபடுத்துதலின் வடிவமாகச் செயல்படுமே ஒழிய வேறில்லை. மனித குழுக்களை ஒழுங்கமைக்கும் ஒழுக்கமே சொல்லாடைத் தகவமைக்கிறது உண்மைக்கும் அதிகாரத்துக்குமான ஒட்டும் உறவும் அதேபோல் கொள்கைக்கும் செய்கைக்குமான நெருக்கத்தைக் குறித்து மோசமான ஆனால் நுட்பமான வரையறைகளை கோட்பாடுகளை வைக்கத்தெரிந்த பூக்கோ, அமைப்பியலையும் தாண்டிச் சென்று மேற்கத்திய மார்க்சியத்துடன் நேருக்கு நேரான தாக்குதலைத் தொடுக்க முடிந்தது.
உசாவியவைகள்
1. கிருஷ்ணராஜா,சோ. (1999), “பின் நவீனம்; ஓர் அறிமுகம்”; தென்கிழக்குப் பல்கலைக் கழக மெய்யியல் துறை, ஒலுவில், பக்கங்கள்- (78-97)
2. Dillon, M. 2008, “Foucault on Politics”, “Security and War”, Palgrave Macmillan
3. Elden, Stuart, July 2011, "Power, Nietzsche and the Greeks: Foucault's Leçons sur la volonté de savoir" , Berfrois.
4. Deleuze, Gilles . 1988, “Foucault “ Minneapolis: University of Minnesota Press , Mills, Sara, (2003), “Michel Foucault” , London: Routledge.
5. http://www.sparknotes.com/philosophy/madnessandciv/section9/page/3
6. https://en.wikipedia.org/wiki/Madness_and_Civilization
7. http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3429
8. http://keetru.com/index.php?option=com_content&view=article&id=18210:2012-01-27- 07-43-18&catid=1419:2011&Itemid=668
9. https://en.wikipedia.org/wiki/Michel_Foucault
10. https://www.britannica.com/biography/Michel-Foucault
11. http://www.iep.utm.edu/fouc-pol
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.