பாரதி : பண்பாட்டு அவலங்களுக்கு எதிரான போர்க்குரல்
முனைவர் வ. சிவகுமார்
விரிவுரையாளர் - தமிழ்,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர்-613005
முன்னுரை
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை மரபுகள், புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றைக் குறிக்கும்.
இன்று நாம் பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும் துறைகளை நம் முன்னோர் பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால் குறித்துள்ளனர். கலித்தொகையில்
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது (நெய்தற்கலி 133) என்றும்,
வள்ளுவத்தில்;
"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்" (குறள். 996)
என்று கூறப்பட்டுள்ளது. பண்பாடு உடையவரைச் சான்றோரென்றும், ஒழுக்கமுடையோரென்றும், ஒளியோரென்றும் மாசற்ற காட்சியுடையோரென்றும் அழைத்தனர். உழவுத் தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மக்களையும் மக்களின் மனத்தையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான் பண்பாடு என்னும் பொருளில் பழந்தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழரின் தொன்மையான பண்பாட்டை செவ்வியல் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மட்டுமின்றி நவீன இலக்கியங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். தமிழர் பண்பாடு மட்டுமின்றி இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் இருக்கின்ற முரண்பாடுகளையும் சமூகச் சிக்கல்களையும் பற்றி பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற காலத்தில், அவற்றைக் கடுமையாக எதிர்த்துத் தமது முற்போக்குச் சிந்தையோடு புதியதொரு சுயமரியாதைப் பண்பாட்டை நிலைநிறுத்த முதன்முதலில் குரல் கொடுத்தவர் மகாகவி பாரதியார்.
அடிமைப்பட்ட இந்தியாவில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் வளர்ந்திராத நாளில், இந்து சனாதன கொள்கையோடு பற்றுக்கொண்ட குடும்பத்தில் பிறந்த ஒருவர் சீர்திருத்தவாதியாகவும், போராளியாகவும் மறுமலர்ச்சிக் கவிஞனாகவும் திகழ்வது அவரின் மேம்பட்ட ஞானத்தைக் காட்டுகிறது. தமிழர் பண்பாட்டில் புரையோடிப் போயிருக்கிற பிற்போக்குத்தனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத பாரதி, அதனைக் கடுமையாக எதிர்த்தார். அவ்வெதிர்ப்பைத் தமது படைப்புகளின் மூலமும் வெளிப்படுத்தினார். அத்தகைய கருத்தாக்கங்கள் சிலவற்றை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி சமத்துவத்திற்கான குரல்
தமிழர் பண்பாட்டில் பழங்காலந்தொட்டு கல்வியில் பேதம் நிலவி வருகிறது. கல்வி என்பது எல்லாருக்குமானதாக இல்லை. உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பெறுவதாக இருந்தது, வர்ணாசிரம வேறுபாட்டிற்குத் தக்கபடி இந்தக் கல்விமுறையும் இரண்டாக வகுக்கப்பட்டது. ஒன்று ஏட்டுக் கல்வி, மற்றொன்று தொழிற்கல்வி. இதனையே தொல்காப்பியம்,
“வாயினும் கையினும் வகுத்த பக்கம்” (தொல். அகத். 44)
என்கிறது. சங்க இலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் கல்வி குறித்தப் பதிவுகள் நிறையக் காணப்பட்டாலும் அனைவருக்குமான கல்வி கிடைத்ததா? என வினவினால் சமூகக் கட்டமைப்பை ஏற்றத்தாழ்வைச் சுட்டிக் காட்டி மறுக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இச்சூழலில் பாரதி இனம், மொழி, சாதி என்ற எல்லா வேறுபாட்டையும் கடந்து அனைவருக்கும் கல்வி வழங்கி நாட்டை உயர்த்த வேண்டும் என்கிறார். எத்தகையச் சூழலிலும் கல்வியை எல்லாரும் பெற்றேத் தீரவேண்டும் எனும் கடப்பாட்டில்,
“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றுப் பல கல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்” (முரசு-பாடல் எண்-30)
ஆகையால் நாட்டுமக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.
“அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்-அன்ன
யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்” (சரஸ்வதி தேவியின் புகழ், பாடல் எண் -9)
எனும் எழுச்சி மிகுந்தச் சிந்தனையோடு கற்பித்தல் தலையாய அறம் என வற்புறுத்துகின்றார்.
தாய்மொழிவழிக் கல்வி அறவே கீழ்மைப்படுத்தப்படும் இன்றைய சூழலை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அசாத்திய கோபத்தோடு வெளிப்படுத்துகிறார்.
“வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ . . .
நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ . . .” (போகின்ற பரதத்தை சபித்தல், பாடல் எண் -3)
என்ற வெறுத்துரைக்கும் அவரின் மொழி. தற்போது நமது கடமையை நினைவுபடுத்துகிறது.
பள்ளியின் பெருக்கத்தால் பலருக்கும் கற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த பாரதி,
“வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறு இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்” (சரஸ்வதி தேவியின் புகழ், பாடல் எண் -6)
என்று தமது தீர்க்கமான கனவை வெளிப்படுத்துகிறார்.
கல்விசார் அறிவுலகைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களை ஒடுக்கும் முறையை கையாண்டனர். பொருளாதாரத்திலும் சாதியாலும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் நிலை உணர்ந்த பாரதியார்,
“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி
சாத்திரம் சொல்லிடுமாயின்-அது
சாத்திரமன்று சதியென்றும் கண்டோம்” (உயிர் பெற்றத் தமிழர் பாட்டு, ஸ்மிருதிகள், பாடல் எண்-3)
என வஞ்சிக்கப்பட்ட மக்களின் மனத்துயரை உணர்ந்து பாடுகிறார்.
பண்பாட்டு அவலங்களுக்கு எதிரான போர்க்குரல்
ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் முழக்கங்கள் தமிழ் மண்ணில் பல நூற்றாண்டுகளாக ஒலித்துக் கொண்டிருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற பலரும் இணக்கம் காட்டவில்லை. காரணம் மக்கள் எல்லாம் சாதிக் கொடுமை, மதவெறி, பெண்ணடிமை போன்ற காரணங்களால் ஏற்றத்தாழ்வுடன் வேறுபட்டு நின்றனர். இதனைக் கடுமையாக எதிர்த்தவர் பாரதி.
“எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியமக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்” (பாரத சமுதாயம், பாடல் எண்-4)
என்ற வரிகளின் மூலம் பிளவுப்பட்டு நிற்கும் மக்களை ஒற்றைத்தளத்தில் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு வித்திடுகிறார்.
சாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தமக்குக் கீழ் தாம் அடிமைப்படுத்துவதற்கு ஓர் இனம் இருக்கின்றது என மகிழ்கின்றனர். இந்தப் பிற்போக்கு அவல நிலையை உணர்ந்த பாரதியார்,
“ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே” (விடுதலை, பாடல் எண்-2)
என்று பாடுகிறார்.
ஆண்டான்-அடிமை, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாத பண்பாட்டை நிறுவ முயல்கிறார்.
உணவு, உடை, உறைவிடம் என்பன மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும். சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தனிமனிதனுக்கு எதிரான உழைப்புச் சுரண்டலால் அவன் வறுமையில் உழன்று பட்டினியால் மடிவதைக் கண்டு மனம் வருந்திய பாரதி,
“மனிதரு ணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ-நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ” (பாரத சமுதாயம், பாடல் எண்-1)
என்றும்,
“இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” (பாரத சமுதாயம், பாடல் எண்-2)
எனத் தனிமனிதனின் இயலாமையையும் வறுமையையும் சகிக்கமுடியாத பாரதி பட்டினிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.
காலந்தோறும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களின் நிலையையும் பெண்களுக்குரிய கல்வியுரிமையும் உலகியல் தொடர்பும் இல்லாத சென்ற நூற்றாண்டில் பெண் அடிமைக்கு எதிரான கலகக் குரல் பாரதியிடமிருந்தே வெளிப்பட்டது.
“பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின்னிந்த உலகினில் வாழ்க்கை இல்லை" (பெண்ணுக்கு விடுதலை, பாடல் வரி 7, 8)
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதரறிவைக் கெடுத்தனர்" (முரசு, பாடல் எண் -9)
"கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்தி
காட்சிக் கெடுத்திடலாமோ
பெண்களறிவை வளர்த்தால்-வையகம்
பேதமை யற்றடுங் காணீர்" (முரசு, பாடல் எண் -10)
"கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்" (பெண்கள் விடுதலைக்கும்மி, பாடல் எண்- 5)
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்"(புதுமைப்பெண், பாடல் எண் - 4)
"பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா” (பெண்மை, பாடல்வரி -1)
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளைக் கூடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வக்கிரங்கள் கவலை தரத்தக்க அளவில் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், சென்ற நூற்றாண்டிலேயே பெண்களுக்கு ஆதரவாக ஒலித்த அவரது குரலை சமூகப் பண்பாட்டுத் தளத்தில் வைத்துக் கேட்கும் போது தமிழ்ச் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பது புலப்படும்.
சாதியத்திற்கு எதிரான போர்க்குரல்
சாதியத்திற்கு எதிரான போர்க்குரலை அவர் முதலில் குழந்தைகளுக்கே சொல்லிக் கொடுத்தார். சாதிப் புரையோடிய பெரியவர்களிடம் சாதி இல்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர் கருத்து.
“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி-அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்” (பாப்பா பாட்டு, பாடல் எண்-15)
என்றும்,
“எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் ஏற்றம் கொள்ளலாமா?
சாதிப் பிரிவினைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைக்கும் இவ்வையகம்” (முரசு, பாடல் எண் -16)
என்ற கவிதைகளின் மூலம் அழுத்தமான தமது பிரகடனத்தை அறிவித்து சாதிய ஏற்றத்தாழ்வு பார்ப்பது பாவம் என்றும், அறிவு சார்ந்த கல்வியே மனிதர்களைச் சமத்துவப்படுத்தும் என்று அறிவுறுத்துகின்றார்.
சங்க காலந்தொட்டு இலக்கியங்களில் களவு-கற்பு என்று காதலைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் தற்காலத்தில் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாள் முழுக்கக் காதலைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் தங்கள் பகுதியில் காதல் என்றால் ஆணவக்கொலை செய்யவும் துணிகிறது. இதனை எதிர்த்து,
“நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர் தம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற் றோரத்தே
ஊரினிலே காத லென்றால் உறுமுகின்றார்
பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைசெய்து இடரெய்திக் கெடுகின்றாரே” (குயில் பாட்டு, ஆதலினால் காதல் செய்வீர், பாடல் எண்-4)
என்று சென்ற நூற்றாண்டிலேயே ஒலித்த பாரதியின் எதிர்ப்புக்குரல் இங்குக் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது,
பாரதியின் அரசியல் குரல் தேச விடுதலைக்கானது. சமூகக் குரல் பெண்ணடிமை - தீண்டாமை - தனியுடைமை எனும் பண்பாட்டு அவலங்களுக்கு எதிரானது. குழந்தைகள் கொண்டாடும் துள்ளாட்டம் எல்லா அறங்களையும் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் அவர் கவிதை எதிர்கால செம்மையான பண்பாட்டை நிறுவ நினைக்கும் அவரின் தொலைநோக்குச் சிந்தனை அவர் கவிதைகளின் மூலம் வெளிப்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் பாரதியின் படைப்புகளை உற்று நோக்குகையில் அவர் செய்தது ஒரு யுகப்புரட்சி.
பார்வை நூல்கள்
1. கலித்தொகை, நச்சினார்க்கினியர் (உரை ஆசிரியர்), பாகனேரி த.வை.இ.தமிழ்ச் சங்க வெளியீடு, 1955.
2. திருக்குறள், பரிமேலழகர் (உரை ஆசிரியர்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
3. தொல்காப்பியம், இளம்பூரணர் (உரை ஆசிரியர்), தமிழ் இணையக் கல்விக் கழகம்-நூலகம், தமிழ்நாடு.
4. பாரதியார் கவிதைகள், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2003.
5. கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.