நாட்டுப்புறப்பாடல்களில் ‘ஒப்பாரி’யின் முக்கியத்துவம்
முனைவர் செ. பொ. மாதவன்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
அ. வ. அ. கல்லூரி (தன்), மன்னன்பந்தல், மயிலாடுதுறை - 609 305.
முன்னுரை
கீழ்க்காணும் இக்கட்டுரையில் நாட்டுப்புற மக்களின் அன்றாட நிகழ்வின் பிறப்பிடமான மரபு பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றோடு இரண்டறக் கலந்து விட்ட நாட்டுப்புறப் பாடல்களில் ஒப்பாரிப் பாடலின் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் காண்போம்.
நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்களின் பதிவுகளாகத் தொல்காப்பியம் ‘பண்ணத்தி’ என்கிறது (1) நாட்டுப்புறப்பாடல்களாவது தாலாட்டுத் தொடங்கி ஒப்பாரி வரை பேசப்படுகிறது. நாட்டுப்புறப் பாடல்களை ஆரம்ப காலத்தில் அறிவில் உயர்ந்த படித்த மக்கள் அவ்வளவாக ஆர்வம் கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். ஆனால் உலகத்தின் கருத்துக்களை நோக்கும் புலவர்கள் தங்களின் ஏட்டு இலக்கியத்தின் வாயிலாக நாட்டுப்புறப் பாடல்களை இணைத்துச் செழுமைப்படுத்தினர். அந்த வகையில் சங்க இலக்கியத்திலும், காப்பியங்களிலும், புராணங்களிலும் இத்தன்மையைப் பயன்படுத்தினர்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் மிக முக்கியமான இடங்களான கானல்வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதையில் ஊசல்வரி, கந்துகவரி, வள்ளைப்பாட்டு முதலிய பாடல்களும் நாட்டுப்புற நிலையிலே உள்ளனவாகக் கருத இடமுண்டு. மேலும் ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் நாட்டுப்புறப் பாடலின் சாயலைப் பெற்றுள்ளது.
ஒப்பாரி பொருள் விளக்கம்
ஒப்பாரி என்பதனை ஒப்பு + ஆரி = ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம். ஒப்பு என்றால் இழந்தப் பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் அழுகைப் பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. ஆரிப்பது என்பதை அவழச் சுவையுடன் ஆரவாரம் செய்வது என்றும் கூறலாம். எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே ‘ஒப்பாரி’ என்கிறார் மு. அண்ணாமலை. (2)
ஒப்பாரி
ஒருவருடைய நெருங்கிய உறவினர்கள் இறக்கும் போது இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்களை இழந்ததால் தான் அடையப்போகும் துன்பத்தையும் பாடலாகப் பாடுவர். இப்பாடல்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. இவற்றை முறையாக ஒப்பாரிப்பாட்டு, சாவுப்பாட்டு, ஓரப்பாட்டு என்றும் கூறி பாடி வருகின்றனர். கணவன், பிள்ளைகள், தாய், தந்தை, உடன்பிறந்தோர், மாமியார், மாமனார், கொழுந்தன், நாத்தனார், சுற்றத்தார் ஆகியோர் இறந்துவிடும் போது இத்தகையப் பாடல்களைப் பாடுகின்றனர்.
ஒப்பாரியைப் பாடப்படும் சூழல்
ஒப்பாரிப் பாடல்களைப் பாடப்படும் சூழல் அடிப்படையில் இறந்தவுடன் பாடப்படும் பாடல், இறந்த எட்டாம் நாள், பதினாறாம் நாள், இருபத்திரண்டாம் நாள், சடங்கில் பாடப்படும் பாடல், ஆண்டுக்கு ஒருமுறை இறந்த நாள் வரும் போதும், இறந்து பல ஆண்டுகள் ஆகியும் பலருடைய இறப்பில் பங்கேற்கும் போதும் எனப்பிரித்துக் கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான உறவை இழந்து உள்ளம் தவிக்கிற போது நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து வெடித்துக் கிளம்பும் ஒரு பாடலே ஒப்பாரியாகும். இறப்பு நடந்த வீட்டின் வாசலில் கொட்டுமேளம், தப்பு போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு வாசிக்கப் பெறும். இசைக்கருவிகளின் வாசிப்பிற்கு ஏற்ப ஆடலும், பாடலும் நிகழ்த்துவதுண்டு. இறப்பிற்கு வந்த பெண்கள் அங்குக் கூடி ஒப்பாரியில் மூழ்கிவிடுவார்கள். பின்பு இறந்தவரைத் தூக்கிச் சென்று அடக்கம் செய்துவிட்டு அனைவரும் ‘விளக்கு முகந்தில் விழித்தல்’ என்ற செயல் நடைபெறும். இது போன்ற செயல்களின் மூலமாகவே ஒப்பாரிப் பாடல் ‘சூழல்’ அடிப்படையில் பாடப்படுகின்றது.
கனவு பொய்த்துப்போனது
பெண்கள் எப்பொழுதுமே கணவனுடன் சேர்ந்தே வாழ விரும்புவர். கணவன் இறந்து விட்டால் கனவுகளில் மிதக்க வேண்டி ய அவள் கண்ணீரில் மிதக்கிறாள். கணவனை இழந்த பெண்கள் பலர் படும் துயரம் வார்த்தைகளினால் விவரிக்க முடியாதது. கணவனை ஒரு பெண் இழந்துவிட்டால் அவளுக்குப் பூவும், பொட்டும் சொந்தம் இல்லை. அணிகலன்களால் தன்னை அழகு செய்துக் கொள்ள முடியாது. நிகழ்காலத்தில் வாழ்க்கை சரிந்து போய் வருங்காலத்தில் எண்ணற்ற துன்பங்களை எதிர்நோக்க வேண்டியவளாகின்றாள். கணவனை இழந்த பெண்ணொருத்தி கணவன் இறந்த பின்பு, தாலியைக் கழற்ற மனம் ஒப்பாது ஒப்பாரிப் பாட்டைப் பாடுகின்றார்.
“ஆத்தாங்கர மண்ணெடுத்து எனக்கு
அரும்புவச்சி தாலிபண்ணி நான்
அவசரமா அறுப்பேனு எனக்கு ஒரு
ஆசாரியும் சொல்லலியே.
சுருவாட்டு மண்ணெடுத்து எனக்கு
சுருளுவச்சி தாலிபண்ணி நான்
சுருகனமா அறுப்பேனு எனக்கு ஒரு
சோசியரும் சொல்லலியே
மாங்கா கொலுசு போட்டு நான்
மண்ணிலேய நடந்தேன்னா என்னோட
மண்ணத் தொடப்பாரில்ல என்னோட
மனக்கவலய கேப்பாரில்ல” (3)
என்று கணவனை நினைத்து அவர் மீது பாடப்படும் பாடல்களே மிகுதியாகும்.
ஒப்பாரிக்கு முக்கியத்துவம் பெண்களே
ஒப்பாரிப் பாடல்கள் அனைத்தும் பெண்களால் குறிப்பாக ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பாடப்படுகின்றது. பெண்ணானவள் ஒரு குழந்தைக்கு முதலில் தாய் என்ற நிலையில் இருந்தும், பெற்றோருக்கு மகள் என்ற நிலையில் இருந்தும், உடன் பிறந்தவனுக்குக் கூடப் பிறந்தவள் என்ற நிலையில் இருந்தும், ஒருவருக்கு மனைவி என்ற நிலையில் இருந்தும், பேரன், பேத்திக்குப் பாட்டி என்ற நிலையில் இருந்தும் பாடல்களைப் பாடுகின்றாள் என்று செங்கோ மா. வரதராசன் குறிப்பிடுவதை உணர முடிகின்றது. (4)
தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் உள்ள ஒற்றுமைகள்
நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு மக்களின் வளர்ச்சி நிலையையும், ஒப்பாரிப் பாடல் மக்களின் முடிவு நிலையையும் காட்டுவதாக அமைந்துள்ளது. காரணம், நாட்டுப்புறப் பாடல்களில் முதலில் தாய் பாடுவது தாலாட்டுப் பாடலாகும். அதுவே இறப்பு நிகழ்ந்தப் பின்பு தாயால் பாடப்படுவதும் ஒப்பாரியே ஆகும். தாலாட்டும், ஒப்பாரியும் பெண்களின் தனிச்சொத்து என்றே கூறலாம். எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று வரையறைச் செய்வது தாலாட்டு. இப்படியெல்லாம் வாழ்ந்தாயே என ஏங்கச் செய்வது ஒப்பாரி. வாழ்வின் தொடக்கத்தையும் முடிவையும் நம்மால் உணரமுடிகிறது.
வாழ்வுப் புத்தகத்துக்கு ‘முன்னுரை’ தாலாட்டு என்றால் முடிவுரை ஒப்பாரியாகும். கண் மூடப்பாடுவது ‘தாலாட்டு’ கண் மூடியப்பிறகும் பாடுவது ‘ஒப்பாரி’ தாலாட்டில் மகிழ்வும், ஒப்பாரியில் நெகிழ்வும் இனம் பிரிக்கின்றன என்று தாலாட்டையும், ஒப்பாரியையும் பற்றி சா. வளவன் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத்தக்கதாகும். (5)
கையறு நிலையும் ஒப்பாரியே
நாட்டுப்புற மக்கள் அழுகைப் பாட்டை ‘ஒப்பாரி’ என அழைக்கின்றனர். கற்றறிந்த சான்றோர்கள் அழுகைப் பாட்டை முறைப்படுத்திச் செம்மை செய்து “கையறு நிலைப் பாடல்கள்” எனவும் இரங்கற்பா எனவும் பெயர் சூட்டியுள்ளனர். இதனைப் புறநானூற்றில் கபிலர், பாரி இறந்த போது பாரியின் இரு மகளிரையும் அழைத்துக் கொண்டு பரம்பு நாட்டைவிட்டு வெளியேறியபோது பாடிய கையறுநிலைப் பாடல்களால் அறியலாம். இப்பாடல்களில் துன்பச் சுவடுகள் ஆழப் பதிந்திருப்பதை அறிய முடிகிறது. ஒப்பாரிப் பாடல்களைப் பாடக் கேட்கும் போது கேட்போரும் அவரோடு சேர்ந்து அழவேண்டும் போன்று தோன்றும். ஒப்பாரிப் பாட்டில் தானாகவே பொங்கி வழியும் உணர்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடிவரும் பாங்கினை காணமுடியும். கையறுநிலைப் பாடல்கள் அணை கட்டப்பெற்ற பின் கால்வாயில் அளவாக ஓடிவரும் நீர்ப்பெருக்காகும்.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒப்பாரியின் நிலை
ஒப்பாரிப்பாட்டு காட்டாற்று பெருவெள்ளம் போலும், சொல்லிய சொல்லுக்கும் எதுகை மோனைக்கும் காத்திருக்காமல் தங்கு தடையில்லாமல் தானே ஓடிவரும் பெரும்புனல் புது வெள்ளமாகும். இருவகைப் பாடல்களும் தனிமனித உள்ளத்தில் குமுறியெழும் வேதனையின் வெளிப்பாடே என்றாலும் ஒப்பாரியில் காணப்படும் சோகப் பெருவெள்ளம் கையறு நிலைப்பாடல்களில் காணப்படுவதில்லை எனச் சுட்டுகின்றார் மா .கோதண்டராமன். (6) நாட்டுப்புறப் பாடல்கள் எப்பொழுதும் மாற்றம் அடைந்து கொண்டே இருப்பனவாகும்.
ஒப்பாரிப்பாட்டைப் பாட முன்வராமை
நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் காட்டினாலும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடப் பெண்கள் மிகவும் தயங்குகின்றனர். ஏனெனில், ஒப்பாரிப் பாடல் இறப்புச் சடங்கின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதே ஆகும். இறப்பை ஒட்டிய துயரச் சூழலில் பாடப்படும் இப்பாடல்களைச் சாதாரண நேரங்களில் பாடச் சொல்கிற போது பெண்கள் தயக்கத்திற்கும் மறுப்பிற்கும் இல்லாத பிறசமயங்களில் பாடக்கூடாது என்று சிலரும், பாடினால் உண்மையிலேயே அவ்வாறு நேர்ந்து விடக்கூடும் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பதிப்புச் சிக்கல்கள்
நாட்டுப்புறப் பாடல்களை அவற்றைச் சேகரித்த முறையிலேயே பதிப்பிக்க வேண்டும் என்பது நாட்டுப்புறவியல் ஆய்வில் கையாளப்படுகின்ற ஒரு நெறிமுறையாகும். ஒப்பாரிப் பாடல்களை அவை பாடப்படும் இயற்கைச் சூழ்நிலையில் பதிவு செய்வதோ, எழுதிக் கொள்வதோ எளிதான செயலன்று. துயரத்தால் பாதிக்கப்பட்டவரும் உறவினர்களும் கூக்குரலிட்டு எழுப்பும் அழுகையாலும், மாரடிப்பாலும், தப்பாடியாலும் பாடலின் சொற்களைத் தெளிவாகக் கேட்டறிய முடிவதில்லை, ஒப்பாரி போன்ற பாடல்களை யாவரும் அமைதியான முறையில் பாட முன் வருவதில்லை. மேலும் பாடகர் மனத்தைப் பாதிக்கின்ற காரணங்களினாலே ஒப்பாரியைப் பாட முன்வர மறுக்கின்றனர். பலர் பாட முன்வந்து தயக்கத்துடனும் கூச்சத்துடனும் குழப்பத்துடனும் பாடல் பாடாமல் சென்று விடுவதுண்டு. மேலும் சிலர் தங்கள் சொந்த வேலைகளை விட்டுவிட்டு இதனால் தனக்கு என்ன பயன் என்று எண்ணி இருந்து விடுகின்றனர். நாட்டுப்புறப் பாடல்களை அவற்றைக் கூறியவாறு பதிப்பிக்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆய்வியல் நோக்கில் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிப்பிக்கின்ற காரணத்தினால் உள்ளதை உள்ளவாறேப் பதிப்பிக்க வேண்டியது இன்றியமையாமையாதது ஆகிறது.
முடிவுரை
இதுவரைக் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து நாட்டுப்புற பாடல்களில் ஒப்பாரிப் பாடல்கள் பாடப்படும் சூழல், ஒப்பாரியின் பொருள் விளக்கம், கனவு பொய்த்துப் போனது (பாடல்) ஒப்பாரிக்கு முக்கியத்துவம் பெண்களே, தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் உள்ள ஒற்றுமை, கையறு நிலையும் ஒப்பாரியே, ஒப்பாரிப் பாட முன்வராமை பதிப்புச் சிக்கல்கள் ஆகியன குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்புகள்
1. தொல்காப்பியம், செய்யுளியல், நூ.எ.180
2. மு. அண்ணாமலை, நமது பண்பாட்டில் நாட்டுப்புற இலக்கியம், ப.123.
3. செ. பொ. மாதவன் கட்டுரையாளர் தன் தாயிடம் சேகரித்தப் பாடல்
4. சா. வளவன், நாட்டுப்புறவியல் கட்டுரைகள், ப.116
5. மேலது, நூ. ப.116
6. மா. கோதண்டராமன், வட ஆர்க்காடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள், ப.206.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.