உயிர் எழுத்து இதழ் சிறுகதைகளில் சொலவடை
கு. பத்மபிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 600 005
முன்னுரை
மொழியின் கர்த்தாக்கள் ஏதுமறியா உழைப்பாளி மக்களே” என்கிறார் ருஷ்ய இலக்கிய மாமேதை மாக்ஸிம் கார்க்கி. தெருக்களிலும், தோட்டங்களிலும், களத்து மேடுகளிலும் புரண்டு உருண்டு வடிவம் பெற்றுப் புழங்குகிற வார்த்தைகள், பாமர மக்களின் உதடுகள் உச்சரித்து உச்சரித்து உயிர் பெறும். மொழிக்கு நிரந்தர இளமைப் பொலிவும், புதிய வளமும், வளர்ச்சியும் தந்து கொண்டிருப்பது உழைக்கும் மனிதர்களின் பேச்சுமொழிதான். அப்பேச்சுமொழியின் ஊடாக வெளிப்படுவதுதான் அனுபத்தின் வார்த்தைகளான பழமொழியும் சொலவடையும். அப்படிப்பட்ட சொலவடைகள் இன்றைய கால நவீன இலக்கியமான சிறுகதையிலும் பயின்று வந்துள்ளன. அவ்வகையில் உயிர் எழுத்து இதழ் சிற்றிதழில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் பதிவாகி உள்ள சொலவடைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உயிர் எழுத்து சிற்றிதழ்
உயிர் எழுத்து என்னும் சிற்றிதழ் திரு. சுதீர் செந்தில் அவர்களால் ஜூலை 2007 முதல் இன்று வரை நடத்தப்பட்டு வருகின்றது. அவ்விதழில் சிறுகதை, கவிதை, மதிப்புரைகள், கட்டுரைகள், நேர்காணல் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன. இனி இவ்விதழில் உள்ள சிறுகதையில் இடம் பெற்றுள்ள சொலவடைகளைப் பற்றிய பதிவுகளை ஆராயலாம். ஜூலை 2007 முதல் ஜூலை 2010 வரையிலான உயிர் எழுத்து இதழ் சிறுகதைகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சொலவடைப் பற்றி அறிஞர்கள் கருத்து
கரிசல் காட்டு எழுத்தாளரான கி. ராஜநாராயணன் அவர்கள் தாம் தொகுத்த வழக்குச் சொல்லகராதியில் சொலவடை என்பதற்கு
சொலவடை - பழமொழி
சொலவம் 1 - என்பதும் சொலவடையையே குறிக்கும்
சொலவம் 2 - சொலவடை.
படித்தவர்கள் உண்டு பண்ணியது பழமொழி.
பாமரத்தான் உண்டு பண்ணியது சொலவடை (1) என்று விளக்கம் அளித்துள்ளார்.
சொலவடையும் சொன்னவர்களும் என்ற நூலின் முன்னுரையில் புழுதிக்குள் இத்தனை கவிமணமா…? என்ற தலைப்பில் சொலவடை என்பதற்கு மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
பேச்சு மொழிகளின் ஊடாகச் சில சமயம் கவிதை தெறித்து வந்து விழும். அதுதான் சொலவடை. தெம்மாங்குப் பாடல்களும் சொலவடைகளும் தோன்றும் இடம் ஒன்று. தோன்றும் விதம் வேறு வேறு. தோன்றும் இடம், மக்களின் மனப்பேச்சு. தெம்மாங்குப் பாடல், தாளம் தட்டி, யோசித்துப் பார்த்து, ஆற அமர அவதரிப்பதாகும். யோசிக்காத நேரத்தில் சட்டெனத் தெறிப்பது சொலவடையாகும். தெம்மாங்குப் பாடல்களில் ஒருவித மனக் காத்திருப்புடன், கட்டுமானச் செயல்பாட்டில், தாளக்கட்டுக்கேற்ப வார்த்தைகளைத் தேடித் தேர்வு செய்கிற ஒரு தயாரிப்புக்குரிய அவகாசமும் நிதானமும் தவிர்க்க முடியாதவை. சொலவடைகளின் பிறப்பில் அதற்கெல்லாம் இடம் கிடையாது. உணர்ச்சிகளின் கண்மூடித்தனமான முட்டல் மோதலான பீறிடலுக்கிடையில், முந்திக்கொண்டு தெறிப்பது சொலவடை,
சொலவடையில் பட்டழுந்திய உணர்ச்சியின் கற்றை இருக்கும், கவித்துவம் இருக்கும். காட்டுப்பூவைப் போல மண்ணின் வாசமும் வண்ணமும் ஒளியும் சொலவடை கொண்டிருக்கும்.
சொலவடை கவிதையாக இருப்பது அதன் உயிர்த்தேவை. ஏனெனில் சொலவடைக்கு ஏட்டுச் சிம்மாசனம் எட்டாத ஆகாயம். மக்களின் உதடுகளில் உலவி, ஞாபக மடியில் உயிர் வாழ்ந்தாக வேண்டிய கட்டாய அவலம். ஞாபக இடுக்குகளில் சிக்கி நிற்பதற்கு, முதல் வாக்கியத்தைத் தொடர்ந்து தானாகவே பின் தொடர்கிற மறு வாக்கியம் என்ற தன்மை அவசியம். ‘பயந்தவன் பார்வைக்கு இருட்டெல்லாம் பேய்’ என்றாலும் பொருள் ஒன்றுதான். ஆனால் நினைவில் நிற்கிற கவித்துவ ஒழுங்கில்லை. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்கிற கவித்துவச் சொலவடை, வாயைத் திறந்தால் தானாகவே சங்கிலிப் பின்னலாக வரும்.
சொலவடைகளில் பழக்கமுள்ளவன் இயல்பாகவே சொல்வளமிக்க மொழியாளுமை கொண்டிருப்பான். சொலவடைகளில் ஊறித் திளைத்தவன் காலடியில் வார்த்தைகள் வந்து சேவகம் பண்ணக் காத்திருக்கும். ஏட்டுக் கவிதை மாதிரி நேர்ப் பொருளில் இனம் காண முடியாதது சொலவடைகள். அவற்றுள்ளுறைந்து கிடக்கும் சமூக அனுபவங்களை அடையாளம் காண வேண்டும். வாழ்வின் இரக்கமற்ற அடிகளை வலியுடன் சொல்கிற ரண வரிகள் தான் சொலவடை. ‘உழக்குக்குள்ள கிழக்கா மேக்கா உருண்டுகிட்டு கெடக்கேன்’ (2) என்று சொலவடைப் பற்றியும் அதைப் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார்.
மேலும் சொலவடைகளும் சொன்னவர்களும் என்ற நூலின் ஆசிரியரான ச. மாடசாமி அவர்கள் சொலவடைகளுக்கான விளக்கத்தை அளிக்கும்பொழுது,
கிராமத்துப் பேச்சின் பிரிக்க முடியாத ஒரு பகுதி சொலவடை. உணர்வுகளை வெளிப்படுத்த - யோசனை சொல்ல - ஆறுதல் தர அறிவுரை வழி நெறிப்படுத்த - நியாய அநியாயம் குறித்து உரையாட - பிரச்சினையான நேரத்தில் முடிவெடுக்க சொலவடையைப் போலப் பயன்படக் கூடிய வாய்மொழி இலக்கிய வகை வேறு எதுவும் இல்லை. மேலும் வடிகால் வார்த்தைகள் சொலவடைகளில் நிரம்பிக் கிடக்கின்றன. நெஞ்செரிச்சலை உண்டாக்கும் கோபம், குமுறல், சலிப்பு போன்ற உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கச் சொலவடைகள் கைக்கொடுக்கின்றன.
‘சுத்தத் துணியும் இல்ல
நக்கத் தவிடும் இல்ல’
சொலவடையின் மொழி பழக்கப்பட்ட மொழி. ஒருவர் மாற்றி ஒருவர் பேசிப் பழக்கப்பட்ட மொழி (3) என்று கூறியுள்ளார்.
அடுத்தபடியாக, பழமொழியும் சொலவடைகளும் என்ற கட்டுரையில் கழனியூரன் அவர்கள் சொலவடை என்றால் என்ன என்றும், பழமொழிக்கும் சொலவடைகளுக்குமான வேறுபாடுகளைக் கூறியுள்ளார்.
சொலவடைகள், பழமொழிகள் என்று நாட்டுப்புறவியலில் ஓர் வகைமை இருக்கிறது. பழமொழிகள் வேறு, சொலவடைகள் வேறு.
பழமொழி |
சொலவடை |
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் |
வேலியில போகிற ஓணான சீலயில நுழைஞ்சிக்கோன்னு சொல்லுவானேன் பிறகு குத்தது குடையுதுன்னு கத்துவானேன் |
சொற்செட்டுடன் செம்மையான மொழிநடையில் காணப்படும் |
வட்டார வழக்கு மொழிநடையில் அமைந்திருக்கும் கிராமிய வாழ்பவனுபவத்தின் அடிப்படையாகக் கொண்டு பிறந்திருக்கும். |
பழமொழிகளுக்கான பொருள் அதை வாசித்தவுடன் ஓரளவிற்குப் புரிந்துவிடும் |
சொலவடைகளுக்கான பொருளை கிராமத்தில் வாழ்பவர்கள் எளிமையாக விளக்கிச் சொல்வர் |
போகிற போக்கில் அதிர்வில்லாமல் நம் வாழ்வியலுக்குத் தேவையான போதனைகளைச் சொல்லாமல் சொல்லிவிடுவதுதான் சொலவடைகள். கிராமத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த படிக்காத பெருமக்கள் இப்படிச் சொல்லிச் சென்ற சொலவடைகள், ரசிக்கதக்கதாகவும் இலக்கியத்தரம் மிக்கதாகவும் உள்ளன. நீதி இலக்கியங்கள் போன்று பழமொழிகள் போன்று கிராமத்து மக்களின், பாமரர்களின் நாவில் இன்றும் உலவும் சொலவடைகள், வாழ்வியலையும் சொல்லுகின்றன. நகைச்சுவையாக, அங்கதமாக, சிரித்துக் கொண்டே, கிராமத்து மக்கள் சொல்லிக் கொள்ளும் சில சொலவடைகள் பொருள் நயமிக்கதாகவும், சமூக விமர்சனமாகவும் இருக்கின்றன.
‘காத்துட்டுக்கு குதிரை வாங்க வேண்டும்
அத காற்றாய் பறக்கவும் வேண்டும்’
சொலவடைகள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், கதையாடல்கள் போன்றவை காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் வாய்மொழி வடிவில் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். (4)
சொலவடைக்கான வேறு பெயர்கள்
சொல்லடை, சொலவம், சொலடை என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறன.
உயிர் எழுத்து சிறுகதையில் சொலவடைகள்
பாரதி கிருணஷ்குமார் எழுதிய ‘அம்மாவும் அந்தோன் சேக்கவும்’ என்ற சிறுகதையில் கணவனின் வார்த்தையை எதிர்த்துப் பேசிய மனைவியைப் பார்த்துக் கணவன், பொண்டாட்டின்னா சொன்ன பேச்சு கேக்கணும்; சொன்ன வேலயச் செய்யணும், எதுத்து ஒரு வார்த்த பேசுன… உன்னையும் கொன்னுட்டு, உம் புள்ளயையும் கொன்னுட்டு நானும் செத்துருவேன்.
‘முட்டை போடுற கோழிக்குத்தான்
பொச்செரிச்சல் தெரியும் - பேருக்குத்தான் சேவல்’ என்று சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுட்டாரு… என்று கதை தொடர்கிறது. (5)
அடுத்தாக, பிரபாகரின் ‘குழிவெட்டி’ என்ற சிறுகதையில் குழிவெட்டிக் கூளையன் என்பவன் இறந்துவிட்டான். அவன் ஒரு அனாதை, அவன் பிணத்தை எடுக்க முடியாமல் ஊரே கிடந்து போராடுது.
ஆனாதி பொணம்ன்னு முனிசிபாலிட்டில் தூக்கச் சொன்னா அவன் ஆயிரத்தெட்டுக் கேள்வி கேப்பான். எப்புடிச் செத்தான். இங்க எப்புடி வந்தான், அது இதுன்னு நொள்ள நொண்டு சொல்ல முடியாது. என்னாப் பண்ணறதுன்னு ஊருல ஒருத்தருக்கும் ஒண்ணும் புரியாம ஊரே முச்சூடும் சவக்களையா கடந்துச்சி. உங்க முடியல, ஒறங்க முடியல. எப்புடி முடியும்.
‘பீ கெடக்கத்திங்க தின்னாலும் பொணம் கெடக்கத் திங்க முடியுமா?’ (6)
தரவு வியாபாரம் செய்யும் தங்கப்பன் ஒரு நாள் தரவுக்குச் சென்று ஏவாரத்துக்கு வாங்குன மாட்ட வூட்டுக்கு ஓட்டியார ஆள் இல்லாம அலைந்த போதுதான் கூளையனைக் கண்டார், இவனைக் கூப்பிடலாம் யோசனைத்தட்டுச்சி,
‘கோழி குருடா இருந்தா என்ன? கொழம்பு ருசியா இருந்தா செரி’ (7) ன்னு நெனச்சிகிட்டு மாட்ட ‘ஓட்டுடா’ ன்னா ஓட்றான்.
தங்கப்பன் தரவு ஏவாரம் பாத்திக்கிட்டு இருக்கறப்ப ஒரு நா புதுச்சத்திரத்து ஏவாரிக்கிட்ட இருந்து செட்டியாரு ஒருத்தருக்கு மாட்ட மாத்தியுட ரொம்ப நேரமா இழுபறியாவே இருந்திச்சி, வந்துருக்கறப் பார்ட்டிய வுடக்கூடாதுன்னு அப்புடியே வாழப்பழத்துல ஊசி நொழைக்கிறாப்புல பழமையப் பேசிப்பாத்தாரு. செட்டியாரு ஒன்னும் மசியிற வழியக்காணம். இந்த ஓரியாட்டத்துல ரண்டு பார்ட்டியையும் இழுத்து வச்சி பேசிக்கிட்டு இருக்கையில “என்ன செட்டியாரே!
‘ஆத்துல போனாலும் அடிவவுறு நனையாம போவணுமுன்னா எப்படி?’ (8)
மாடு புடிச்சிக்கிட்டா அஞ்சி பத்த பாத்தா முடியுமா?’ ன்னு கேட்க, செட்டியாருக்கு ‘சர்ன்னு கோவம் கொப்பளிச்சி உச்சி முடி டக்குன்னு சிலிர்க்க,
‘காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டங் கவுண்டன் தான்னு சொல்லிக்கிறப் பரம்பர’ (9) நீதான் ஓட்டிக்கிட்டு போவே பாக்கலாம் ன்னு சுருக்குன்னு சொல்ல, தங்கப்பனுக்கு நறுக்கு ன்னு பட ‘ஆனா மல போனா மசுரு’ (10) ன்னு வாங்கிட்டாரு…
கூளையன் தங்கப்பனோடே வீட்டிற்குச் செல்ல அவனுக்கு சாப்பாட்டு போட்டால் தங்கப்பனோட மனைவி, கொயக்கனாட்டாம் இருக்கிறான் எவ்வளவு சோறு திங்கப்போறான்னு நெனச்சிக்கிட்டு, மீதி இருந்தா அப்புடியே நாயிக்கி ஊத்திரலான்னு சோறு எடுத்துக்கிட்டு வந்துச்சி. அவன் சோறு போடப் போட போதுன்னே சொல்லுல மறுக்கா ஓர நட போயி கொஞ்ச சோறு கொண்ணாந்து போட்டுச்சி. அவன் திங்கற அளவப் பாத்து அப்புடியே தெகச்சிப் போயி
‘தழுங்கின பிள்ளைக்கு மனை பெரிசு, தாயில்லாப் பிள்ளைக்கு வவுறு பெரிசு’ (11) ங்கறது செரியாத்தான் இருக்குமாட்டக்குன்னு மொனவிக்கிட்டுப் போச்சு. சோறு தின்னோடனெ நான் வரஞ்சாமின்னு போயிருவான்னு நெனச்சாரு தரவு, அவன் போகாமல் அங்கிருக்கும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். ‘ஆளு சிறுசா யிருந்தாலும் அரும பெரிசு போலத்தான்’ (12) இருக்குன்னு நெனச்சாரு… இருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்துச்சி. தூங்குன போறவு பொண்டாட்டிகிட்ட பணம் வாங்கிட்டுப் போயிருப்பான்னு நெனச்சாரு… அவன் எதும் பேசாம சிரிச்சுக்கிட்டே மாட்ட எடம் மாத்திக் கட்டுனான். அவன் கம்முன்னு வேலய பாக்கவும் கண்டுகிட்டாரு தரவு.
‘இவன் கறந்து குடிக்க ஆவறமாடு, கறந்து குடிச்சா அன்னாடுங்குடிக்கலாம்.
அறுத்துக் குடிச்சா அன்னயோட செரின்னு நெனச்சிக் கிட்டு உட்டுட்டாரு.’ (13)
தொடர்ந்து தரவு வீட்டிலே வேலை செய்துகொண்டிருந்தான் கூளையன். தங்கப்பன் கிணத்துல பாம்பேறி சரிஞ்சி போச்சி. சரிசெய்ய ஒட்டன கூப்பிட்டா பணம் அதிகமாக கேட்டான் அதற்கு தரவு ‘நல்லவாயன் சம்பாரிச்சு நாற வாயங்கிட்ட கொடுக்கோணும்பாங்க’ (14) செரியாத்தான் இருக்குமாட்டகது.
நாஞ்சில் நாடனின் ‘அஷ்டாவக்ரம்’ என்னும் சிறுகதையில் ‘மேயப்பட்ட கழுதையை மேயவிடாது மெனக்கெட்ட கழுதை’ (15) என்ற சொலவடை அமைந்துள்ளது.
வே. முத்துக்குமாரின் ‘அம்மன் கொண்டாடி’ என்ற சிறுகதையில், ‘ஓன் மூஞ்சியைப் பாத்தா “காணாததைக் கண்டு மிரண்டுபோயி நிக்குற காளமாடு மாதிரில்ல இருக்கு’ (16) என்ற சொலவடை அமைந்துள்ளது.
‘சத்தியக்கட்டு’ என்னும் சிறுகதையில் இமையம் அவர்கள் ‘சாமிக்கு சத்தியம் மருந்துக்கு பத்தியம்தான் முக்கியம்’ எனற சொலவடையையும் ‘சொப்பணத்திலெ கண்ட பணம் கைச் செலவுக்கு ஆவுமா? எலும்புக் கடிக்கிற நாயால ஒரு நாளும் இரும்பக் கடிக்க முடியாது’ (17) என்ற சொலவடையையும் கையாண்டுள்ளார்.
அடுத்ததாக, சிறுவயதில் கணவனை இழந்த ஒரு பெண்ணை மீண்டும் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் அவள் அதை மறுக்கிறாள்.
‘கயித்து புருஷன் தராத நிம்மதியை இந்த வயித்துப்புருஷன் தருவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு, என் நம்பிக்கையை நாசம் பண்ணிடாதீங்க’ (18) கையெடுத்துக் கும்பிட்ட செல்லமணி இரு குழந்தைகளையும் இறுக அணைத்தபடி அப்படியே சரிந்து அமர்ந்தாள்.
நாவல் குமரேசனின் ‘பொம்மக்கா’ என்னும் சிறுகதையில், நான் பயக்கல! அவளும் பயக்க மாட்டான்னு எனக்குத் தெதியும். இருந்தும் ‘மடியில பொருள் இருந்தா வழியில போகப் பயமாகத்தான் இருக்கும்..’ (19) அதே கதையில் தொடர்ச்சியாக, மற்றுமொரு சொலவடை பதிவாகியுள்ளது. ‘அன்னிக்கு ஒரு நாள் சொன்னா… ஆறு ஏடுழும் சச்சேதி, நூறு ஏடுழும் சச்சேதின்னு” (20) அதோட அர்த்தம் ஆறு வயசுலயும் சாவு, நூறு வயசுலயும் சாவுன்னு எனக்கு இப்பத்தான் புரிஞ்சது!.
‘வெயில் தோரணம்’ என்ற ச. குமாரின் சிறுகதையில் ‘மார்கழிக் குளிருல மரமே நடுங்கும், தைமாச குளிருல தரையே நடுங்கும்’ (21) என்ற சொலவடை அமைந்துள்ளது.
பிரபாகரின் ‘பாட்டியம்மா’ என்ற சிறுகதையில் ‘நீட்டு வெத்தல போட்டுத்தான் காவியேறுதா” (22) என்ற சொலவடை அமைந்துள்ளது.
மதிகண்ணனின் ‘திசைவழிப்பயணம்’ என்ற சிறுகதையில், ‘குலைக்கிற நாய்கள எட்டி உதைக்கவோ, வெட்டிப் புதைக்கவோ திராணி இருக்கும் போது தான் நாயிக இருக்கிற இடத்துக்கு வரனும்’ (22) என்ற சொலவடை அமைந்துள்ளது.
நாவல் குமரேசனின் ‘விறகு வெட்டிகள்’ என்ற சிறுகதையில், ‘பொங்கும் காலத்துக்குப் புளியாங்காய், மங்குங் காலத்து மாங்காய்ன்னு..” (24) என்ற சொலவடை அமைந்துள்ளது.
முடிவு
எக்காலத்தில் புத்துணர்வோடு இருக்கக் கூடியது சொலவடைகள். அச்சொலவடைகள் பாமார மக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. அவ்வாறு தோற்றுவிக்கப்பட சொலவடைகள் அவர்களைச் சார்ந்து எழுகின்ற இலக்கியங்களில் பதிவாக இருப்பது இயல்பே. அந்த வகையில், உயிர் எழுத்து சிறுகதைகளில் உள்ள சொலவடைகள் அமைந்துள்ளமையை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.
அடிக்குறிப்புகள்
1. கி. ராஜநாராயணன், வழக்குச் சொல்லகராதி, அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், செப்டம்பர் - 2008, ப.115.
2. ச. மாடசாமி, சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 2015.
3. மேலது. பக்.13,15
4. கழனியூரன், பழமொழிகளும் சொலவடைகளும், இணையத்தில் வெளியான கட்டுரை, ஞாயிற்றுக்கிழமை, 21.07.2013.
5. பாரதி கிருணஷ்குமார், அம்மாவும் அந்தோன் சேக்கவும், உயிர் எழுத்து மாத இதழ்: 7 ஜனவரி- 2008, பக்.64.
6. இரா. பிரபாகர், குழிவெட்டி, உயிர் எழுத்து மாத இதழ்:9 மார்ச்சி- 2008, ப.34.
7. மேலது. ப.34.
8. மேலது. ப.34.
9. மேலது. ப.35.
10. மேலது. ப.35.
11. மேலது. ப.36.
12. மேலது. ப.36.
13. மேலது. ப.36.
14. மேலது. ப.37.
15. நாஞ்சில் நாடன், அஷ்டாவக்ரம், உயிர் எழுத்து மாத இதழ்: 14 ஆகஸ்ட்- 2008, ப.26.
16. வே. முத்துக் குமார், அம்மன் கொண்டாடி, உயிர; எழுத்து மாத இதழ்: 17, நவமபர;- 2008, ப.68.
17. இமையம், சத்தியக்கட்டு, உயிர் எழுத்து மாத இதழ்: 19, ஜனவரி- 2009, பக்.49, 50.
18. கணேசகுமாரன், செல்லமணி, உயிர் எழுத்து மாத இதழ்: 26, ஆகஸ்ட்- 2009, ப.32.
19. நாவல் குமரேசன், பொம்மக்கா, உயிர் எழுத்து மாத இதழ்: 28, நவம்பர்- 2009, ப.66.
20. மேலது.ப.66.
21. ச. குமார், வெயில் தோரணம், உயிர் எழுத்து மாத இதழ்: 30, டிசம்பர்- 2009, ப.66.
22. இரா. பிரபாகர், பாட்டியம்மா, உயிர் எழுத்து மாத இதழ்: 31, ஜனவரி- 2010, ப.27.
23. மதிகண்ணன், திசைவழிப் பயணம், உயிர் எழுத்து மாத இதழ்: 33, மாரச்சி - 2010, ப.26.
24. நாவல் குமரேசன், விறகு வெட்டிகள், உயிர் எழுத்து மாத இதழ்: 37, ஜூலை- 2010, ப.44.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.