கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நிலம்
முனைவர் பி. வித்யா
மதுரை - 625016
முன்னுரை
ஐம்பூதங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் நிலம் எல்லோரது வாழ்விலும் மிகப்பெரும் இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் நிலத்தினூடகவே வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி முற்றும் பெறுகிறான். நிலம் அவனது இயங்கு தளம். ஆகவே அதன் மீது பற்றுக் கொள்கிறான். அந்நிலத்தின் மீதே தம் கனவுகளைக் கட்டத் தொடங்கி, அதனை விட்டு நீங்கும் சூழலில் சொல்லொணாத் துயரமும் அடைகிறான். இத்தகைய நிலம் மனித வாழ்வில் எத்தகைய இடத்தைப் பெறுகிறது? அதன் இன்றியமையாத் தனித்துவம் எங்ஙனம் அமைகிறது? என்பவை போன்ற கருத்துக்களை வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் காண்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.
விவசாயியின் மனதில் நிலம்
‘கள்ளிக்காடு’ என்கையிலேயே அது நிலத்தின் மீதாகக் கட்டமைக்கப்பட்ட படைப்பு என்பது விளங்கிவிடுகிறது. ‘காடு’ என்றதும் அது விவசாயியின் வாழ்வோடு சம்பந்தப்பட்டது என்பதும் உணர முடிகிறது. ஒரு விவசாயியின் வாழ்தலே நிலங்களோடு புலங்குதல் என்பதுதான். விவசாயியின் நிலத்தையும் அதன் மீதான உழைப்பையும் வேறுவேறாகக் காண முடியாது. நிலமே விவசாயிக்கு இயங்கு தளம், ஆடு மாடுகள், வேளாண்மை, உணவு என்று அனைத்தையும் அவனுக்குத் தருவது நிலம்தான். அத்தகைய நிலம் அவன் மனதில் மருந்தாகவும், உணவாகவும், தெய்வமாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இதனை வைரமுத்து விவசாயியின் மனநிலையில் இருந்து களைப்பு நீக்கும் மருந்து என்பதனை, “நிலம் கிழிக்கும் கலப்பை இருபுறமும் குங்குமம் கொட்டுமே - அதுதான் கலப்பை பிடித்த அவருக்கு களைப்பு நீக்கும் மருந்து” (1) என்றுரைக்கிறார்.
உழுகின்ற விவசாயி நிலத்தில் காலிடறி இரத்தம் தெறிக்கும் நிலையில் மருந்தாவது என்கையில், பேயத்தேவர் கதாப்பாத்திரத்தின் வழி வைரமுத்து, “தொங்குநகம் பிய்த்துத் தூர எறிந்தார். குனிந்து உழவுமண் அள்ளினார். உள்ளங்கையிலே தெள்ளினார். பேய் பிடித்த பெண்ணுக்கு பூசாரி விபூதி அடிப்பது மாதிரி காணத்தில் மண் அடித்தார்” (2) என்று காட்டுவதோடு, விவசாயிக்கு அதுவே உணவு என்பதனை “மண்ணுதான் சாப்பாடு… மண்ணுதான் மருந்து நம்மளுக்கு…” (3) என்கிற வார்த்தையின் வழி பதிவு செய்கிறார்.
ஒரு விவசாயியின் கடவுள் யாராக இருக்கும்? இக்கேள்விக்கான விடையாக, “மண்ணுந் தண்ணியுந்தாண்டா குடியானவன் கும்புடுற சாமி இது பேயத்தேவரின் கடவுட் கொள்கை” (4) என்று காட்டுகிறார். பேயத்தேவர் என்கிற விவசாயி தம் மனதில் நினைக்கும் கருத்தாக, “சாமி எங்கேயோவா இருக்கு… இந்த வெள்ளாமக் காட்லதான் இருக்கு” (5) என்று பதிவு செய்கிறார். இதன் வளர்நிலையாகத் தாம் வாழ்ந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்துச் சென்று தெய்வமாக வணங்கும் வழக்கமும் வந்திருக்கலாம். மனிதன் தன் பூர்வீக பூமியை விட்டுச் செல்லும் போது அவன் வாழ்ந்த இடத்தின் பிடிமண் தெய்வமாகக் கருதப்படுதல் நினைவுகூரத்தக்கது.
வேற்றூருக்குச் செல்ல நேர்கையில் அவ்வூரில் வாழ்ந்த பெரியவர்களின் கையால் பிடிமண் எடுத்துச் செல்லும் வழக்கத்தை, “சீமவிட்டு சீமப்போய் பொழச்சாலும், கண்டம் விட்டு கண்டம் போய் பொழச்சாலும் பொறந்த மண்ணோட புடிமண்ணு வேணுமா இல்லையா? இந்த ஊர்லயே பெரிய மனுஷன் யாரு? இந்த மண்ணுல எங்களுக்கு முன்னுக்குப் பெறந்த மூத்த ஆளு யாரு? நீதானப்பா! ஒங்கையி வாழ்ந்த கையப்பா! வளமான கையப்பா! ஒங்கையில புடிமண்ண எடுத்துப் போடு. முடியில வாங்கிக்கிறோம். பொழைக்கப் போற எடத்துல புடிமண்ணப் போட்டு, வீடோ கோயிலோ கட்டிக்கிறோம்” (6) என்று கூறுவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. உணவாகவும் மருந்தாகவும் பாவிக்கப்பட்ட மண் தெய்வமாக வடிவெடுப்பதை விவசாய வாழ்வில் காணமுடிகிறது.
மனிதர்கள் வாழ்வில் நிலம்
மனிதர்களின் மனதில் நிலமானது உணவு, மருந்து, தெய்வம் என்கிற நிலையை எட்டிவிடுகிறது. இத்தகைய நிலம் மனிதர்களின் நடைமுறை வாழ்வில் எத்தகைய இடத்தினைப் பெறுகிறது என்பதனையும் அறிவது அவசியமாகும். இந்நிலையில் மனிதனின் இன்றியமையாத் தேவைகளில் மூன்றாம் இடம் பெறுவது நிலமே ஆகும். அடிப்படைத் தேவையான நிலம் எங்ஙனம் மனிதர்களின் வாழ்வில் பயணத்தைத் தொடருகிறது என்பதனைக் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் வழி நிலத்தின் வடிவங்களான,
1. வீடு
2. விவசாய நிலம்
3. ஊர்
என்கிற மூவகைப் பாகுபாடுகளால் காணலாம்.
வீடு
நாள் முழுவதும் உழைத்துத் தேய்ந்தவர்கள், உழைக்க இயலாதவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் என்று அனைவரும் வாழும் இடமே வீடு. ஒரே இடத்தில் சமைத்து உண்டு வாழும் மனிதர்களைக் கொண்ட குடும்ப அமைப்பின் அடிப்படை வீடே ஆகும். நாளின் பலமணி நேரங்களில் எங்கெங்கே சென்றாலும் இல்லத்திற்குத் திரும்புதல் என்பது மனிதனின் இயல்பு.
இத்தகைய வீடு உடைமைகளில் மிக முக்கியமானதாய் இருக்கும். ஆகவே, வீட்டின் பெரியவர்களின் காலத்திற்குப் பிறகு பிள்ளைகளுக்குப் பாகப் பிரிவினையாகிறது. இப்பிரிவினைகளை முன்னிட்டுச் சண்டைகள் மிகத் தீவிரமாக நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. இது போன்றதொரு நிகழ்வை வைரமுத்து, “பெத்த தகப்பன் தானே? பெறந்த மகன் நாந்தானே? அப்ப பிரிச்சசுவிடு பாகத்த. வீட்ல பாதியப் பிரி… நீ என்னைக்குச் சாகிறது? நான் என்னைக்கிப் பொழைக்கிறது? நீ சாகுறதுக்குள்ள விதிவந்து நாஞ்செத்துப் போயிட்டா...? கோழிச் சாத்துல பங்குத் தராதவன் கூரையிலயா பங்கு தரப்போற? ஏ பெரிய மனுசங்களா… இன்னைக்கு சரிபாகம் பிரிக்கணும்…இல்ல சந்தி சிரிச்சிரும்…” (7) என்று கூறுவதைக் காண்கையில் வீடு என்கிற உடைமைப் பொருளுக்கான சண்டையின் தீவிரத்தை உணர முடிகிறது.
இவற்றோடு ஒவ்வொரு மனிதர் மனத்திலும் தமது வீட்டில் தாமே முதன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தைக் குறித்து வைரமுத்து, “ எந்த எடத்துல இருக்கிறமோ அந்த எடத்துல மொத ஆளா இருக்கணும்ன்னு நெனைக்கிறது ஆணுக்கோ பெண்ணுக்கோ உண்டான கொணந்தானே” (8) என்று புதினத்திலயேக் குறிப்பிடுகிறார். அடைக்கலமாய் ஒரு வீட்டிற்குள் நுழைந்தவர்கள் இயல்பாய் இருந்தாலும் வீட்டிலுள்ள மற்றவர்கள் நம் வீட்டில் இவனதிகாரம் செய்வதா எனத் தோன்றும் அப்படியொரு நிகழ்வை வைரமுத்து, “ தஞ்சம்ன்னு சொல்லி பஞ்சம் பொழைக்க வந்த சிறுக்கி ஆளில்லாத வீட்ல அரசாளப் பாக்குறாளேங்கிற கடுப்பு திகுதிகுன்னு தீயா எரிஞ்சிச்சு அவ வகுத்துக்குள்ள” (9) என்று காட்டுகிறார்.
அவ்வாறு அடைக்கலமாக வீட்டுக்குள் வந்த முருகாயியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பத் திட்டங்கள் தீட்டப்படுதலை, “கிழவியக் குத்துறதும் கொடையறதும், முன்ன விட்டுப் பின்ன பேசுறதும், அவ சொல்லாத சொல்லுக்கெல்லாம் இல்லாத அர்த்தம் சொல்றதும், அக்கா தங்கச்சிகளுக்கு பொழப்பாப் போச்சு. அவளுகளாத் தப்புப் பண்ணிட்டு அதக் கெழவி தலையில் தூக்கிப் போட்டாளுக” (10) என்று குறிப்பிடுவதோடு முருகாயியை வெளியேறும்படி நேரடியாகச் சொல்லி விடுவதையும், “ நீ இங்க இருந்தா மொத்தக் குடும்பத்தையும் முழுங்கிடுவ! வெளங்காத சிறுக்கி வீட்ட விட்டுப் போடி” (11) என்று உரைக்கும் நிலையின் பின்னணி நம் வீட்டில் அளவற்றப் பற்றுக் கொண்டு நம் வீட்டில் நம்மைத் தவிர யாரும் வசிக்கக் கூடாது என்கிற காரணமே அதன் பின்னணியாகிறது. இதனை மின்னல் மற்றும் அவளது அக்காள் கதாப்பாத்திரங்களின் வழிக் காட்டுகிறார் ஆசிரியர்.
விவசாய நிலம்
நிலமின்றி விவசாயம் இல்லை. விவசாயமின்றி உணவு இல்லை. உணவின்றி மனிதன் இல்லை என்பதுதான் உண்மைக் கூற்று. ஆயின் விவசாயிகளுக்கு நிலத்தின் பயன்பாடு அதிகம். நிலத்தோடு வாழ்வதே விவசாயியின் வாழ்க்கை என்பதனை, “கரும்பாறையிலும் - சரளையிலும் - சுக்கான் கல்லிலும் முள் மண்னய நிலங்களிலும் தொலைந்துபோன வாழ்க்கை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் ‘பொழப்பு’ (12) என்றுரைக்கிறார்.
கல்லாகவும் பாறைகளாகவும் கிடந்த நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மைக்கு உகந்த நிலமாக்கியது மனிதனின் மிகப்பெரும் புரட்சி. அதன்பின்னே தான் மனித இனம் நில உடைமைச் சமுதாயமாக மாறியது. விவசாயி பார்த்துப் பார்த்து தம் நிலத்தைப் பயிரிட்டு விளைவிக்கையில் அந்த நிலம் தமதில்லை என்கிற நிலை வந்தால் என்ன தோன்றும் என்பதனை, “கடைசியா கமல மேட்டுல நின்னு ஊரடித்தோட்டத்தச் சுத்தி சுத்திப் பாத்த பேயத்தேவருக்கு அழுகை அழுகையா வந்தது. அப்பன் ஆத்தா பாட்டன் பூட்டன் எல்லாம் ஒரே நாள்ல மொத்தமாச் செத்துப்போனா எப்படி இருக்கும்… அப்படி இருந்திச்சு” (13) என்றுரைக்கிறார்.
நிலத்தின் இழப்பைத் தாங்க முடியாமல் பேயத்தேவர் ஒப்பு வைத்து அழுவதனை,
“செக்கச் சிவந்த மண்ணு - நான்
தின்னு தின்னு பாத்த மண்ணு
அப்பன் வெதச்ச மண்ணு
ஆத்தா களை எடுத்த மண்ணு
வம்சம் வளத்த மண்ணு
வகுத்துப்பசி தீத்த மண்ணு - இது
இல்லேன்னு போகு முன்ன
என்னுசுரு போனாலென்ன?” (14)
என்று மனமுருகிப் பாடுவதாகக் காட்டுகிறார். இவ்வாறு நினைந்து நினைந்து உருகி, கடுங்காய்ச்சல் கண்டு படுத்திருக்கையில் கனவிலும் நிலமே விவசாயியின் கண்முன் விரிவதனை, “கண்ணு தொறக்க முடியாம நெத்தி கொதிச்சுப் போய்க் கெடந்த நேரத்துல கூட பேயத்தேவரு கனவுல கண்டதெல்லாம் - ஊரடித்தோட்டம் - ஒத்தக்கமல - கமலயில தொங்குற சாலு - சாலுல தொங்குற தோலு - அந்தத் தோலுல தொங்குற ஒரு ஆளு” (15) என்று ஒரு விவசாயியின் கனவிலும் நனவிலும் நிலமே முதன்மை பெறுவதை விளக்குகிறார் வைரமுத்து.
இழப்பின் இறுதி நிலையாக உறுதியும் பெறுவதனை, “இந்தப் புஞ்சையில பாடுபட்டு அந்த நஞ்சைய மீட்கலேன்னா நான் பெரியதேவனுக்கு பிறந்த பேயத்தேவன் இல்ல”- வாய் முணுமுணுக்க வைராக்கியம் பேசுது” (16) என்றுரைக்கிறார். எப்படியாவது நிலத்தை மீட்டே ஆகவேண்டும் என்கிற எண்ணம் மனதில் நிலழாடிக்கொண்டே இருப்பதனை, “அந்த வைரவனும் சீலக்காரியும் மட்டும் வழிவிட்டா இல்லைனு போன தோட்டம் என்னது ஆயிராதா? நாயக்கரு வப்பாட்டியக் கும்பிட்டு, துட்டு இந்தா தாயி - தோட்டத்தக் குடுத்திருன்னு மீட்ற மாட்டேனா? அழுக்குப் புடிச்ச ரூபாய்களையும் அழுக்குப் புடிக்காத கனவுகளையும் அடிமடியில கட்டிப் பாதுகாத்துக்கிட்டே வந்தாரு பேயத்தேவர்” (17) என்று காட்டுகிறார். இவ்வாறாக நிலத்தின் மீதான ஏக்கம் தொணித்தல், தனது நிலம் தனக்கே கிடைத்திடாதா என்கிற ஏக்கம் விவசாய நிலத்தின் மீது விவசாயியின் உரிமை உறுதிப்பட்டதால் ஏற்படும் நிலையென உணர முடிகிறது.
ஊர்
பல வருடங்கள் வாழ்ந்து தனது சந்ததிகள், சந்ததிகளின் சந்ததிகள் என்று தண்ணீரெடுத்து, கிணறு தோண்டி, வாய்க்கால் வெட்டி, சாமி கும்பிட்டு, பொது இடத்தில் கூடி, முன்னோரின் கதைகள் பேசி என்று அன்றாடங்களின் மௌன சாட்சியாய் இருப்பது ஊர். ஊரின் மகத்துவம் மாற்றங்களோடு சேர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஆனாலும் ஊரில் மாறா வரலாறுகள் கதைகள் பேசும் தொல் கிழவன், கிழவிகளின் கதைகளில் நிறைந்திருக்கும். இத்தகைய ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்றால், நெஞ்சில் தாங்கவொண்ணாத் துயரம் பெருக்கெடுக்கத் தானே செய்யும்.
அத்தகைய நிலையினை ஆசிரியர், “அய்யா இந்த மண்ண விட்டா எங்களுக்குத் தெக்க வடக்கத் தெரியாதே! நாங்க எங்கபோயிப் பொழக்கிறது?” (18) என்று அணைகட்டும் நீருக்குள்ளே மூழ்கப்போகும் ஊர்க்காரர்கள் அரசு அலுவலர்களைப் பார்த்து வினவுகையில் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசுதலை, “நீங்க எங்கயும் போயிப் பொழைக்கலாம். பிச்சைக்காரனுக்கு எல்லா வீடும் சொந்த வீடுதான். நாடோடிக் கூட்டத்துக்கு எல்லா ஊரும் சொந்த ஊருதான்” (19) என்று கூறுவதாகப் பதிவு செய்கிறார்.
தமது ஊரை விட்டு நீங்க முடியாத் துயரத்தில் மக்கள் எழுப்பிய கேள்விகளில் ஒன்றாக, “நெலம்னா நெலம் மட்டும் இல்லய்யா! ஊரே வேணும்யா. பத்துப் பன்னண்டு தலமொறயாச் சண்ட சத்தம் போட்டுக்கிட்டாச்சும் ஒண்ணா மண்ணா இருந்த சாதிசனம் சட்டி பொட்டியத் தூக்கிக்கிட்டு தெசைக்கொரு ஆளாப் போயிச் செத்தழியறதா?” (20) என்று முன்வைக்கிறார்.
அரசு அணைகட்டும் இடத்திலுள்ள ஊர்களின் மக்களுக்கு அங்குள்ள நிலங்களுக்குப் பதிலாக பணம் தருவதாகக் கூறும் நிலையில் அம்மக்களின் மனநிலையினை, “அய்யா! நீங்க குடுக்கற பச்ச நோட்ட வாங்கி எந்த ஊருக்குப் போனாலும் வீடு வாச வாங்கலாம்… நெலம் நீச்சு வாங்கலாம்… கோயில் கட்டலாம், கொளமும் வெட்டலாம். ஆனா எங்க அப்பன் ஆத்தா செருப்பில்லாத காலோட அலஞ்சுதிரிஞ்ச தடம் இருக்கே அந்த மண்ணுல அதுக்கு எந்த நஷ்டஈடு குடுப்பீக? ஏங்க பாட்டன் முப்பாட்டன் எத்தனையோ தலைமொறயாப் பொதைச்சு வச்ச இடுகாடு இருக்கே! அதுக்கு என்னய்யா நஷ்டஈடு? நாங்க உக்காந்த பூமிக்கு - நின்ன பூமிக்கு- வௌயாண்ட பூமிக்கு - வெளிக்கிருந்த பூமிக்கு என்னய்யா நஷ்டஈடு குடுப்பீக? எங்க ஊரு வெள்ளாமய மட்டுமே நம்பி ஊரு தேசம் மாறிப்போகாம கள்ளிக்காட்டுக்குள்ளேயே முட்டப்போட்டுக் குஞ்சு பொரிக்கிற காக்கா குருவிக்கு என்னய்யா நஷ்டஈடு குடுப்பீக? பத்திரம் வாங்கி மதிப்புப் பாத்துப் பணங்காசு குடுப்பீக. ஆனா பரம்பரயா அந்த மண்ணுல நாங்க சிந்துன கண்ணீருக்கும் வேர்வைக்கும் ரத்தத்துக்கும் என்ன மதிப்புன்னு உங்க பேரேட்ல எங்கயாச்சும் போட்டுருக்கா” ( 21) என மனம் நிறையக் கதறலுடன் தங்களது ஊரை விட்டுக் கொடுக்க முடியா மக்களின் குமுறலோடு முன்வைக்கிறார் வைரமுத்து.
முடிவுரை
நிலமென்பது விவசாயிகளின் மனதில் உணவாகவும், மருந்தாகவும், தெய்வமாகவும் பாவிக்கப்படும் அதே வேளையில் மனிதர்களின் நடைமுறையில் நிலத்தின் வடிவங்களான இல்லம், விவசாய நிலம், ஊர் போன்றவை நீங்கா இடம் பெற்று, அவர்களின் வாழ்வில் உயர்வையும் தாழ்வையும் தருவதாகவும், மனநிலையை மகிழ்ச்சியாகவும் வருந்தத் தக்கதாகவும் மாற்றுவதோடு, உடைமையாக மாறி முடிவில்லாப் பற்றில் திளைப்பிப்பதாகவும் ஆகிவிடுவதைக் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் வழி அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், ப. 16
2. மேலது, ப.18
3. மேலது
4. மேலது, ப. 76
5. மேலது, ப. 199
6. மேலது, ப.358
7. மேலது, ப.66
8. மேலது, ப.215
9. மேலது
10. மேலது, ப.218
11. மேலது, ப.220
12. மேலது, ப.16
13. மேலது, ப.275
14. மேலது, ப.276
15. மேலது, ப.278
16. மேலது, ப.279
17. மேலது, ப.315
18. மேலது, ப.320
19. மேலது
20. மேலது, ப.328
21. மேலது, பக்.329-330
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.