இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் மொழி பேசப்பட்டு வருகிறது. 1997 ஆம் ஆண்டுப் புள்ளி விவரத்தின்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ் மொழி, ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியலில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது என்று மொத்தம் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. 1967 ஆம் ஆண்டு இப்பட்டியலில் சிந்து மொழி சேர்க்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் கொங்கணி, மணிப்புரி, நேபாளி என்று மூன்று மொழிகள் சேர்க்கப்பட்டன. அதன் பின்பு 2003 ஆம் ஆண்டில், போடோ, டோக்ரி, சந்தாலி, மைதிலி என்று நான்கு மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மொத்தம் இந்திய அரசியலமைப்பில் எட்டாவது பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மொழியின் எண்ணிக்கை 22 ஆக இருந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டில் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்த ஒரியா மொழி, ஒடியா மொழி என்று பெயர் திருத்தம் செய்யப்பட்டது.
இம்மொழிகளில் நம் தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் நான்கு ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது. இதேப் போன்று, மலேசியாவில் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம் பெற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து, இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இவ்வுலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக தமிழ் இலக்கியம் இருந்து வருகிறது. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமேத் தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின் போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.
தமிழில் பொது ஆண்டுக்கு (கிரிகோரியன் நாட்காட்டியின்படி) முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் சங்க இலக்கியம் எனப்படுகிறது. சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் இருக்கின்றனர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கும் சங்க இலக்கியங்களில், பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை அறிய முடிகிறது. பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.
சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியினை, சங்கம் மருவிய காலம் என்றும் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தததால், இக்காலம் நீதிநூற்காலம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இன்னிலை / கைந்நிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.
பொது ஆண்டு 18 மற்றும் 19 ஆவது நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. பல்வேறு பேரரசுகளின் ஆட்சியாலும், ஆங்கில மொழியின் வரவாலும் ஒரு தேக்கம் ஏற்பட்டது தமிழ் இலக்கியத்தில். பின்னர் நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், ஐரோப்பிய மிஷனரிகளின் தமிழ் மொழி ஈர்ப்பும், அவர்கள் கொண்டுவந்த அச்சியந்திரங்களும், பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும், மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன.
இக்காலக்கட்டத்தில்,
* ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள், அச்சியந்திரங்களின் வருகையால் உ. வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும், அயராத உழைப்பாலும் அச்சிடப்பட்டு வெளிவந்தது.
* 19 ஆவது நூற்றாண்டின் கடைப்பகுதியில் உரைநடையில் எழுதுவது அறிமுகமானது.
* 20 ஆவது நூற்றாண்டின் முற்பகுதியில் புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது.
* 20 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் மணிப்பிரவாள நடை ஒழிந்தது.
என்று தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி அறியப்பட்டாலும், இந்திய இலக்கியங்களில் தமிழ் மொழியிலான இலக்கியங்கள் மிகவும் பின் தங்கியே இருக்கின்றன.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட , ‘பாரதிய ஞானபீடம்’ என்ற பண்பாட்டு இலக்கியக் கழகத்தால், இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஞான பீட விருது (Jnanpith Award) வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961 ஆவது ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது, 1965 ஆம் ஆண்டில் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். 1982 ஆம் ஆண்டு வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர், ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 2024 ஆ, ஆண்டு வரை மொத்தம் 65 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை வழங்கப்பெற்ற ஞானபீட விருதுகளில் இந்தி மொழி முதலிடத்தில் இருக்கிறது. 1968 - சுமித்ரானந்தன் பந்த், 1972 - இராம்தாரி சிங் தினகர், 1978 - ச.ஹ.வ. அஜ்னேயா, 1982 - மஹாதேவி வர்மா, 1992 - நரேஷ் மேத்தா, 1999 - நிர்மல் வர்மா, 2005 - குன்வர் நாராயணன், 2009 - அமர் காந்த், 2009 - ஸ்ரீ லால் சுக்லா, 2013 - கேதார்நாத் சிங், 2017 - கிருஷ்ணா சோப்தி, 2024 - வினோத்குமார் சுக்லா என்று 12 எழுத்தாளர்கள் இந்தி மொழி இலக்கியத்திற்கு ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்தி மொழிக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் கன்னட மொழி இருக்கின்றது. 1967 - குவெம்பு (மு னைவர் கே.வி. புட்டப்பா), 973 - தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே, 1977 - க. சிவராம் கரந்த், 1983 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், 1990 - வி. கே. கோகாக், 1994 - உ. இரா. அனந்தமூர்த்தி, 1998 - கிரிஷ் கர்னாட், 2010- சந்திர சேகர கம்பரா என்று 8 கன்னட மொழி எழுத்தாளர்கள் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.
ஞானபீட விருது பெற்ற மொழிகளில் மலையாளம் மற்றும் வங்காள மொழி தலா 6 எனும் எண்ணிக்கையில் மூன்றாமிடம் பெற்றுள்ளது. மலையாளம் மொழியில், 1965 - ஜி சங்கர குருப், 1980 - ச.க.பொட்டிக்கட், 1984 - தகழி சிவசங்கரப் பிள்ளை, 1995 - எம். டி. வாசுதேவன் நாயர், 2007 - ஓ. என். வி. குரூப், 2019 - அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி என்று 6 மலையாள மொழி எழுத்தாளர்கள் ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கின்றனர். இதேப் போன்று, 1966 - தாராசங்கர் பந்தோபாத்தியாய்,
1971 - விஷ்ணு டே, 1976 - ஆஷாபூர்ணா தேவி, 1991 - சுபாஷ் முகோபாத்யாய், 1996 - மகாசுவேதா தேவி, 2016 - சங்கா கோஷ் என்று 6 வங்காள மொழி எழுத்தாளர்கள் ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கின்றனர்.
இம்மொழிகளைத் தொடர்ந்து, 1969 - பிராக் கோரக்புரி, 1989 - குர்ராடுலென் ஹைதர், 1997 - அலி சர்தார் ஜாஃப்ரி, 2008 - அக்லாக் முகமது கான் (சகார்யர்) , 2023 - குல்சார் என்று 5 உருது மொழி எழுத்தாளர்களும், 1967 - உமா ஷங்கர் ஜோஷி 1985 - பன்னாலால் படேல், 2001 - ராஜேந்திர கேஷவ்லால் ஷா, 2015- ரகுவீர் சவுத்ரி என்று 4 குஜராத்தி மொழி எழுத்தாளர்களும், 1973 - கோபிநாத் மொஹந்தி, 1986 - சச்சிதானந்த் ரௌத் ராய், 1993 - சீதாகாந்த் மஹாபாத்ரா, 2011- பிரதிபா ரே யஜனசெனி என்று 4 ஒடியா மொழி எழுத்தாளர்களும் 1974 - விஷ்ணு சகரம் காண்டேகர், 1987 - விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர், 2003 - விந்தா கரண்டிகர், 2014 - பாலச்சந்திர நெமதே என்று 4 மராத்தி மொழி எழுத்தாளர்களும் ஞானபீட விருது பெற்றிருக்கின்றனர்.
இதேப் போன்று, 1970 - விஸ்வநாத சத்யநாராயணா, 1988 - முனைவர். சி. நாராயண ரெட்டி, 2012 - ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு என்று 3 தெலுங்கு மொழி எழுத்தாளர்களும், 1979 - பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா, 2000 - இந்திரா கோஸ்வாமி, 2021 - நீல்மனி பூக்கன் என்று 3 அசாமி மொழி எழுத்தாளர்களும், 1975 - அகிலன், 2002 - ஜெயகாந்தன் என்று 2 தமிழ் மொழி எழுத்தாளர்களும், 2006 - சத்திய விரத் சாஸ்திரி, 2023 - ராம்பத்ராச்சார்யா என்று 2 சமஸ்கிருத மொழி எழுத்தாளர்களும், 1981 - அம்ரிதா பிரீதம், 1999 - குர்தியால் சிங் என்று 2 பஞ்சாபி மொழி எழுத்தாளர்களும், 2006 - ரவீந்திர கேல்கர், 2022 - தாமோதர் மவுசோ என்று 2 கொங்கனி மொழி எழுத்தாளர்களும், ஞானபீட விருது பெற்றிருக்கின்றனர்.
காஷ்மீரி மொழியில் 2004 ஆம் ஆண்டு ரகுமான் ராகி என்ற எழுத்தாளரும், ஆங்கில மொழியிl 2018 ஆம் ஆண்டு அமிதவ் கோசு என்பவரும் ஞானபீட விருது பெற்றிருக்கின்றனர். இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியலில் இடம் பெற்றிருக்கும் போடோ, டோக்ரி, மைதிலி, மணிபுரி, நேபாளி, சந்தாளி, சிந்தி மொழியில் இதுவரை ஒருவர் கூட ஞானபீட விருதினைப் பெறவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
பண்டைய தமிழ் இலக்கியங்கள், நம் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வைத்திருக்கிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், இந்திய விடுதலைக்குப் பின்பான தமிழ் இலக்கியங்கள் இந்தியாவின் பிற மொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மிகவும் பின் தங்கியே இருக்கிறது என்பதை இந்த ஞானபீட விருது எடுத்துக் காட்டுகிறது.
இந்திய இலக்கியங்களில், தற்போதைய தமிழ் இலக்கியங்களின் நிலையினை உயர்த்திட, குறிப்பாக, ஞானபீட விருதாளர்களின் எண்ணிக்கையினை அதிகரித்திட தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தகுந்த ஒரு குழுவினை ஏற்படுத்தி, அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் பரிசீலித்து, சிறந்த தமிழ் எழுத்தாளர்களை ஞானபீட விருதுத் தேர்வுக் குழுவிற்குப் பரிந்துரை செய்திட முன் வர வேண்டும்.