அதிகாலைப் பொழுது. அமைதியும் அழகும் நிரம்பித் ததும்பும் அற்புதமான பொழுது. கருத்துக் கிடந்த வானம் மெல்ல விடியலை எட்டுகின்றது. மெல்ல மெல்ல வெளிச்சம் எழுந்து வானம் ஒளியால் நிரம்புகின்றது. ஒவ்வொரு விடியலும் அழகு. ஒரு நாள் போல ஒரு நாள் விடிவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயற்கை அழகுடன் காலைப் பொழுது விடிகின்றது. விடியல் என்பது இயற்கையின் அற்புதக் காட்சி. பொழுது புலர்ந்தது யாம் செய் தவத்தால் என்று பாரதி பாடியது எத்தனைப் பொருத்தம்.
மனிதன் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகவேண்டும். எல்லாச் சான்றோர்களின் அரிய கருத்து்களும் மனிதன் உயரவேண்டும் என்பதை எண்ணியே சொல்லப் பெற்றுள்ளன. . மனிதன் அறிவில் உயர வேண்டும். எண்ணத்தில் உயரவேண்டும். மனநலத்தால் உயரவேண்டும். சிகரத்தைத் தொடவேண்டும். வானத்தைத் தொடவேண்டும். என்று பற்பல உயர்ச்சிகள் மனித வாழ்விற்குக் கிடைக்க சான்றோர்களின் கருத்துகள், பாலமாக அமைகின்றன.
உயர்வின் அளவிற்கு வானம் என்பது மிகச் சிறந்த எல்லையாகும். வானத்தை எட்டுவதற்கு என்ன வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். நூற்று நூறு சதவீதம் முழுமை வேண்டும். எதிலும் குறையில்லாமல் நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட உயர்ச்சியே வானம் அளவிற்குச் செல்லும் உயர்ச்சியாகும்.
வானத்திற்குச் செல்ல முயற்சி செய்த ஒரு விமானம் நூற்றுக்கு நூறு சரியான இயக்கத்தில் இயங்கினால் மட்டுமே வெற்றி கரமான பயணத்தைத் தரும். நூற்றில் ஒரு புள்ளி குறையிருந்தாலும் வானத்தை நோக்கிய விமானத்தின் பயணத்தில் தாழ்வு ஏற்பட்டுவிடும். அதுபோல உயர நினைப்பவர்கள் நூற்றுக்கு நூறு அளவில் முழுமையான உழைப்பினைத் தந்தாக வேண்டும். அப்போது வானம் என்னும் மிக உயரமான குறியீட்டினைத் தொடமுடியும். வானத்திற்குச் செல்வதற்கே நூற்றுக்கு நூறு விழுக்காடு உழைப்பு வேண்டும் என்றால் மண்ணில் வானத்தைத் தெரியச் செய்வதற்கு நூற்றுநூறு விழுக்காட்டிற்கு மேலான அறிவு, உழைப்பு, நேர்மை, என அத்தனை நல்ல பண்புகளும் வேண்டும். அப்போதுதான் மண்ணில் வானத்தைத் தெரிய வைக்கமுடியும்.
புதுப் புது விமானங்களைத் தயாரிக்கும் ஆய்வுக் கூடத்தில் அவர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். புதிய ரக விமானங்களை அவர் தயாரித்தார். மத்திய அமைச்சர் அவர் தயாரித்தளித்த புதிய ரக விமானத்தில் ஏற முனைந்தார். பக்கத்தில் இருக்கும் காவல் பணியாளர்கள் ‘‘ஐயா, இது புது ரக விமானம். இதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம்’’ என பாதுகாப்பு வளையம் போட்டனர். அமைச்சர் துணிந்து ஏறினார். அத்துடன் அதனைத் தயாரித்த அந்த விஞ்ஞானியையே அந்த விமானத்தை ஓட்டவும் வைத்தார். இப்போது பாதுகாவலர்களுக்கு இன்னும் பயம் அதிகமானது. இந்த விஞ்ஞானி விமானம் தயாரிப்பதில் வல்லவராக இருக்கலாம். ஓட்டுவதில் வல்லவர் இல்லையே, நல்ல பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பலர் இருக்கையில் அமைச்சர் ஏன் இந்தச் சோதனை முயற்சியில் இறங்குகிறார் என்று எல்லோரும் கவலைப்பட்டனர். ஆனால் புன்சிரிப்புடன் அந்த விஞ்ஞானி விமானத்தை ஓட்ட மிக்க அமைதியுடன் அமைச்சர் அதில் ஏறி அமர்ந்தார். புதிய ரக விமானம் மிக்கச் சிறப்புடன் இயங்கியது. காவலர்களுக்கு ஏற்பட்ட நிம்மதியைவிட தான் தயாரித்த விமானத்தைத் தானே இயக்கி வெற்றிபெறச் செய்ததில் அந்த விஞ்ஞானிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.
அந்த விஞ்ஞானிக்கு அடுத்த பொறுப்பு வந்தது. ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிக்கு அவர் அழைக்கப்பட்டார். அந்தப் பணியையும் செம்மைபடச் செய்தார். பல ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. பிருத்வி என்று ஒரு ஏவுகணைக்குப் பெயர் சூட்டப் பெற்றது. பிருத்வி என்றால் பூமி என்று பொருள். ஆகாஷ், நாக் போன்ற பல ஏவுகணைகளும் இவற்றுடன் அவரால் உருவாக்கப் பெற்றன. ஆகாஷ், பிருத்வி இந்தப் பெயர்கள் மண்ணில் வானத்தைப் பார்க்க வைக்கின்ற முயற்சிகள். இவை அனைத்தும் வெற்றி பெற்று இந்திய நாட்டின் வல்லமையை நிலை நாட்டின.
இவற்றுக்கெல்லாம் அடுத்ததாக ஒரு ஏவுகணை தயாரிக்கப்பட்டது. அதற்குப் பெயர் அக்னி என்பதாகும். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் யார் இந்த விஞ்ஞானி என்று. ஆம் அவர்தான் நம் பெருமதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்கள். முன்னாள் குடியரசுத் தலைவராக விளங்கியவர். நூற்றுக்கு நூறு என்ற எல்லையைத் தாண்டி அவர் செய்த முயற்சிகளின் காரணமாக மண்ணில் தெரிந்தது வானம்.
அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பு என்பது எளிதாக நடந்துவிடவில்லை. 500க்கும் மேற்பட்ட அறிவியலார்களின் உழைப்பினால் அக்னி ஏவுகணை உருவானது. எனினும் அக்னி ஏவுகணை முயற்சி பல முறை தோல்வியடைந்தது. ஒவ்வொரு முறையும் இந்த ஏவுகணை ஏவப்படுவதற்காக ஏவுதளத்தின் அருகில் இருந்த கிராம மக்கள் வேற்றிடத்திற்குச் செல்ல வேண்டப்பட்டனர். அதற்காக அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையையும் அரசு வழங்கியது. ஏவுகணை ஏவப்படவில்லை என்றதும் மீண்டும் அந்த மக்கள் அந்தக் கிராமத்திற்கு வந்துவிடுவர். மறுபடி ஏவப்படும் நாள் குறிக்கப்படும். மக்கள் வெளியேறுவர். அதுவும் தோல்வியில் முடியும். இப்படிப் பற்பல தோல்விகள் எழுந்தன.
செய்தித்தாள்கள் கூட இந்தத் தோல்விகளைக் கேலிச்சித்திரங்களாக வரைந்தன. ஒரு வியாபார ஒப்பந்தகாரரிடம் ‘அக்னி’ போல இதுவும் போனியாகவில்லை என்று ஒரு வியாபாரி சொல்வதுபோல் ஒரு கேலிப்படம் வரையப்பட்டது. இவற்றைத் தாண்டி 1989 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அக்னி ஏவுகணை வெற்றி கரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இந்த ஏவுகணை ஏவப்படுவதற்கு முதல் நாள் இரவு இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏவுதளத்திற்கு வந்தார். அவர் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களிடம் இந்த ஏவுகணை விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றுவிட்டால் இந்தியா ஏவுகணை தொழில் நுட்பத்தில் முக்கியமான நாடாக விளங்கும் இல்லையா? என்றார். இவர் ஆம் என்று பதிலளித்தார். அப்படி வெற்றி பெற்றால் இந்த வெற்றியை நீங்கள் எப்படிக் கொண்டாடத் திட்டமிட்டு உள்ளீர்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தார்.
மதிப்பிற்குரிய கலாம் அவர்கள் மெல்ல அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார். ‘‘அக்னி ஏவுகணை வெற்றி பெற்றுவிட்டால் இந்த ஏவுதள வளாகத்தில் நடுவதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தாருங்கள்” என்று மென்மையாக பதில் அளித்தார் விஞ்ஞானி கலாம் அவர்கள். மண்ணில் தெரியுது வானம் – அடடா தனக்கென ஒன்றும் வேண்டா புலன் அழுக்கற்ற தூயவரின் பதிலுக்குள் இயற்கையை நேசிக்கும் உயர்ந்த உள்ளம் குடிகொண்டிருக்கிறது. இயற்கையைக் காக்க அவர் கொண்ட எண்ணம் அந்த வளாகத்தையே இன்றைக்கு பசுமை கொஞ்சும்படி செய்துள்ளது.
தன் வாழ்வின் இயல்புகளைப் பற்றி மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்க்கைக் குறிப்பில் ,இப்படி எழுதுகிறார். ‘‘ எனது வாழ்க்கையில் என்னை உயர்த்திக்கொள்ள எந்த வெளிப்புறச் செல்வாக்கும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. எனக்குள் இருந்ததெல்லாம் அதிகமாகத் தேடும் என் உள்ளார்ந்த வேட்கைதான். எவ்வளவு தூரம் நான் கடந்து வந்தேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதில்தான் என் கவனம் இருக்கும். அதுவே என் ஊக்கசக்தியின் அச்சாணி. தீர்க்கப்படாத பிரச்சனைகளும், பிரகாசமான வெற்றிகளும், இனம் புரியாத தோல்விகளும் சேர்ந்த கூட்டுக் கலவைதானே வாழ்க்கை.’’ என்ற இந்த அர்த்தம் பொருந்திய செய்தியில் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்களுக்குள் நூற்றுக்கு நூறு என்பதற்கு மேலான ஊக்கம் இருப்பதை அறியமுடிகின்றது.
நூற்றுக்கு நூறு முழுமை என்பது வானம் தொடும் வெற்றியைத் தரும். நூற்றுக்கு மேற்பட்ட ஊக்கம், உழைப்பு என்பது வானத்தை மண்ணுக்கு அழைத்துவந்துவிடும் அல்லவா?
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? அட
மண்ணில் தெரியுது வானம். அதுநம்
வசப்பட லாகாதோ?
என்ற மகாகவி பாரதியாரின் கவிச்சொற்களில் எத்தனை பொருள்கள் நிரம்பியிருக்கின்றன. வானத்தில் தெரியும் பொருள்களை எல்லாம் மண்ணுக்குக் கொண்டு வந்திடத் துடிக்கிறார் பாரதியார். அப்படிக் கொண்டு வந்துவிட்டால் வானம் என்ற ஒன்று மண்ணில் உள்ள பொருளாகிவிடும் என்பது அவரின் ஆசை. வானத்தை மண்ணுக்கு அழைக்கும் பெரு முயற்சிகளில் எதிர்கால மனிதன் இறங்க அவனிடம் அதிகமான ஊக்க சக்தி தேவை. அந்த சக்தியை நோக்கி மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான். அதில் மனித குலம் வெற்றிபெறும். உயர்வு பெறும் மேன்மை பெறும்.