முன்னுரை
“ ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும்
ஒரு செயல் மேன்மையானது
ஆயிரம் செயல்களைக் காட்டிலும்
ஒரு சாதனை மேம்பட்டது
ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும்
ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை
விளக்கேற்றுவது வாழ்க்கையின்
பொருளை முழுமையாக்குவது”.
என்னும் வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் வெ.இறையன்பு. ஆளுமைச் சிந்தனை உடைய அரசு உயர் அலுவலர்கள் மத்தியில் சிந்தனை ஆளுமை மிக்கவர் திரு.வெ. இறையன்பு, இ.ஆ.ப அவர்கள். அவர் சிறந்த படிப்பாளி, சிறந்த படைப்பாளி, சிறந்த சிந்தனையாளர், சிறந்த ஆட்சியர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். வாசிக்கின்ற படிப்பறிவும் வாழ்கிற பட்டறிவும் அவரை மிகச்சிறந்த மனிதநேயவாதியாக ஆக்கியிருக்கின்றன’. என்பர் சுந்தர ஆவுடையப்பன். இக்கூற்று வெறும் புகழ்ச்சியல்ல உண்மையே. திரு.வெ.இறையன்பு அவர்கள் பல்வேறான படைப்புகளைப் படைத்துள்ளார். அவற்றிலெல்லாம் மனிதநேயச் சிந்தனை சிறப்பான முறையில் வெளிப்பட்டுள்ளது. அந்த வகையில் அவரின் சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘நரிப்பல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள புனைகதைத்திறத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
சிறுகதையும் இறையன்பும்
சிறுகதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற காலம் தற்போது வந்துவிட்டது. ஆனால் சிலரது சிறுகதைகள் வாசிப்பவரின் மனதைக் கசக்கிப் பிழிந்து விடுகின்றன. அந்த வகையில், இறையன்புவின் சிறுகதைகள் ஒருமுறை வாசித்தவுடன் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை, மாறாக மனத்தை அசைத்துக் கொண்டே இருக்கின்றன. “பொதுவாக சிறுகதை பிறக்க மூன்று அடிப்படைகள் காரணமாக இருக்கலாம் என ஒரு பாத்திரமோ, ஒரு நிகழ்ச்சியோ சிறுகதை உருப்பெற காரணமாக இருக்கலாம். ஆசிரியன் உலகைப் பார்த்த பார்வையிலிருந்து அவன் தெரிந்து கொண்ட செய்திகள் அவை ஏற்படுத்தும் மன அசைவுகள் சிறுகதைக்கு அடிப்படையாக அமையலாம். இந்த அடிப்படைகளைக் கொண்டு உருவாகும் சிறுகதை பெரும்பாலும் கதையின் இறுதியில் ஒரு திருப்பம் திரும்பித்தான் முடிகின்றன. இதற்குள் ஆசிரியன் சொல்ல வந்ததை சொல் சிக்கனத்துடனும் அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும்” என்று செந்தில்நாதன் குறிப்பிடுகிறார். (தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு - ப.28)
இத்தன்மையை இறையன்புவின் சிறுகதைகளில் காணமுடிகிறது. இறையன்பு கதைகளில் பெரும்பான்மையாக அவரது மன அசைவுகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பல்வேறான தளங்களில் தமது ஆட்சிப்பணியை மேற்கொண்ட இறையன்பு அவர்கள் அங்கு நடைபெற்ற சம்பவங்களைத் தமது மனத்தின் வெளிப்பாடாகச் சிறுகதைகளாக்கி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
மனிதநேய வெளிப்பாடு
மனித வாழ்க்கையில் சக மனிதர்களின் மீதுபற்று, பாசம், மரியாதை கொள்வது தற்போது குறைந்து வருகின்றது. ஆனால் இன்றும் சிலரது மனங்களில் மனிதநேயம் கொஞ்சம் இருக்கிறது என்பதை இறையன்பு தமது கதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
‘இரங்கல்’ என்னும் கதையில் இருவேறு கோணங்களில் உள்ள மனித எண்ணங்களைக் கதையாக்கியுள்ளார். ஒன்று இந்திய ராணுவத்தில் பணியாற்றி எதிரிகளின் தாக்குதலால் இறந்து போன ஆறுமுகம், மற்றொருபுறம் உள்ளுரில் சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் போது இறந்து போன முனியாண்டி இவர்களின் இறப்பில் உள்ள அரசாங்கத்தின் அணுகுமுறையை மிகத் தெளிவாகக் கதையாக்கியுள்ளார். ஆறுமுகத்தின் சடலம் மரியாதையுடன் கொண்டு வரப்பட்டது. அதன்மீது போர்த்தப்பட்டிருந்த மூவர்ணக் கொடியும் அது வைக்கப்பட்டிருந்த நேர்த்தியான சவப்பெட்டியும் கம்பீரமாகக் காட்சியளித்தன. கலெக்டர், எம்.பி. அமைச்சர் வீரவணக்கம் செய்தனர். ஆனால் முனியாண்டியும் நாட்டுக்காகத்தான் உயிர்விட்டான் அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை மிகத் தெளிவான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இக்கதையில் ‘முனியாண்டி வீட்டில் சின்னக் கூட்டம் எல்லோரும் அழுது ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தனர். அந்தக் குடிசைப் பகுதி மக்கள் மட்டுமே கூடியிருந்தனர். சந்தானத்திற்கு ஒரு குற்ற உணர்வு தான் சொல்லித்தானே முனியாண்டி இறங்கினார். அப்படியே விட்டிருந்தால் நிதானமாகச் சுத்தம் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் பத்திரிக்கையில் எழுதியிருப்பார்கள். அவ்வளவுதானே அடுத்த நாள் அவரவருக்கு இருக்கும் பிரச்சினையில் இதை மறந்திருப்பார்கள். இப்படி ஒரு நல்ல மனிதரைப் பறிகொடுத்திருக்க வேண்டாமே, என்று சந்தானம் (நரிப்பல். ப .9) மனிதனுக்குள் இருக்கும் நேயத்தை வெளிப்படுத்துகிறார். இது சாதாரண கதையாக இருந்தாலும் இன்னமும் இந்த நாட்டில் அரசு உயர் அதிகாரிகளிடம் மனிதநேயம், மனசாட்சி, போன்றவை ஏழைகள் மீது இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
சிறுகதைகளில் பெரிய கருத்துக்களை மிகச் செறிவாக இறையன்பு வெளிப்படுத்தியுள்ளார். இன்று சொந்த உறவுகளுக்குள் ஏதேனும் உதவி என்றாலே யாரும் செய்ய முன்வருவதில்லை. அதிலும் இரத்ததானம் என்றால் சொல்லவே தேவையில்லை, ஆனால் இறையன்பு தனது ‘துப்டன் டெம்பர் கதையில் மிகவும் உணர்வுப் பூர்வமாக இரத்த தானத்தை எளிமையாகப் பதிவு செய்துள்ளார்.
‘அறுவை சிகிச்சையால் ஜிம்மிக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஜிம்மிக்கினுடைய ஓ பாஸிட்டிவ் எங்கள் அகாடமியில் சிலருக்கு அந்த இரத்தம் இருந்தது. அவர்கள் ரத்தம் தந்தார்கள், அவர்களில் பட்நாகரும் அடக்கம்’ (நரிப்பல்.ப.63) என்று குறிப்பிட்டுள்ளார் இறையன்பு, இதில் பிற மனிதர்கள் மீது இரக்கம் கொள்ளும் மனத்தைத் தான் படைத்த கதாப்பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
இறப்பிலும் மனிதநேயம்
இன்றைய சமுதாயத்தில் திருமண வீடுகளுக்கு எல்லோரும் சென்று வருகின்ற பழக்கம் உண்டு. காரணம், திருமண வீட்டார் வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உபசரிப்பார்கள். ஆனால் இறந்தவர்கள் யார்? யார் வந்தார்கள்? என்று பார்ப்பதில்லை. இந்தத் தன்மையினால் இறந்தவர்கள் இல்லங்களுக்கு யாரும் அவ்வளவு எளிதில் செல்வதில்லை. பழைய காலங்களில் இறந்தவர்கள் வீடுகளுக்கு எல்லோரும் செல்லும் பழக்கம் இருந்தது, அத்தன்மை மனதளவில் இன்று குறைந்து வருகின்றது. ஆனால் இறையன்பு தமது கதையில் ஒரு சாதாரண நரிக்குறவர் இனத்தின் தலைவராக இருக்கும் ஒரு பாத்திரம் இறந்த போது அங்கு மாவட்ட ஆட்சியர் சென்று வருவதை கதையாக்கியுள்ளார். பொதுவாக ஏழை மக்களை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை, ஆனால் பழநி என்னும் நரிக்குறவரின் இறப்பைக் கண்ட நிலையில் கதையில் இப்படி புனைந்துள்ளார் இறையன்பு
“பழநியும் அவன் மனைவியும் உயிருடன் இருப்பதைப் போலப் படுத்திருந்தார்கள். பிரேதங்களைக் காண நேரும் போது விரோதிக்குக் கூட மனம் இளகி விடும், வன்மம் மறைந்து விடும். நான் கொண்டு சென்றிருந்த மாலையை பழநிக்குப் போட்டேன். பார்வதிபுரத்தின் ஒட்டுமொத்த நரிக்குறவர்களும் கண்ணீரும், கம்பலையுமாக நின்று கொண்டிருந்தார்கள், அவர்கள் கதறியதும் எனக்கு அழுகையாக இருந்தது. அங்கே எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று ஒரு சின்னப் பையன் கவனித்து வந்தான்” என்று புனைந்துள்ளார்.(நரிப்பல் . ப. 74)
அதாவது ஒரு இறப்பைக் கண்டு, அவர்களின் உறவினர்கள் மனங்கலங்குவது இயற்கை. ஆனால் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு அழுகை வருவது தான் மனிதநேய வெளிப்பாடு. இங்கு அதைத்தான் இறையன்பு, “அவர்கள் கதறியதும் அலறியதும் எனக்கு அழுகையாக இருந்தது” என பதிவு செய்துள்ளார். இது நரிப்பல் என்னும் கதையின் உயிர்ப்பாக அமைந்துள்ளது.
பிறர் மனதை புண்படுத்தாத விதம்
மனித நேயத்தின் மகத்துவமே அடுத்தவர்களை மனதளவில் வருத்தப்பட செய்யாமல் இருப்பதில்தான் உள்ளது. அந்தத் தன்மையை இறையன்பு தமது கதைகளில் அமைந்துள்ள பாத்திரங்களின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். நரிப்பல் கதையில் வரும் பழநி என்பவன் நல்லவன் என்பது மாவட்ட ஆட்சியருக்கு முன்பு தெரிந்தது ஆனால் அவன் மக்களை ஏமாற்றி விட்டான் என்பதைக் கதையில்
“எல்லாக் குறவர்களிடமும் பணத்தை வங்கியில் கட்டுவதாக வசூலித்து விட்டுப் பழநி அதை முறையாகக் கட்டவில்லையாம். இந்தத் தகவல் வங்கி அதிகாரிகள் மூலம் எல்லாக் குறவர்களுக்கும் அரசல்புரசலாகத் தெரிந்து விட்டது. எனக்கு (மாவட்ட ஆட்சியர்) பழநியின் மீது கோபம் வந்தது. நரிக்குறவர்களின் தலைவர் என்று அவர்களது ரத்தத்தைப் போய் உறிஞ்சப் பழநிக்கு எப்படி மனம் வந்தது. இனி எக்காரணம் கொண்டும் பழநியின் முகத்தில் விழிக்கக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டேன்.”
என்று மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ள மனநிலையை இறையன்பு முதலில் கதையாக்குகிறார். (நரிப்பல்.ப.72)
ஆனால் அதே கதையில் பழநி இறந்த பின்பு குறவர்கள் அவனைப் பற்றி தவறாக எண்ணி விடக் கூடாது என்பதில் மாவட்ட ஆட்சியர் கவனமாக இருப்பதாகக் கதையை அமைத்துள்ளார்.
“ஒரு வாரமாக ஏதேனும் ஒரு வகையில் பார்வதிபுரம் மக்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன் வங்கியின் மேலதிகாரிகளிடம் நிறையப் பேசினேன். புழநியின் இறப்பு அந்த மக்களிடம் பரிதாப உணர்வையும், இழப்பையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர கசப்பை உண்டாக்கக் கூடாது என்பதில் குறியாயிருந்தேன்” என்கிறார். (நரிப்பல்.ப.75)
இங்கு கதையில் இறப்பதற்கு முன்பு ஒரு மாதிரியான மனநிலையையும், இறந்த பின்பு வேறொரு மன நிலையையும் கொண்டு கதை இயற்றியுள்ளார் இறையன்பு. அதாவது உயிரோடு இல்லாத ஒருவரின் மீது தனது மனிதநேயத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அது கதையில் உள்ள சில பாத்திரங்களின் மூலம் அறிய முடிகிறது.
ஏமாற்றம்
மனித வாழ்க்கையில் ஏதாவதொரு வகையில் அனைவரும் ஏமாற்றத்தைச் சந்திக்கிறார்கள். அப்போது மனம் மிகவும் பலவீனமடைகிறது. இதனை நரிப்பல் கதையில் இறையன்பு அவர்கள் மிகவும் பொருத்தமான வார்த்தைகளால்
‘மனிதர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துப் போன போது மனம் கனத்துத்தான் போகிறது’
என்று கதை புனைவில் தத்துவத்தைக் கூறுகிறார்.
எதார்த்த நோக்கோடு மனிதாபிமானத்தையும் சேர்த்துப் பார்த்து அதைக் கதையாக எழுதி வெற்றி பெற்றுள்ளார் இறையன்பு என்றால் மிகையல்ல.
‘டுலெட்’ என்னும் கதையில் மனிதர்களின் அதிகாரமும் ஏமாற்றுத்தனமும் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.
ஒரு வீட்டைக் கட்டி மாடிப்பகுதியை மற்றொருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார் கண்ணுச்சாமி. ஆனால், அந்த வாடகைக்காரர் வீட்டில் குடியிருக்காமல் வீட்டைக் குடோனாக மாற்றியுள்ளார். அதனைப் பொருக்காத கண்ணுச்சாமி அவரிடம்,“ஐயா! வீட்டை நாங்கள் குடியிருக்கத்தான் கட்டினோம், அதுக்குத்தான் உங்களுக்கு வாடகைக்கு விட்டோம். நீங்க இப்படிக் குடோனா மாத்துவீங்கன்னு எதிர்பார்க்கல. மூணு மாசத்துல காலி பண்ணிடுங்க” என்றுள்ளார். ஆனால் வாடகைக்காரர் பதினைந்து நாளில் எல்லாப் பொருளையும் காலி செய்யுரோம் என்றான். (நரிப்பல். தொகுதி.ப.83)
என்று கதையை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் ஆசிரியர் ஏமாற்றுத்தனத்தை அருமையாகப் புனைந்துள்ளார்.
செய்யுரோம் என்றவன் காலி பண்ணவில்லை மாறாக அதிகமான மூட்டைகளை வீட்டில் அடுக்கினான் அவனின் ஏமாற்று வேலை தெரிந்து போனது. மேலும்
“பண்றதைப் பன்னிக்கங்க நான் அப்படித்தான் அடுக்குவேன்னு அடாவடித்தனமாகப் பதில் சொன்னான்.” என்று கதை செல்கிறது.
இறுதியில் வீட்டின் சொந்தக்கார கண்ணுச்சாமி வீட்டையே காலி செய்ய வேண்டியதாக ஆகிவிட்டது. இது தான் இன்றைய நிலை, நாட்டில் அதிகம் பேர் நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறார்கள், பணத்தின் மூலமும் அதிகாரத்தின் மூலமும் மனிதன் சக மனிதர்களை ஏமாற்றி வாழப் பழகி விட்டான் என்பதை இறையன்பு டுலெட் கதையில் பதிவு செய்துள்ளார்.
தமிழர்களின் போலி நட்பு
நட்பு என்பது உண்மையானதாக இருக்க வேண்டும் ஆனால் பலர் போலித்தனமான நட்புடன் பழகி வருகின்றனர் என்பதை இறையன்பு ‘துப்டன் டெம்பா’ என்னும் கதையில் பதிவு செய்துள்ளார். நண்பர்களைப் பழக முகத்திற்கு நேராக நல்லவர்கள் போல நடித்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என அழைப்பார்கள், ஆனால் மனதிற்குள் ஒரு வேளை வந்து விடுவானோ என்ற அச்சம் நிலவும், அதனையும் மீறி அவரின் அழைப்பை உண்மை என நம்பி வந்து விட்டால், அங்கு அவருக்குக் கிடைக்கும் மரியாதை போலியானதாவே இருக்கும் என்பதைக் கதையாசிரியர், தமிழன் ஒருவனும் துப்டனும் பேசிக் கொள்வது போல கதையாக்கியுள்ளார்.
அதில் தமிழன் துப்டனை நம் நட்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிறான். அப்போது துப்டன். “இங்கே நாம் பழகிய நாட்கள் அற்புதமானவை. அவை எப்போதும் இதமாக மனத்தில் தங்கியிருக்கும் அவ்வளவு தான். நான் தமிழ்நாடு வந்தால் கூட உன்னைச் சந்திக்க மாட்டேன்” என்றான். (நரிப்பல் தொகுதி.ப.64)
அதற்கான காரணத்தையும் சொல்கிறான். அதாவது முன்பு தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டிற்கு வேலைக்கு வந்தார். பின்பு அவர் ஊருக்குச் சென்றான். அப்போது, தான் பழகியவர்களிடம் நீங்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றான்.
அதனை நம்பி ஒருவர் அவன் வீட்டிற்குச் சென்றுள்ளான் அங்கு அந்த வட நாட்டுக்காரருக்கு “மிகவும் வற்புறுத்தி சாப்பாடு போட்டிருக்கிறார்கள். இவரும் அத்தனை முறை நம் வீட்டில் அவர் சாப்பிட்டுள்ளார். நாம் ஒரு வேளை சாப்பிடாவிட்டால் கோபித்துக் கொள்வார்கள். மேலும் அது நாகரிகமாக இருக்காது” என எண்ணி சாப்பிட்டு விட்டார். அவர்களிடம் விடைபெற்று கிளம்பியவர் கொஞ்சதூரம் வந்ததும் ஆசிரியருடைய குழந்தைக்கு வாங்கிய பரிசு பெட்டியிலேயே தங்கிவிட்டதை உணர்ந்து கொடுப்பதற்காகக் காரைத் திருப்பி வீட்டிற்குப் போனார். அங்கே அவர் சாப்பிட்ட தட்டைக் காலால் எத்தி குளியலறைக்குத் தள்ளிக் கொண்டிருந்தாராம் ஆசிரியர்”. (தமிழர்) என்று கதையை இறையன்பு புனைந்துள்ளார்.
இன்றும் இந்நிலை தமிழ்நாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாட்டின் மக்களிடையே உள்ள நட்பு என்பது போலியானது என்பதை மிகவும் அருமையாக இறையன்பு கதையாக்கியுள்ளார்.
முடிவுரை
ஒரு சிறுகதை என்பது முழுமையுடனும், வடிவத்துடனும், தரத்துடனும், சுவையுடனும் மிளிரும் தன்மை கொண்டது. அந்த வகையில் இறையன்பு அவர்கள், இப்படித்தான் எழுத வேண்டும், இப்படி எழுதக்கூடாது என்று எவ்விதமான திட்டமான முடிவுக்கும் வந்தவரல்லர் எனலாம். எந்த நிகழ்ச்சி அவரைக் கவர்ந்ததோ அதைக் கதையாக்கியுள்ளார். எந்த உணர்ச்சி ஏற்பட்டாலும் அந்த உணர்ச்சிக்கு உருவம் தந்துள்ளார். அந்த வகையில் இறையன்புவின் சிறுகதைகளில் இடம் பெற்றுள்ள உணர்ச்சித் திறத்தையும் உயிர்ப்புத் தன்மையையும் இக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.