இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள்

நா. பொ. செந்தில்குமார்

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி தமிழ் மொழி. இம்மொழியின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு இம்மொழியில் அமைந்துள்ள பொருள் இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்திற்குச் சான்றாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

சங்க காலத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அவ்வியற்கையைத் தாங்கள் படைத்த இலக்கியங்களிலும் பதிவு செய்து வந்துள்ளனர். ஆதலால்தான் இன்றளவிலும் சங்க இலக்கியங்கள் உயிரோட்டமாக விளங்கி வருகின்றன. இயற்கையோடு ஒன்றாத வாழ்க்கை அழகற்றது, உணர்வற்றது என்ற உண்மையை உணர்த்துவனாக உள்ளன.

இலக்கியம் என்பது மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. இது வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. மொழியை ஊடகமாகக் கொண்டு விளங்குகிறது. இலக்கியம் மனிதனை, மனிதநேயப் பண்புகளுடன் வாழ வழிவகை செய்கின்றது. மனித வாழ்க்கையை அழகாகச் சொல்லும் போது இலக்கியம் பிறக்கின்றது.

பண்டைத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான இடத்தினைத் தேர்வு செய்து அதனைத் தம் வாழிடமாக அமைத்துக் கொண்டனர். அவ்வாறு அமைந்த வாழிடங்கள் மலை, காடு, வயல், கடற்கரைப் பரப்பு என அவர்களின் உடல் உணர்விற்கு ஏற்றார் போல் அமைத்துக் கொண்டனர் என்பதை,

“மண்திணிந்த நிலனும்
நிலன்ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”

இன்றைய மனிதர்களைப் போல் இயற்கையை அளிக்காமல் இயற்கையைப் பேணிக் காத்து வந்தனர். தங்களின் வாழ்க்கைக்கு நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் அடிப்படையாக விளங்குவன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இதனை உணர்த்துவனவாக மேற்கண்ட பாடல் வரிகள் அமைந்துள்ளன.

சங்ககால மக்கள் தொழில்நுட்பத்துடனும் அழகியல் உணர்வுடனும், நிலத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்திருந்தனர். அத்தகைய எளிய மக்களின் உணவு, உடை, கல்வி, ஈகை, நம்பிக்கை, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை ஆய்வதாக உள்ளது.



அதிகாலையில் எழுதல்

சங்க கால எளிய மக்கள் உழைக்கும் வர்க்கத்தினைச் சார்ந்தவர்கள் இவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன் விழித்தெழுந்தனர். துயில் எழுவதற்கு சேவலின் கூவலும், பிற பறவைகளின் ஒலியும் துணை செய்தன. இவை மட்டும் அல்லாமல் அந்தணர்கள் ஓதும் மந்திர துதியும், இசைக்கலைஞர்கள் எழுப்பும் இசை ஒலியும் அரண்மனையில் ஒலிக்கும் முரசும் மக்களை விழித்தெழச் செய்தன.

“நான் மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம்பர் ஊர் துயிலே”

பொய்கையில் இசைபாடும் வண்டுகளைப் போல், அந்தணர்கள் வேதம் பாடத் தொடங்குகின்றனர். கோழியும் மற்றப் பறவைகளும் எழுப்பும் ஓசையைக் கேட்டு மக்கள் எழுகின்றனர். மதுரை நகரில் அந்தணர்களின் வேத ஒலியில் மக்கள் அதிகாலையில் துயில் எழுந்தனர் என்பதைப் பரிபாடலும், மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகின்றன.

தை நீராடுதல்

திருமணமாகாத இளம் கன்னிப் பெண்கள் மார்கழி மாதம் முழு நிலா நாள் தொடங்கி தை மாதம் முழு நிலா நாள் வரை நீராடி நோன்பு இருப்பர். இதனை ‘தை நீராடல்’ என்று அழைப்பர். இவ்வாறு நோன்பு இருக்கும் கன்னிப் பெண்கள் மரத்தால் ஆன பாவையை வைத்து வழிபடுவார்கள். இதன் பயனாக அவர்கள் விரும்பியவர்கள் கணவனாகக் கிடைக்கப் பெறுவார்கள் என்பது சங்க கால மகளிரின் நம்பிக்கை. இதனை,

“உண்டியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவர் எங்கணவர் ஆவார்”

என்ற திருவெம்பாவை பாடலும்,

“தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ”

என்ற கலித்தொகை பாடல் வரியும் குறிப்பிடுவதைக் காணலாம்.



உணவு முறைகள்

சங்க கால மக்களின் பண்பாடுகளில், உணவுப் பொருட்கள், அவர்கள் உட்கொள்ளும் உணவு முறைகளும் முக்கியப் பங்கு பெறுகின்றன. அவர்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும் பருவகால மாற்றத்திற்கு ஏற்றவாறும், அவர்கள் செய்யும் உற்பத்தி முறைகளுக்கு ஏற்றவாறும் உணவு அமைகின்றது.

சங்க இலக்கியம் உணவு என்பது ‘நிலத்தொடு நீரே’ என்று குறிப்பிடுகிறது. பழந்தமிழர்கள் இயற்கையாகக் கிடைக்கப் பெற்ற தாவரங்களையும், உயிரினங்களையும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தினர். அவர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருந்தன. மா, பலா, வாழை போன்ற பழ வகைகளும், அவரை, துவரை, தினை, வரகு, சாமை போன்ற சிறு தானிய பயறு வகைகளும், உணவுப் பொருட்களாக விளங்கின. இதன் காரணமாக அக்கால மக்கள் கட்டான உடல் அழகுடன், நோயற்ற வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தேன், கிழங்கு, பன்றியின் இறைச்சி போன்ற உணவுகளை ஓலையால் செய்யப்பட்ட வட்டிலில் இட்டு உட்கொண்டுள்ளனர்.

“கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும்”

என்ற புறப்பாடலின் வழி இதனை அறியலாம்.

மேலும், மலைப் பகுதியில் வாழ்ந்த குறவர்கள் உடும்பு, மான், பன்றி ஆகியவற்றின் இறைச்சியையும் உணவாக உட்கொண்டனர். தேன், கள்ளுடன் பலாக்கொட்டையின் மாவும் அவற்றில் பாலும் சேர்த்து மூங்கில் குழாய்களில் இட்டு முதிர வைத்து உண்டனர் என்றும், இவர்கள் இறைச்சியின் பொரியலையும், சிறிய தினைச் சோற்றையும் உணவாக உண்டனர் என்றும் மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. இதனை,

“கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்”

என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம். மேலும்,

“இருந்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
கவைத் தாள் அலவின் கவலையொடு பெறுவிர்”

என்று சிறுபாணாற்றுப்படையும் குறிப்பிடுகின்றது.



ஆடைகள்

மனிதச் சமுதாயத்திற்கு ஆடை மிக இன்றியமையாததாகத் திகழ்கிறது. ஏனென்றால், மனிதனின் மானத்தை மறைக்கும் கருவி ஆடை. இதனை, ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி மூலம் அறியலாம். ஆடைகள் மனிதனின் பண்பையும், அவன் பெற்றுள்ள பொருளாதாரச் சிறப்பினையும் பிரதிபலிப்பனவாக உள்ளன. சங்க காலத்தில் ஆடையை “உடை, தழை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, போர்வை, காழகம், கச்சம், கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், புங்கரை நிலம், உத்தரீயம், கம்பலம், கவசம், தூசு, மடிவை, சிதர்வை, சிதவல், வார், மெய்ப்பை, மெய்ம்மறை, பட்டகம், நூல், பக்குடுக்கை” எனப் பலவாறு அழைத்துள்ளனர்.

கல்வி

உலக உயிரினங்களில் தலைச்சிறந்த இனம் மனித இனம். ஏனென்றால் நல்லது, கெட்டது என்று வகை பிரித்துப் பார்க்கும் பகுத்தறியும் குணம் படைத்தவன் மனிதன். மனிதனின் அறிவின் வளர்ச்சிக்கு முதன்மையானதும், அடிப்படையானதும் கல்வி, விலங்கு நிலையில் இருக்கும் மனிதனைப் பகுத்தறியும் தன்மைக்குப் பக்குவப்படுத்துவது கல்வி. கல்வியானது கற்பவரின் சிந்தனையைத் தூண்ட வேண்டும். தன்னம்பிக்கை, ஆளுமை, சேவை, மனிதநேயம் போன்றவற்றைத் தர வேண்டும். அத்தகைய கல்வியை மனித இனம் கசடற கற்க வேண்டும். ஆதலால் தான் வள்ளுவர்,

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக”

என்று கல்வியின் பெருமையை உலகிற்குப் பறைசாட்டுகிறார்.

சங்க காலத்தில் அரசு, பள்ளிகளை நடத்தியதாகச் சான்றுகள் காணப்படவில்லை. இன்றைய தனியார் பள்ளிகள் போல், ஆசிரியர்களே நடத்திய திண்ணைப் பள்ளிகள் தான் செயல் பெற்று வந்துள்ளன. மரத்தடியும், ஆசிரியர் வீடும், ஊர்ப் பொது இடமும் பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. அன்றைய காலத்தில் “நக்கீரனின் தந்தை மதுரை கணக்காயர் பெரிய ஆசிரியராக விளங்கி இருக்க வேண்டும். மேலும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை பாலாசிரியர், சேந்தங்கொற்றனார், நப்பாலானர், கிடங்கில் குலபதி, நக்கண்ணார் என்பவர்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.

கல்வியானது ஒரு கால எல்லைக்குள் அடங்குவது அன்று. அது எல்லையற்ற பரப்புடையது. கல்வியை ஒருவன் வாழ்நாள் முழுவதும் கற்காலம். அது சாதி வேறுபாட்டைக் களையக் கூடிய கருவியாகச் செயல்படவல்லது. அது அறிவுக்கடலைத் திறக்கும் சாவி, ஆதலால் தான் ஆரியப் படை கடந்த பாண்டிய நெருஞ்செழியன்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”

என்று அத்தகைய கல்வியைப் பிச்சை எடுத்தாவது கற்றல் வேண்டும் என்று குறிப்பிடுகிறான்.


கலை

பண்டைத் தமிழர்களிடையே கல்வியறிவுடன் கலை உணர்வும் கலந்திருந்தது. தங்கள் மனதில் தோன்றிய கற்பனை வளத்தினைக் கலையாக வெளிப்படுத்தினர். கலை என்னும் சொல் ‘கல்’ என்னும் ஏவல் பகுதியில் இருந்து வந்ததாகும். கல்வி என்ற சொல்லிற்கு இதுவே முதனிலையாகும்.

கலைகளில் கவின் கலை, நுண் கலை, நற்கலை, அழகுக் கலை எனப் பலப் பெயர்கள் உண்டு. மேலும், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் போன்றவை தமிழரின் அழகுக் கலையில் முக்கியப் பங்கு பெறுவன ஆகும். பண்டைத் தமிழர்கள் ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகின்றனர். இதனை,

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்”

என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.

தமிழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பினை கோவில், அரண்மனை, மதில், வீடுகள் ஆகியவற்றின் வழியே அறியலாம்.

விருந்தோம்பல்

பண்டைத் தமிழரிடம் விருந்தோம்பல் பண்பாடு சிறப்பாக அமையப் பெற்றிருந்தது. இப்பண்பாடு தமிழரின் இல்லற வாழ்க்கையை அளக்க உதவும் அளவு கோலாகவும் விளங்குகின்றது. தாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அதனை, தம்மை நாடி வந்த விருந்தினர்களுக்கும் கொடுத்து தாமும் உண்டு மகிழ்ந்தனர். தெரிந்த உறவினர்கள் மட்டும் அன்றி முன்பின் தெரியாத அயலவர்களுக்கும் உணவிட்டு அகம் மகிழ்ந்திருந்தனர்.

விருந்தோம்பல் பண்பு இல்லற மகளிரின் இன்றியமையாப் பண்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. பெண்ணிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியர் விருந்தோம்பல் பண்பாட்டையும் சேர்த்து ‘விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்’ என்று குறிப்பிடுகிறார்.

தங்களின் இல்லத்திற்கு விருந்தினர் தினந்தோறும் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று விருந்தை எதிர்நோக்கும் தமிழ் மக்கள் அன்று இருந்தனர். இரவு பகல் என்று பாராமல் எப்பொழுதும் விருந்தினர் வரவை எதிர்நோக்கி இருந்தனர்.

“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்இயற் குறுமகள்”

தங்கள் வீட்டில் உணவுப் பொருள்கள் குறைவாக இருந்தாலும், அவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல் வரும் விருந்தினர்களின் மனம் கோணாமல் விருந்து படைக்கும் இயல்பினராய் தமிழர்கள் விளங்கினர் என்பதை,

“... ... ... ... ... உள்ளது
தவச் சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
நீள் நெடும் பந்தர் ஊன்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போல”

என்ற புறப்பாடல் வழி அறியலாம்.

அதியமானின் விருந்தோம்பல் பண்பினை ஔவை குறிப்பிடும் போது, அவனைத் தேடி வருவோர்கள் ஒரு நாள் சென்றாலும், அதற்கு அடுத்த நாள் சென்றாலும், அவருடன் பலரை அழைத்துக் கொண்டு சென்றாலும் முதல் நாள் எத்தகைய முகமலர்ச்சியுடன் வரவேற்றானோ, அதே முகமலர்ச்சியோடு எல்லா நாளிலும் வரவேற்று உபசரிப்பான் என்று குறிப்பிடுகிறார். இதனை,

“ஒரு நாள் செல்லாம் இரு நாள் செல்லலாம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ”

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

ஈகை

ஈகை என்பது பொருள் உடையவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குவது. இது எவ்வித எதிர்பார்ப்பும், திரும்பப் பெறும் தன்மையும் அற்றது. உலகத்தாற் போற்றும் அறங்களில் முதன்மை இடம் பெறுவது, அறங்களில் சிறந்தது, மனித நேயத்தின் அடிப்படையாகத் திகழ்வது ஈகைப் பண்பு.

“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே துப்புந பலவே”

பிறர்க்குக் கொடுத்து தானும் உண்டு வாழ்வதே வாழ்க்கை. ஈகை குணம் தனி மனிதச் சிந்தனையில் தோன்றி சமுதாயப் பயனுடையதாக அமைகின்றது. வறுமையில் வாடும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும் போது அச்செயல் உயர்ந்தாகக் கருதப்படுகிறது. ஆதலால் தான் உலக இன்பங்களில் ஈகை இன்பம் உயர்ந்ததாக உலகத்தார் போற்றுகின்றனர்.

வறுமையில் வாடும் புலவரான பெருஞ்சித்திரனார் தான் பெற்று வந்த பொருளைத் தன் மனைவியிடம் கொடுத்து, அதனைத் தம் சுற்றத்தார்க்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறார். இது தான் ஈகையின் பண்பு. இதனை,

“இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதிமனை கிழவோயே”

என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம். பாரி என்னும் ஒப்பற்ற வள்ளல். இவ்வுலகில் மாரிக்கு இணையாக ஈகை குணம் கொண்டவன் என்று புறம் குறிப்பிடுகின்றது. இதனை,

“... ... ... ... ... அறம் பூண்டு
பாரியும், பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே”

“பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே”

என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம்.


நட்பு

நட்பு என்பது ஒருவர்க்கு ஒருவர் உள்ளம் நெருங்கி எவ்விதக் கைமாறும் கருதாது பாசமுடன் பழகி வாழ்வது. இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் யாவும் தனித்து வாழ்வது இல்லை. ஒன்றுடன் ஒன்று ஏதோ ஒரு வகையில் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றன.

நட்பிற்கு எளிதில் திருக்குறளைக் காட்டிலும் பிறவற்றை உதாரணமாகக் கூற முடியாது. தன் உடை நெகிலும் போது அப்பொழுதே தன் கை சென்று உதவி செய்வது போல, நண்பனுக்குத் துன்பம் நேரும் போது உற்ற நண்பன் உடன் சென்று, அவனின் துன்பத்தினை நீக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

வள்ளுவரின் இக்கருத்தினையே பெருங்கதையும் வழி மொழிகிறது.

“உடையழி காலை உதவிய கைபோல
நடலை தீர்த்தல் நண்பனது இயல்பு”

நட்பு என்பது உள்ளத்தைத் திறந்து காட்டுவதாக இருக்க வேண்டும். இது தான் உலகிலேயே உன்னதமான நட்பு. ஒருவன் தன்னுடைய உள்ளத்தைத் தன் நண்பனுக்குத் திறந்து காட்டும்போது நட்பு மேலும் இரட்டிப்பாகிறது. இதற்கு முன்னுதாரணமாக விளங்குபவன் அனுமன். இன்றும் பேச்சு வழக்கில், “நான் அனுமன் அல்ல, என் உள்ளத்தைத் திறந்து காட்ட” என்று குறிப்பிடுவதைக் காணலாம். இதனை,

“எந்தை! வாழி ஆதனுங்க! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே”

என்று ஆத்திரையனார் என்னும் புலவர் கூற்றாகப் புறம் சுட்டுகிறது.

காதல்

உலக இயக்கத்திற்கு அடிப்படையானது காதல். இரண்டு உள்ளங்கள் இணைவது காதல். இரு உயிர்களிடையே ஏற்படும் அன்புணர்வு காதல் என்றாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் அன்புணர்வே காதல் என்று இன்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

காதல் கண்களில் அரும்பி இதயத்தில் மலரும் பூவாக விளங்குகிறது. இதனைத் தொல்காப்பியர்,

“நாட்டம் இரண்டும் அறிவு உடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்”

என்று குறிப்பிடுகிறார்.

கண்களின் வழியே மலர்ந்த காதல் பூ உடலில் புகுந்து மனம் வீசும் தன்மை கொண்டது. காதலில் வயப்பட்ட தலைவி தன் தலைவனோடு தான் கொண்ட காதலைக் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறாள்.

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவுவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

இங்கு தலைவி தன் காதலின் அகலத்தையும், உயரத்தையும், ஆழத்தையும் குறிப்பிடுகின்றாள்.

திருமணம்

இருமனங்கள் இணைவதைத் திருமணம் என்று குறிப்பிடுகின்றனர். மனித வாழ்க்கையில் இது ஒரு இன்றியமையாத நிகழ்வாகும். தனி மனிதனைச் சமுதாயத்தின் உறுப்பினராக அங்கீகரிக்கும் தகுதியாக விளங்குகிறது. ஆதலால் தான் திருமண உறவு முறை முக்கியத்துவம் பெறுகிறது. களவில் இணைந்த தலைமக்கள் இடையே கருத்து வேறுபாடு தோன்றியப்பின் கரணம் தோன்றியது என்று திருமணத் தோற்றம் குறித்து தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

என்ற நூற்பா மூலம் அறியலாம்.

களவினைக் கைக்கொண்ட காதலர்கள் ஊரில் தொடர்ந்து இருப்பினும் அல்லது உடன் போக்கில் ஊரை விட்டுச் சென்றாலும் ‘திருமணம்’ என்ற நிலைக்கு உட்பட்டு கணவன் மனைவி எனப் பலர் போற்ற வாழ்ந்தனர். திருமணம் பெற்றோர்களால் நிச்சயித்தும் அல்லது தலைமக்கள் தாமே எதிர்பட்டும் செய்து கொண்டனர். இந்நிகழ்வு இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


போர்

சங்க காலத் தமிழகம் மூன்று பேரரசர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது. இவர்களிடையே ஓயாது போர்கள் நிகழ்ந்த வண்ணமிருந்தன. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். மண்ணாசை, புகழ், போரில் இறப்பவர்கள் வீர சுவர்க்கம் பெறுவர் என்ற நம்பிக்கை, பேரரசனாக நாட்டை ஆள வேண்டும் என்ற பேராசை. பெண் மீது இருக்கும் மோகம் எனப் பலக் காரணங்களைக் கூறலாம்.

வாழ்க்கையில் நிகழும் பிற நிகழ்வுகளைப் போலப் போரையும், ஒரு சமய நிலைக்கு உயர்த்தி அதற்குக் கொற்றவை என்றொரு தெய்வத்தினை உருவாக்கி சங்கத் தமிழர்கள் வணங்கினர். போர்தான் அனைத்திற்கும் முதன்மையானது என்று நினைத்திருந்தனர் என்பதால் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்று வருதலும், புண்ணொடு வருதலும் மகிழ்ச்சியாகக் கருதினர் என்பதைப் புறப்பொருள் மூலம் அறியலாம். இதனை,

“மண்ணோடு புகழ் நிறீஇப்
புண்ணொடு தான் வந்தன்று”

என்ற புண்ணொடு வருதல் துறை விளக்குகிறது.

இவ்வாறு போரிலும் ஒரு வகையான அறத்தைக் கடைபிடித்தனர் பழந்தமிழர்கள்.

விழாக்கள்

மக்களின் வாழ்க்கையில் சோர்வினைப் போக்கி இன்பமும், மலர்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படுத்துவதாக விழாக்கள் அமைவன. இவற்றின் நோக்கம் மக்களை ஒன்றுபடுத்தித் துன்பத்தை மறக்கச் செய்து அவர்களிடையே இன்பத்தினை ஏற்படுத்துவதாகும்.

விழாக்கள் அக்கால மக்களின் கலாச்சாரப் பண்பாட்டினை எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன. தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

அவற்றுள் சில சமயத் தொடற்பானவை சில சமூகத் தொடர்புடையவை. நகரங்கள் ‘விழவு’ மேம்பட்ட பழவிறல் மூதூர் என்று பாராட்டப் பெற்றுள்ளன. பாணர், கூத்தர் முதலியக் கலைஞர்கள் விழாக்களில் ஆடியும், பாடியும் மக்களை மகிழ்வித்துள்ளனர்.

பண்டைய இலக்கியங்கள் விழாவினை ‘விழவு’, ‘விழா’, ‘சாறு’ என்ற சொற்களால் குறிப்பிடுகின்றன. இதனை,

“அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழிஇலர் ஆயினும் பலர்புறங் கூறும்”

என்ற அகநானூறு பாடல் வழியே அறியலாம்.

மேற்கண்டவாறு பண்டைய காலத்தமிழர்களின் வாழ்வியல் முறைகள் சிறப்பாக அமைந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p70.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License