குழ.கதிரேசன் குழந்தைப் பாடல்களில் அறிவியல்
கௌ. பெருமாள்
முன்னுரை
இறைவன் படைப்பில் இவ்வுலகத்தைக் கண்டோம். பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்றே இவ்வுலகத்தை நாம் கடந்து விட்ட போதும் ”அறிவை வளர்த்தோம்” என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிலரே இவ்வையகத்தில் அறிவியல் சாதனை படைத்து, இறந்தும் இறக்காமல் வாழ்ந்து வருகின்றனர். பூமியை அறிந்த நாளிலிருந்தே மனிதன் ஒவ்வொன்றையும் தன் அறிவால், அறிவியலைக் கவர்ந்தவனாய், அதனை நோக்கிச் செல்லப் பயணித்தான். ”அவனின்றி அசையாது உலகம்” என்ற சான்றோர் பொன்மொழியைக் கூட ”அணுவின்றி இயங்காது உலகம்” என மாற்றிவிட்டான். அறிவியலைக் கொண்டு, நாகரிகத்தை மாற்றிக் கொண்டான். குறுகிய காலத்தில் தகவல்தொடர்பு, பொருளாதாரப் பரிமாற்றம், விவசாயம், தொழில்நுட்பம் இப்படிப் பற்பல சாதனைகளைப் படைத்து, இன்று இறைவனின் துகள்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறான். அதிலும் குழந்தைப் பருவத்திலேயே, அறிவியல் அவர்களின் சின்னஞ்சிறு மூளைக்குள்ளும் புகுந்து எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளன. அந்த மழழைச் செல்வங்களிடத்தே ஆர்வம் பெருகிவருவதைத் தொடர்ந்து, அறிவியல் செய்திகளை உள்ளடக்கிப் பல்வேறு குழந்தை இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அவ்வகையில் சிறுவர்களின் முன்னேற்றத்திற்காக "குழ. கதிரேசன் அவர்கள், குழந்தை இலக்கியப் பாடல்களில் அறிவியல்” செய்திகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
அறிவியல்
ஒரு காலத்தில் அறிவைக் குறிப்பிடப் பயன்பட்ட, இந்த ”சைன்ஸ்” என்ற வார்த்தை இலத்தீன் சொல்லிலிருந்து ”சையின்ஷியா” என்றே பிறந்ததாகும். இதன் பொருள் அறிவியல் என்று நம்மால் அறியப்பட்டது.
அறிவியல் அறிஞர்கள்
அன்று நிலவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மனிதன், பின்பு அதை ஆராய்ந்தான்; அருகில் சென்றான்; அடியெடுத்து வைத்தான்; முடிவு கொண்டுள்ளான். இப்படி அறிவியல் திறனை வளர்த்த எத்தனையோ மாமேதைகள் அவ்வப்போது தம் திறமையை நிரூபிக்கத் தயங்கியதில்லை. 1930 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் அவர்கள், 1928 ல் ரூபாய் 200/- செலவில் "ஸ்பெக்ராஸ் கோபி" என்ற கருவியை கண்டுபிடித்தார். இப்பாரதத் திருநாட்டில் பிறந்த அந்த மேதை 1948 ல் இராமன் இயற்பியல் மையத்தைத் தொடங்கினார். 1954 ல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அடுத்த இம்மண்ணின் மைந்தன், தாய்மொழி தமிழிலேயே பயின்று அறிவியல் துறையில் சாதனைப்படைத்து, அண்டை நாடுகளை நம் தாய் திருநாட்டின்மீது பார்வையைச் செலுத்தவைத்த டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களை மறக்க முடியுமா? சிறு வயதிலேயே "தண்ணீரில் நீர்க்குமிழி ஏன் வருகிறது?” என்று அவர் எழுப்பிய முதல் கேள்வி. அறிவியல் அவரின் மூளையைத் தட்டிவிட்டது. தலைக்கு மேல் செல்லும் விமானமும், எட்டா தூரம் உள்ள ஆகாயமும், அவரை மேல்நோக்கிப் பார்க்க வைத்தது. அதன் விளைவுதான் பாரதத்தாய்க்கு ஒரு விஞ்ஞானியைப் பிறக்கச் செய்தது. குழந்தைப் பருவமும் குறும்புச் சிரிப்பும் கலாம் அவர்களுக்குப் பிடித்த குதூகலமாகும். அறிவியல் திறனை மழலைப் பருவத்திலேயே பள்ளியில் ஆசிரியர் மூலமாக வளர்த்துக்கொண்டார். மாணவர்களிடத்தே அன்பு கொண்டார், ஆசிரியரானார், அறிவை வளர்த்தார். இந்திய இராணுவத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். “திரிசூல், அக்னி, பிருத்வீ, நாக், ஆகாஷ்” போன்ற ஏவுகணைகளைப் பற்றி மாணவர்களிடத்தே கூறினார். 2002 முதல் 2007 வரை இந்தியக் குடியரசுப் பணியில் இருந்த போதும் தன்னம்பிக்கை, ஒழுக்கம், கல்வி, தேசப்பற்று, இப்படி நல்நெறிகளைச் சிறுவர்கள் மற்றும் மாணவர்களிடத்தே பகிர்ந்து கொண்டே இருந்தார். இம்மண்ணில் விதைந்த மாமனிதன், எடுத்த மூலதனம் அறிவியலே. அந்த அறிவியலைக் கவிஞர் குழ. கதிரேசன் அவர்கள் தம் பாடல்களில் பதிய வைத்து நம் மழலைகளுக்கு உணவாக ஊட்டி விளையாடும் தன்மைகளைப் பார்ப்போம்.
கவிஞர் குழ. கதிரேசனின் அறிவியல் பார்வை
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" (குறள் -400)
கல்விதான் உயர்ந்த செல்வம் என்ற வள்ளுவரின் கருத்துக்கு ஏற்ப குழ. கதிரேசன் அவர்கள் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அவர்களின் எதிர்காலம் மேன்மை பெறவும் சிறுவர்களின் மனதில் அறிவு, ஒழுக்கம், நல்ல சிந்தனை ஆகியவை பசுமரத்தாணிப்போல் பதியும் என்பதற்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சிறுவர்களுக்கான பாடல்களை எழுதி வருகிறார். மனித முயற்சியால் உருவாக்கப்படும் பொருள்கள் செயற்கைப் பொருள்களாகும். மனிதன் தன் தேவையைக் கருதி அவ்வப்போது புதிய புதிய பொருள்களைப் படைத்து பயன் பெறுகிறான். புதியதாகப் படைக்கப்படும் மனித ஆற்றலுக்கும், அறிவு வளர்ச்சிக்கும் சான்றாகத் திகழ்வன. கப்பல், மின்சார ரயில், தொலைக்காட்சி, மோட்டார் சைக்கிள், கணிப்பொறி, கடிகாரம், ஆட்டோ, தொலைபேசி, செய்தித்தாள், புகைவண்டி, நூலகம், நாட்காட்டி முதலிய அறிவியல் விளைந்த அற்புதப் பொருள்கள் பற்றி கவிஞர் குழ. கதிரேசன் பல பாடல்களைப் புனைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி உலகச் செய்திகளை அறிய உதவும் சாதனம் என்பதைக் கருத்தில் கொண்டு கவிஞர் தம் பாடலில்,
"உலக நடப்பை ஒரு நொடியில்
வீட்டிலிருந்து பார்க்கலாம்
தமது அறிவைப் படிப்படியாய்
நாளும் இதனால் வளர்க்கலாம்
பல மொழியில் திரைப்படங்கள்
பார்த்து நாமும் மகிழலாம்" (1)
என்று குறிப்பிடுகிறார். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் தொலைக்காட்சியைக் கண்டு நாட்டில் நடக்கும் செய்திகளை வீட்டில் இருந்தபடியே அறிவர். சிறுவர்களுக்கான குட்டிச் சுட்டி, கிருஷ்ணர் குழந்தைப் பருவ நாடகம், சிறுவர்களுக்கான கதைகள், பறவை, விலங்கு இயற்கை, மற்றும் செயற்கை பற்றிய செய்திகள், பல மொழிகளில் திரைப்படங்கள், பொது அறிவு, நாட்டில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள், பழங்கால வரலாற்று நாடகங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கண்டுணர பயன்படுவதை, தொலைக்காட்சியின் சிறப்பினைக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி
உலகச் செய்திகளை நாம் இருந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் ஒரு நிமிடத்தில் தெரியப்படுத்தலாம். இத்தகைய தொலைபேசியைப் பற்றி கவிஞர்,
"கிரிங் கிரிங் கிரிங் கிரிங் தொலைபேசி
கூவி என்னை அழைத்திடும்,
காதில் வைப்பேன் தொலைபேசி
ஹலோ என்றே சொல்லிடும்" (2)
என்று பாடுகிறார். ஒரு சிறுவன் தொலைபேசி மணி ஒலித்ததைப் பார்த்து, காதில் எடுத்து வைத்துப் பேசுவதாகவும், தொலைவில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருப்பவர், தொலைபேசியில் பேசுவதை எண்ணுவதாகவும், தொலைபேசியின் அவசியத்தையும், அறிவியலின் வளர்ச்சியையும் கவிஞர் குழ. கதிரேசன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி என்பது அனைத்துச் செயல்களுக்கும் அவசியமான ஒரு கருவியாக செயல்படுகிறது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய சாதனமாக திகழ்கிறது. தொலைபேசி இல்லையென்றால் நாட்டில் எந்தப் பணியும் சீராகச் செயல்படாது என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் திசம்பர் திங்களில் வடகிழக்குப் பருவமழை, தமிழ் மாநிலத்தில் சென்னை உள்பட கடலோரப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது ஏராளமான பொருட்கள் பாதிப்படைந்தது. தொலைபேசி மற்றும் இணையம் இயங்காமல் மக்களுக்கு பெரும் பாதிப்பைத் தந்துள்ளன. இத்தகையச் சூழ்நிலையைக் கண்டு இந்தியாவில் சில மாநிலங்கள் உதவிகள் செய்தன. டி.வி.எஸ் உள்பட சில தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு உதவிகள் செய்தன. வானூர்தியின் மூலம் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. வரலாற்றிலே இத்தகைய இயற்கைச் சீற்றத்தை மக்கள் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணிப்பொறி
இன்று எல்லா இடங்களையும் கணிப்பொறிஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அறிவியலால் விளைந்த ஒன்றே கணிப்பொறி. வாணிபம் செய்யவும், படம் வரையவும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்விற்கான பாடப் புத்தகங்களைப் பயன்படுத்துவதற்கும், தேர்விற்கான நுழைவுச் சீட்டை எடுக்கவும், வெளியூர் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்யவும், உலகில் உள்ள அனைத்து பகுதிகளையும் கண்டறியவும், விண்ணில் ஏவுகணை உள்ள இடத்தைத் தெரிவிக்கவும், எல்லா விவரங்களையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு, கேட்கும்போது எழுத்து வடிவில் கொடுக்குமாம். இப்படிப் பல நிலைகளில் கணிப்பொறி பயன்படுவதைக் கவிஞர் தம் பாடலில்,
"கணிப்பொறி எங்கும் கணிப்பொறி
கணக்கிடுவதிலே புலிப்பொறி
படமும் வரைந்து காட்டுமாம்
பாட்டுக்கு இசையைக் கூட்டுமாம்
ஏவுகணை வானத்தில்
இருக்குமிடம் சொல்லுமாம்,
மறக்காமல் நாம் சொல்வதை
மனத்தில் வாங்கிக் கொள்ளுமாம்” (3)
என்று குறிப்பிடுகிறார். இப்படிப் பல நிலைகளில் கணிப்பொறி நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும், பயன்படுவதாக அறிவியலின் முன்னேற்றத்தினைக் கவிஞர் குழ. கதிரேசன் பாடல் புனைந்துள்ளார்.
மின்சாரத் தொடருந்து
மின்சாரத் தொடருந்து மின்னல் வேகம் ஓடும், இரவு பகல் எப்போதும் மனிதரைச் சுமந்து செல்லும், கண் இமைக்கும் நேரத்தில் காற்றாய்ப் பறந்து செல்லும், குறித்த நேரத்தில் சென்றுவிடும் என்பதைக் கவிஞர்,
"மின்சாரத்தில் தொடர் வண்டி
மின்னல் போல ஓடுதே,
கண்ணை இமைக்கும் நேரத்தில்
காற்றாய் பறந்து போகுதே" (4)
என்கிறார். இத்தகைய அறிவியலின் கண்டுபிடிப்புகளால் மக்களுக்குப் பயன்படும் வகையில் சிறுவர்களும் பெரியோர்களும் விரும்பி பயணம் செய்வார்கள் என்பதால், மின்சாரத் தொடர்வண்டி உருவாக்கப்பட்டதின் சிறப்பினைக் கவிஞர் பாடலாகப் புனைந்துள்ளார்.
இரு சக்கர விசையுந்து
நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் சென்று சேர்ந்துவிடலாம். இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அதிவேகமாக சென்றால் ஆபத்தில் முடியும். எல்லா வண்டிகளையும் முந்திச் செல்லும். சிறுவர்கள் பயணம் செய்யும்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டு செல்வர். எரிபொருள் பெருமளவில் செலவாகின்றன. கிராமங்களில் பேருந்து வசதி குறைவாக உள்ள இடங்களில் மிகவும் பயன்படுகின்றன. இத்தகைய இரு சக்கர வாகனங்களின் சிறப்பினைக் கவிஞர் தம் பாடலில்
"வயிறு நிறையப் பெட்ரோலை
வாங்கி வாங்கி குடிக்குமாம்,
விரைவாய்ச் சென்றால் மீட்டர்முள்
வேகம் கண்டு துடிக்குமாம்" (5)
என்று குறிப்பிடுகிறார். இன்று இருசக்கர விசையுந்து (மோட்டார் சைக்கிள்) பெருமளவில் பெருகியுள்ளன. இதன் பயனை அனைவரும் அறிவர். போக்குவரத்து வாகன நெருக்கடியில் குறுக்கு வழியிலும், சிறு சாலைகளிலும், வளைவுகளிலும் புகுந்து செல்வதற்கு எளிமையாக இருக்கும். பெருநகரத்திற்குள்ளும், கிராமத்திற்குள்ளும் வாழும் மக்களுக்கு இருசக்கர விசையுந்துகளே சிறந்தது என்பதைக் கருத்தில் கொண்டு அறிவியலின் வழியே கண்டறிந்ததைக் கவிஞர் குழ. கதிரேசன் பாடல் புனைந்துள்ளார்.
முடிவுரை
நாட்டின் வளர்ச்சிக்காகவும், சிறுவர்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகம் விரைவாகச் செயல்படவும், மக்களின் வாழ்க்கைத் தேவைக்காகவும், அறிவியல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கவிஞர் குழ.கதிரேசன் அவர்கள் சிறுவர்களுக்காகவே பாடல் எழுதி வருகிறார், என்பது குறித்து இக்கட்டுரையின் மூலம் அறிந்தோம்.
அடிக் குறிப்புகள்
1. குழ. கதிரேசன் பள்ளிக்கூட வெள்ளாடு. பக்-51
2. குழ. கதிரேசன் மழலைப் பூக்கள். பக்-7
3. குழ. கதிரேசன் சிரிக்கும் மழலை. பக்-20
4. குழ. கதிரேசன் மழலைத்தேன். பக்-12
5. குழ. கதிரேசன் சிரிக்கும் மழலை. பக்-5.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|