பெண்களின் சிந்தனைகள் குறித்த சமுதாயப்பார்வை
ப. உமாதேவி
சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை பெண்கள் பல்வேறு பரிணாமங்களில் தங்களின் உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துக்களை, இலக்கியங்கள் சுட்டுகின்றன. மேலும் நட்பு, வீரம், விளையாட்டு, ஆட்சித்திறன், இல்லறம், துறவறம் என்று பெண்கள் எத்திசையிலும் எங்கெங்கும் சக்தியின் வடிவமாக உள்ளதை “எங்கெங்கு காணிணும் சக்தியடா” என்று பாடிப் பரவசம் அடைந்தவர் மகாகவிபாரதி. அந்த வகையில் பெண்களின் சிந்தனைகள் குறித்த சமுதாயப் பார்வையைக் காண்போம்.
பெண்களின் சிறப்பு
மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா – என்ற கவிமணியின் வாக்கு, உலகம் தோன்றி, யுகங்கள் தோன்றி, உயிர்கள் யாவும் தோன்றிய பின் மானிட குலத்துக்குப் பெரிதும் உதவும் வகையாகத்தான் பெண்ணைப் படைத்தான் இறைவன். பெண் என்ற இரண்டு எழுத்துச் சொல்லைச் உச்சரித்துப் பாருங்கள், குறுகிய ஓசையுடைய சொல் பெண்ணும் அவ்வாறே குறுகிய ஓசையுடையவள் அது மட்டுமல்ல உயிர் மெய்யை முதலாகக் கொண்டவள். உயிர் (சக்தி) மெய் (சிவம்) உயிர்மெய்யாய் ஆணுடன் இணைந்து உயிர்மெய் ஆகி இல்லறத்தின் அன்புப் பரிசாக வாரிசைப் பெற்றெடுக்கிறாள். குழந்தைச் செல்வத்தை ஆண் என்ற இரண்டெழுத்து சொல்லிள் சரிபாதியைத் தன்னுல் அடக்கியும் அடங்கியும் ஆள்பவள். ஆண்டவன் மனிதனுக்குக் கொடுத்த விலையுயர்ந்த பரிசுபொருள் பெண் என்றால் மிகையாகாது. எங்கெல்லாம் மகிழ்ச்சி உண்டோ அங்கெல்லாம் ஒரு பெண் இருப்பாள். எங்கெல்லாம் தூய்மை இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்தான் முன்னிலையில் இருப்பாள். பெண்தான் மனித வர்க்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமானவள். வாழ்க்கையைப் படைப்பவளே பெண்தான் அன்பு என்பது என்ன என்பதை உணர்த்துபவளும் அவளை கண்டதும் பாசம், நேசம் எல்லாம் அவளே. பெண்ணின் பெருமை தாய்மையில் சிறப்படைகிறது.
பெண்மையானது தூய்மையின் அன்பில் ஒருங்கிணைந்த உறவால் ஒரு புத்துயிரை இவ்வுலகத்திற்கு நன்முறையில் ஈன்று பேணிக் காப்பவள். கடமையில் விஞ்ச இந்தக் கணினி யுகத்திலும் யாருமில்லை. அனைத்து உயிர்களும் இந்த மண்ணில் நலமோடு வாழ வாழ்விக்கத் தேவை என நினைத்துப் படைத்த இனமே பெண் இனமாகும். பெண்ணினமே பெருஞ்சிறப்பு பெற்ற இனமாகும். அப்படிப்பட்ட பெண் இவ்வையத்தில் வாழும் வாழ்க்கை முறையில் கொண்ட பரிமாணங்கள் கோலங்கள், தாக்கங்கள், ஆக்கங்கள் பற்பல.
பாரதமும் பாவையரும்
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
என்ற குறளின் வரிகள் பெண்ணைப் பொறுமையெனும் நகையணிந்து அடங்கியும், அடக்கியும் ஆள்பவள் ஆகிறாள். ஒரு ஆண் பெண்ணை இழக்க விரும்புவதில்லை, அவனை மறுப்பதோ மறப்பதோ இல்லை அவளால் தான் வாழ்வில் மாற்றமும் எற்றமும், அதனால்தான் பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பதற்கிணங்க இப்பழமொழியைக் கூர்ந்து கவனிப்போமனால் பொதுவாகவே ஆணோ, பெண்ணோ ஒருவருடைய எண்ணம் எப்படியோ வாழ்வும் அப்படியே. அதனால்தான், கண் போன்ற கணவன் தன்னில் சரிபாதி ஆனவன் மற்றும் தன்னில் பிரதி பிம்பங்களான, ஆள மழலைச் செல்வங்கள் நன்கு வாழ நினைத்தால் அப்படிப்பட்ட பெண்ணின் மனம் தெளிந்த நீரோடைக்கு ஒப்பாகும்.
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது”
இக்குறட்பாவின வழியில் பெண்கள்தான் கொண்ட கொள்கைகளில் அலைபாயாது, குழம்பாது கல் போன்று திண்மையாக, உறுதியாக இருக்கிறார்கள். கற்பு என்பது உள்ளத்தில் உறுதியில் நிலைப்பட்டு, செயல் வடிவத்தின் உடலோடு இணைந்து விடும். மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் மனதில் தோன்றும் எண்ணம்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்.
இங்கு மனவியல் (உளவியல்) ரீதியாக பார்ப்போமானால் மனம் என்பது உருவம் இல்லாத ஒன்று, செயல் அனைத்திற்கும் அடித்தளம் அமைப்பது. மனம் தான் கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒரு ஆணையும் பெற்றெடுப்பவள் பெண்தானே, அவளின் வாழ்வு நெறி ஒட்டியே சமுதாய மாற்றங்கள் நிகழ்கின்றன. மற்றொரு கோணத்தில் பார்த்தால் கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை அதாவது சொன்னசொல் வழுவாமல் மாறாமல் வாக்கைக் காப்பாற்றுவது.
சங்க இலக்கியங்களில் பெண்ணின் உயர்வு மாண்பு பல பாடல்களிலும் அறநூல்களில் விரிவாகவும் பேசப்பட்டுள்ளது. சங்க இலக்கியம் விருந்தோம்பல், ஈகை, நட்பு போன்ற எல்லாப் பண்புகளிலும் பெண்கள் மாண்புற விளங்கியதை அகநானூறு, புறநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை போன்ற நூல்களில் காணமுடிகிறது. ஆண்களை விடச் சிறப்பாக விளங்கிய பெண்பாற் புலவர்கள் ஔவையார், வெண்ணிக்குயத்தியார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
பெண்ணினத்தைப் பாராட்டுகின்ற விவேகானந்தர் நம் பாரதப் பெண்கள் போல் பாரில் எங்கும் காணமுடியாது. இவர்களின் தியாகங்கள் பொறுத்தாளும் குணம் உலகப் பெண்டிர்களைப் பிரமிக்க வைக்கிறது. எனவே தான் எங்கோ பிறந்து வளர்ந்தவர் நிவேதிதா என்று பெயரிட்டு, இந்தியாவில் இந்தியப் பெண்களுக்காகப் பாடுபட்டவர். இந்திய மண் ஈர்த்து இழுத்த மற்றொரு பெண் அன்னிபெசன்ட் அம்மையார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சில் பிறந்து வளர்ந்த மிர்ரா என்ற பெண்மணி இந்திய மண்ணில் காலடி பதித்துப் புதுவையில் ஶ்ரீ அரவிந்தரோடு தோளோடு தோள் நின்று பெண்கல்வி, பெண் சுதந்திரம் மற்றும் பெண் விடுதலைக்குப் பெரிதும் பாடுபட்டவர். இவர்கள் எல்லாம் பாரதம் கண்ட பெண்மணிகள், பாரில் உயர்ந்த கண்மணிகள் தானே.
பெண்ணும் ஆணும்
மங்கலம் என்ப மனைமாட்சி என்றான் வள்ளுவன். புலன்களை தூய்மையாக்கி ஒரே மார்க்கத்தில் செல்வது, தர்மங்களைக் கடைப்பிடிப்பது, சமுதாயத்திற்கு பயனுடைய வாழ்வே. இவையெல்லாம் மக்களின் திருமணத்தில் மூன்று முக்கியமான உபதேசங்களின் இலக்கு,
1. அறவழியில் பொருளீட்டுதல்
2. நல்வழியில் செலவு செய்தல்
பெற்றெடுக்கும் பிள்ளைகளை அறவழியில் வளர்ப்பது இவற்றுக்கு ஒரு பெண் துணையாக இருப்பது. கடவுளாக இருந்தால் கூட எந்தத் தர்மக்காரியமும் பெண் (மனைவி) இல்லாமல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதில் பயன் இல்லை என்று வேதம் கூறுகிறது. பெண்ணுக்குரிய இடத்தை மதிப்பைப் புரிந்து கொண்டு நாம் செயலாற்ற வேண்டும். யாரோ சிலர் சாதி, மதவெறியர்கள், வேத புராணக் கருத்துக்களை அரைவேக்காட்டுத் தளத்தில் புரிந்து கொண்டு சம்பிரதாயங்கள், சடங்குகள் என்று பெண்ணைச் சிறுமைப் படுத்துகிறார்கள். இக்காட்சியைக் கண்ட மகாகவிபாரதி பொங்கி எழுந்து,
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்”
என்று சாடினார். ரௌத்திரம் பழகி சமுதாயச் சடங்குகளைச் சாடுகிறார். அத்தகைய பாரதியார் அறிவுக் கண்ணை திறக்க வைத்தவளும் ஒரு பெண். நிவேதிதா என்னும் ஆன்மீகவாதிதானே நம் இந்தியத் திருநாட்டில் தான் இறைவனைத் தாயாகவும், தாயை இறைவனாகவும் கருதும் உயரிய பண்பாடு இறைநெறியில் அளவு கடந்த காதல், பக்தி கொண்ட நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்களை நாயகியாக, பெண்களைத் தலைவியாகப் பாவித்து இறைவன் ஒருவனே உலக உயிர்களுக்குப் பெருமைத் தரக்கூடிய உன்னத புருஷன் என்று பாடிய பாடல்களே, நாலாயிர திவ்ய பிரபந்தம், நாயன்மார்கள் பாடிய தேவாரம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம்.
பெண் எப்போதும் அன்பால் யாரையும் தன் வயப்படுத்தி பாசவலைப் பின்னுவாள் என்பதும், இவர்கள் நாயகி நாயக பாவ பாடல்களால் நம் அறிவை விழிப்படைய வைக்கிறது. இதனால் பெண்மை போற்றப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. தன் மனைவியைத் தவிர பிற பெண்களை ஏரெடுத்துப் பார்ப்பது மாபாவம் என்று பல அறநூல்கள் கூறுகிறது. பெண்ணின் பல உறவுகளில் தாய் உறவுக்கு தனி மரியாதை உண்டு. அந்த உறக்கு ஏது எல்லை? என்று ஶ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார். மோசமான பிள்ளைகள் பிறக்கும். ஆனால் மோசமான தாய் இருக்கமாட்டாள் என்பதற்கு இக்கருத்து ஒன்றே போதாதா?
தாயன்பு தூய்மையானது அந்த தூய்மை ஆன்மீகத்தில் மலர்கின்றது. பெண்கள் தங்கள் குடும்பம் நலமுடன் வாழ கோவிலுக்கு செல்வதும் விரதங்கள் இருப்பதும் தான தர்மங்கள், செய்வதும் பெரிதளவு நடைபெறக் காரணம் பெண்கள் சக்தியின் ரூபமே என்று சக்தியை வழிபடுகின்ற காரணமும் இதுவாகத்தான் இருக்கமுடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.
இக்காலப் பெண்கள் ஆண்களுக்கு இணையாக, மேலாகப் பயின்று பொறியியலாளராகவும், விஞ்ஞானியாகவும் பலர் உலாவருகின்றனர். வரவேற்க வேண்டிய ஒன்றுதான் ஆனாலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைக் சான்றோன் என்று கேட்கும் தாய் என பெருமைப்படுவதே ஒரு பெண்ணுக்குரிய உண்மையான பணி. இதற்கு அவளுக்குத் துணையாக வருவது கல்வி என்னும் உணர்வு, ஊட்டி வளர்க்காத குழந்தைதான் பிறகு வாட்டி வதைக்கிறது. அன்பால் அரவணைத்து வளர்க்காத தாய்க்கே பிள்ளையின் வம்படி வழக்காடும் பிள்ளையும் பிறக்கிறது பொங்கி வரும் கங்கையான பெண்ணுக்குள் புதையுண்டிருக்கும் பாச ஊற்று பிரவாகமாகி சமுதாயத்தை நோக்கி ஓடி வரவேண்டும்.
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் கோட்பாட்டின்படி இவ்வுலகில் எதுவும் எல்லார்க்கும் கிடைத்து உயிர்கள் இன்புற்று வாழ்ந்திட பெண்கள் தான் அறத்தின் தூண்கள், பெண்தான் தான் வாழ்ந்து பிறர் வாழ்க்கைக்கும் வழிபாட்டிற்கும் சில தியாகங்களை செய்பவளும் பெண்களே.
மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்பது மணிமேகலைக் காப்பியம் உணர்த்தும் கருத்து அள்ளஅள்ளக் குறையாத அன்பும், பரிவும் வளர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.
ஏடறிவு, எழுத்தறிவு இல்லாத அனுபவ ஞானம் ஒன்றே மூலதனம் என்று அயராது உழைப்பு தரும், வெற்றி என்பதை நமக்கு உணர்த்திய சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மூதாட்டி சின்னப் பிள்ளை என்பவர். இவர் சாதனை இன்று சரித்திரமானது. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கிணங்க சிறுகச்சிறுக தன் கிராம மக்களிடம் நிதி திரட்டி, விவசாய வேலைகளுக்கும் கடன் கொடுத்து நாணயத்தை நிலை நிறுத்தி ஒரு நிதி நிறுவனமாகவே செயல்பட்டதால் பல நூறு குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டது. பாரதமே பணிந்தது இவரின் திருவடியில் என்றால் பெண்ணின் பெருமையை நாம் போற்றித்தான் பெருமைபட வேண்டும்.
சின்னப்பிள்ளை அம்மணியின் பாதங்களைத் தான் வணங்கி ஆசிபெற்றாரே நமது அன்புப் பிரதமர் திரு. அடல்பிஹாரி வாஜ்பேய் இவரின் இச்செய்கை பாரதப் பெண்டிரையே பெருமைபடுத்திய நிகழ்வல்லவா? விவேகானந்தரின் கூற்றுக்கு இவரின் உழைப்பே சான்றாகிறது.
பெண் என்பவள் அன்பு, அழகு, பொறுமை மட்டும் நிறைந்தவள் அல்ல. ஆற்றலும் மிக்கவள். மானிடப் பிறப்பால் உன்னதமானவற்றை, பெண்மையைப் போற்றுபவரும் உண்டு. தூற்றுபவரும் உண்டு. எனவே போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்பது போல புராண இலக்கியக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இந்நிலை தொடர்ந்து மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலையிலும் பெண்மை முன்வைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. பெண்மை பிறப்பிடம் மட்டுமல்ல ஆற்றலின் இருப்பிடம் என்றும் சொல்லலாம்.
“எங்கெங்கும் காணினும் சக்தியடா” என்ற பாரதியாரின் கூற்று உண்மையானது. அந்திப் பொழுதில் வானத்தை அன்னாந்து பார்த்ததன் விளைவு தான் வீரப்பெண் கல்பனாசாவ்லா வானோக்கிப் பறந்தாள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழ் இலக்கியத்தில் பெண்களின் சிறப்பு பாரதத்தில் பாவையரின் மேன்மை, ஆன்மீக வழியில் பெண்களின் ஆளுமை, இல்லறத்தில் நல்லறம் காணும் பண்பு, அன்பு, தாய்மை, ஒழுக்கம், பரிசு போன்ற பல பண்புகளைப் பெண்கள் பெற்றிருந்தும் ஆணுக்கு நிகராகப் பெண்கள் தங்களின் மேலான எண்ணங்களை, கடமைகளைச் செயலாற்றிக் காலம் காலமாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை இக்கட்டுரையின் தலையாயக் கருத்தாகச் சொல்லி நிறைவு செய்கிறேன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.