சூழலியல் பெண்ணியத் திறனாய்வு
முனைவர் மா. பத்மபிரியா

தந்தைவழிச் சமூகஅமைப்பில் பெண்கள் போர் அடிமையாகவும் பரிசுப்பொருளாகவும் அந்தப்புற அடிமையாகவும் சூதுப் பொருளாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனர். இன்றோ ஆண் - பெண் அதிகார முறையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இல்லறத்திற்குள்ளேயே ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பை தன் சுயத்தை மீட்டெடுக்க தனக்கான மொழியை வீரியத்துடன் கையாண்டுள்ளனர். பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்றவற்றில் தடம் பதித்ததால் அகவெளியை விட்டுப் புறவெளியைக் கண்டடைந்துள்ளனர். இலக்கியத் தாக்கத்தால் நடைமுறை வாழ்வைத் தமது படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். இன்றைய மகளிர் கவிதைகள் பிரபஞ்ச வெளியில் எந்த மூலையிலும் வாழுகின்றவர்களையும் வேறுவேறான மொழி பேசுகின்றவர்களையும் ‘பெண்உணர்வு’ என்ற கோட்பாட்டின் கீழ் கொண்டு வந்து பெண்உணர்வைப் பொதுமைப்படுத்துகின்றது. சமூகப் பண்பாட்டின் பாகுபாட்டினைத் தமது மீட்பியற் சிந்தனையால் மறுவாசிப்புச் செய்கின்றது. “மீட்சி என்பது தம் மீதான கட்டுப்பாடுகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவது எனக் கூறலாம். பெண்ணியக்கக் கோட்பாடானது பெண்கள் மீது செலுத்தி வரும் குடும்ப, சமூக வன்முறைகளை நீக்கி விடுவிப்பதாகப் பொருள் கூறுகிறது”. இத்தகைய மீட்சி சிந்தனையுடன் பெண்கள் விடுதலையும் தனித்துவத் தேடலும் கைகொண்டு பெண்ணைச் சுற்றியுள்ள மாயைகளை, அடக்குமுறையைச் சுரண்டலைத் தவிர்த்துப் புதியதொரு தேடலை மீட்டெடுத்துள்ளனர். மகளிர் கவிதைகளின் மீட்சித் சிந்தனைகள் 21- ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான வாழ்வியல் அறங்களையும் பதிவு செய்துள்ளன. அவற்றில் ஒன்றான சூழலியல் அறங்களை மகளிர் கவிதை வழி காணுதல் கட்டுரையின் நோக்கமாகும்.
சூழலியல் - விளக்கம்
‘சூழலியல் என்பது பஞ்சபூதங்களின் வினையாலனது’ என்பர். “இலக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவினைக் கற்பதே சூழலியல் திறனாய்வு” (1) என்று க. பஞ்சாங்கம் விளக்கமளிக்கின்றார். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமான தேவை யாதெனில் சுவாசிப்பதற்கு தூயகாற்று, பருகுவதற்கு தூயநீர், உண்பதற்கு ஊட்டச்சத்துகள் கொண்ட நல்ல உணவு ஆகும். மனிதனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையை வழங்குவது சூழலியல் தான்.
“ஒரு விலங்கு தன் சுற்றுச் சார்பை வெறுமனே பயன்படுத்த மட்டுமே செய்கின்றது. தனது இருத்தலால் மட்டுமே இதில் மாற்றங்களை உருவாக்குகின்றது. மனிதனோ தான் சூழலியலில் ஏற்படுத்தும் மாற்றங்களால் இயற்கையைத் தனக்கு ஊழியம் புரியும்படி செய்கிறான். இவ்வகையில் இயற்கைக்கு மனிதன் எசமானன் ஆகிறான்” (2) சூழியலைத் தனக்கு எசமானன் ஆக்கிக் கொண்ட மனிதன் காடுகளை அழித்தல், மணற்கொள்ளையில் ஈடுபடுதல், நிலத்தைத் தோண்டி கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், தொழிற்சாலைக் கழிவுகளால் நீரை மாசுபடுத்துதல், கார்பனேட் மற்றும் இன்னபிற நச்சு வாயுக்களை மறுசுழற்சி செய்யாது அப்படியே காற்றில் கலக்க விட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துதல், மண்ணில் செயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தி மண்ணை மலடாக்குதல் என்று சூழல் விழிப்புணர்வின்றி செயல்படுவதை அறிவுறுத்தி விழிப்புணர்வு தரும் சூழலியல் அறங்களை மகளிர் கவிதைகள் போதிக்கின்றன.
இயற்கைப் பாதுகாப்பு அறம்
பெண் - இயற்கை இரண்டையும் ஒரு சேர மீட்டெடுக்கும் இலக்குதான் ‘சுற்றுச்சூழல் பெண்ணியம்’ (Ecofeminism) என்னும் கோட்பாடாக எழுந்துள்ளது. இக்கோட்பாடு சூழியல் அறம் பேசுவனவாக உள்ளன. தீவிரப் பெண்ணியவாதிகளில் ஒருவரான ஜெனட்பிகி (Janet Biehi) சூழலியப் பெண்ணியத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘‘சூழலியப் பெண்ணியம் இலட்சியப் பாங்கானது; இயற்கையையும் மகளிரது வாழ்வியலையும் இணைக்கும் போக்கு அனுபூதி இணைப்பாக (Mystical connection) உள்ளது”. இக்கூற்றுப் படி மகளிர் வாழ்வியலோடு இயற்கையறம் போற்றப்பட்ட பாங்கு புலனாகின்றது. இப்பெண்ணியவாதிகள் தொழில்நுட்பத்தை விலக்கி இயற்கையை நேசிக்கும் வாழ்வியலையும் பரிந்துரைக்கின்றனர்.
* சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல்
* நிலத்தடி நீரை மிதமிஞ்சி உறிஞ்சாதிருத்தல்
* இயற்கையை வெற்றி கொள்ள முடியாது இருத்தல்
* இயற்கையை நட்புறவுடன் பேணி வாழுதல்
என்று சுற்றுச்சூழலியப் பெண்ணியத்தின் நூலாக்கத்தில் மரியாமைஸ் (Marriamies), வந்தனாசிவா (VandanaShiva) போன்றோர் வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய மேலைநாட்டுப் பெண்ணியவாதிகள் போன்று தமிழகக் கவிஞர்களில் வைகைச்செல்வி, சல்மா, தேன்மொழி, மாலதிமைத்ரி போன்றோரும் இயற்கைப் பாதுகாப்பு குறித்த சிந்தனையைக் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். சுற்றுச்சூழலியப் பெண்ணியவாதியாக தன்னை அடையாளப்படுத்தும் வைகைச்செல்வியின் கவிதைகள் இயற்கையோடு உறவாடியுள்ளது. இவரது “அம்மி” என்னும் கவிதைத் தொகுப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வெளிவந்துள்ளது. காடு பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, காற்று மாசுபடாமல் தடுத்தல் என்ற நிலைகளில் கவிதைகள் வியாபித்துள்ளன.
காடுகளின் பாதுகாப்பு
நிலங்களை வளப்படுத்தும் வனங்களும் மலைக்காடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மரங்கள் வெட்டப் படுவது தடுக்கப்படவேண்டும். காட்டிற்கு மனிதர்களால் ஏற்படும் பங்கம் பெண்ணினத்திற்கு ஏற்படுத்தப்படும் களங்கமாகும். இவ்வாறு சுற்றுச்சூழல் பற்றிய கருத்தாக்கம் பெண்ணுடன் ஒப்பிடப்படுகிறது.
இப்படித்தான் -
இலையாய் மரமாய்
மலைகளைப் போர்த்திய
காடுகள் மறைவது தெரிகிறதா,
உடுக்கை இழந்தும் “மானத்தோடு”
(வைகைச்செல்வி, அம்மி, ப.29)
வைகைச்செல்வியின் மேற்குறித்த கவிதை மலைக்காடுகளின் அழிவினை மனிதனின் ‘ஆடை இழந்த மானவுணர்வுடன்’ ஒப்பிடுகின்றது.
மனிதன் வாழ்வது புரிகிறதா?
கூட்டை இழந்த பறவையோலம்
சாட்டையடிபோல் கேட்கிறதா?
இங்கே
கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ?
(வைகைச்செல்வி, மேலது, ப.30)
‘மெல்லச் சாகுமோ மலைக்காடுகள்’ என்ற மேற்கண்ட கவிதையில் காடுகளின் அழிவிற்கு (அழிப்பிற்கு) வருந்தும் கவிஞர், காடுகளை அழிக்கும் நயவஞ்சகர்களின் செயலை ‘பெண்ணுடையக் கருவை’ அழிக்கும் செயலுடன் ஒப்பிட்டுள்ளார். இயற்கையை அழிக்கும் அரக்கர்களுக்கு எதிரான களத்தைச் சுற்றுச்சூழல் பெண்ணியம் சிறப்பாக முன்வைத்துள்ளது.
1970களில் இந்தியாவில் உருவான, சிப்கோ இயக்கத்தில் (Chipho Movement) இருந்து தான் இயற்கைப் பாதுகாப்பு எண்ணம் தொடக்கம் பெற்றது. “மரங்களை வெட்டுவதற்குத் திரளாக வந்திருந்த ஆடவர்களை எதிர்த்த பெண்கள் தங்களது கைகளால் மரங்களைத் தழுவிக் கொண்டு நின்றனர். எங்களை வெட்டி விட்டுப் பின் மரத்தை வெட்டுங்கள் என்று அஞ்சாமல் எதிர்த்து நின்ற செயலானது பின்னைய செயலுக்கு வித்தாக அமைய, மரம் வெட்டுவதைத் தடுக்கும் சிப்கோ இயக்கமாக அவ்வியக்கம் உருவாகியது” என்பர். இவர்களின் போராட்டம் இயற்கையை அழித்துச் சிதைக்கும் நவீனத்துவம், இயந்திரமயம், தொழில்புரட்சி ஆகியவற்றிற்கு எதிராக அமைந்துள்ளது. இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால் ‘பஞ்சபூதங்கள்’– பூதங்களாக மாறிவிடும் என்ற எச்சரிக்கைக் குரல் வைகைச்செல்வியின் கவிதையில் வெளிப்படுகின்றது.
நீராய். . .
நிலமாய். . .
காற்றாய். . .
நெருப்பாய்
வானம் தொட்டும்
இயற்கைத் தேவதையின்
சித்திரத் துகில். . .
சுயநலமாய்ச் சுரண்டும்
அற்பக் கயவர்கள்
துகிலுரியக் கரமெடுத்தால் . . .
ஆம்
மனிதக் கையைத்
தடுப்பதற்கு
பஞ்சபூதங்கள்
பூதங்களாகவே இருக்கட்டும்!
(வைகைச் செல்வி, இன்னொரு உலகில் இன்னொருமாலையில்,பக்.64-65)
‘ஒரு தேவதை பூதமாகிறாள்’ என்ற மேற்கண்ட கவிதையானது ‘இயற்கையை வெற்றி கொள்ள இயலாது’ என்னும் கருத்தை முன்வைத்துள்ளது. மேலும், அவ்வாறு முயன்றால் இயற்கையால் சந்திக்கும் பேரழிவு அபாயத்தையும் கூறியுள்ளது.
நீர், காற்று மாசுபாடுகள்
நிலத்தடி நீரைத் தேவைக்கு அதிகமாக உறிஞ்சி பூமியின் தன்மையை, வெம்மையாக மாற்றுவதுடன் அனைத்து நதி நீரினையும் மனிதக் கழிவுகளால் அசுத்தம் செய்வதையும் மகளிர் கவிதைகள் கண்டித்துள்ளன. நீர் மாசுத் தடைச்சட்டம், காற்று மாசுத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டும் இவற்றை தடுக்க இயலா நிலைதான் இன்று உள்ளது. இதனை மாற்றியமைக்கும் பணியினைச் சுற்றுச்சூழல் பெண்ணியவாதிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதை
மறுக்காமல் பெற்றுக் கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுக் கூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமென்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறது
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டு போக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீ
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்து போகாமல்
(சல்மா, பச்சைத்தேவதை, ப.39)
சல்மாவின் ‘பச்சைத்தேவதை’ என்னும் தொகுப்பில் உள்ள ‘ஏரி’ என்ற கவிதை, ஏரி - பெண் என்ற இரு இணைகளுக்குள் உள்ள ஒப்புமையைத் தெரிவிக்கின்றது. “தாகம் தணிக்கும் ஏரியை அசுத்தப்படுத்தாதீர்” என்று அறிவிப்புச் செய்கின்றது.
தொழில்மயம், நகரமயம், வாகனப்பெருக்கம் போன்றவற்றால் வளிமண்டல மாசு தவிர்க்க முடியாது போய்விட்டன.
நாளும் நஞ்சுண்டு
காற்று மண்டலம் கண்செருகுகின்றது
பூமிக்குக் காய்ச்சல்
பருவங்கள் கலைந்து
வீங்கும் கடல் நீரில்
தீவுகள் தலை முழுக்கு
(நீலமணி,நீலமணி கவிதைகள்,ப.30)
காற்று மண்டலத்தில் கலக்கும் நச்சுத் தன்மையை எதிர்த்துள்ளது. மேற்கண்ட நீலமணி கவிதையும்
“வானத்தை நீ கிழித்து விட்டாயே!
ஓசோன் கிழிந்ததே என்ன செய்குவாய்!”
என்ற கவிஞர் வைரமுத்துவின் ஆதங்கமும் ஒன்று தான்.
சுற்றுச்சூழலை நேசித்தல்
சுகந்தி சுப்பிரமணியன் பெண்ணின் நிலைப்பாட்டை பதிவு செய்யும் வேளையில் இயற்கைப் புனைவை உத்திகளாக்கி கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
மரமாகிக் காய்க்கும் என்று தென்னங்கன்றும்
குலைகுலையாய் வாழையும்
அவ்வப்போது சமைக்கவென்று
மா, பலாவும்,
எப்போதும் காற்றுவீச
வேப்ப மரமும்
அழகான வண்ணங்களில்
பூசி செடிகளும் என
தன் வீட்டுத் தோட்டத்தைப் பராமரித்தான்
. . . . . . . . . . . . . . . . .
தோட்டத்துக்குக் காவலாய் வைத்திருந்தான். (சுகந்தி சுப்பிரமணியன், மீண்டெழுதலின் ரகசியம்,ப. 84)
'சந்ததி’ என்ற இக்கவிதையில் குழந்தை வளர்ப்பு வாரிசு உருவாக்கம் போன்ற பெண்ணின் மறுஉற்பத்தித் திறனை இயற்கையோடு இணைத்துள்ளார். “ஐம்பூதங்களை அறிவால் வணங்கு, அண்டம் முழுதும் நாளை உனக்கும்” (3) என்று வைரமுத்து கூறிய கவிக்கருத்து அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டியது.
பெண்ணியவாதிகள் சூழலியலைப் பெண்ணியத்துடன் இணைத்துள்ளனர். பெண் இனத்தை அடக்கி, ஒடுக்கி ஆண்கள் மேலாண்மை செய்வது போல பூமியில் உள்ள இயற்கை வளங்களையும் சுரண்டித் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஆதிக்கக் கூட்டத்திற்கு எதிராகச் சுற்றுச்சூழலியப் பெண்ணியம் செயலாற்றுகின்றது எனலாம். எதிர்காலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாதிருக்க சூழலியல் அறத்தை மகளிர் கவிதைகள் போதித்துள்ளன. மகளிர் கவிதைகள் இயற்கையின் நசிவை உணர்த்தும் முன்னறிவிப்புகள் ஆகும். அனைவரும் எதிர்காலத்தை மீட்டெடுக்க சூழலியல் அறம் பேணுதல் நலம் பயக்கும்.
சான்றெண் குறிப்பு
1. க. பங்சாங்கம், திறனாய்வுக் கோட்பாடுகள்
2. பி. ஏங்கல்சு, குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்
3. வைரமுத்து, நீர் சூழலைக் காப்போம்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.