வடலூர் வள்ளலார் உலகம் போற்றும் அருளாளர். புதிய சிந்தனைகளை உலகிற்கு வழங்கியவர். பண்டிதர் கண்ட தமிழைப் பாமரரும் பெறச் செய்தவர். அவர் சிந்தனைகள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
காந்தியடிகள் அகிம்சை வீரர், சத்திய சீலர், மகாத்மா என்று போற்றப்படுபவர். உள்ளத்திலும், செயலிலும், பேச்சிலும் உண்மையாக வாழ்ந்ததால் தான் காந்தியடிகளால் எனது வாழ்க்கையே நான் கூறும் செய்தி என்று கூற முடிந்தது.
இத்தகைய புகழ்பெற்ற வள்ளலார், காந்தி அவர்களின் வாழ்வியல் சம்பவங்களைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.
பிறப்பு
இராமலிங்கம் எனப்படும் வள்ளலார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்குப் பத்து மைல் தொலைவில் உள்ள மருதூரில் கிராமக்கணக்கர் இராமையா பிள்ளை - சின்னம்மை இணையர்களுக்கு ஐந்தாவது மகனாக 5.10.1823, ஞாயிற்றுக் கிழமை பிறந்தார்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் மகாத்மா, குஜராத் மாநிலத்தில் உள்ள சுதமாபுரி என்று கூறப்படும் போர்பந்தரில் கரம்சந்த் காந்தி - புத்திலிபாய் இணையர்களுக்கு 2-10-1869 அன்று பிறந்தார்.
பெயர்க்காரணம்
‘வள்ளல்’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டிருக்கிறது. இதனை;
“பலர்பேர் தோன்றிய கவிதை வள்ளல்
நிறையருந்தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடிச் சென்ற…”
என்பதன் மூல அறியலாம்.
“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்”
என்ற இரக்க உள்ளம் கொண்டவராக இராமலிங்கல் இருந்தார். அதனால் இவரை வள்ளலார் என்று அழைத்தனர்.
காந்தி மக்களின் பொது நலனுக்காக பாடுபட்டவர். மக்களுக்கு மனஆறுதல் தருபவராகவும், அனைவரையும் ஒன்றாகக் கருதுபவராகவும் இருந்ததால் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் இவரை ‘மகாத்மா’ என்று அழைத்தார்.
கல்வி
வள்ளலார் சிறுவயதில் தம் தமையனார் சபாபதி பிள்ளையிடமும், அதன் பின்னர், அவர் ஆசிரியர் காஞ்சி பெரும்புலவர் சபாபதி முதலியாரிடமும் பயின்றார். இராமலிங்க வள்ளலார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை. இவருக்கு ஆசிரியர் இறைவன் தான் என்பதை;
“கற்றது நின்னிடத்தே, கேட்டது நின்னிடத்தே”
என்று வள்ளலார் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
காந்தி பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். பதினெட்டாம் வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்று படித்தவர்.
திருமணம்
வள்ளலார் திருவருளில் திளைத்துக் கொண்டிருந்தார். இவருக்குக் குடும்பத்தாரும், நண்பர்களும், சிவயோகியாரும் வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்தனர். மனைவி, அடிகளாரின் தமக்கையார் உண்ணாமலை அம்மையாரின் மகளாகிய தனம்மாள் ஆவார்.
காந்தி அவர்களுக்கு ஏழாவது வயதில் நிச்சயதார்த்தம் நடந்தது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாய் அவர்களை மணந்தார்.
இறப்பு
தமிழ்நாட்டில் தோன்றிய பல அருளாளர்களுள் புதுமை வாய்ந்த புலவராக விளங்கிய இராமலிங்க வள்ளலார் 1874 ல் மறைந்தார்.
அகிம்சை என்னும் வார்த்தைக்குப்பொருள் சொன்ன மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் புதுதில்லியில் நாதுராம் கோட்சே என்பவனால் கொல்லப்பட்டார்.
சாதி, சமயம்
சாதிவெறி தலைதூக்கி இருந்த காலகட்டத்தில் வள்ளல் பெருமான்
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்!”
என்று பாடுகிறார்.
சாதிகளை ஒப்பும் சாத்திரங்களைக் ‘குப்பை’ என்று முதன் முதலாக ஏசியவர் வள்ளலார்.
“சாதி சமய பேதங்கள் கூறுமானால் வேத ஆகமங்களும் வேண்டாம்
சாதி சமயத்தைக் காட்டும் சடங்குகளும் வேண்டாம்
சாதி சமய பேதங்கள் காட்டுமானால் சைவ, வைணவ சமயங்களும் வேண்டுவன அல்ல.”
இவ்வாறு சாதி சமய பேதங்களை எதிர்த்துத் தமிழகத்தில் எழுந்த முதற்குரல், புரட்சிக்குரல் வள்ளலார் உடையது.
தீண்டாமைப் பழக்கத்தை சிறுவயது முதற்கொண்டே காந்தியடிகள் வெறுத்து ஒதுக்கினார். தீண்டாமைக்குச் சமய இசைவு இருக்க முடியாது என்று சிந்தித்தார்.
“தீண்டாமை சமய சம்பந்தமானது அல்ல. அது சமய சம்பந்தமானதாக இருக்கவே முயாது”
என்று கூறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்ற மனத்திண்மையும், சிந்தனைத் தெளிவும் காந்தியடிகளுக்கு சிறுவயதிலேயே தோன்றியது.
பெண்ணுரிமை
பெண்களுக்கு உரிமை வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகரானவர் என்பதே வள்ளலாரின் கருத்தாகும்.
“பெண் - ஆணுக்கு அறிவாலும், ஆற்றலாலும் தாழ்ந்தவள் அல்லள்” என்று கூறுகிறார்.
“கணவன் இறந்தால் மனைவி தாலி இழக்க வேண்டியதில்லை”
என்று கூறுகிறார்.
இதனால் ஒரு பெண்ணின் விதவைக் கோலத்தை வள்ளலார் ஏற்க மறுத்துள்ளார் எனத் தெரிகிறது.
பெண்ணை அகிம்சையின் அவதாரம் என்று காந்தியடிகள் கூறுகிறார். பெண் ஆடவனது சம அறிவுள்ள சகி. ஆண் செய்யும், ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும் அவற்றின் எல்லா அம்சங்களிலும் கலந்து கொள்ள உரிமையுடையவள்.
“பெண்களுக்கு தக்க கல்வியளிக்க வேண்டுமென்று எண்ணுபவன் நான்”
என்று காந்தியடிகள் கூறுகிறார்.
வள்ளலாரும், காந்தியும் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம் என்று கூறினர். இவற்றின் மூலம் இவர்களின் ஒத்தகுணம் வெளிப்படுகிறது.
வறுமை
வள்ளல் பெருமான் கொள்கைகளில் தலையாயது உயிர்இரக்கம். “இரக்கமே என் உயிர்” என்றார். உயிர்களின் பசி நீக்கலே உயிர் இரக்கத்தின் அடிப்படையாகும்.
“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினில் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”
என்றார்.
பசியால் வருந்துவோருக்கு உணவு தயாரிக்க அவர் அன்று பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
காந்தியடிகள் வறுமையைப் பற்றி, “இப்பொழுது நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் இறைவன் படைப்பது இல்லை. இதன் விளைவால், தேவைக்கு மேல் எவராது எடுத்துக் கொள்ளும் போது, அவன் அண்டை வீட்டுக்காரனை வறுமையில் ஆழ்த்துகிறான்” என்று கூறினார்.
கிராமங்களில் வறுமையை அகற்றுவதற்கு நூற்பு பெரிதும் உதவியாக அமையும் என்பது அண்ணலின் உறுதியான நம்பிக்கை.
வள்ளலார் வறுமையில் வாடுவோருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றார். காந்தியடிகள் அவர்களுக்கு உணவும் கொடுத்து, வேலையும் கொடுக்க வேண்டும் என்றார்.
படைப்புகள்
வள்ளலார் “மனுமுறை கண்ட வாசகம்”, “தொண்ட மண்டல சதகம்”, “ஒழுவிலொடுக்கம்”, “சிவநேச வெண்பா”, “நெஞ்சறிவுறுத்தல்”, “மகாதேவ மாலை”, “இங்கித மாலை” முதலிய பல பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
காந்தியடிகள் “சத்திய சோதனை”, “இந்திய சுயராஜ்ஜியம்”, “ஜனநாயகம் உண்மையும் போலியும்”, “சமூகத்தில் பெண்கள்” என பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
வள்ளலார், காந்தி இவர்களின் படைப்புகள் சிறந்த முறையில் மக்களுக்கு இன்றும் உதவுவதாக இருக்கின்றன.
கொள்கைகள்
“உயிர்களின் பசி நீக்குதலே உயிர் இரக்கத்தின் அடிப்படை” என்பது வள்ளலாரின் முக்கியக் கொள்கையாகும். பசி போக்குவதே சீவகாருண்யத்தின் அடிப்படை என்று சொன்னதோடு அதைச் செயலிலும் காட்டியவர். வடலூரில் சத்திய தருமசாலையை அமைத்தார். அங்கு நாள்தோறும் சாதி, மதம் பாராமல் ஏழைகளுக்குச் சோறு போட ஏற்பாடு செய்தார்.
“மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்”
என்று பாடிய அருளாளராவார்.
அண்ணல் என்ற நாணயத்தின் ஒருபக்கம் அவர் வாழ்ந்த வாழ்க்கை என்றால், மறுபக்கம் அகிம்சை, சத்தியம் ஆகிய அடிப்படைகளின் மீது உருவாக்கப் பெற்ற சர்வோதயம் என்னும் வாழ்க்கைத் தத்துவமாகும். இரண்டு பக்கங்களையும் பிரிக்க இயலாது. அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து செய்த சோதனைகளிலிருந்தும் உருவானது தான் அவரது தத்துவம்.
வள்ளலார் உயிர்களின் பசியைப் போக்குவதையும், காந்தியடிகள் அகிம்சை, சத்தியம் என்பதையும் தங்களது கொள்கைகளாக வைத்துள்ளனர்.
கடவுள் நம்பிக்கை
வள்ளலார் இறைவனிடம் ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ வேண்டினார். இதனை,
“அழியாதே விளங்கும் மெய்”
“அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள்க”
என்றார்.
வள்ளலார் பல கடவுளரை விரும்புதலைப் பிள்ளை விளையாட்டு என்றார். அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே என்பது வள்ளலாரின் முடிவாகும்.
மகாத்மா காந்தி கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அவர் தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறி இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தவர். இந்தியாவில் இந்துக்களுக்கு உரிய நம்பிக்கைகள் எவை உள்ளனவோ அவைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார்.
உயிரிரக்கம்
‘உயிர்பலி இடுவது தவறு’ என்றார் வள்ளலார். காந்தி அடிகளுக்கு முன்பே உயிர்ப்பலியை அடியோடு ஒழிக்கப் பாடுபட்டவர் வள்ளலார். இதை அவர் அருளிய அருட்பாடல்களில் காணலாம்.
“பலிதர ஆடு, பன்றி, குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிதரக் கொண்டு போவது கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்!”
என்று கூறினார்.
“மதத்தின் பெயராலும், தெய்வத்தின் பெயராலும் உயிர்களைப் பலியிடுவது காட்டுமிராண்டித்தனம்” என்று காந்தியடிகள் கூறினார்.
அரசியல்
அன்னியர் ஆட்சியில் மக்கள்படும் தொல்லைகளைக் கண்ட வள்ளலார் நாட்டின் சூழ்நிலைக்குக் காரணம் ‘கருணை இலா ஆட்சி’ என்கிறார். இதனை,
“கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
பிறகு யார் ஆள வேண்டும்?
அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க”
என்று கூறினார்.
மகாத்மா காந்தி ஓர் அரசியல் வாதி. மகாத்மாவின் அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் தொண்டு ஆகும். அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டு. கோவிலுக்குக் கடவுளைத் தரிசிக்க எப்படிச் சுத்தமாகப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல அரசியலும் புனிதமானது. மகாத்மா காந்தி அரசியல் என்பது தெய்வீகமானது எனக் கூறினார்.
வள்ளலார், காந்தி ஆகியோரின் வாழ்வு, செயல்பாடுகளில் சில வாழ்வியல் சம்பவங்களை மட்டும் கொண்டு இருவரது கொள்கைகள் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.