நடையியல் நோக்கில் கல்யாண்ஜி கவிதைகள்
முனைவர் நா. கவிதா

இலக்கிய உலகில் பெரிதும் பயன்படுத்தும் சொல் "நடை'' என்று கூறுவர். அத்தகைய நடையே கவிதையின் வடிவத்திற்கு அழகு சேர்க்கின்றது எனலாம். இலக்கியப் படைப்பாளர் ஒருவர் தம்முடைய கருத்தைப் பிறருக்கு எடுத்துரைக்கப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றார். எழுதுவோரின் அறிவு, ஆற்றல் முதலியவற்றிற்குத் தகுந்தவாறு அவர் எழுதிய நடையமைப்பு விளங்கும் எனலாம். "நடையியல் ஆய்வு எலக்கிய வரலாற்றையும் மொழியியலையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைகிறது'' (1) என்பர். மேலும், "தனக்கென ஏற்படுத்திக் கொண்ட முறை, பாணி (Style in speech, writing) (2) என்று நடை குறித்துத் தமிழ் அகராதி கூறுகிறது. மேலும், நடையைப் பற்றிப் பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின் நடையைப் பற்றி ஆராயும் ஒரு மொழியியல் பிரிவு (Stylistics) (3) என்றும் கூறுவர்.
மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் சந்தித்த போது வளர்ந்த துறையே நடையியலாகும். நடை குறித்து என்க்விஸ்ட் கூறுகையில், "எண்ணம் அல்லது கருத்து ஏனும் கருவினைச் சுற்றி அமைந்துள்ள ஒரு கூடு; வேறுபட்ட வடிவங்களுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உத்தி; ஒரு படைப்பாளியின் அல்லது படைப்பிலக்கியத்தில் காணப்படும் தனிமைக் கூறுகளின் ஒட்டு மொத்தம்'' (4) என்று எடுத்துரைக்கின்றார். மேலும், "அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும், எளிமையாகவும், நுட்பமாகவும் கருத்தினை உணர்த்த வல்லதே சிறந்த நடையாகும்'' (5) என்றும் கூறுவர்.
இலக்கியத்தை ஆராயும் முறைகளுள் ஒன்றான நடையியல், வெளிப்பாட்டு ஊருவ உத்தி, கருத்து, பின்னணி, படைப்போன் படிப்போன் மனநிலை, தொடர்க்கட்டு, ஒலியமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது எனலாம்.
புதுக்கவிதையின் உருவமும் உத்தியும்
உருவம், உள்ளடக்கம் ஆகிய இரு கூறுகள், கவிதை இலக்கியத்தில் இணைந்து காணப்படுகின்றன என்பதை "உள்ளடக்கம் என்பது கருத்தை மையமிட்ட ஒரு சிக்கல். உருவம் என்பது கருத்தை அமைக்கும் ஆழகு'' (6) என்பர். இவற்றுள் உருவம் படைப்பாளியின் மொழியமைப்புத் திறனுக்கு ஏற்பக் கலைத் தன்மையைப் பெறும் என்று கூறலாம். இந்த மொழியமைப்புத் திறன்களை நோக்குதல் நடையியல் ஆய்வின் ஒரு பகுதியாக அமைகின்றது.
மேலும், "ஒரு கலைஞன், தன் தறையின் செவ்விய வெளியீட்டிற்குப் பயன் கொள்ளும் ஆற்றலும் ஆக்க முறையும் உத்தி எனப்படுகின்றது'' (7) என்பர். ஆகவே கவிஞன் தனது உள்ளக் கருத்துக்களைப் பிறருடைய இதயங்களில் பொருந்தும் வண்ணம் பொருத்தமான வழியில் கூறுவதை உத்தி எனலாம்.
கல்யாண்ஜி கவிதைகளில் உத்திகள்
இலக்கியம் சிறப்பாகத் தோன்றுவதற்குக் காரணமான கூறுகளில் ஒன்று இலக்கிய உத்தி எனலாம். கவிஞன், அவன் சொல்லக் கருதிய கருத்துகளைப் பொருத்தமான வழியில் கூறுவதே உத்தி எனப்படும். அந்த வகையில் கல்யாண்ஜி அவருடைய மனக்கருத்தை வெளிப்படுத்தப் பல வகையான உத்திகளைக் கையாண்டுள்ளார். கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பில்,
அ. எடுத்துரை உத்தி
ஆ. தன்னுரை உத்தி
இ. வினாவுதல் உத்தி
ஈ. வினா விடை உத்தி
உ. தன்னுணர்ச்சி வெளிப்பாடு உத்தி
ஊ. உரையாடல் உத்தி
முதலிய உத்தி அமைப்புகள் காணப்படுகின்றன எனலாம்.
எடுத்துரை உத்தி
கவிஞர், அவரது சொந்த வாழ்விலும், பிறருடைய வாழ்விலும் ஏற்பட்ட பட்டறிவுகளைக் கொண்டு அவற்றுடன் அவருடைய கற்பனையையும் உடன் சேர்த்துப் பிறரிடம் எடுத்துக் கூறுவது போன்ற கவிதையை அமைப்பது எடுத்துரை உத்தியாகும். இவ்வகையான கவிதை, ‘Narrative Poetry’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும்.
இன்றைய சமூகத்தில் மனிதனுடைய வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாகக் காணப்படுகிறது எனலாம். ஆதலால் உடன் இருப்போரிடம் ஒரு சொல் கூட, அன்புடன் உரையாடக் காலம் கிடைப்பதில்லை. அத்தகைய நிலையினை,
"வளையல் கடையில் இருக்கும் முகமும்
வருடம் முழுவதும் பார்த்துப் போவதே.
பத்திரம் எழுதும் பாண்டி இவரென்று
போய் வரும் வழியிலே புரிந்து போயிற்று
வார்த்தைகள் வழிந்து சிந்தும் வாழ்க்கையில்
பார்க்கும்
ஒருவருக்கொருவர் செலவழிப்பதற்கு
ஒரு சொல்லின்றி போவது எவ்விதம்?''
என்று கூறுவதன் வழி அறிய முடிகின்றது.
தன்னுரை உத்தி
தன் வரலாறு கூறுதல் என்பது தன்னுரை உத்தியில் அமையும். பாத்திரப் படைப்புகள் அவர்களுடைய செயல்களை அவர்களே வெளிப்படுத்துவதாக அது அமையும். இதனைத் "தன் வரலாறு கூறும் உத்தி'' என்று அழைப்பினும் பொருந்தும் எனலாம்.
"ஆரியங்காவுக் குகையில்
எல்லோரும்
பாறையைப் பார்க்க
நான்
கசியும் நீரையும்
துளிர்ந்த புல்லையும்
அருவிக் கரையில்
எல்லோரும்
வீழ்வதைப் பார்க்க
நான் பாறைகளை''
இக்கவிதை வரிகளில் பிறிதொன்றைப் பார்க்கும் தன் இயல்பினை அவர் வெளிப்படுத்துகின்றார் எனலாம்.
வினாவுதல் உத்தி
கவிஞர்கள் பிறரை முன்னிலைப்படுத்தி வினாக்களை மட்டும் விடுக்கும் வகையில் அவர்களுடைய கருத்துக்களை வெளியிடல் வினாவுதல் உத்தி எனப்படும். "கிளிகள்' என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை வினாவுதல் உத்தியில் அமைந்துள்ளமையைக்,
"கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?''
என்று குறிப்பிடுவதன் வழி அறிய முடிகின்றது. மேலும், அறிவியல் உலகில் சிறுசிறு மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் மறைந்து விட்டன என்பதையும் அதே ஊத்தியில் அவர்,
"கட்டுமானத்திற்கு லாரிலாரியாக மணல்.
மணல் வீடு?
மழை இந்த வருடம் கொட்டியது.
காகிதக் கப்பல்கள்?
பூவரசம் பூ பூக்கத்தான் செய்கிறது.
பீப்பிச்சத்தம்.
கால் பரீட்சை, அரைப் பரீட்சை விடுமுறைகள்.
பம்பரங்கள் கோலிகள்?''
என்னும் கவிதையின் வழி வெளிப்படுத்துகின்றார் எனலாம்.
வினா - விடை உத்தி
கவிஞர்கள், அவர்களுடைய உள்ளங்களில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்த வினாக்களைத் தொடுத்து, அதற்கு விடையையும் கூறிப் படிப்போர் மனத்தில் பதிய வைக்கின்றனர். உலகில் உள்ள பொருட்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தாலும் ஏதேனும் தனித்தன்மையைக் கொண்டே திகழ்கின்றன எனலாம். அதனைக் கல்யாண்ஜி,
"ஒருவர் வரைந்து
நிறுத்திய வண்ணச் சித்திரத்தை
இன்னொருவர் பூர்த்தி செய்யும்
சாத்தியம் ஊண்டா?
எப்படிப் பறக்கும்
ஒரு பறவையின் சிறகுகளுடன்
இன்னொரு பறவை?
ஓடும போது ஒன்றெனினும்
அள்ளிக் குடிப்பது
அவரவர் நதியை''
என்று குறிப்பிடுகின்றார். இதன்வழி, பார்ப்பதற்குப் பொருட்கள் ஒன்றாகக் காணப்பட்டாலும் தனக்கென தனித் தன்மையைக் கொண்டிருப்பதைக் கூறுகின்றார் எனலாம்.
தன்னுணர்ச்சி வெளிப்பாட்டு உத்தி
கவிஞர், அவருடைய சொந்த உணர்ச்சியைக் கவிதையின் மூலம் செறிவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துவர். அவ்வாறு வெளிப்படுத்தும் உத்தியைத் தன்னுணர்ச்சி வெளிப்பாட்டு உத்தி என்பர்.
கல்யாண்ஜி, அவருடைய காதலியின் வருகைக்காகக் காத்திருந்த நேரத்தில் நடை பெற்ற நிகழ்வினில் தன்னுணர்ச்சியை வெளிப்படுத்துவதை,
"நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில் தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்
... ... ... ... ...
... ... ... ... ...
... ... ... ... ...
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது''
என்ற கவிதையின் வழி அறிய முடிகின்றது.
உரையாடல் உத்தி
உரையாடைலையும் கவிதை வெளிப்பாட்டு உத்திகளுள் ஒன்றாகப் புதுக்கவிஞர்கள் பயன்படுத்துகின்றனர். பாத்திரங்கள் அவைகளுக்குள் உரையாடுவதாக அமையும் பாங்கில் எழுதப்படுவது உரையாடல் உத்தி ஆகும். இதனை;
"பேசும் பார் என்கிளி என்றான்
கூண்டைக் காட்டி
வாலில்லை
வீசிப் பறக்கச் சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
"பேசும், இப்போது பேசும்' என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவையென்றால்
பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்''
என்னும் வரிகளின் வழி அறிய முடிகின்றது.
அணிநயம்
அணிகள் பெண்ணையும், கவிதையையும் அழகு படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்குப் பல அணிகளைப் பூட்டி அழகுபடுத்துவது போலக் கவிதையைச் சொல்லாலும் பொருளாலும் கவிஞர்கள் அழகுபடுத்துவர். அணி என்பதன் விளக்கத்தை மாறன் அலங்காரம்,
"பொருளினும் சொல்லினும் புனையுறு செய்யுட்கு
அணியுறப் புணர்த்தலின் அணி ஏனும் பெயர்த்தே'' (8)
என்று கூறுகின்றது.
உவமை அணி
நேரடியாக ஒரு பொருளை உணர்த்துவதற்கு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் காட்டுகின்ற கலையே உலகின் கண் தோன்றிய எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையான கலையாகும். இதனை,
"அழகுள்ள பொருளை மற்றொன்றன் அழகோடு ஒப்பிட்டுக் காணும் ஈந்த உவமையே கலைகள் பலவற்றிற்கும் அடிப்படையான கலையாகும்'' (9) என்பர்.
"விடிவெள்ளி'' என்னும் கவிதையில் கதிரவனின் வருகையில் காலதாமதம் ஏற்பட்டதால் மஞ்சள் வானத்தை மக்கள் கைவிடுகின்ற செயலை அவர்,
"மேகங்களைச் சபித்தும்
கடிகாரங்களைச் சலித்தும்
நீங்கள் நினைத்த போது
சிவக்காத
அடிவானத்தின்
மஞ்சள் பூமியை
ஏன் தரிசு நிலம் போலக்
கை விடுகிறீர்கள்?''
என்று கூறுவதன் வழி உவமையைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
உருவக அணி
உவமை கொள்ளும் பல்வேறுபட்ட வடிவங்களுள் உருவகமும் ஒன்றாகும். "உருவக அணி கவிஞர் ஒருவரின் கலைத்திறனின் முத்திரையாகும். ஏனெனில் ஒரு நல்ல உருவகம் என்பது வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமைகளை உற்று நோக்கி அறிய வல்ல ஓர் இயற்கைப் பேராற்றலைப் பின்னணியாகக் கொண்டு இயங்குவதாகும்'' (10) என்பர்.
பிறிதொரு பொருளோடுள்ள ஒப்புவமையில் ஆழமும் நெருக்கமும் காரணமாக அப்பொருளாகவே குறிக்கப்படும் நிலையில் உருவகம் உருவாகின்றது எனலாம். "மாந்தர் பண்புகளைச் சிறப்பாகப் புலப்படுத்தும் உருவக ஆட்சியில்தான் சிறந்த படைப்பாளன் வெற்றி உள்ளது'' (11) என்பர். உச்சி வெயில் உரத்தினை உலர்த்திக் கொண்டு செல்வது போல வாழ்க்கையில் அனுபவம் என்பது சென்று கொண்டே இருக்கும் என்பதைக் கல்யாண்ஜி,
"நிழல்கள் முகாம்கள் சொல்லும்
நிபந்தனைகளை
நின்று கேட்குமா உச்சிவெயில்?
அதனதன் உரம்
உலர்த்திக் கொண்டு
அனுபவம் என்பது போய்க் கொண்டிருக்கும்''
என்று கூறுவதன் வழி உருவக அமைப்பைப் பயன்படுத்தி உள்ளார் ஏன்பதை அறிய முடிகின்றது.
தற்குறிப்பேற்ற அணி
இயல்பாக நிகழும் ஒரு பொருளின் செயலுக்குக் கவிஞன் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கூறி அவ்வாறு கற்பிக்கப்பட்ட காரணத்தை அதன் மீது ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இது பற்றி தண்டி ஆசிரியர்,
"பெயர் பொரு ளல்ன்ற்ர்ன்ற் ளெனவிரு பொருளினும்
இயல்பின் வினைதிற னன்றி யயலொன்று
தன்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்''
என்று கூறுகின்றார்.
கவிஞர் "சவலை' என்னும் கவிதையில்,
"மூங்கில் சாரத்தில்
ஓலைப்படல் போர்த்திப்
புதுப்பிக்கும்
கோபுரத்து கலசமுலைப்
பால்குடிக்க முடியாமல்
வானில் தவித்தலையும்
மேகங்கள்
விரல் சப்பி''
என்று பாடுவதன் வழி வானில் இயல்பாக ஊர்ந்து செல்லும் மேகங்களால் கலச முலையில் பால் குடிக்க முடியவில்லை யாதலால், அவை சவலைக் குழந்தைகளைப் போலத் தவித்து அலைகின்றன என்று தன் கருத்தினை ஏற்றிக் கூறியுள்ளார் எனலாம்.
ஒலிநயம்
கவிதை இலக்கியத்தைச் சுவைப்பதற்கு அதன் ஒலி அமைப்புகளும் துணைபுரிவதாக அமையும் எனலாம். இதனை, "சொற்கள் நீண்டும் குறுகியும், வன்மையாகவும் மென்மையாகவும் அழுத்தமாகவும் ஒலித்து அளவாலும், தன்மையாலும் வேறுபட்டு ஒழுங்கமைவுடன் ஒருமையுடன் இனிமையாக உணர்த்துவதை ஒலிநயம் எனலாம்'' (12) என்பர்.
"மொறுக்கென்று ஓடிந்த
வெள்ளரிப் பிஞ்சின்
விதை வரிசையை
எந்த இயந்திரமும்
அடுக்கித் தராது''
என்ற கவிதையில் இயற்கையின் கொடை வளத்தை அறிவியல் உலகத்தால் தர இயலாது என்பதை எடுத்துக் கூறுகின்றார் எனலாம்.
"மொறுக்கென்று'' என்ற சொல்லின் ஒலிநயத்தினாலேயே பொருள் நயம் ஈதனில் சிறப்புற்றுள்ளது எனலாம்.
அடுக்குத்தொடர்
பிரித்தால் பொருள் தருமாறு அமைவது அடுக்குத்தொடராகும். இதனை;
"புதையுண்ட மூதாதையரின்
நுரையீரலில்
முட்டிக்கொண்டிருக்கிறது
மஞ்சணத்திப் பூவாசம்
நமக்கு மிஞ்சியதோ எனில்
இழுக்க இழுக்க
இறுதிவரை
போக்குவரத்துப் புகை''
என்ற கவிதையில் இயற்கையின் அழிவு நிலையை "இழுக்க' எனும் அடுக்குத் தொடர் வாயிலாகக் கூறியுள்ளதிலிருந்து அறிய முடிகின்றது.
எளிய நடை
கவிஞன், அவன் கூற வந்த கருத்தை விளக்க எளிய சொற்களைப் பயன்படுத்துவான். சான்றாக,
"தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே''
என்று இயற்கையின் தன்மையை எந்தவிதமான அணிநயமுமின்றி எளிய நடையில் கூறியுள்ள பாங்கிலிருந்து அவ்வெளிய நடையை அறிய முடிகின்றது.
"முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை''
என்ற கவிதையின் வழியும் எளிய நடையமைப்பு முறையைக் காண முடிகின்றது.
தொகுப்புரை
நடையியலின் கூறுகளாக உருவம், உள்ளடக்கம் ஆகியவை கல்யாண்ஜி கவிதைகளில் காணப்படும் விதம் மற்றும் உள்ளடக்கத்தில் காணப்படும் உத்திகள், அணிநயம், ஒலிநயம் போன்றவையும் இடம் பெற்றுள்ள தன்மையை இக்கட்டுரையின் வழி அறிய முடிகின்றது.
குறிப்புகள்
1. கு.பகவதி, திறனாய்வு அணுகுமுறைகள், ப., 278.
2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.,602.
3. மேலது, ப.,603.
4. ஜெ. நீதிவாணன், நடையியல், ப.,22.
5 .மா. இராமலிங்கம், புதிய உரைநடை, ப.,9.
6. கலைச்செல்வன், புதுக்கவிதை நடையியல் ஆய்வு, ப.,1.
7. ச. வே.சுப்பிரமணியம், இளங்கோவின் இலக்கிய உத்திகள், ப.,6.
8. ச. வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கியக் கொள்கை, ப.,160.
9. மு. வரதராசன், இலக்கியத்திறன், ப., 239.
10. சு. பாலச்சந்திரன், இலக்கியத்திறனாய்வு, ப.,180.
11. சு. மாரியப்பன், இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் உவமைகள், ப.,43.
12.ந. சுப்புரெட்டியார், கவிதையனுபவம், ப.18.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.