பூவும் போரும்
கி. இராம்கணேஷ்
முன்னுரை
இயற்கையின் தோற்றங்களாக விளங்கும் மனிதனுக்கும் மலருக்கும் மிகுந்த ஒற்றுமையுண்டு. ‘மனம் கொண்டவன் மனிதன்; மணம் கொண்டது மலர்’ எனக் கூறும் அளவிற்கு தமிழ்ச் சமூகத்தில் மலர்களின் பங்கு அளப்பரியதாக விளங்குகின்றது. வாழ்க்கையில் ஏற்படும் திருமணம், இறப்பு போன்ற பல்வேறு சடங்குகளிலும் ஊடும் பாவும் போல மலர் சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றுள்ளது. இறைவழிபாடு மேற்கொள்ளும் போது செய்யும் வழிபாட்டு நிகழ்வில், பூவும் நீரும் படைத்து வணங்குவதே பூசை எனச் சான்றோர் நவில்வது எண்ணத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்கள், வீரத்திலும் வியாதிகளைப் போக்கும் மருத்துவத்திலும் இடம் பெற்றுள்ள நிலையை இலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
மூவேந்தர் பூக்கள்
போர்க்களத்தில் போரிடும் போது இருதிறத்து மறவர்களும் தத்தமது அடையாளப் பூவைச் சூடிப் போர் செய்வர். இஃது மரபாகப் போற்றப்பட்டது. வீரர்கள் பூச்சூடுவதை வைத்தே எதற்காகப் போர் நிகழ்கிறது என்பதை உணர முடியும். மேலும், வீரர்கள் அக்காலத்தில் பல்கிப் பெருகியிருந்தனர். அச்சூழலில் போர்க்களத்தில் தன்னுடன் போர்புரிபவன் எதிரியா, தன்னுடைய படையைச் சேர்ந்தவனா என அடையாளம் காணவும் பயன்பட்டதை இலக்கியக்கண் கொண்டு ஆராயும் போது தெள்ளிதின் புலனாகும்.
சங்காலத்தில் புகழ்பெற்றவர்களாகத் தமிழகத்தை ஆண்டவர்கள் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆவர். இம்முடிமன்னர்கள் ஆண்ட காலத்தில், ஏனைய குறுநிலப்பகுதிகளை சிற்றரசர்கள் ஆண்டனர். மூவேந்தர்களுக்குரிய பூக்களை இலக்கண, இலக்கிய நூல்கள் சுட்டியுள்ளன.
“சீர்சால் போந்தை வேம்பொ டாரே...” (பு. வெ. மாலை)
“போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்” (தொல்.)
“கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்” (புறம்)
சேரர் - பனம் பூவையும், சோழர் - ஆத்திப் பூவையும், பாண்டியர் - வேப்பம் பூவையும் சூடுவர் என்ற செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம், புறநானூறு ஆகிய நூல்கள் சுட்டியுள்ளன.
போர்ப்பூக்கள்
வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,
அதுவளைத்த லாகும் உழிஞை, - அதிரப்
பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம். (பு.வெ.மா.மேற்கோள்)
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, தும்பை, வாகை ஆகிய பூக்களை போர்ப்பூக்கள் என்று குறிப்பிடலாம். இப்பூக்கள் முறையே நிரை கவர்தல், நிரை மீட்டல், மண்ணாசை காரணமாகப் போருக்குச் செல்லல், மதில்காத்தல், மதிலைச் சுற்றி வளைத்தல், அதிரப் பொருதல், வெற்றி பெறுதல் ஆகியவற்றின் அடையாளங்களாக விளங்கின.
சிற்றரசர் போரிடும் காலத்தில் தத்தமது பேரரசர் பூவையே, அடையாளப் பூவாகச் சூடிக் கொண்டு போரிடுவர். பூக்கள் குளிர்ச்சியளிப்பவை. அக்காலத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே முடிவளர்த்துக் கொள்ளுதல் இயல்பாக இருந்தது. மேலும் போக்களத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு கோபத்தின் காரணமாக வெம்மை தோன்றும். அதனைத் தணிப்பதற்காகவும் வீரர்கள் பூச்சூடியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
தும்பைப் பூவின் தனிச்சிறப்பு
வீரத்தை நிலைநாட்டும் போர்க்களத்தில் பூ மாலையணிந்து போரிடுவது இயல்பு. எனினும் மற்ற பூக்களுக்கு இல்லாதத் தனிச்சிறப்பினை தும்பைப்பூ பெற்றுள்ளது. ஏனெனில் மற்ற போர்களில் பயன்படும் பூக்கள் ஏதேனும் ஓர் ஆசையைக் காரணமாகக் கொண்டே அணியப்படுகின்றன. தும்பைப் பூச்சூடி மேற்கொள்ளும் போர், வலிமையைப் புலப்படுத்தும் நோக்கோடு செய்யப்படுவதாகப் பெரும்பான்மையாக அமைகின்றது. ‘அதிரப் பொருவது தும்பை’ என்ற கருத்தே மேற்கூறிய கூற்றுக்கு வளம் சேர்க்கும்.
தும்பைப்பூ மாலையணிந்ததற்கான காரணம் குறித்துப் புலவர் கோவிந்தன். “மறங்கருதிய போர் புகழாசையினை அடிப்படையாகக் கொண்டது. புகழுக்கு வெண்மை நிறம் கற்பிப்பர். அதனால் தூய வெண்ணிறம் உடையதான தும்பை மலர், புகழ் காரணமாகப் போரிடப் போகும் வீரர்கள் அணியும் பூவாதல் பொருத்தமே என்க. மேலும் தும்பைச்செடி வன்னிலத்துச் செடியாகும். மறங்கருதிய போர் வேட்கை, உரம் மிக்க உள்ளத்தில் மட்டுமே உருவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். தும்பைப் பூவானது எதிர்ப் படையினருக்குத் துன்பத்தைத் தருவதாக அமையும் நிலை ஒப்புநோக்கத்தக்கது ஆகும்.
வெள்ளுடை தமிழரின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத நிலையினைப் பெற்றதற்கு மேற்கண்ட மரபும் காரணமாக அமைந்திருக்கலாம். தும்பைப்பூ குறித்த செய்திகள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
“வாடத்தும்பை வயவர் பெருமகன்” (பத்துப்பாட்டு)
“தும்பை மாலை இளமுலை” (ஐங்குறுநூறு)
“நிலந்தலைக் கொண்ட பொலம்பூந்தும்பை” (புறம்)
துணிவுடையவனே தும்பைப் பூவைச் சூட முடியும். இன்றைய காலத்தில் பெண்மையின் அடையாளமாக பூ அணிந்து கொள்ளும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆண், பெண் இருபாலரும் பூக்களை அன்றைய காலத்தில் அணிந்திருந்தனர் எனினும், போர்க்களத்தில் ஆடவர் பூ அணிந்து போரிடுதல் ஆண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது.
கம்பராமாயணத்தின் இறுதிநிலையாக அமையும் யுத்தகாண்டத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் தும்பைப் போராகச் சுட்டப்பட்டுள்ளது. போரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து, கம்பன் புறத்திணை என்னும் நூலின் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.
“முதல்நாள் போருக்கு வரும் இராமனும் இராவணனும் தும்பைப் பூச்சூடிப் போருக்கு வருகின்றனர். இராமன் மூன்று பூக்கள் சூடியதாகக் கம்பர் கூறுகின்றார். இதனை,
“இளவரிக் கவட்டிலை ஆரொடு ஏர்பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்”
என்ற பகுதியுணர்த்தும்.
சூரியகுலத்தில் தோன்றிய இராமன் ஆத்திப் பூமாலை அணிகின்றான். பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த கம்பன், சூரிய குலத்தினரான சோழர்களுக்குரிய ஆத்திப் பூவைத் தன் காப்பியத் தலைவனும் சூடியதாகப் பாடுகின்றான். இதில் மூன்று வகைப் பூக்களை இராமன் அணிந்தான் எனக் கம்பர் குறிக்கிறார்.
1. ஆத்திப்பூ
2. துளசிமாலை
3. தும்பைப்பூ.
இராமன் கடவுளின் அவதாரம் என்பதால் துளசி சூடினான். மேலும் அதிரப்பொருவதற்கு, மைந்து பொருளாகப் போர் செய்வதற்குத் தும்பை மாலையைச் சூடினான். மேற்கண்ட பாடலில்
1. அடையாளப்பூ (ஆத்தி)
2. சமயப்பூ (துளசி)
3. போர்ப்பூ (தும்பை)
எனச் சுட்டப்பட்டுள்ளது. இதன்வழி போர் என்றாலே சிறந்த மறவுணர்வைப் புலப்படுத்தும் தும்பைப் போரே எனத் தெரிகிறது.
தும்பைப் பூவின் மருத்துவக் குணங்கள்
இலபிட்டாய் குடும்பத்தைச் சார்ந்த ‘லூக்காஸ் ஆஸ்பெரா’ எனும் செடி தமிழில் தும்பை என்றும் மலையாளத்தில் தும்பாய் என்றும் தெலுங்கில் தும்மசெட்டு என்றும் குறிக்கப்படுகிறது. வெண்மை நிறமுடைய தும்பைப்பூ இருமல், சளி, இரைப்பையில் ஏற்படும் அழற்சி போன்ற நோய்கள் குணமாகக் காரணியாக அமைகின்றது. ஞாபகசக்தி மேம்பட உறுதுணை புரிகிறது.
வாகைப்பூவின் தனிச்சிறப்பு
போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூ சூடி மகிழ்வது, வாகைத்திணை ஆகும். வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றி நிலையைக் குறிப்பது வாகை எனக் கூறுவர்.
“இலை புனை வாகைசூடி. இகல்மலைந்து
அலை கடல்தானை அரசுஅட்டு ஆஎத்தன்று” (பு.வெ.மா.)
“கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்” (குறுந்தொகை)
எந்தவொரு போரும் வெற்றி எனும் விழுப்பொருளை அடைய வேண்டும் என்ற நோக்கோடுதான் மேற்கொள்ளப்படுகிறது. வாகை சூடி வருதல், இயலாத சூழலில் வீரமரணம் அடைதல் ஆகிய இலக்குகளை முன்வைத்தே சங்ககாலப் போர்கள் அரங்கேறியிருக்கின்றன.
வாகைப்பூவின் மருத்துவ குணங்கள்
வாகைமரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இஃது வீக்கம்,கொப்புளம் உடைந்து வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாகை மரமாக வளரக்கூடியது. நீலநிறமுடையது. உடல் சூட்டினைத் தணிக்கும் இயல்புடையது. இருமல், நுரையீரல் அழற்சி போன்றவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
உழிஞைப்பூவின் தனிச்சிறப்பு
உழிஞைப்பூ மாற்றரசன் மதிலை முற்றுகையிடப் போகும் மன்னர், அவர்தம் படையைச் சார்ந்தவர்கள் அணியும் பூவாகக் கருதப்படுகிறது. உழிஞைப்பூ கொடி வகையைச் சார்ந்தது. மரங்களை மூடிக்கொண்டு படரும் தன்மையுடையது. மக்களை ஆளும் அரசன் போல மரத்தை ஆண்டு கொண்டு படரும் இயல்புடையது.
மண்ணாசை கருதி வஞ்சி சூடி வந்தவன் தோற்றுப்போன சூழலில், தன் நாடு சென்று அரண்மனைக்குள் இருந்து கொண்டு நெடுங்கதவைத் தாழிடுவான். இச்சூழலில் அவனை வென்ற நாட்டின் அரசன் , தோற்ற அரசனின் நாட்டுக்குள் இரவில் புகுந்து முற்றுகையிடுவான். பின்னர் விடியற்காலையில் போரிடுவான். வென்ற மன்னன் முற்றுகையிட்டதன் அடையாளமாக உழிஞைப் பூவைச் சூடியிருப்பான்.
“பொன்புனை உழிஞைவெல் போர்க்குட்டுவ” (பதிற்றுப்பத்து)
“சிறியிலை உழிஞை தெரியல் சூடி” (பதிற்றுப்பத்து)
மேற்கூறப்பட்டுள்ள செய்யுளடிகள் உழிஞைப்பூவின் சிறப்புகளைப் பறை சாற்றுகின்றன.
வேம்பின் தனிச்சிறப்பு
பாண்டியர்களின் அடையாளப் பூவாகச் சுட்டப்படுவது வேம்பு. போர்க்குரிய மலரைச் சூடும் போது உடன் வேப்பம் பூவையும் சூடிச் செல்வது வழக்கமாக இருந்தது. எங்கும் பரவலாகக் காணப்படும் மரமாக வேம்பு விளங்குகிறது.
“அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த” (பொருநராற்றுப்படை)
“வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி” (அகநானூறு)
ஆகிய அடிகள் வேம்பின் உயர்வை எடுத்துரைக்கின்றன.
வேம்பின் மருத்துவ குணங்கள்
வேப்பம்பட்டை விட்டுவிட்டு வருகிற காய்ச்சலுக்கு உதவுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேம்பின் இளந்தளிரை உப்பும் மிளகும் கலந்து அரைத்து உண்ணும் போது வயிற்றுள் இருக்கும் பூச்சித் தொந்தரவு நீங்கும். வேப்பிலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணும் போது காமாலை நோய் நீங்கும். வேப்பம் பூ வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது. வேப்பம்பழத்தின் சாறு சரும வியாதிகளுக்கு நன்மருந்தாகப் பயன்படுகிறது.
முடிவுரை
பூக்கள் மனித வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளில் பின்னிப் பிணைந்துள்ளன. மலரும் மணமும் பிரிக்க முடியாததைப் போல மனித மனமும் மலரின் மணமும் இணைந்துள்ள நிலை புலனாகிறது. இயற்கையின் உன்னதப் படைப்பான மலர்கள் போருடனும் மருத்துவத்துடனும் நெருங்கிய தொடர்புடையதாகத் திகழ்கின்ற பான்மை போற்றுதற்குறியது.
உசாத்துணை நூல்கள்
1. தொல்காப்பியம் - தமிழண்ணல் உரை
2. புறப்பொருள் வெண்பா மாலை - பொ.வே. சோமசுந்தரனார் உரை
3. பத்துப்பாட்டு - ஞா. மாணிக்கவாசகன் உரை
4. கம்பன் புறத்திணை - தே. சொக்கலிங்கம்
5. எட்டுத்தொகை - மூலமும் உரையும் - ச. வே. சுப்பிரமணியன் உரை
6. பண்டைத் தமிழர் போர்நெறி - கா. கோவிந்தன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.