ஒரு மனிதனின் சுயங்கள் எங்கே இழக்கப்படுகின்றன என்று உற்று நோக்கின் அவனது அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு, அவனது வாழ்விற்கானத் தேவைகளைப் பிடுங்கிக் கொள்ளும் தருணத்தில் தான். இந்தியப் புவிச்சூழல் என்பது பல்சமய வழிபாடுகளும், பல்வேறு சாதியமும் நிறைந்த புவிப்பரப்பாகும். இங்கு தலைமை பீடங்களும் அதன் படிநிலை சார்ந்த அடுத்த பீடாதிபதிகளின் பதவிகளும் சாதி மற்றும் சமய அடிப்படையில் தான் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. தனிமனித வருமானம் என்பது அவன் மற்றும் அவனது குடும்பம் என ஒட்டுமொத்த செலவுகளுக்கு வருமானம் ஈட்டுவதாக தொழிலே அமைகின்றது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புதினங்களில் அருந்ததியர்களின் தொழில் பண்ணையத்திற்கு அடிமைவிடுதல், அதாவது ஊர் அமைப்பில் புறத்தே அமைந்த நிலையில் இருந்து கொண்டு இவர்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள ஆதிக்க சாதியினரையே சார்ந்து வாழ்கின்ற நிலைக்கு ஆளாக்கபட்டு சுயத்தினை இழந்து ஆதிக்கத்திற்கு அடிமைச் சேவகம் செய்கின்ற அவல நிலையில் தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பதைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
பண்ணையடிமை என்பது இங்கு வருடாந்திரக் மூலியாக குறைவான பணத்தினைப் பெற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளை ஆதிக்கசாதியினர் வீட்டிற்கு வேலைகளுக்கு அனுப்புகின்றது. வேலை என்றால் சாதாரணமான சூழல் இல்லை ஆதிக்க சாதியினரின் மாட்டுத் தொழுவங்களில் சிறுகுழந்தை தங்க வேண்டும். ஆதிக்கம் இடுகின்ற அனைத்து வேலைகளையும் வயதிற்கு மீறிச் செய்ய வேண்டும். அதனை ஆய்விற்கு எடுத்துக் கொண்ட புதினங்கள் பதிவிடுகின்றதனை அறிந்து கொள்ள முடிந்தது.
பண்ணையத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில் என்ன கத்துக் கத்தினாலும் அசையமாட்டான். விளாறால் காலில் விலாசல் விழும். சுளீர் என்று விழுவது சூலான் கடிதான் என்று தோன்றும். (1)
கூளமாதாரி புதினத்தில் சிறுபிள்ளைகளைப் பண்ணையடிமை முறைக்கு வருடாந்திரக் கூலிக்கு விட்டுவிடுகின்ற மரபின் தொடர்ச்ச்சியினைச் சுட்டிக் காட்டுகின்ற இடத்தில்,
வருசக் கூலியைக் கூட எப்படியோ நினைவு வைத்திருப்பாள். பேசியது இவ்வளவு. அப்பன் வாங்கிய முன்பணம் இவ்வளவு. கவுண்டரிடம் இருப்பது இவ்வளவு. வரும் நோம்பிக்கு அப்பன் வாங்கப் போவது இவ்வளவு. எல்லாம் தெளிவாக இருக்கும். கூளையனுக்கு ஒன்றும் ஞாபகத்தில் இராது. எல்லாக் கணக்கும் அப்பனுக்கும் அம்மானுக்கும்தான் தெரியும். (2)
மேலும்,
கவுண்டர் இப்படிச் சொன்ன பிறகு என்ன பேசுவது? கூளையனின் அப்பனுக்கும் அம்மாளுக்கும் வாயடைத்துப் போய்விட்டது. அப்பன் தாழ்வாகச் சொன்னார், என்னமோ உங்கள நம்பித்தான் பையன பண்ணத்துக்கு உட்டிருக்கன்... எதுனாலும் நீங்கதான் பாக்கோனும்... (3)
அதே போல பிறகு புதினத்தில் குடும்பங்களே பண்ணையடிமைக்கு இருப்பதனைப் பதிவிடுகின்றது. புதினத்தில் நாயக்கர்களுக்கு பண்ணையடிமை மூலம் காணிக்கிருந்து அவர்களது வயலைப் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு வருமானம் ஈட்டித் தருகின்ற நிலையினை நாவல் முழுக்கவும் அறிந்து கொள்ளலாம். அதே போல கூளமாதாரியிலும் பண்ணையடிமைக்குட் சிறுவர்கள் வருடாந்திரப் பணத்திற்கு வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கின்ற நிலையினையும் இரண்டு ஆசிரியர்களின் பிரதிபலிப்பு ஒரே நேர்கோட்டில் சென்றாலும், வேதனைகள் என்னவோ தனித்தனியாகத்தான் புலப்படுகின்றதனை புதினத்தில் புகுந்து கொள்ளும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.
“அய்யங்குளத்தை எடுத்துக் கொண்டால் செருப்புத் தையல் தொழிலைச் சில பகடைகள் தான் வைத்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் சம்பளத்துக்கும் பங்குமாக சம்சாரத்தனந்தான் பார்த்தார்கள். ஊரில் சக்கிலியக் குடியென்று தனியே கிடையாது. ஊரைச்சுற்றிப் புஞ்சை நெருக்கடியானதால் வீடுகளும் சேர்ந்தாற் போலவே இருக்க வேண்டிய நிர்பந்தம். அதைத்தவிர பேச்சு வார்த்தை கிணறு பழக்கவழக்கங்கள் எல்லாமே தனிதான். (4) என்பதைப் பார்க்கையில் அருந்ததியர்கள் அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கு உழைத்து, அதன் மூலம் கிடைக்க கூடிய கொஞ்சத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்தினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அங்குள்ள ஒவ்வொரு அருந்ததியின ஆண்களும் ஆதிக்க சாதியான நாயக்கர்களின் பண்ணையடிமையாக இருந்தாக வேண்டிய சூழ்நிலையினை,
காணி பிரித்து விட்டபோது பயம் அற்றுப் போனது. ஆவன் பார்த்த காணியில் முக்கியமானது வில்லிசேரிக்காரன் வீடு ஒண்ணுதான். அது பூர்விகமான வீடு. பழங்காலத்தொட்டே அந்தப் பேர் நிலைத்து விட்டது. (5) என்று காணிக்காரனாக இருந்தே ஆக வேண்டிய நிலையில் அவர்களது பொருளாதாரம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.
மேலும்,
பகடைகளின் குடும்பங்கள் பெருகிவிட்டதால் பழைய காணிமுறையை ஒதுக்கிவிட்டு எல்லாருக்கும் தொழில் இருக்கிறமாதிரி பிரிக்கணுமென்று வண்டாரி சொன்னான். அந்த யோசனை எல்லாருக்கும் நல்லதாகப்பட்டது. (6)
ஊரிலுள்ள ஆதிக்கசாதியான நாயக்கர்களின் நிலத்திற்கு காணிக்காரார்களாக இருப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. என்ற இரு நாவலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் பிறகு நாவலில் பெரியவர்கள் பண்ணையடிமையாகவும், கூளமாதாரியில் சிறுவர்கள் பண்ணையடிமைகளாகவும் இருப்பதுதான். மேலும் அருந்ததியினருக்கு முக்கியமானத் தொழிலாக செருப்புத் தைத்தல் தான் என்பது நாவலின் மூலம் வெளிப்படுகின்றதனையும் அறிந்து கொள்ளலாம்.
கூளமாதரியில் ஆடு மேய்த்தல் தொழில் மட்டுமே முக்கியமான தொழிலாக பண்ணையடிமைகளான சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் பல வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டுத்தான் அந்த ஆட்டினை மேயத்து விட்டு வர வேண்டிய நிலையையை அவர்கள் சிறு வயதிலேயே அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் நிலையைக் குறிப்பிடுகின்ற இடத்தில்,
காடு முழுவதும் மொண்டியின் கைகளுக்குப் போய்விட்டது. காடென்ன, பொழுதும்கூட. அவனுடைய ஆடுகள் அணப்புகள் எங்கும் தேனீக்களாய்ச் சொப்பிக் கொண்டன. மற்ற எல்லோருடைய ஆடுகளையும் சேர்த்தால்கூட அவனுடைய ஆடுகள் அளவுக்கு வராது. பெரும்பட்டி. ஒருநாளைக்கு ஒருமுறை பட்டியை அவிழ்த்து இடம் மாற்றுவார்களோ என்னவோ. அத்தனை ஆடுகளையும் அவன் நினைவு வைத்துக்கொள்வது அதிசயம். மேய்ச்சல் முடிந்து ஓட்டிச் செல்லும் போது அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று ஓடிக் கொண்டேயிருக்கும் குட்டிகளைக்கூட சரியாக எண்ணிவிடுவான். குறைந்தாலும் எது குறைகிறது என்பதை உடனே கண்டுபிடித்தும் விடுவான். அவனுடைய ஆடுகளின் கால்களுக்கிடையே மற்ற ஆடுகள் எல்லாம் மறைந்துவிட்டதைப் போலக் கூளையன் உணர்ந்தான்.” (7) என்று ஒரு ஆட்டுக் கூட்டத்தையே சிறுவன் சமாளிக்க வேண்டும் என்கின்ற நிலைகள் என்பது அசாதாரணமான சூழலிலும் அந்தச் சிறுவன் ஆடுகளின் உலகிற்குள் புகுந்து கொண்டு அவற்றுக்குள்ளேயே இருந்து கொள்வதனையும் புரிந்து கொள்ள முடிகின்றது. அதே போல் பிறகு புதினத்திலும் கருப்பன் என்ற அருந்ததியின கதாபாத்திரம் பண்ணையடிமையாக ஒரு நாயக்கருக்கு எருமை மாடு மேய்க்கின்ற நிலையை, கொறஞ்சது நாலஞ்சு வரும் ஒண்ணாத்தான் மாடு மேச்சோம். பெறகு சாணியெடுத்தானே அது எம்புட்டு. நீங்க பேசாம பொண்ணமட்டும் குடுங்க. நான் மாடு மேய்க்க அவ சாணியெடுக்க பொழப்பு எப்பிடியிருக்குனு பாருங்க. இவன் சொல்றான் வௌக்கமத்தவன். (8)
மேலும்,
கருப்பன் துள்ளித் துள்ளி ஓடினான். மாட்டுக்கூட்டத்தில் கலக்கும் வரை அவனது கரிச்சட்டி மண்டை தெரிந்தது. மாடுகளை அமர்த்திப் போட்டுவிட்டு மரத்தடியிலேயே உறங்காலமென்று தோன்றியது கருப்பனுக்கு. ஊரணிக்குள் எதும் போயிருக்கிறதா என்று எட்டிப்பார்த்தான். அவனுக்கு இப்போது தான் தண்ணீர் வற்றிப் போனது ரெம்ப உறுத்தியது. (90 என்று முழு நேரமாக கருப்பன் அடிமையாக மாடு மேய்கின்ற வேலையைத் தவிர ஒன்றுமே தெரியாதது போலவே கட்டமைக்கப்பட்டுள்ளதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
மேலும் இவர்கள் நாயக்கர் நிலங்களில் கூலிக்கு வேலைக்குப் போகும் முறையும் பதிவிடப்பட்டுள்ளது.
அழகிரிக்குப் பல சோலிகள் இருந்தன. அறுவடை நேரங்களில் கணிசமாகக் களத்து வேலை செய்தான். களத்தில் கொத்து போக, ராசமுடியும் கிடைக்கும். பொலியெடுக்கையில் எந்தக் களத்தில் போய் முந்தியேந்தினாலும் அட்டியில்லாமல் நாழி ரெண்டுபடி என்று களத்துப் பிச்சை கொடுப்பார்கள். சோளக் கட்டை வெட்டு ஆரம்பித்தால் தடபுடலாக இருக்கும். செருப்புத் தொழிலில் ரெம்ப நேரம் உட்காருவான். (10) என்று அறுவடைக் களத்தில் உள்ள வேலைகளையும் அதற்காக கொடுக்கப்படுகின்ற கூலிகளையும் முந்தியேந்திப் பெறுகின்ற நிலையினையும் அதோடு முக்கியமான வேலையாக செருப்புத் தைத்தல் என்பதனையே சுட்டிக்காட்டுகின்றார். அதோடு தொழில் ரீதியாக அருந்ததியின மக்கள் மேல்தட்டு வர்க்கத்தையே சார்ந்து இருக்கின்ற நிலையினை, சரி சாமி எங்கிருந்தா என்ன. ஒழைக்கப் போறோம். பொழைக்கப் போறோம். தேடித் தெரட்டிக் கோடி கோவரமா கெட்டப் போறொம். நீங்க பாத்துக் கூப்புடயில நான் தடுதல சொன்னா மதிப்பில்ல. எங்க குடும்பத்துக்கு வழி பண்ணாமத் தெருவுலயா நிறுத்தீருவீக. நீங்க போங்க சாமி. ரெண்டு நாளைக்குள்ள கௌம்பி வந்துறென்.(11) என்று பொருளாதார ரீதியாக அவர்களைச் சார்ந்து நிற்பதோடு தங்களைக் கைவிடமாட்டார்கள் என்ற கெஞ்சுதல் இல்லையென்றால் ஏற்றுக் கொள்கின்ற முறையிலான நடைமுறையிருப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
பிறகு நாவலில் உள்ள அருந்ததியர்கள் செருப்புத் தைத்தல், பண்ணையடிமை முறையிருத்தல், போன்ற தொழில்களை செய்கின்ற நிலைமையும் கூளமாதாரியில் அதே போல அருந்ததியின சிறுவர்களின் வேலை வாங்குகின்ற நிலையினை, பச் என்று சலிப்பைக் காட்டியவாறு மொண்டி தலையை அசைத்தான். அதன் பின் மெலிவாய்ச் சொன்னான். எங்கடா உடறாங்க. விடியங்காட்டி நானும் பெரிய கவுண்டரும் வண்டி கட்டிக்கிட்டுக் கக்கூஸ் குப்பையள்ளியாற சந்தப் பேட்டைக்குப் போனம். அது ரண்டு நட. அதுக்கு அப்பறம் திருச்செங்கோட்ல ஊடு கட்டறவுங்க கேக்கறாங்கன்னு மணல் ஒரு நட, நாலு நட ஓட்டறதுக்குள்ள மாடுவளே சோந்து போச்சு. அது முடியறதுக்குள்ள பொழுது உச்சிக்கு வந்திருச்சு. வந்து சோறு குடிச்சிட்டு ஆட்ட வெளியுட்டன். ஒடனே காட்டுக்கு ஓட்டியாந்தா மேயுமா. கடலக்கொடிப் போர்ல உட்டுத் திங்கடிச்சு அப்புறம் ஓட்டியாறன். (12)
என்று பண்ணைக்கிருக்கும் சிறுவனான மொண்டியின் வேலை மாடு சேர்ந்து விட்டதென்ற குறியீடு மனிதர்களை மாடு மாதிரி வேலை செய்கின்றான் என்று சொல்வது உண்டு.
ஆனால் இங்கு மாடே சேர்ந்து விடடாலும் இவர்களுக்கு ஓய்வில்லை என்பதனை மிகவும் துயரமிகுந்த வரிகளை நாம் புரிந்து கொள்ளவே முடிகின்றது. வேலை செய்கின்ற சிறுவர்கள் வேலைக்குக் கொஞ்சம் தாமதமாக வந்தால் அவர்களுக்கு ஆதிக்க சாதியால் கிடைக்கின்ற வசவுகளை சாதிய ரீதியாக அவர்களையும் அவர்களது பிஞ்சு மனங்களையும் புண்படுத்தும் விதமாக அமைவதனை,
இதே போல வவுறி நேரமாகி வருகிற நாளிலும் நடக்கும் பெரும்பாலும் வவுறி வந்து சேரப் பொழுது கிளம்பி மலைமேல் ஏறிவிடும். அப்போது கவுண்டச்சியின் வார்த்தை வெயிலைவிடச் சுள்ளென்றிருக்கும். எங்கடி வந்த... சக்கிலித் தேவிடியாளுக்கு வர்ற நேரத்தப் பாரு. செனப்பன்னியாட்டம் மூனு வேளை தின்னா காத்தால எந்திருக்க முடியுமா... நாங்க பண்ணயம் பாக்கறதா... பண்டம் பாடியெல்லாம் வித்துப்புட்டு எரந்து குடிக்க போறதா... வந்து சம்பளம் பேசுவானுல்ல உங்கொப்பன். நாளக்கி அவனக் கூட்டிக்கிட்டு வாடி... பேசிக்கறன். (13)
மேற்கண்ட வரிகள் எல்லாம் அருந்ததியச் சிறுவர்களின் மனப் பேராட்டத்தினை உருவாக்கும் விதமாகவே அமைகின்றன.
புதினங்களில் பண்ணையடிமை முறையில் பெரியவர்களும், சிறார்களும் ஆதிக்க சாதியனரையே பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கின்ற அவலத்தை பார்க்கின் ஜனநாயத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு புலப்படுகின்றது. புதிகங்கள் முழுக்க முழுக்கச் சிறார்களின் வலியையும், விடுதலை குறித்தான எண்ணங்களையும் பதிந்து செல்கின்றது கூளமாதாரி. அதே போல பிறகு புதினம் அருந்ததியன மக்களின் பண்பாடுகளைப் பதிவிடுகின்ற அதே நேரங்களில் பொருளாதாரத்திற்கு ஆதிக்கத்தினைச் சார்ந்திருக்கின்றதனை உணர முடிகின்றதனை இக்கட்டுரை விளக்குகின்றது.
1. கூளமாதாரி. ப.21
2. மேலது. ப.29
3. மேலது.ப.27
4. பிறகு. ப.179
5. மேலது.ப.27
6. மேலது.ப.24
7. கூளமாதாரி. ப.78
8. பிறகு.ப.83
9. மேலது, ப.114
10. மேலது,ப.29
11. மேலது,18
12. கூளமாதாரி, ப.79
13. மேலது,ப.39