இராஜேந்திர சோழனின் கலைமனமும் – கங்கை கொண்ட சோழபுரமும்
முனைவர் பு. இந்திராகாந்தி
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி(த),
தஞ்சாவூர்.
அறிமுகம்
இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் சோழர்களின் ஆட்சி மிகச்சிறந்த ஆட்சியாகவும், பிரமாண்டத்தன்மை கொண்டதாகவும் அடையாளப்படுகிறது. இந்த நெடு வரலாற்றில் புகழ்மிக்க ஆட்சி செய்த இராஜேந்திர சோழன் கலை மனதை கங்கை கொண்ட சோழபுரத்தை முன் வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழ் நிலத்தில் சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு கி.பி ஆறாம் நூற்றாண்டில் சிம்ம வீஷ்ணு என்னும் பல்லவ வேந்தனால் சோழநாடு கைப்பற்றப் பெற்று பல்லவராட்சிக்கு உட்பட்டது. தஞ்சையைப் பின் வந்த பல்லவ பேரரசர்களும், தஞ்சை முத்தரையர்களும் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர்.
“கி.பி.846-இல் பிற்காலச் சோழர் மரபைச் சார்ந்த விஜயாலயன் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி தன் தலைநகராக தஞ்சையைக் கொண்டான் "திருவாலாங்காட்டு செப்பேடு இதனை உறுதிசெய்கிறது. “விஜயாலய சோழன் வெண்மையான சுண்ணாம்பு பூச்சுக்களுடன் திகழும் அழகான மாளிகைகளையுடைய தஞ்சை நகரைக் கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தை நிலைப்பெற செய்தான்"
( தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்பிரமணியன் ப. 17) இவன் தொடக்கமாக அமைந்த சோழராட்சி மூன்றாம் இராஜேந்திர ஆட்சிக்காலமான 1279 வரை நிலைகொண்டது.
இதற்குப்பிறகு மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனின் எழுச்சியாலும் படையெடுப்பாலும் பேரழிவை சந்தித்தது. ”சோழர்கள் காலத்திற்கு பிறகும் சோழமண்டலம் என்றே நிலைத்தது என்பதைப் பாண்டியர்கள் ஓய்சளர்களின் கல்வெட்டுகளில் அறியலாம்” (மேலது, ப. 34) பின்னர் சோழநாடு பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்தது. பாண்டியர்கள் சோழர்களை வீழ்த்தும் வரை சோழர்களின் தலைநகரம் தஞ்சை, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களை மையமிட்டு நீடித்த வரலாற்றுச் சூழலில் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சி சிறப்பு பல்வேறு நிலையில் கொண்டாடும் தன்மை கொண்டதாக வரலாற்றில் அடையாளப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாக தஞ்சையே இருந்த சூழலில் இராஜராஜனுக்குப் பிறகு மாற்றம் கண்டது, ”இராஜராஜசோழன் காலம் வரையில்தான் தஞ்சை அரண்மனை முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் காலம் முதல் கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனைக்கே அதிகச் சிறப்புகள் இருந்தன"
(தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, குடவாயில் பாலசுப்பிரமணியன் ப.127.) இவனது ஆட்சியானது 1014 முதல் 1044 வரை நிலைபெற்றது.
பூர்வதேசமும் கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுகளால் புகழப்பெறும் முதலாம் இராஜேந்திர சோழன், தன் தந்தை மறைவதற்கு இரண்டாண்டுகள் முன்பு, அதாவது 1012-ல் இளவரசு பட்டம் புனைந்து, பின்பு சோழ சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தியாக 1014-ல் முடிசூடிக்கொண்டான்.
இராஜேந்திர சோழனின் முதல் முப்பதாண்டுகள் தஞ்சை தலைநகராமாக விளங்கியது. பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரமானது. அதாவது, “கொள்ளிடத்திற்கு வடபால் கங்கை கொண்ட சோழபுரம் எனும் பெயரில் ஒரு புதிய தலைநகரை இப்பேரரசன் உருவாக்கினான். ஏறத்தாழ 1024 -ல் தஞ்சையை விடுத்து கங்கை கொண்ட சோழபுரத்தையே நிரந்தர தலைநகராக்கிக்கொண்டான்”
(இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ப. 9. )
மாபெரும் வீரனாகத் திகழ்ந்த இப்பேரரசன் தன் படைப்பலத்தால் வங்காள தேசம் வரை படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டினான் ."சோழ மன்னர்களில் இராஜேந்திர சோழனுக்கு ஈடு இணையுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது பெருமை வாய்ந்தாகும். அவனுடைய ஆட்சிக் காலத்தில் பல போர்களில் வென்று சோழ சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினான். இராஜேந்திர சோழன் 1012 முதல் 1044 ஆம் ஆண்டுவரை ஆட்சிசெய்தான்"
(முதலாம் இராஜேந்திர சோழன் (தடயங்கள்) தொகுதி 2, ம.காந்தி, ப.வெங்கடேசன், கே.சங்கரி, ப. 80 ) அவைகள், கங்கை, கடாரம், ஈழமென நீண்டன. இந்தியப் பெருங்கடலை ஏரி போல் கையாண்டு, தென்கிழக்காசிய நாடுகள் முழுமையும் சோழர் வசமாக இராஜேந்திரனேக் காரணமாகத் திகழ்ந்தான். விஜயாலயன் தொடங்கி 350 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி ஆண்ட சோழராட்சியின் எல்லைப் பரப்பை,
“கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக்கரையாம் வடதிசையில்
ஏணாட் பண்ணை யிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லை எனச் சொல்”
என்ற வெண்பா விவரிக்கின்றது.
சோழநாடு காவிரியால் வளம் கொண்டு சோழநாடு சோறுடைத்து என்று போற்றப்பட்டது. உணவிற்கும் பஞ்சமில்லை, கலைக்கும் குறைவில்லை என்று வாழ்ந்தவர்களாகச் சோழர்கள் இருந்தனர். அதில் கருவிலே திருவுடையனாய் விளங்கிய முதலாம் இராஜேந்திரனின் ஆட்சிச் சிறப்பு பல்வேறு நிலையில் கொண்டாடும் தன்மை கொண்டதாக வரலாற்றில் அடையாளப்படுகிறது.
இராஜேந்திர சோழன், இளம் வயதிலே இளவரசு பட்டம் சூடப்பெற்று இராஜராஜனுக்கு ஆட்சியில் உறுதுணையாக இருந்ததோடு, மிகச்சிறந்த ஆளுமையும், துணிவும், கலையார்வமும், மக்களைக் கொண்டாடும் குணம் படைத்தவனாகவும் திகழ்ந்தான். இவனது ஆட்சியில் கட்டிடக்கலையும், சிற்பக் கலையும், இசையும், நடனமும் போற்றும் தன்மையதாய்த் திகழ்ந்தன. இக்கலைகளைக் கொண்டாடக் கூடியவனாக இராஜேந்திரன் விளங்கினான்.
பிறப்பும் கல்வியும்
‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவர்மன்’ என்று கல்வெட்டுகளால் அறியப் பெறும் முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் இராஜராஜனுக்கும் அவன் தேவி வானவன் மாதேவிக்கும் மார்கழித் திங்கள் திருவாதிரையில் பிறந்தவன். இவனது இளமைப் பெயர் மதுராந்தகன் என்பதைக் கரந்தை செப்பேடு குறிப்பிடுகிறது.
இளமைப் பருவத்திலேயே யானை ஏற்றம், தேர் செலுத்துதல், பரியேற்றம், வாள், வில் போன்ற வீரக்கலைகளைக் கற்றுத் தேர்ந்தான். இராஜேந்திரசோழன் சர்வசிவ பண்டிதரிடத்து இலக்கிய நூல்கள், இலக்கண, அரசியல் நூல்கள். வரலாறு, போர்ப் பற்றிய கலைகளைக் குறைவறக் கற்றான். தேவாரத் திருவாசகத் திருமுறை நூல்களையும், வேதங்கள், சாத்திரங்களையும் கசடறக் கற்று தேர்ந்தான். இலகுலீச பண்டிதர் என்பவரிடம் சைவ ஆகமங்களைக் கற்று சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவனாய்த் திகழ்ந்தான். ஈசான பண்டிதர் என்பவர் இவனுடைய மனம் கவர்ந்த குருவாகத் திகழ்ந்தார்.
தமிழிலும், வடமொழியிலும் நல்ல தேர்ச்சிப் பெற்றிருந்ததால் பண்டிதச் சோழன் எனப்பட்டான். கங்கை நீரைத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்து கங்கை கொண்டான் என வரலாற்றில் அறியப்பெறுகிறான்.”கங்கை நீரை தன் புதிய தலை நகாத்திற்கு கொண்டு வந்து அதனைப் புனிதமடையச் செய்த போது இராஜேந்திரசோழ தேவர் சூடிய பட்டம் ”கங்கை கொண்ட சோழன்” என்பதாகும்.” (இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ப.100.) இப்பெயர் பொறிக்கப் பெற்ற காசும் தொல்லியல் அறிஞர்களால் அறியப் பெற்றுள்ளது “கங்கை கொண்ட சொளஹ என்ற இருவரி நாகரி எழுத்துப் பொறிப்புடன் காணப்படுகிறது”. (தமிழ் காசுகள், அறுமுக சீதாராமன், ப.144.) மிகச்சிறப்பாக இலச்சினை பொறிக்கப்பட்டக் காசுகளையும் வெளியிட்டு நாடு, நகரமென அனைத்தையும் வளமாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டு ஆட்சி செய்தான்.
கலையும், போரும் அவனின் ஆட்சியை அழகாக்கின. திறை அளந்து, தேசத்தின் பெருமை மேம்படச் செய்தான். தன் தந்தையைப் போன்றே இராஜேந்திரனும், சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன், வீர ராஜேந்திரன் என்பதாகும். ”கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனின் வீர தீர சாதனைகளுக்கு ஒப்பாக இந்திய வரலாற்றில் எந்த ஒரு பேரரசனையும் கூற இயலாது” (இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ப.176 .) பிற தேசத்தார் அட்சம் கொள்ளும் வகையில் ஆட்சி செய்தான். தன்னாட்டின் வளமோங்க, கலை வளர, தன்னை அர்ப்பணித்தான்.

கங்கைகொண்ட சோழேச்சுரம்
கங்கையும் கடாரமும் கைகொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் என்று புகழப்பெற்ற மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை வெற்றிக்கு அடையாளமாக நிறுவப்பட்டது இம்மாநகரமாகும். இம்மாநகரத்தில் தஞ்சையில் இராஜராஜன் தோற்றுவித்த பெருங்கோயிலைப் போல கங்கைகொண்ட சோழபுரத்தில் பெருங்கோயிலைத் தோற்றுவித்தான். "கங்கை கொண்ட சோழேச்சுரம், ஓர் எழில் மிகுந்த சிற்பக்கூடமாகத் திகழ்கிறது. கலைமகள், திருமகள், சண்டிகேசுவரர், கணேசர், நடராஜர், சுப்பிரமணியர், பிரம்மன், பிக்சாதன, கசலட்சுமி போன்ற சிற்பங்கள் கண்ணைக் கவர்பவை" (முதலாம் இராஜேந்திர சோழன் (தடயங்கள்) தொகுதி 2, ம.காந்தி, ப.வெங்கடேசன், கே.சங்கரி) அழகுமிக்க இவ்வாலயம் கலையின் இருப்பிடம்.
கட்டடக்கலையும் சிற்பக்கலையும்
சோழர் ஆட்சியின் பரப்பும், செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிந்து வளர்ந்தது. அதிலும், முதலாம் இராஜராஜன் தொடங்கி, இராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் மக்கள் நலம் சார்ந்த நன்மைகள் பல நடைமுறைப்படுத்தப்பட்டன. கலைகள் கொண்டாடப்பட்டன. அவ்வகையில், சோழர் காலக் கட்டிடக்கலையின் பிரமாண்டமாகத் திகழ்பவை, தஞ்சைப் பெரியக்கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமுமாகும்.
இராஜேந்திரன் தஞ்சை பெரியக்கோவிலில், இராஜராஜன் மரணத்திற்கு பிறகு இராஜராஜன் திருவாயிலில் பதித்த முதல் கல்வெட்டில் தன் தந்தை காலத்து ஆணைகளையும், தனது காலத்து ஆணைகளையும் பொறித்தான். இதன் தொடர்ச்சியாக ஒரு பெருங்கோயில் எடுப்பதற்கான முழு அனுபவமும் கோயிற்கலை பற்றிய ஞானமும் தஞ்சை பெரிய கோவில் வாயிலாகவே இவனுக்குக் கிட்டியது.
கங்கைகொண்ட சோழேச்சுரம் திருக்கோயில், இராஜேந்திர சோழனால்தான் எடுக்கப்பெற்றது என்பதை 1987 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம், எசாலம் என்னும் ஊரிலுள்ள இராமநாததேசுவர சுவாமி வளாகத்துள் புதையுண்டிருந்து வெளிப்பட்ட இராஜேந்திர சோழனின் 25 ஆண்டு (கி.பி.1037) செப்பேட்டுத் தொகுதியில் குறிக்கப்பெற்றுள்ள செய்தி இதனை உறுதிசெய்கிறது. “தஞ்சை இராஜராஜேச்சரத்துக்கு நிகராக கங்கை கொண்ட சோழேச்சரம் எனும் பெருங்கோயிலை அங்கு நிர்மாணித்து, கங்கை நீரால் புனிதமடையச் செய்ததாகும். இவையொத்த சாதனைகளை, தம் ஆட்சி தொடங்கிய பத்தாண்டுகளுக்குள், இந்திய வரலாற்றில் யாரும் செய்ததில்லை.”
(இராஜேந்திரசோழன்,குடவாயில் பாலசுப்பிரம்ணியன்,ப.218)இவனால் எடுக்கப்பட்ட இக்கோயில் இவனது கலை ஆர்வத்தையும், பல்வேறு தேசங்களில் இவன் கண்டு பெற்ற கலை அறிவையும் வெளிப்படுத்துபவையாக அமையப் பெற்றுத் திகழ்கிறது.
“கங்கைகொண்ட சோழீச்சரத்தின் பதமோ சதுரமாகவும் அமையாமல், செவ்வகமாகவும் அமையாமல், பதத்தின் நீள்வாட்டுப்பகுதியில் வடக்கிலும்,தெற்கிலும் இரு பிதுக்கம் பெற்ற பகுதிகள் காணப்படுகின்றன”
(இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ப. 258)
கட்டிட நேர்த்தி கொண்டு விளங்கும் இக்கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், இடைநாழி, மணிமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், நந்திமேடை, சிங்கமுகக் கிணறு, அம்மன் சன்னிதி, திருச்சுற்று மதில் என ஆலயம் பிரமாண்டப் பகுதிகளைக் கொண்டுள்ளது. விமானத்தின் வடக்கிலும், தெற்கிலும் சண்டிகேசுவர ஆலயம் உட்பட ஐந்து சிறு ஆலயங்கள் உள்ளன.
திருக்கோயில் வளாகத்தில் நாம் நுழையும் போது, முதலில் எதிர்ப்படுபவை கொடிமரப் பீடமும், ஸ்ரீபலிபீடம் எனப்பெறும் கல்லாலான கட்டுமானங்களேயாகும். பீடம், உபபீடம் ஆகியவைகளுக்குரிய உறுப்புகளான கண்டம், பத்மம் போன்ற அழகுறுப்புகளோடு கட்டுமானங்களும் அமைந்துள்ளன. இது அக்காலத்தில் எங்கும் காணாத ஒரு அமைப்பாகும்.
விமானத்திற்குச் சற்று விலகி வடக்கிலும், தெற்கிலும் சமதூரங்களில் வடகைலாயம், தென்கைலாயம் என்ற இரண்டு சிறு கோயில்களும், வடகைலாயத்தின் முன்னர் அம்மன் கோயிலும், தென்கைலாயத்தின் பின்னர் கணபதி கோயிலும் திகழ்கின்றன.
இக்கோயிலின் விமானம் தஞ்சையைப் போல் தூபி வரை ஏழு தளங்கள் கொண்டது. இத்தளங்களின் கட்டமைப்பு தொலைவில் இருந்து நோக்கும் போது, நான்கு மூலைகளிலும் வில்லைப்போல் உட்புறம் வளைந்து எழும்பும் தோற்றத்தோடு நிமிர்ந்தோங்கி நிற்கும். இவ்வளைவுத் தோற்றம், பெண் வடிவை ஒத்ததால் இம்மாதிரியான ஜங்கா உடை விமானங்கள் பெண் வடிவம் எனவும், தஞ்சை விமானம் போன்றவை ஆண் வடிவம் எனவும் சிற்ப நூல்கள் பகுத்துக் கூறுகின்றன. இதைப்போன்றே, திருக்கோயிலைத் தாங்கி நிற்கும் அடித்தளமான உப பீடவர்க்கமே சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்பெறுவது சிறப்பு அம்சமாகும்.
கும்பஞ்சரங்களுடன் கூடிய அணி வேலைப்பாடு ஆகியவை காணப்பெறுகின்றன. கோஷ்டங்களின் மேல்நிலையில் மகர தோரணங்கள் இடம் பெற்றுள்ளன. இதனோடு தொடர்புடைய பிற காட்சிகள் கயிலாயம் கிரியை கண்முன் காட்டுகின்றன. “கயிலங்கிரியாக விளங்கும் ஸ்ரீபர்வதத்தின் ஆகாச கங்கையாம், மழை நீர் தேங்கி வெள்ளமாகி துரோணி எனப்பெறும் ஏரிகளில் நிரம்பி செடி, கொடி, பூக்கள் ஆகியவற்றுடன் வழிந்தோடும் காட்சியை நமக்கு புலப்படுத்துபவையாகும்”
(இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ப.262) இக்காட்சி வியக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் இல்லாத அமைப்பாக, சாலைகளும் கூடுகளும் மாறி மாறி அமைந்து, மூலைகளில் உட்காணக்கூடுகள் மட்டும் உள்ளடக்கி, நடுவில் உள்ள சாலையும் இதன் இருபுறமும் முன்புறம் சற்று பிதுங்கியும் காணப்படுகின்றன ”இராஜேந்திரன் தன் தலை நகருக்குரிய பெருந்த தெய்வமாக மகாப் பிரதிட்டை செய்து, தன் வீரர்கள் கொணர்ந்த கங்கை நீரால் அபிடேகித்து, தான் நாளும் தாள் பணிந்து வணங்கிய லிங்க மூர்த்தியே இப்பெருங்கோயில் மூல மூர்த்தியாகும்”
(இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ப .283) இதையேத் தனது விருப்ப தெய்வமாக வணங்கினான்.
”கங்கா நதியும் கடாரமும் கைகொண்டு
சிங்காதனத்திருந்தசெம்பியனும்”
(குலோத்துங்கசோழன் உலா, அடி 49-50)
என்று சிறப்பிக்கப்படும் இராஜேந்திரன் கலை ஆர்வளனாகவும் திகழ்ந்தான். கங்கை வெற்றியின் அடையாளமாக நிறுவிய தனது கங்கை கொண்ட சோழபுரம் தலை நகரில் கட்டுவித்த சிவாலயத்தில் பல கலை நுட்பங்களை, கலை நயத்துடன் அமைத்தான். ஆலய விமானத்தில், அதிட்டானம் பல சிற்ப விசித்திரங்களையும், வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது.
ஆளோடியுடன் கூடிய மூலக் கருவறை 35 அடி எழுந்து நிற்கிறது. இதன் புறச்சுவர்களில் உள்ள தேவக்கோட்டங்களில் பல அரிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றோடு மிகச் சிறந்த செப்புத்திருமேனியையும் உருவாக்கியுள்ளான். அவை எழில் மிக்கவை. கலைவளமும் செழுமையும் மிக்கவை. நேரில் கண்டு கண்டு களித்து இன்புறத்தக்கவை.
இவ்வாலயத்தின் அர்த்தநாரி சிலை நம் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உள்ளது. தேவியின் மென்கரம் தளிர்கரமாக காட்டப்பட்டுள்ளது. காதுகளில் மகரக் குழையும் ஓலைக் குழையும் அழகு செய்கின்றன. திண்தோள் வலபுறமும், மெந்தோள் இடபுறமும், விம்மிய தனம் மறுபுறமும், வலுவான இடை ஒருபுறமும், மான்தோலாடை ஒருபுறமும், மெந்துகில் மறுபுறமும், கழல் கால் ஒருபுறமும், பாதரசம் மறுபுறம் என்று ஆண்பாகமும் பெண்பாகமும் இணைந்து ஒருவராய்த் தோன்றும் இந்த அற்புதத்தை அளித்த சிற்பி வாழ்ந்த காலம் இராஜேந்திர சோழன் காலம். அவன் கலையைக் காலம் போற்ற பயன்படுத்திக் கொண்டவன் இராஜேந்திரன்.
உமையவளோடு காட்சியளிக்கும் சிவனின் பாதம் பணியும் சண்டிககேசுவரியின் தலையில் மாலை சூட்டுவார். இக்கோலத்தில் அன்னையின் மலர்முகமும், சண்டியின் பணிவான தோற்றமும் கல்லிலே வடித்துள்ளமை இராஜேந்திரனின் சிற்ப இரசனையையும், அவர் காலத்துச் சிற்பியின் திறமைகளையும் எடுத்தியம்புவனவாக திகழ்கின்றன. சரசுவதி சிற்பம் இடக்கரம் சுவடி ஏந்தி, வலக்கரம் சூசி முத்திரையுடன் காட்சியளிக்கும். இச்சிற்பம் இராஜேந்திரன் கால சிற்ப அழகினைக் காட்டுவனவாக உள்ளன.
சோழப்பேரரசர்கள் தாங்கள் எடுத்த திருக்கோயில்களில், தங்களை ஒரு எளிய அடியராக சிவலிங்கத்தைப் பூசிக்கும் நிலையில் உருவச் சிற்பங்கள் அமைப்பது மரபாகும். கங்கை கொண்ட சோழபுரத்திலும் இராஜேந்திரன் கங்கை கொண்டானை வணங்கும் எழிலார்காட்சி இடம் பெற்றுள்ளது. இக்கோயிலில் உள்ள ஒரே திருவுருவச்சிலையும் இதுவேயாகும். குறிப்பாக, “கோவில் விமானத்திலும், கோயிலின் வெளிப்புறத்திலும் காணும் சிற்பங்களைக் காட்டிலும் உயர்ந்த சிற்பங்கள் தென்னிந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்தியக் கலையைப் பின்பற்றிய சாவகக்கலையிலும் இல்லை”
(முதலாம் இராஜேந்திர சோழன் ( தடயங்கள்) தொகுதி 2, ம.காந்தி, ப.வெங்கடேசன், கே.சங்கரி, பக்கம்.112) மேலும் இவ்வாலயத்தில் இடம் பெற்றுள்ள சண்டீச புராணம் முழுவதும் உள்ள கோஷ்ட சிற்பம், கீழ் நிலை மகாமண்டபத்துக் கோஷ்ட சிற்பங்கள். இடை நாழியில் உள்ள சிற்ப காட்சிகள், தென்கயிலாயத்து கோஷ்ட சிற்பங்கள், வடகயிலாயத்து கோஷ்ட சிற்பங்கள் என இச்சிற்பங்கள் இராஜேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுர ஆலய சிற்பங்களின் தனிச் சிறப்பாகும்.
இசையும் நாடகமும்
இராஜேந்திரன் காலத்தில் கிராமங்களிலும், நகரங்களிலும் இசையும், நாடகமும் சிறப்பு பெற்றிருந்தன. புராணக்கதைகளைப் பின்னணியாகக் கொண்ட நாடகங்கள், மக்களின் மனங்களில் இடம் பெற்றன. ராஜராஜேச்சுவர நாடகம், சாக்கைக் கூத்து போன்றவையும் நடிக்கப்பெற்று, மக்களின் ஆதரவைப்பெற்றன. மார்கழி, வைகாசி மாதங்களில் திருவாதிரைத் திருநாட்களில் சாக்கை கூத்து நிகழ்த்துவதற்கு சாக்கை மாராயன் விக்கிரம சோழனுக்கு காமரவல்லி சதுர்வேதி மங்களத்தார் கொடையளித்தனர்.
இராஜராஜ விஜயன் என்னும் நூலினைப் படித்து வருவதற்கு நாரணன் பட்டாதித்தன் என்ற சவர்ணன் ஒருவன் நிலதானம் பெற்றான். திருக்கோயில்களில் ஓதுவார்களும், கந்தர்வர்களும் இசைக்கருவி வாசிப்போரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆலயங்கள் வழிபாட்டுக்கு மட்டுமானதாக இல்லாமல், வேலை வாய்ப்பு நல்கும் இடமாகவும் திகழ்ந்தது. ஆடல் மகளிர் மட்டுமல்லாது, பதிலியாரும், ஆண்களும் ஆடல் கலையில் தேர்ச்சி பெற்று ஆலயங்களிலும், மன்னர் அவையிலும் ஆடல் நிகழ்த்தினர். “ஆடல் கலையிலும், இசையிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அவர்களுக்கு மானியங்களையும் வழங்கினான்" (மேலது ப. 113) தெய்வீகப் போற்றலுடன் நாளும் இசை வளரத் துணை நின்றான் இராஜேந்திரன்.
தஞ்சை பெரிய கோவிலைப் போலவே, கங்கை கொண்ட சோழபுர ஆலயமும் பெரிது. இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை வெற்றியையும் கொண்டாடிய மன்னனாகவே வரலாற்றில் அறியப்படுகிறான். ”இம் மன்னன் சிறந்த விருதாகக் கருதி ஏற்றது கங்கை கொண்ட சோழன் என்பதாகும்” (சோழர்கள், கே.ஏ. நீல கண்டசாஸ்திரி புத்தகம் 1 ப. 303) கங்கை வெற்றியின் அடையாளமாக எழுப்பிய ஆலயம் வெற்றியின் சின்னமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இன்று இடிபாடுகள் பலவற்றை எதிர்கொண்டு காட்சி அளிக்கும் இவ்வாலயம் இராஜேந்திரசோழனின் வீரத்தின் அடையாளமாகவும், கலைமனத்தின் அடையாளமாகவும் அடையாளப்படுகிறது.
சோழ மன்னர்கள், அதிலும் பிற்கால சோழ மன்னர்கள் கலையார்வம் கொண்டவர்களாக விளங்கினர். கூடவே, கலை வளர்ச்சிக்கு தக்க ஆதரவு அளித்து சோழநாட்டில் கலைப்புரட்சியை ஏற்படுத்தியவர்களாக விளங்கினர். அதிலும், இராஜேந்திர சோழன் ஆட்சியில் கலைகள் உச்சத்தில் இருந்ததை அவன் கட்டுவித்த கங்கை கொண்ட சோழபுர சிவன் ஆலயமே சாட்சி. இவ்வாலயம் கட்டக்கலையின் சாட்சியாக, சிற்பக்கலையின் சாட்சியாக, ஆடல் கலையை வளர்த்த இடமாக அடையாளப்படுவது சோழர்கால கலை வளம் என்பதைத் தாண்டி இராஜேந்திர சோழனின் கலை மனதை காட்டுபவையாகக் காட்சி அளிக்கிறது.
துணை நின்ற நூல்கள்
1. தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, குடவாயில் பாலசுப்பிரமணியன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.
2. தஞ்சாவூர் . குடவாயில் பாலசுப்பிரமணியன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.
3. முதலாம் இராஜேந்திர சோழன் (தடயங்கள்) தொகுதி 2. ம.காந்தி, ப.வெங்கடேசன், கே,சங்கரி, மணிவாசகர் பதிப்பகம்,சென்னை.
4. இராஜேந்திரசோழன், குடவாயில் பாலசுப்பிரமணியன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.
5. சோழர்கள், புத்தகம் 1 கே.ஏ. நீல கண்டசாஸ்திரி, நியூ செஞ்சுரி புக்கஸ் (பி) லிட், சென்னை.
6. தமிழ் காசுகள், ஆறுமுக சீதாராமன், தனலட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர்.
7. குலோத்துங்கசோழன் உலா, சாரதா பதிப்பகம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.