இனவரைவியல் நோக்கில் காளிதாசரின் சாகுந்தலம்
பெ. இசக்கிராஜா
தொடக்கமாக
மனிதகுலத்தின் தொடக்கமாக ஆரம்பித்த மானுடவியல் இன்று பல்வேறு தளங்களிலும் தன்னுடையை கிளை பரப்பி, ஆழ அகலமாகவும் வேரூன்றத் தொடங்கிவிட்டதோடு மட்டுமின்றி, பல்வேறு துறைகளுக்கு இன்று முன்னோடியாகவும் திகழ்கின்றது. முந்தைய மனிதன் விட்டுச் சென்ற ஒவ்வொன்றுமே இன்றளவு வரலாறாகவே பேசப்பட்டு வருகின்றதனை அறியலாம். தமிழ் இலக்கியங்களிலும் சரி, பிற இலக்கியங்களிலும் சரி, மானுடவியலின் வாசிப்புத் தளமும், ஆய்வுத் தளமும் பல்லுயிர்ப் பெருக்கம் போல பெருகிக் கொண்டே இருக்கின்றது. தமிழ் மொழி ஏனைய மொழிகளுக்கு முந்தையதெனினும் அதனுடைய இலக்கியச் செறிவு நுண்மான் நுழைபுலயமுடையதாகும். சங்க இலக்கியத்தின் அகத் தன்மை வேறெந்த மொழியிலும் இந்தளவிற்கு இல்லை. ஒப்பிலக்கியம் வளர்ந்து விட்ட பிறகு ஒரு மொழி மட்டுமின்றி மொழி தாண்டியும் ஒப்பிட்டுப் பார்கின்ற நிலை இன்று நம்மிடையே காணப்படுவதை அறியலாம். இவ்வாறு இருக்கையில் ஒரு இலக்கியத்தை மற்றோர் இலக்கியத்துடன் ஒப்பிட்டு, அதனதன் பண்பாட்டை அதனதன் மொழியில் விரிவாகவும் எடுத்துரைக்கின்ற தன்மை இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் இந்திய இதிகாசங்களில் ஒன்றாகவும் பாரதத்திலிருந்து சாகுந்தலத்தை அபிஞான சாகுந்தலமாக இப்புவிக்கு தந்தவர் காளிதாசர்.
வடமொழி நாடகக் காப்பியமான சாகுந்தலம் வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் மனித மனத்தின் உள்ள உணர்வுகளையும், உறவுகளையும், எழில் கொஞ்சுகின்ற காதலையும் தருகின்றது. உலக மாகவிகளின் இடத்தில் ஒருவரான காளிதாசர் நாடக இலக்கியத்தினைப் படைப்பதில் இவருக்கு நிகராக இவரே இருக்கின்றார். இவருடைய படைப்பான சாகுந்தலத்தினை மானுடவியலின் ஒரு பிரிவாக இருக்கக் கூடிய இனவரைவியல் எனும் அறிவியல் சார் துறையை உட்புகுத்தி படைப்பாளி காலத்து மக்களின் வாழ்வியல் முறைமைகளில் ஆரம்பம் தொட்டு இறுதிவரை எல்லா உட்கூறுகளையும் இனவரைவியல் துறை தன்னளவில் எடுத்துக் கொள்ளும் என்பதில் மாற்றில்லை. ஆகவே இக்கட்டுரையின் முயற்சியாக சாகுந்தலத்தில் இனவரைவியல் கூறுகள் இருக்கின்றது என்பதை ஆய்கின்றது.
காளிதாசர்
காளிதாசரின் காலம் விக்கிரமாதித்யனின் காலம் என்றே கி.பி. 343 என்றே சொல்லப்படுகின்றது. காளிதாசருடைய சரியான தகவல்கள் யாதும் கிடைத்தில. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதமாக இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றியும், இவர் படைப்பு பற்றியும் அறியும் போது வடமொழியில் நல்வல்லமைத் தன்மை உடையவர். நாடகத்தின் படைப்பில் இவருக்கு நிகர் இவரே. காளிதாசரின் கற்பனை வளத்தையோ, வர்ணனைத் தன்மையையோக் குறிப்பிட வேண்டுமாயின் சிலம்பின் வித்தன் இளங்கோ போல் கவிதைக் கடல் கம்பன் போலவே காளிதாசரும் உலகக் கவிகளின் பட்டியலிலும் இடம் பெற்றவர். இவரது படைப்பான சாகுந்தலத்தில் இனி, இவரது கவித்தரத்தை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, சாகுந்தலத்தில் இரண்டாவது பிரிவில் கதையின் மைந்தன் துஷ்யந்தன் தலைவி சாகுந்தலத்தினை வர்ணணை செய்யும் ஓரிடம் வருகின்றது.
முன்செய் நல்ல தவங்களெலாம்
மூண்டு கனிந்த பெரும் பயனோ?
அன்று புரிந்த தவங்கள் எலாம்
அழகின் உறுப்பாய் அமைந்தனவோ?
அன்றும் இன்றும் இதுவரையும்
எவரும் மோவா அனிச்சமதோ?
இன்றும் இன்னும் இதுவரையும்
எவரும் கிள்ளா இளந்தளிரோ?
துளைக்கப்படாத தூமணியோ?
தூயமணிக்கோர் தாயகமோ?
வளரும் சுவைக்கோர் வரம்பின்றி
வாழும் தூய அமுத மிதோ
எளிதாய் எவரும் இதுவரையும்
எடுத்துச் சுவையா எழில் அமுதோ?
ஒளிரும் ஒளிர்வைத் தெரிந்துரைக்க
உளதோ உலகில் ஒருமொழியே!
(சாகு.2.55)
அவள் இதுவரை நுகரப்படாத மலர், நகங்களால் கிள்ளப்படாத தளிர், பட்டை தீட்டப்படாத ரத்தினம், இதுவரை சுவையாத புதுரசம், ஒட்டுமொத்தப் புண்ணியங்களின் பலன். அவளது இப்புது அழகினையும், மாசற்ற அழகினையும் நுகர்வோர் யாரோ? நான்அறியேன். யாருக்காக இந்த விதி இவளை இங்கே நிறுத்தியுள்ளதோ என்பன மேற்கண்ட கவிதையின் பொருண்மை ஒவ்வொரு சொல்லாட்சியும் வாசிப்பவர் நெஞ்சுரம் கொண்டவை. மேலும் ஓரிடத்தில்,
தளதளக்கும் எழிற்கொடிமேல் இடிதான் வந்து
தாக்குவதோ? தொடுத்திடல்தான் தகாததாகும்
இளையதிதன் உயிர் எங்கே?
(சாகு.1.16)
துறவியர் வாழும் குடிலருகில் மானை வேட்டையாட வந்த மன்னனிடம் துறவிகள் உரைக்கும் சொல்லாட்சி சிலிர்க்க வைக்கின்றது. இதற்கு மேற்கண்ட வரிகளே சாட்சியாம்.
இனவரைவியல்
இனவரைவியல் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்கும் கலையாகவும், அறிவியலாகவும் வளர்ந்து வருகிறது. மக்கள் மற்றும் கலாச்சாரத்தை அறிவியல் நோக்கில் விவரிப்பது, என்று ஆக்ஸ்போர்டு அகராதி இனவரைவியல் குறித்து வரையறை செய்கிறது. மேலும் அவ்வகராதியே, இனவரைவியல் என்பது மக்கள் இனத்தையும் அவர்களது கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், சடங்குகள் ஆகியவற்றின் துணையோடு அறிவியல் நோக்கில் விவரிப்பது என்று இனவரைவியல் குறித்து விளக்குகிறது.
“இனவரைவியல் என்பது ஒரு சமூக மக்களின் சமகால நடத்தை முறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அந்தச் சமூகத்தின் முடிவான பண்பாட்டுத் தரவுகளை உருவாக்குதலே” என்று குறிப்பிடுகின்றது. (The Encyclopedia of social science. 1968. p.172) மானுடவியல் ஆய்வாளரான லெவிஸ்ட்ராஸ் இனவரைவியல் குறித்து பின்வருமாறு விளக்கம் தருகின்றார். பல்வேறுபட்ட இனக்குழுக்களின் தொலைநோக்குடையை வாழ்வியல் நெறிகளை கூடிய வரையில் துல்லியமாகப் பதிவு செய்யும் குறிக்கோள் உடையது இனவரைவியல் ஆகும். இப்படியாக இருக்கின்ற ஒரு அறிவியல் துறையை சாகுந்தலத்தில் உட்புகுத்திப் பார்க்கும் போது காளிதாசர் காலத்தில் நிலவிய இயற்கைச் சூழல், வர்ணாசிரம தர்மம், எழில் கொஞ்சும் புவிச்சூழல், சமூக அடுக்கியல் தன்மை, மன்னின் காதல், அறம், தொழில் இப்படியான ஒவ்வொரு இனவரைவியல் கூறுகளும் சாகுந்தலத்தில் விரவிக் கிடப்பதனை அறிய ஏதுவாக இருக்கும்.
இனவரையவில் கூறுகள் எல்லாம் எல்லா இலக்கியங்களிலும் முழுவதுமாக நிரம்பிக் கிடக்க வாய்ப்பில்லை. ஒரு சில இலக்கியங்களில் குறைவாகவும், ஒரு சிலவற்றில் அதிகமாகவும் இருக்கின்றதை நாம் இனவரைவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது அறிந்து கொள்ளலாம். அதே போலத் தான் சாகுந்தலமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக அடுக்கு நிலையில் மாந்தர்கள், புவிச்சூழல், இயற்கைச்சூழல், தொழில் முதலானவைகள் பற்றி விளக்குகின்றது.
பாகன்
சாகுந்தலத்தில் பாகனுக்கும் மன்னனுக்குமான உறவுநிலையைக் குறிப்பிடுகின்ற தருணத்தில்,
மன்னிப்பீர்!... வாழ்கமன்னா!..
(சாகு.1.7)
வாழ்க மன்னா! கட்டளை செய்வேன்!
(சாகு.1.26)
கடிவாளம் தன்னை நான் கவனமாகப் பிடித்துக் கொண்டேன்
கவனமாக இறங்குங்கள் ... நீடு வாழ்க
(சாகு.1.35)
மன்னன் ஒரு செயலைப் பாகனிடம் சொல்லும் போதும், பாகன் தன் செயலைச் செய்து முடித்து திரும்ப மன்னனிடம் கூறும் போதும் வாழ்க! மன்னர் போன்ற மேற்கண்ட பாகன் மொழி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் வரிகளின் உட்பொதிந்த பொருண்மை என்னவெனில், சமூகப் படிநிலைகளில் ஏற்றத் தாழ்வுகளையும் உணர்த்துகின்றன. இன்று இங்கு நிலவுகின்ற புவிச்சூழலைச் சமூகக் கண் கொண்டு பார்த்தால் மன்னன் - பாகன், மன்னன் - அந்தணன், மன்னன் - வாயிற்காவலன் உறவுநிலை அச்சொட்டு மாறாமல் வர்க்கப் பின்புலத்தைத் தெளிவாகவே காட்டுகின்றதனை அறிய முடிகின்றது.
சாகுந்தலத்தில் பாகனுக்கு மறுமொழி கூறும் விதமாக காளிதாசர் சொல்லாட்சி நன்று உற்று நோக்கின்,
நடத்துக... நின்தேர் அதனை!... தூயதான!
(25)
உடைமைகளை மறைத்துவைத்துப் பார்த்துக் கொள்நீ!
உயர்குதிரை தனைக்கழுவித் தூய்மை யாக்கு!
(36)
அன்புள்ள தேர்ப்பாக? என்றெல்லாம் அழைக்கும் வேந்து ஓரிடத்தில் பாகனுக்கான வேலை கூறுகின்ற ஓரிடமும் வருகின்றதை நாம் அறியத்தான் வேண்டும். வேந்தன் துறவோர் வாழ்கின்ற அமைதிப் பூங்காவிற்குள் நுழையும் போது மிகவும் பவ்யமாக செல்லும் காட்சி அந்தணரான துறவோர்க்கு சமூகப் படிநிலையில் அவர்களுக்கான இடத்தையும், வேந்துக்காகவே வாழ்நாள் கடமையாற்றி தன் இன்னுயிர் நீக்கும் பாகனுக்கான இடத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இது மகாபாரதத்தில் கர்ணனையும், ஏகலைவனையும் நமக்கு நினைவுபடுத்துவதாகவே இருக்கின்றது. மன்னன் பாகன் உறவு நிலையை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் மன்னன் துறவோர் உறவுநிலையை நாம் அறியவேண்டியது அவசியமாகின்றது.
அந்தணர்
தேர் தட்டில் இருந்தவாறே தலையைத் தாழ்த்தி
தெய்வமொழி புகன்றீர்கள் அருள்சார் நெஞ்சல்
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...
சீர்பெறுவேன்! அந்தணர்வாய் மொழிதான் என்னைச்
செழிப்பாக்கும்! நன்றியுடன் இருகை கூப்பி
(சாகு.1.19)
இங்கு அந்தணர் வாய்மொழிதான் என்னைச் செழிப்பாக்கும் (நன்றியுடன் இருகைகூப்பி) என்ற சொல்லாட்சி ஆணையிடுகின்ற கை அந்தணர் பக்கம் திரும்பாது என்பது தானே யதார்த்தம். காளிதாசரும் சாதிய சகூகத்திற்கு விதிவிலக்கல்ல ஆம் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ காளிதாசருக்கும் நன்கு தெரியும். அந்த மன்னர் அந்தணருக்கு அடிவருடி என்பதும் தெரியும். ஒரு நாட்டை ஆள்கின்ற மன்னனுக்கு மரியாதை நிமித்தம் தலைவணங்கி சேவை செய்கின்ற மக்களுக்கே மன்னன் தலை வணங்குவதில்லை. ஆனால். உடல் உழைப்பின்றி தெய்வம் என்றும் சொர்க்கம் என்றும், புனிதம் என்றும் காவத்தினை வெறுமையாய் கழிக்கின்ற அந்தணரான துறவோர்க்கு மன்னன் தலைவணங்கும் நிகழ்வு என்ன உணர்த்துகின்றது என்றால், மன்னனே அந்தணரை வணங்கினால் மக்களும் வணங்க வேண்டும் மன்னன் எவ்வழியோ குடியும் அவ்வழி தானே, மற்றயை மனிதர்களை அடியாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மூளைக்கு மட்டுமே வேலை கொடுக்கின்ற இவர்களுக்கு மன்னன் கொடுத்திருக்கும் சமூக உயர்வும், மன்னன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாட்டை காப்பாற்றுகின்ற வாயிற்காப்போனுக்கும் மன்னன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற பாகனுக்கும் கொடுத்திருக்கும் சமூகக் கீழ்நிலையாக்கம் நிலபுரபுத்துவ காலத்திலே தோன்றியது என்பதில் உசிதம் இல்லை. அதை மெய்பிக்கும் விதமாக கீழ்கானும் கூற்று,
எம்பெருமான்! நீர் எந்த ஆணை சொல்வீர்
இப்போதில் அதைச் செய்வேன்.
(சாகு.2.40)
படைத்தலைவனானவன் மன்னன் ஏவுகின்ற தொழிலைச் செய்பவனாக சாகுந்தலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். மேலும் சமூக வர்க்கப் பிளவுகளை அச்சொட்டாக துஷ்யந்தனின் நண்பன் விகடன் ஓரிடத்தில், (பெருஞ்சிரிப்பை வெடி போல் ஒலிபோல் விடுத்தவாறு)
பேரிச்சம்பழம் தின்ற ஒருவன்... காட்டில்
இருக்கின்ற புளியமரப் பழத்தைத் தின்றே
என்னசுவை என்றானாம்... அது போல் சொன்னீர்
விரும்புகின்ற பேரழகுக் குதிரை ஏறி...
வீரப்போர் புரிபவர்கள் பொதிசுமக்கும்
ஒரு விலங்கின் மேல்ஏறிச் செல்வதுண்டோ!
உயர் அரச மகளிரெங்கே!... இவள்தான் எங்கே!
(சாகு.2.49)
மேற்கண்ட கவிதை சொல்ல வந்தது என்ன? துஷ்யந்தன் சாகுந்தலைப் பற்றி தன் நண்பன் விகடனின் சொன்ன போது, விகடன் மறுமொழி கூறியது தான் இது. பொதிசுமக்கும் விலங்கு, பேரழகுக் குதிரை இதெல்லாம் சமூகத்தின் நிலமையைக் குறிக்கும் ஒரு குறியீடன்றி வேறு என்னவாக இருக்கவியலும். மேலும் உயர் அரச மகளிரெங்கே? அவள் எங்கே? என்னும் பிளவினையும் காளிதாசரும் வர்க்க வேறுபாட்டினை அதாவது வர்ணாசிரம தர்மத்தினை மீறாதவராகவும், அதனைக் கட்டிக் காப்பவராகவும் இருந்திருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.
திருமணம்
திருமணம் என்பதும் இனவரைவியல் கூறுகளில் ஒன்று. சாகுந்தலத்தில் திருமணம் பற்றியதான பார்வையில் காளிதாசர் ஓரிடத்தில் கூறுகின்ற போது,
அரசமுனி புதல்வியர்கள் பலபேர்... நல்ல
ஆடவனை அறிந்துணர்ந்து களவின் பத்தில்
இருவரல்ல ஒருவரென ஆனதான
எழில்கதைகள் எத்தனையோ கேட்டிருப்பார்
சரிஎன்றே நெறிப்படுத்தி இருப்பார்! இந்தத்
தனிக்காதல் களவதனை அறிஞர் என்போர்
நெறிஎன்றே வகுத்ததனால் அஞ்சல் வேண்டாம்!
நினக்கெல்லாம் தெரியுமன்றோ? அஞ்சல் வேண்டாம். (சாகு.3.79)
என்ற வேந்தன் கூற்று இன்றைய காதல் திருமணங்களையே எடுத்துரைப்பதாக அறிய முடிகின்றது. மேலும் குலம் விட்டு குலம் மாறித் திருமணம் செய்து கொண்டதும் புலனாகின்றது. மன்னன் கௌசிக குலத்தினைச் சார்ந்தவன் என்பதற்கு,
கேளுங்கள் கௌசிக குலத்தில் வந்த
கீர்த்திமிக்க மன்னருளார் வன்மை மேன்மை
ஆளுமைகள் பலநிறைந்த மன்னர் அன்னார்!
அரச மன்னர்! (சாகு.1.52)
கதைத்தலைவி முனிவர் மற்றும் மேனகையின் மகள் துறவியர் என்னும் அந்தண குலத்தினைச் சார்ந்த பெண் என்பதும் தெளிகின்றது. இவர்கள் இருவலரும் காதல் புரிந்து அவற்றினை வெளிப்படுத்துகின்ற இடம்தனில் சாகுந்தலை பயப்படுகின்றாள். அதற்கு வேந்தன் கூறிய மொழி,
அஞ்சுகின்ற மடமயிலே நீ அஞ்சாதே
அஞ்சுகின்ற செயல்ஏதும் இங்கே இல்லை
அஞ்சுகின்றபடி ஏதும் செய்யவில்லை (சாகு.1.78)
அர்த்தமுள்ள முனிவர் தானும் நின்செயலை சரியென்றே ஏற்றுக் கொள்வதின் அர்த்தம் என்ன. மன்னர் என்பதினால் ஒருவழியாக அந்தணர் குலம் ஏற்றுக் கொள்ளும் என்பதும் வேறு ஏதொ ஒரு குலமெனின் என்ன நிகழும் என்பதை இன்றையை சூழ்நிலையினை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நிறைவாக
சங்க இலக்கியத்திற்கென்று தனிப்பட்ட தன்மையம், பரந்துபட்ட புகழும் உள்ளது. அப்படிப்பட்ட சங்க இலக்கியத்துடன் ஒப்பிடக்கூடிய காளிதாசரின் படைப்புக்களில் சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தில் இனவரைவியல் துறை என்னும் கண் கொண்டு பார்க்கும் போது கீழ்கண்ட முடிவுகள் தென்படுகின்றன.
அரசனைவிட அந்தணர் குலத்திற்குத் தான் உயர்ந்த இடம் இருந்ததையும், அரசனே அந்தணரை வணங்குவதால் அவனது குடிகளும் வணங்கித் தான் ஆக வேண்டும் என்பதும் அந்தணர்களை எப்போதும் உயர்வாகவே எனண்ண வேண்டும் என்ற விதை அப்போதே தூவப்பட்டுள்ளதையும்,
குலம் விட்டு குலம் மாறித்திருமணம் செய்து கொண்ட நிகழ்வினை வைத்துக் காதலுக்கு அதுவும் தொல்காப்பியர் குறிப்பிடுவது போல ஒத்த தலைவனும் தலைவியும் என்பது போல நிகருக்கு நிகராக இருக்கின்ற குலங்களுக்குள்ளே சரி மற்ற இனங்களுக்கென்றால் அங்கு வர்ணாசிரம தர்மத்தின் தலையீடு கண்டிப்பாக இருந்திருக்கும் என்பதும்,
பெண்மையைப் போற்றும் எந்த இலக்கியமானாலும் பெண்களுக்கே துன்பம், அழுகை, பிரிவு, துயர் என்பதை நிரூபிப்பதைப் போல சாகுந்தலத்திலும் சகுந்தலையின் துயர் மிகுதியாக உள்ளதனை அறிந்து கொள்ளவும் முடிகின்றதனையும், பெண்மை போற்றினும் பெண்ணுக்கான இடம் என்ன என்பதையும்,
சாதிய மற்றும் வர்க்க அடுக்கு முறையினை பாகன், வாயிற் காப்போன், விகடன், மன்னன், துறவியர் என்பவர்களின் கூற்று வாயிலாக தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது என்பதையும்,
சாகுந்தலத்தில் கற்பனை வளமும், இயற்கை வர்ணனைத்திறனும் மிகவும் சிறப்பானதாக இருக்கின்றதனால் இந்த எண்ணம் பார்க்காமல் வந்திருக்க வாய்பில்லையாதலால் அன்றைய இயற்கை மற்றும் புவிச்சூழலும் அற்புதமாகவே இருந்துள்ளதையும்,
மன்னனுக்கான கடமை என்ன என்பதனையும்,
காதல் ரசம் சொட்ட சொட்ட நாடக இலக்கியத்தினை காளிதாசர் அற்புதமாக பாடியிருப்பதையும்,
இக்கட்டுரைக்கு காளிதாசரின் சாகுந்தலத்தை மட்டும் இனவரைவியல் ஆய்வுக்கு எடுத்து கொண்டு அவற்றில் ஒவ்வொன்றிலும் நிறைந்துள்ள இனவரைவியல் கூறுக்கான இடங்களைக் கண்டறிந்தது போல காளிதாசரின் மற்ற படைப்புக்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில் அதிகமான தரவுகள் கிட்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்பதால் பின்னால் காளிதாசர் பற்றிய இனவரைவியல் ஆய்வுகளுக்கு இக்கட்டுரை ஓர் முன்னோடியாகத் திகழ வாய்ப்பிருக்கின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.