கம்பராமாயணத்தில் சங்கஇலக்கியப் புறத்திணை மரபுகள்
கோ. தர்மராஜ்
சங்கப்புலவர்கள் தன் இலக்கியங்களில் அகவாழ்விற்கு மிகுதியான சிறப்பினை அளித்துப் பாடினாலும் புறவாழ்க்கைக்கும் அதற்கு நிகரான சிறப்பினை அளித்துள்ளனர். அதனாலேயே இலக்கியங்களில் வாழ்வின் இரு கண்களாக அகமும், புறமும் பேசப்படுகின்றன. அத்தகையச் சிறப்பைப் பெற்ற புறத்திணைக்குக் கம்பர் தம் காப்பியத்தில் இராம இராவணப்போரினுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியொரு காண்டமே பாடியுள்ளார். பத்தாயிரத்து ஐநூறு பாடல்கள் கொண்ட இக்காப்பியத்தில் நாலாயிரம் பாடல்கள் யுத்தகாண்டத்தில் உள்ளன. இக்காப்பியத்தின் கதை வளர்ச்சியில் தாடகைவதை, வேள்விக்காக அரக்கர்களுடன் போர், பரசுராமன் போர், கரன்வதை, வாலிவதை போன்ற பலபோர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அடிப்படையில் கம்பர் பின்பற்றும் புறத்திணை மரபுகளை யுத்தகாண்டத்தில் நன்கு அறியமுடிவதால் கம்பர் உணர்த்தும் போர் மரபுகளைச் சங்க இலக்கிய போர் மரபுகளான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் போன்ற திணைகளுடன் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வெட்சி
முல்லைநிலத்தில் வாழும் பசுக்களைக் குறிஞ்சியில் திரிந்து பாலையில் வாழ்கின்றவர்கள் கவர்ந்து செல்கின்றனர். அதன் விளைவாக நிகழும் போரே வெட்சிப்போர். ஆகையால் இப்போர் முறையைக், “குறிஞ்சி, முல்லை நிலங்களின் எல்லைகளில் நிகழ்ந்த அந்நிலத்திற்கேயுரிய தனிப்போர் முறையே வெட்சிப்போர்” (Rm Periuakaruppan, Tradition and Talent in Cankam Poetry, pp, 104-15) என்று இராம.பெரியகருப்பன் குறிப்பிட்டுள்ளார். தனிமனிதர்கள் நிகழ்த்திய இப்போர் நாளடைவில் இரண்டு பெருவேந்தர்கள் போரிட முனைந்த போது அதன் முதற்படியாக நிரை கவர்தலாக மாற்றம் பெற்றன. பின் நிரைகவர்தல் இன்றியும் நிரை கவர்ந்ததாகப் பாடுவதும் ஒரு மரபாக விளங்கியதையும் உணர முடிகின்றது.
இராமாயணத்தில் ஆநிரை கவர்தலும், மீட்டலுமாகிய வெட்சிப்போர் இடம்பெறவில்லை. இராமஇராவணப்போர் கடலுக்கு அப்பால் இலங்கையில் நடந்தது. இராமன் தவக்கோலம் பூண்டு காட்டில் வாழ்ந்தான். இராவணன் ஆநிரைகளே செல்வம் என்ற நோக்கில் வாழ்ந்தவனும் அல்லன். இவர்கள் இருவர் போருக்கு முக்கியக் காரணமாகச் சீதை அமைந்துவிட்டாள். கம்பராமாயணக் காப்பியக் கதையை உற்று நோக்கினால் நிரை கவர்தலும் மீட்டலுமாகிய வெட்சிப்போருக்கு இடமில்லை. எனவே காப்பியத்தில் இப்போர்முறை காட்டப்படவில்லை என்றாலும் வெட்சித்திணைக்குரியத் துறைகளான வேய், உண்டாட்டு, பூவைநிலை போன்றவைகள் காணப்படுவதை உணரமுடிகின்றது.
வஞ்சி
“எஞ்சா மண்ணாசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே” (தொல். புற: நூ. 64)
என்ற நூற்பாவில் வஞ்சித்திணைக்கு தொல்காப்பியர் இலக்கணம் கூறுகிறார். காடுகள் நிறைந்த உலகமாகிய முல்லைப்புறத்தில் மண்ணாசைக் காரணமாகப் போர் புரிந்த வேந்தன், அம்மண்ணைக் காத்தற்கு எதிரே சென்று போர் புரிவது வஞ்சிப்போர் என்பதாகும். “பண்டைக்கால அரசர்கள் தம்மைப் பெருவேந்தர்கள் எனப்பலரும் போற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் தம் நாட்டினை விரிவுபடுத்தப் போரிடும் இரண்டு அரசாளும் வஞ்சி வேந்தராவர்” என்று இராம. பெரியகருப்பன் கூறியுள்ளது மனங்கொள்ளத்தக்கதாகும். கம்பர் வஞ்சித்திணைப்பற்றி தம் கருத்தைப் பரதன் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். இதனை,
“தஞ்சு என ஒதுக்கினர் தனது பார் உளோர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக்கொள
அஞ்சின மன்னவன்” (இராமாயணம் ; 2210)
என்ற வரியில் மண்ணாசை கொண்ட பகைவேந்தர் வஞ்சிசூடி ஓர் அரசனும் அவன் மக்களும் அஞ்சும் வண்ணம் அந்நாட்டில் சென்று இறுப்பதே வஞ்சி என்று கம்பர் குறிப்பிடுகிறார். இக்கருத்திற்கு அரணாக இராமனது போர் அமைகிறது. இராம இராவணப்போர் இராமன் முற்றுகையிடுதலான் வஞ்சிப் போராகத் தொடக்கம் பெற்றது. இராமன் வஞ்சிவேந்தன் ஆகிறான். போர் செய்ய வந்தவனை உள்ளே செல்லவிடாமல் அரண் நின்று தடுக்கிறது. இலங்கை அரணின் திண்மை, உயர்ச்சி காவல் பற்றிய செய்திகளை ஊர்தேடு படலம், இலங்கைக் கேள்விப் படலம் ஆகிய இரு படலத்திலும் அனுமன், வீடணன் பாத்திரங்களின் வாயிலாக கம்பர் விளக்கியுள்ளதனைக் காணமுடிகிறது. அத்தகைய மதிற்காவலை முறித்து அரணைக் கைப்பற்ற முயன்ற வானர சேனையின் செயல் உழிஞைப் போராகிறது. வஞ்சி வேந்தனாக இறுந்து முற்றுகையிட்ட இராமன் இப்பொழுது உழிஞை வேந்தனாகிறான். எனவே வஞ்சியும், உழிஞையும் தொடர்புடையன என்பது போல தோன்றுமாறு, நிகழ்ச்சியடிப்படைக்கேற்பக் கம்பர் கதையைச் சங்க இலக்கியப் புறத்திணை அடிப்படையில் அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.
உழிஞை
“முழுமுத லரணம் முற்றலுங் கோடலும்
அனைநெறி மரபிற் றாகு மென்ப” (தொல்.புற:நூ.66)
எனத் தொல்காப்பியர் உழிஞைத் திணைக்கு பொதுவிலக்கணம் கூறியுள்ளார். அரணை வளைப்பதும் பின் அழிப்பதும் பகைவேந்தன் ஒருவனது செயல் உழிஞை என்று இளம்பூரணர் சுட்டியுள்ளது மனங்கொள்ளத்தக்கதாகும். புறத்தோன் மதிலை வளைப்பதும் அகத்தோன் பகைவரை விரட்டி மதிலைக் காப்பதும் ஆகிய இருவரது செயல்களும் உழிஞைத்தினை என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். கம்பர் பிற்கால இலக்கண அடிப்படையில் இராம இராவணப் போரை வருணித்துள்ளார்.
இலங்கை மதிலின் தெற்கு வாயிலில் அங்கதனும், கிழக்கு வாயிலில் நீலனும், மேற்கு வாயிலில் அனுமனும், தலைமையேற்றுப் போரிட நின்றனர். அப்போது அவர்கள் உழிஞை சூடி வந்தனர் என்பதை அனுமன் வாயிலாகக் கம்பர் கூறுகிறார். அவற்றை,
“மாருதி மேலை வாயில் உழிஞை மேல் வருவதானான்” (இராமாயணம்; 6950)
என்ற அடியில் உணரலாம். உழிஞை சூடி போர் தொடுக்க வரும் இவர்களை அரக்கர் நொச்சி சூடி வந்தனர் என்பதை,
“உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில்
கொண்டது அவ்வூர்” (இராமாயணம்; 6957)
என்றும் கூறுகிறார். கம்பர் இவ்வாறு உழிஞையோர் செயலைக் கூறியபின் நொச்சியோர் செயலைக் கூறிச் சென்றுள்ளதை உணரமுடிகிறது.
தும்பை
உழிஞை, நொச்சிப் போர்களின் தொடர்ச்சியாகத் தும்பைப் போரினைக் கம்பர் காட்டுகிறார். சங்கப் பாடல்கள் அனைத்தும் தன்னுணர்ச்சித் தனிநிலைப் பாடல்கள் அஃதாவது உதிரிப் பாடல்களாதலின் அவற்றுள் ஏதேனும் ஒரு புறத்திணை மட்டுமே பாடப்படும். இளங்கோவடிகள் தம் வஞ்சிக்காண்டத்தில், அவை தொடர்நிலைச் செய்யுளாதலின் பல்வகைப் போர்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கூறிக் கதையை வளர்த்துச் செல்வார். கம்பர் அவர் வகுத்த மரபையும் பின்பற்றியே புறத்திணை போர்களை அடுக்கிக் கூறுகிறார். நொச்சியில் தம் வெற்றிக்குப் பின்னும் இராவணனின் படைத்தலைவர்களும் வீரர்களும் களம் புகுந்தனர். உழிஞை, நொச்சிப் போர்களில் மொத்தமாக வானரர், அரக்கர் போரினைக் காட்டிய கம்பர் அடுத்து இருபக்கப் படைத்தலைவர்களுக்கிடையே நிகழ்ந்த நிகழ்வினைக் காட்டுகிறார். சுக்கிரீவனோடு வச்சிரமுட்டியும், இடும்பனோடு கும்பானுவும், நீலனோடு பிரகத்தனும், அங்கதனோடு சுபாரீசனும், அனுமனோடு துன்முகனும் மதில் வாயில்களில் போரிட்டனர். அரக்கர் தலைவர்களைக் கொன்று வானரப்படைத் தலைவர்கள் தம் திறனை நிறுவினர். எனவே இவை தும்பைப்போர் எனலாம். அரக்கர் படைத்தலைவரது இறப்பை ஒற்றர் வாயிலாக அறிந்த இராவணன் போர்க்காலம் பூண்டுத் தும்பைப் பூச்சூடிப் போருக்கு வந்தான். மைந்து பொருளாக வந்த இராவணனை அழிக்க இராமனும் களத்திற்குத் தும்பை சூடி வந்தான் என்று கம்பர் கூறுவதன் வாயிலாக அறியமுடிகின்றது.
“மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (தொல்.புற:நூ.70)
என்று தொல்காப்பியர் தும்பைத்திணைக்குக் கூறும் பொது இலக்கணத்திற்கேற்ப இப்போர் அமைந்துள்ளது எனலாம். வஞ்சிப் போராகத் தொடங்கப்பெற்ற இராம இராவணப்போர் உழிஞை, நொச்சியாகித் தும்பைப் போராகவும் வளர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.
வாகை
உலகில் பலவகைப்பட்ட மனிதர்களும் தத்தம் தொழிலில் சிறப்புற வாழ்வதே வாகை என்கிறார் தொல்காப்பியர். இதனை,
“தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப” (தொல்.புற:நூ.73)
என்ற நூற்பாவின் வழிக் காணலாம். கம்பர் காப்பியத்தில் வாகைத்திணைக் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் உள்ளன. பல நிலைகளிலும் பகைவர்களோடு உறழ்ந்து பெறும் வெற்றியே வாகை என்றும் இந்நிலையடைந்தவர்கள் வாகைமலர் சூடும் வழக்கம் உண்டு என்ற மரபினையும் கம்பர் காட்டியுள்ளார்.
இலக்குவனோடு போரிடப்பெரும் படையுடன் இந்திரசித்தன் வந்தான். தன்னை வளைத்த அப்படையோடு போரிட்டு தன் திறனை நிலைநாட்டி இலக்குவணன் வாகை சூடினான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். அதனை,
“கோடிநூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடித்தின்தர்
ஆடல்மாக் களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார்; மூடினாரை முறைமுறை துணித்து வாகை
சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் ம்பி” (இராமாயணம்; 8039)
என்ற பாடலடியில் போரில் வெற்றி பெற்று, பெற்ற மகிழ்ச்சியை வாகைப்பூவைத் தலையில் சூடி மகிழ்ந்தனர் என்று சிந்தனைப் புலப்படுவதை உணரமுடிகின்றது.
காஞ்சி
நிலையாமையைக் கூறுவது காஞ்சி என்கிறார் தொல்காப்பியர்.
“பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்
நில்லா வுலகம் புல்லிய தெறித்தே” (தொல்.புற:நூ.76)
என்ற நூற்பாவில் காணலாம். தொல்காப்பியர் கூறிய நிலையாமைக் கருத்துக்களின் வழிநின்று கம்பரும் குறிப்பிடுகிறார். அவற்றை,
“பொய்ம்மை யாக்கை” (இராமாயணம்; 2214)
“பிணிக்கு உறுமுடை உடல்” (இராமாயணம்; 2216)
“நீர்க்கோல வாழ்வு” (இராமாயணம்; 7426)
மேலே கூறிய மூன்று அடிகளிலும் உடல் நிலையாமையையும் வாழ்வு நிலையாமையையும் கம்பர் குறிப்பிடுகிறார். மேலும்,
“இறத்தலும் பிறத்தலும் இயற்கை” (இராமாயணம்:2444)
“விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கை” (இராமாயணம்; 2453)
“உண்மை இல் பிறவிகள் உலப்பில் கோடிகள்” (இராமாயணம்; 2445)
“நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால்” (இராமாயணம்; 3254)
போன்ற நிலையாமைக் கருத்துக்களைக் கம்பர் குறிப்பிடுகிறார். தந்தையின் இறப்பிற்கு வருந்திய இராமனை வசிட்டர் தேற்றுவதாக,
“கண்முதல் காட்சிய கரையில் நீளத்த
உள்முதல் பொருட் கெலாம் ஊற்றம் ஆவன
மண்முதல் பூதங்கள் மாயும் என்றபோது
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமா?” (இராமாயணம்; 2448)
என்ற பாடலில் உணரலாம். நிலையாமைக் கருத்தமைந்த பாடல்களைத் தொல்காப்பியர் கூறும் வண்ணம் காஞ்சித்திணையைச் சார்ந்தவை எனலாம். ஆனால் கம்பர் நிலையாமைக் கருத்தைக் கூறும் எந்தவொரு இடத்திலும் காஞ்சி என்னும் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதையும் அறியமுடிகிறது.
நிறைவுரை
* இராம இராவணப்போர் வஞ்சிப்போராகத் தொடக்கம் பெற்றும் உழிஞைப் போராகிப் பின் தும்பைப் போராக மாற்றம் பெற்றதை உணரமுடிகின்றது.
* இராமாயணத்தில் வஞ்சி, உழிஞை, தும்பைப் போன்ற போர்கள் சிறப்பாக இடம் பெற்றிருந்தன. ஆனால் கதை அமைப்பால் வெட்சிப்போர் பற்றிய குறிப்புக்கள் இடம் பெறவில்லை என்பதை அறியமுடிகின்றது.
* வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்ற புறத்திணைப் பெயர்களைக் கம்பர் குறிப்பிட்டிருந்தாலும் காஞ்சித்திணைப் பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் காணமுடிகின்றது.
* கம்பர் பழங்கால இலக்கிய மரபைப் பின்பற்றும் போது, அவர் காலத்தில் வழக்கில் இருந்த பிற்கால வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கவிதை புனைந்துள்ளார் என்பது புலப்படுகிறது.
* தமிழர்களின் போர் மரபுகளையும், துறை மரபுகளையும் காட்டும் வண்ணமாகப் பல செய்திகளைப் புகுத்தி இராம, இராவணப் போரினைக் கம்பர் பாடியிருப்பது போற்றுதற்குரியதாகும்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|